துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் கவனயீர்ப்பு நிகழ்வை நிகழ்த்தியது ஏன்?:

பங்கேற்ற மாணவர் விளக்கம்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் கவனயீர்ப்பு நிகழ்வினை நிகழ்த்தியது ஏன் என்று அந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்।

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் கடந்த செவ்வாய்க்கிழமை (12।02।08) நடைபெற்ற இந்திய மற்றும் சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியின்போது அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்। இந்தப் போராட்டத்தின் நோக்கம் குறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட சுஜன் என்ற மாணவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கடந்த புதன்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணல்:

கேள்வி: துடுப்பெடுத்தாட்ட விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் இருக்கின்றதா?

பதில்: 24 மணிநேரமும் துடுப்பெடுத்தாட்ட ஆர்வமுடைய நான் துடுப்பெடுத்தாட்டக் கழகம் ஒன்றிற்காக விளையாடியும் வருகின்றேன். துடுப்பெடுத்தாட்டத்தை ஒரு பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்கின்றேன். கேள்வி: எந்தவொரு துடுப்பெடுத்தாட்டப் போட்டியையும் நீங்கள் தவறவிடமாட்டீர்களா? பதில்: ஆம், கூடுதலான நேரத்தை தொலைக்காட்சிக்கு முன்பாகத்தான் கழிப்பேன்.

கேள்வி: கன்பராவில் துடுப்பெடுத்தாட்டப் போட்டிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும், குறிப்பாக இளையோர்கள் பலர் சிட்னியில் இருந்து சென்றிருந்தீர்கள். கிட்டத்தட்ட எத்தனை பேர் சென்றிருந்தீர்கள்?

பதில்: சிட்னியில் இருந்து 160 பேர், கன்பராவில் இருந்து 25 பேர், மெல்பேர்ணில் இருந்து சிலரும் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் சுமார் 200 பேர் வரை அங்கு வருகை தந்திருந்தனர்.

கேள்வி: துடுப்பெடுத்தாட்டப் போட்டி நடைபெறும் இடத்தில் இத்தகையதொரு கவனயீர்ப்பை நடத்தி என்ன செய்தியைக் கூற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்?

பதில்: எமது நாட்டில் நிகழ்த்தப்படும் படுகொலைகள் மற்றும் மக்கள் படும் துன்பங்களை வெளிக்காட்டுவதற்காக நாங்கள் ரி சேர்ட் அணிந்திருந்தோம். அந்த ரி சேர்ட்டில் தமிழீழ வரைபடத்தை பொறித்து அதற்கு மேலே தமிழ்ர்களின் குரல் (Voice of tamils) என்று பொறித்திருந்தோம். அதற்கு கீழே கேள்வி கேட்பது போல மனிதாபிமானம் எங்கே? (Where is humanity) என்றும் எழுதியிருந்தோம். அதனைப் பார்ப்பவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்திருந்தோம்.

கேள்வி: என்ன நிற ரி சேர்ட்டை நீங்கள் அணிந்திருந்தீர்கள். அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் என்ன நிறத்தில் இருந்தன? அவை குறித்து சற்று விளக்கமாகக் கூறுங்கள்?

பதில்: சிவப்பு நிற ரி சேர்ட்டையே நாங்கள் அணிந்திருந்தோம். அதில் கறுப்பு நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எமது நாட்டின் நிறங்கள் (COLOUR) என்ற படியால்தான் அந்த நிறங்களைத் தேர்ந்து எடுத்தோம். எமது தமிழீழ நாட்டின் மாதிரி வரைபடத்தையும் அதற்கு கீழே மனிதாபிமானம் எங்கே? (Where is humanity) என்ற கேள்வியையும் நாங்கள் போட்டிருந்தோம்.

கேள்வி: சுமார் 200 பேர் இந்த ரி சேர்ட்டை அணிந்துகொண்டு துடுப்பெடுத்தாட்டப் போட்டி நடைபெறும் பகுதிக்கு சென்றபோது அங்கு காவல் கடமையில் நின்றவர்கள் ஏதாவது இடையூறுகளை ஏற்படுத்தினார்களா ?

பதில்: நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும் அங்கு காவல் கடமையில் நின்றவர்கள் அவுஸ்திரேலிய துடுப்பெடுத்தாட்ட சபைக்கு அறிவித்திருந்தார்கள். எங்களை உள்ளே செல்ல அனுமதிப்பதற்கு முன்னர் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த என்னிடமும் எனது நண்பரிடமும் கேள்விகளைக் கேட்டனர். அரசியல் சார்ந்த விடயத்தை விளையாட்டிற்குள் கொண்டுவரக் கூடாது என்றும் சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணி வீரர்களுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியே எங்களை மைதானத்திற்குள் அனுமதித்தனர்.

கேள்வி: அவர்கள் வேறு ஒன்றும் கூறவில்லையா ?

பதில்: அரசியலை விளையாட்டிற்குள் கொண்டு வரக்கூடாது என்பது அவுஸ்திரேலிய துடுப்பெடுத்தாட்ட சபையின் ஒரு தீர்மானம் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.

கேள்வி: நீங்கள் மண்டபத்திற்குள் சென்று அமர்ந்திருந்தபோது அங்கிருந்த ஏனைய பார்வையாளர்களின் முகபாவனைகள் எப்படியிருந்தன? அவர்கள் உங்களிடம் ஏதாவது கேள்விகளைக் கேட்டனரா?

பதில்: நாங்கள் இன்னியக் கருவிகளையும் கொண்டு ஒரு கொந்தளிப்பான நிலையிலேயே மைதானத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் மைதானத்திற்குள் நுழைந்தவுடனேயே அங்கிருந்த எல்லோரும் எங்களையே பார்க்கத் தொடங்கினார்கள்.
ஏன் இந்த ரி சேர்ட் அணிந்திருக்கிறீர்கள்?
எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று அங்கிருந்தவர்கள் எம்மிடம் கேள்விகளைக் கேட்டனர். அதற்குரிய பதில்களை நாங்கள் வழங்கினோம். எமது நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளும் மக்கள் படும் துன்பங்களும் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கின்றோம் என்று அவர்களுக்கு தெரிவித்தோம்.

கேள்வி: போட்டி முடிவடையும் வரை தொடர்ச்சியாக இப்படியான கேள்விகள் பார்வையாளர்களிடம் இருந்து வந்தனவா?

பதில்: நாங்கள் அணிந்திருந்த ரி சேர்ட்டை தமக்கும் தரும்படி அங்கிருந்த சிலர் தாமாகவே முன்வந்து கேட்டனர். எங்களிடம் மேலதிகமாக சில ரி சேர்ட்கள் இருந்தன. அவற்றை அவர்களுக்கு இலவசமாக வழங்கினோம். அவர்கள் அந்த ரி சேர்ட்டை அணிந்தபடி எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியின் சீருடையை அணிந்திருந்த சிலர் அதனைக் கழற்றிவிட்டு சாதாரண உடையுடன் எங்களுக்கு மத்தியில் நின்று உதவி செய்தார்கள்.

கேள்வி: சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியின் விளையாட்டை காண்பதற்காக அங்கே சிங்களப் பார்வையாளர்களும் வந்திருப்பார்கள். அவர்களின் முகபாவனை எப்படியிருந்தது? உங்களிடம், அவர்கள் ஏதாவது கேள்விகளைக் கேட்டார்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் ஏதாவது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்களா?

பதில்: அவர்களும் கேள்விகளைக் கேட்டனர். எங்களிடம் அதற்குரிய பதில்கள் சரியாக இருந்ததால் அவர்களால் மறு கேள்விகளைக் கேட்க முடியாமல் போய்விட்டது. அதாவது முதல் கேள்விக்கு நாங்கள் அளித்த பதில்களால் மீண்டும் அவர்களால் கேள்விகளைக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னொரு சுவாரஸ்யமான விடயமும் நடந்தது. அதாவது நாங்கள் துடுப்பெடுத்தாட்டப் போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு மிகவும் அண்மையான பகுதி ஒன்றிலேயே குழுமி நின்றோம். அப்பகுதியால் வந்த சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தவர்களுக்கு தமது நினைவுக் கையெழுத்துக்களை (Autograph) வழங்கிக்கொண்டிருந்தனர். இதனை மைதானத்திற்குள் இருந்தபடி அவதானித்த சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணி வீரர் சனத் ஜயசூரிய, நினைவுக் கையெழுத்துக்களை வழங்கிக்கொண்டிருந்த சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து விலகும்படி ஒரு உத்தரவை நேரடியாக பிறப்பித்திருந்தார். எங்களுக்கு கையெழுத்திட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

கேள்வி: சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைச் சேர்ந்த வேறு யாராவது உங்களைப் பார்த்து ஏதாவது கருத்துக்களை அல்லது கேள்விகளைக் கேட்டார்களா?

பதில்: சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியினர் கருத்துக்கள் மற்றும் கேள்விகள் எதுவும் எம்மிடம் கேட்கவில்லை. ஆனால், எங்களை அவர்கள் பார்த்த வண்ணமே இருந்தனர். குறிப்பாக மைதானத்திற்குள் களத்தடுப்பு இடமாற்றங்கள் வரும்போது அவர்கள் எங்களை வித்தியாசமாகவே பார்த்தனர். எனினும் நாங்கள் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது அல்லது அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் அந்த உறுதிமொழியுடன்தான் நாங்கள் போட்டி நடைபெறும் மைதானப் பகுதிக்குள் வந்தோம்.

கேள்வி: இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திய சுமார் 200 இளைஞர்களில் பலர் அவுஸ்திரேலியாவில் பிறந்திருப்பார்கள். வேறு பலர் பல வருடங்களுக்கு முன்னரேயே அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருப்பார்கள். அப்படியிருக்கும் போது ஏன் இவர்களுக்கு இப்படியானதொரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற உணர்வு வந்தது?

பதில்: இலங்கையில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் அங்கு நடக்கும் அவலங்களில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இங்கு சிலர் இப்படியான கவனயீர்ப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று கூறுவார்களே தவிர, அதனை நடைமுறைக்கு கொண்டுவரும் விருப்பம் அவர்களிடம் இல்லை. இந்தவொரு நிலையில்தான் நான் எனது நண்பர்களிடம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் அதனால் பலன் கிடைக்கலாம் என்றும் கலந்துரையாடினேன். அதற்கு எனது நண்பர்கள் ஆதரவு தெரிவித்தனர். முதலில் 50 பேருடன்தான் இந்தப் போராட்டத்தை செய்வோம் என்று திட்டமிட்டோம். அதன்பிறகு இந்தப் போராட்டம் குறித்து ஏனைய நண்பர்களுக்கும் தகவல்கள் கிடைத்ததால் அவர்களும் எம்முடன் இணைந்தனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிட்னியில் இருந்து சுமார் 160 பேர் கன்பராவுக்கு வருகை தந்து கூடினர். நண்பர்கள் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கியதால் இந்தப் போராட்டத்தை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது.

கேள்வி: இத்தகையதொரு போராட்டம் குறித்து ஆரம்பத்தில் உங்களுக்கு யோசனை வந்தபோது இந்தப் போராட்டம் ஊடகங்களில் எடுத்துச் செல்லப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா ?

பதில்: இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக 50 பேருடன்தான் போகலாம் என்று நான் முதலில் கருதினேன். அதனால் இந்தப் போராட்டம் பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை.

கேள்வி: உங்களது இந்த நேர்காணல் பல்வேறு நாடுகளுக்கும் செல்லவிருப்பதால் ஏனைய நாடுகளிலிருக்கும் இளையோர்களுக்கு எத்தகைய செய்திகளை நீங்கள் கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: முடியும் என்று கருதினால் இத்தகைய கவனயீர்ப்புப் போராட்டங்களை அனைவராலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும், செய்ய வேண்டும் என்று கூறிச் செய்யாமல் இருந்து விடுவதனைக் காட்டிலும் அனைவரும் ஒன்றிணைந்தால் இத்தகைய போராட்டங்களைச் செய்து விடலாம். இந்த இடத்தில் சிறியதொரு சம்பவத்தை உதாரணமாகக் கூற விரும்புகிறேன்.

இந்தப் போராட்டம் குறித்து எனது நண்பர் ஒருவருக்கு நான் கூறியபோது அவர் அதனை நிராகரித்தார். அதாவது நாங்கள் சிறிலங்காவை விட்டு வந்து விட்டோம். இனிமேல் அதனைப்பற்றி கவலைப்படக்கூடாது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. துடுப்பெடுத்தாட்டப் போட்டிக்குச் சென்று விளையாட்டிற்கு ஆதரவு வழங்கினால் போதும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக இத்தகைய போட்டிகளுக்குச் சென்று நான் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தேன். ஆனால் இந்தமுறை ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று கருதினேன். குறிப்பாக இத்தகையதொரு போட்டியில் எங்கள் நாட்டுப் பிரச்சினையை வெளிக்காட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கு முன்வந்து செய்திருக்கின்றேன். மகிழ்ச்சியாக இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எங்கள் நாட்டில் இடம்பெறும் பிரச்சினைகளை வெளிக்காட்டுவது இலகுவாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

எமது கவனயீர்ப்பு போராட்டத்திற்காக துடுப்பெடுத்தாட்டப் போட்டி ஒன்றை நாங்கள் தேர்வு செய்ததற்கு காரணம் என்னவெனில், உலகில் உள்ள அனைத்து நாட்டவர்களும் இத்தகைய போட்டிகளைப் பார்ப்பார்கள். எனவே எங்கள் போராட்டத்தை இத்தகையதொரு போட்டியில் முன்னெடுத்தால் அனைத்து நாட்டவர்களும் அதனை அறிந்துகொள்வதற்கான அதிகபட்ச சந்தர்ப்பம் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் துடுப்பெடுத்தாட்டப் போட்டி ஒன்றை எமது போராட்டத்திற்காகப் தெரிவு செய்தோம்.

பாடசாலைகளிலும் இத்தகைய கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தலாம். குறிப்பாக அனைத்து இளைஞர்களும் முன்வந்தால் எமது நாட்டிற்கு ஒரு விடிவு காணலாம் என்றார் அவர்.

Comments