கனவு மெய்ப்பட்ட கொசொவோ!

'இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது."

கடந்த பெப்ரவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர் மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்

'எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாறு எமக்கென்று வகுத்து வைத்துள்ள உயர்வினை நாம் அடைவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தச் சக்திகளாலும் முடியாது!".

ஒரு தேசத்தின் சுதந்திர விடுதலைக்கான ஆன்ம உறுதியினை, வலிமையை, கொசொவோ தலைவரின் இந்தக் கூற்றுக்கள் புலப்படுத்தியுள்ளன. இந்தக் கூற்றின் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, கொசொவோ விடுதலை குறித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் சில கருத்துக்களை முன் வைப்பது பொருத்தமானதாகும் என்று நாம் கருதுகின்றோம்.

கொசொவோ நாட்டின் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிராகச் சில நாடுகளும், சுதந்திரப் பிரகடனத்திற்கு ஆதரவாகச் சில நாடுகளும் அறிக்கைகளை விடுத்துள்ளன. கொசொவோவின் சுதந்திரத்திற்கு எதிராகக் கண்டனங்களை வெளியிட்டுள்ள நாடுகள் அவற்றைச் சேர்பிய நாட்டுடனான தம்முடைய நட்பின் காரணமாகவோ அல்லது தங்களுடைய கேந்திர, பொருளாதார நலன்கள் காரணமாகவோ அல்லது தமது நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு குறியீடாகச் கொசொவோவின் சுதந்திரம் அமைந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவோ, கொசொவோவின் சுதந்திரத்தை எதிர்க்கின்றன.

கிரீஸ், செக் குடியரசு , சுலவாக்கியா, இரஸ்யா, ரொமேனியா, ஹங்கேரி, சிறிலங்கா போன்ற நாடுகளை இந்தப் பட்டியலுக்குள் நாம் சேர்க்கலாம்.கொசொவோவின் சுதந்திரத்தினை வரவேற்கும் நாடுகள் தம்முடைய பொருளாதார, கேந்திர அரசியல் காரணங்களுக்காகவோ (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா போன்ற நாடுகள்) அல்லது தமக்கும் மற்றும் தம்மைப் போன்று அடக்கு முறைக்கு எதிராக, விடுதலைக்காகப் போராடி வருகின்ற மக்களின் சுதந்திரத்தை அவாவி நிற்கின்ற காரணத்திற்காகவோ (தமிழீழம்), கொசொவோவின் சுதந்திரத்தை வரவேற்றுள்ளன.கோசொவோ சுதந்திரப் போராட்டத்தை மிகச் சுருக்கமாக இவ்வாறு கூறலாம்.

சோவியத் யூனியனின் வல்லரசுக் காலத்தில், அதனுடைய வல்லரசு ஆளுமைக்குள், அதனுடைய நட்பு நாடாக விளங்கிய யூகோஸ்லாவியாவின் சிறிய பிரதேசமாக கொசொவோஇருந்தது.பின்னர்யூகோஸ்லாவியாவிலிருந்து பல தேசங்கள் பிரிந்து சென்று தமக்கெனத் தனி நாடுகளை அமைத்தபோது, கொசொவோ சேர்பிய அரசின் தெற்குப் பிரதேசமாக இருந்தது. இங்கு வாழ்ந்து வந்த பெரும்பான்மை இனமான, இஸ்லாமியர்களான அல்பேனியர்கள் மீது, சேர்பிய அரசு இராணுவ அடக்கு முறைகளை மேற்கொண்டதன் காரணமாக, கொசொவோ மக்கள், கொசோவன் விடுதலை இராணுவத்தின் கீழ் இணைந்து, தமது சுதந்திரத்திற்காகப் போராடி வந்தார்கள்.

சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வி கண்ட நிலையில், நேட்டோவும், ஐக்கிய நாடுகள் சபையும் தலையிட்டு சேர்பிய இராணுத்தைக் கொசொவோவில் இருந்து வெளியேற்றின. 2001 ஆம் ஆண்டிலிருந்து கொசொவோவின் முற்று முழுதான நிர்வாகத்தினை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்றுக்கொண்டு, கொசொவோவை நிர்வகித்துக் கொண்டு வந்தது.

இதன் பின்னர் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளும் வெற்றியளிக்காத நிலையில், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பிரகாரம், தாம் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையைக் கொசொவோ வலியுறுத்த ஆரம்பித்தது. இதன் அடிப்படையில், தமது கொசொவோ நாடாளுமன்றத்தின் ஊடாகக் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியன்று, சுதந்திரத் தனியரசுப் பிரகடனத்தைக் கொசொவோ அறிவித்தது.

கொசொவோவின் சுதந்திரத்தை உடனடியாக எதிர்த்த நாடுகளுள் சிறிலங்காவும் ஒன்றாகும். சிறிலங்கா தனது எதிர்ப்புக்கான காரணிகளாகச் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.'கொசொவோவின் சுதந்திரப் பிரகடனம், சேர்பியப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை. கொசொவோவின் இந்த ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனமானது, சர்வதேச உறவுகளை நிர்வகிக்க முடியாத நிலைக்குக் கொண்டு வரக்கூடிய மோசமான முன்னுதாரணமாக அமையும். அத்தோடு இந்தச் சுதந்திரப் பிரகடனமானது இறைமையுள்ள நாடுகளுக்கும், அனைத்துலகச் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பாரிய அச்சுறுத்தலாகவும் அமையும்"- என்று சிறிலங்கா எச்சரித்துள்ளது.

உலகின் மிகத் தொன்மையான இனங்களில் ஒன்றான தமிழினத்தைக் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கொடுமையான வழிகளினூடாக அடக்கி, ஒடுக்கிவிட முயன்று வருகின்ற சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடான சிறிலங்கா, கொசொவோ தேசத்தின் சுதந்திரம் குறித்து அச்சம் கொண்டு, இவ்வாறு கண்டன அறிக்கை விடுத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆயினும் இந்த அறிக்கையைச் சற்று ஆழமாகக் கவனித்தால், தமிழீழம் தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கான தகுந்த காரணிகளை இந்த அறிக்கையே கொண்டிருப்பதை நாம் காணலாம்.

'கொசொவோவின் சுதந்திரப் பிரகடனம், சேர்பியப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை" - என்று சிறிலங்கா தெரிவித்துள்ளது. அதாவது தம்மை அடக்கி, ஒடுக்க முனைகின்ற பெரும்பான்மை மக்களின் ஒப்புதலை, அடக்கப்படுகின்ற மக்கள் பெறுவதன் மூலம்தான் தங்களது சுதந்திரத்தை அவர்கள் பெறவேண்டும் என்று சிறிலங்கா சொல்கின்றது.

சிறிலங்காவைப் பொறுத்தவரையில் 'சிங்கள மக்களும், தமிழ் மக்களும் சிறிலங்காவினரே" என்றும், 'அவர்களிடையே பேதமும், பாகுபாடும் இல்லை" என்றும் சிறிலங்கா பரப்புரை செய்கின்றது. ஆனால் உண்மை என்ன? அதனையும் சிறிலங்காவின் சிங்களத் தலைவர்கள் வாயிலாகவே கேட்போம்.சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1983 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பை அன்றைய சிங்கள அரசு - ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு நடாத்தியது. அந்தத் தமிழின அழிப்பு நடைபெற்ற பின்னர், சிறிலங்காவின் அன்றைய அமைச்சரான காமினி திசநாயக்கா ஆற்றிய உரையை நாம் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

1983 ஆம் ஆண்டு, செப்ரம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்க பின்வருமாறு கொக்கரித்தார். ஆமாம், கூறவில்லை - கொக்கரித்தார் - என்பதே சரியான சொல்லாகும்!தமிழ் மக்களைப் பார்த்துக் காமினி திசநாயக்க இவ்றுதான் கொக்கரித்தார்

'உங்களைத் தாக்கியது யார்? - சிங்களவர்கள்!
உங்களைக் காப்பாற்றியது யார்? - சிங்களவர்கள்!

ஆமாம்! எங்களால்தான் உங்களைத் தாக்கவும், காப்பாற்றவும் முடியும்! உங்களைக் காப்பாற்ற, இந்தியாவின் இராணுவம் இங்கே வருமாக இருந்தால், அதற்குப் 14 மணித்தியாலங்கள் தேவை! ஆனால் 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக நாம் அர்ப்பணிப்போம். உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ, மட்டக்களப்புத் தமிழன் என்றோ, மலையகத் தமிழன் என்றோ, இந்துத் தமிழன் என்றோ, கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை! எல்லோருமே தமிழர்கள்தான்!- இவ்வாறு அன்று, 1983 இல், அமைச்சர் காமினி திசநாயக்க கொக்கரித்தார்.

(ஆனால் பின்னாளில் தமிழீழ மக்களின் அமைதி கொல்லும் படையாக வந்திறங்கிய இந்திய இராணுவப் பெரும்படையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்து நின்று விரட்டியடித்தது வேறொரு வரலாற்றுப் பதிவாகும்!)

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளின் மூலம், உலக நாடுகள் யாவும் முதன் முறையாக விழித்தெழுந்தன. ஆனால் ஒரேயொரு நாடு மட்டும் விழித்தெழவேயில்லை. விழித்தெழாத அந்த நாடு வேறெந்த நாடும் அல்ல! அது சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடான சிறிலங்காவேதான்! அதன் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜெயவர்த்தன அன்றைய தினங்களில் நடந்துகொண்ட விதமும், பேசிய பேச்சுக்களும் ஒரு சிங்களப் பௌத்தப் பேரினவாதியின் சிந்தனைகளை அப்படியே பிரதிபலித்தன.

இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்பதற்கும், அவை பிரிந்துதான் இருக்க வேண்டும் என்பதற்கும் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்கூறிய கொக்கரிப்பு மட்டுல்லாது, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேச்சுக்களும், நடத்தையும் சாட்சிகளாக அமைகின்றன. உதாரணத்திற்காக மேலுமொரு சம்பவத்தை இங்கு தர விழைகின்றோம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி இரவிலிருந்து தொடர்ந்து இலங்கைத் தீவின் பல பாகங்கள் எரிந்து கொண்டிருந்த போதும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா மௌனமாகவே இருந்தார். ஐந்து கோரமான நாட்களுக்குப் பின்னர்தான் - அதாவது ஜூலை 28 ஆம் திகதி வியாழக்கிழமை இரவுதான் - ஜனாதிபதி ஜெயவர்த்தனா முதன் முதலாகத் தமிழினப் படுகொலைகள் குறித்து நாட்டு மக்களுக்குத் தொலைகாட்சியின் ஊடாக உரையாற்றினார்.

அப்போதும் கூட, தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த இனப் படுகொலைகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தோ, கவலை தெரிவித்தோ, அனுதாபம் தெரிவித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாறாக, இந்தக் கோரமான இனப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் உரை அமைந்திருந்தது.

'1956 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின்மை வளர்ந்து வந்ததன் வெளிப்பாடுதான் இந்த இனக் கலவரங்கள்" என்றும், 'இவ்வாறான மனக்குறைகள் சிங்கள மக்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் (அதாவது சிங்கள மக்கள்) வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயலாகும் என்றும், 77 வயது நிரம்பிய ஜே.ஆர். ஜெயவர்த்தனா அன்று தெரிவித்தார்.அத்தோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

அவர் மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினார்:-'சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், சிங்கள மக்களுடைய இயல்பான வேட்கையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு புதிய சட்டத்தை நான் அமலாக்க இருக்கின்றேன். இந்தப் புதிய சட்டத்தின் பிரகாரம், நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்கள் ஆக முடியாது.

அது மட்டுமல்ல, நாட்டுப் பிரிவினை கோரும் எந்த ஒரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது குறித்து எவரும் சட்டரீதியாகச் செயல்பட முடியாது."அன்புக்குரிய வாசகர்களே!

1983 ஜூலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளையும், அவ்வேளையில் சிங்களத் தலைவர்கள் கூறிய இனவாதக் கருத்துக்களையும் நாம் இவ்வேளையில் சுட்டிக் காட்டியமைக்குக் காரணம் உண்டு.

கொசொவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிராகச் சிறிலங்கா தெரிவித்துள்ள கண்டனத்தில் சொல்லப்படுகின்ற ஒரு காரணமாக 'கொசொவோவின் சுதந்திரப் பிரகடனம், சேர்பியப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை" - என்பதாகும்.சேர்பியப் பெரும்பான்மை இனம், கொசோவோ மக்களை அடக்கி, ஒடுக்க முனைந்த போதுதான், கொசொவோ மக்கள் தமது சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கினார்கள். தம்மை அடக்க முயல்பவர்களிடமே, தமக்குரிய சுதந்திரத்திற்கான ஒப்புதலை, அடக்கப்படுபவர்கள் எவ்வாறு பெற முடியும்?

'இங்கே தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு, தமிழர்களைக் கொல்வது இயல்பானது" என்று சிங்களத் தலைவர்களே பகிரங்கமாக மார்தட்டிப் பேசுகின்றபோது, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைத் தமிழ் மக்கள் எவ்வாறு பெற முடியும்?

பெறமுடியாது என்பது மட்டுமல்லாமல், தமிழர்கள் வேறானவர்கள் என்று சிங்களம் சொல்கின்ற விளக்கமே, தமிழர்கள் பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான காரணிகளில் ஒன்றாக அமைகின்றது.

கொசொவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிராகச் சிறிலங்கா தெரிவித்துள்ள கண்டனத்தில் சொல்லப்படுகின்ற இன்னுமொரு காரணமாக 'இந்தச் சுதந்திரப் பிரகடனமானது இறைமையுள்ள நாடுகளுக்கும், அனைத்துலகச் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும்"- என்பதாகும்.

இறைமையைப் பற்றி பேசுகின்ற சிறிலங்கா உண்மையில் இறைமையற்ற தேசம் என்பதை நாம் பலமுறை தர்க்கித்தே வந்துள்ளோம்.

சிறிலங்கா என்ற நாடானது, தனது இறைமையை முறையாகப் பெற்ற நாடு அல்ல! அந்த வகையில் சிறிலங்கா ஓர் இறைமை உள்ள நாடு அல்ல!

மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், சிறிலங்கா, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றபோது சோல்பரி பிரபுவின் தலைமையில் ஆக்கப்பட்ட சுதந்திர இலங்கைக்கான அரசியல் யாப்பின் சரத்து 29 இன் மற்றும் பிரிவுகளைப் பின்னாளில் சிறிலங்கா அரசு மீறியது.

பின்னர் 1972ல் சிறிலங்கா குடியரசாக மாறியபோது, அது சட்டரீதியாகப் புதிய யாப்பை உருவாக்கவில்லை.ஏனென்றால், இவ்வாறு அரசியல் யாப்பினை மாற்றுவதற்கு, பிரித்தானியா அரசின் ஞரநநn ழக ஊழரnஉடை இன் அல்லது பிரித்தானிய மகாராணியின் அனுமதியோடு, பிரித்தானியப் பாராளுமன்றம் கொடுக்கின்ற ஒப்புதலோடுதான், சிறிலங்கா தனது அரசியல் யாப்பு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அனுமதி பெறாமல், புதிய யாப்பைச் சிறிலங்கா அரசு கொண்டு வந்த காரணத்தினால், புதிய அரசியல் யாப்பு என்பதானது, சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பானது என்பதால், சிறிலங்காவிற்கு இறைமை என்பது கிடையாது!

தவிரவும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சமமாகவும், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் இருப்பதற்கான முயற்சிகளைச் சிறிலங்கா அரசு மேற்கொண்டதா?

அல்லது மேற்கொண்டு வர முயற்சிக்கின்றதா?

இல்லை என்பதே, இதற்குரிய உண்மையான பதிலாகும்!

இன்றைய சிறிலங்கா அரசும், நாட்டில் சமாதானத்தைக் குலைத்து, தமிழர்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக்கி, அவர்களை அவல வாழ்க்கையில் தள்ளி, அழித்து வருகின்றது. சிறிலங்காவின் சட்டம் தமிழர்களுக்கு எதிராக உள்ளது. சிறிலங்காவின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் யாப்பு தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் அரசுகள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக உள்ளன.

பெரும்பான்மை இனத்தவர்கள் ~இறைமை என்ற பெயரின் கீழ், சிறுபான்மை இனத்தவரை ஒடுக்கும்போது, அந்தச் சிறுபான்மை இனம் தமக்கென்று ஓர் இறைமையுள்ள நாட்டை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு.

அதையே கொசொவோ செய்துள்ளது. அதையே தமிழீழமும் செய்யப் போகின்றது.சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நெடுங்காலமாகவே வலியுறுத்தி வந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு, சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்தும், பிரிந்து செல்லும் உரிமைக் கோட்பாடு குறித்தும், பிரிந்து செல்லும் உரிமைக்குத் தகுதியானவர்கள் குறித்தும் சில வரைவிலக்கணங்களை முன் வைத்துள்ளது. அதன்படி 'வரலாற்று ரீதியாக, தம்முடைய பாரம்பரிய மண்ணில், தனது தனித்துவமான பண்பாட்டோடு, தம்மைத்தாமே திறமையாக ஆண்டு வந்த மக்கள், மீண்டும் தம்மைத் தாமே ஆள்வதற்கு உரிமை கொண்டவர்கள்" என்ற கருத்துப்பட, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு பல காரணிகளை முன்வைத்துள்ளது.

சுயநிர்ணய உரிமை குறித்துக் குறிப்பிடுகின்ற உலக நீதிமன்றம் 'இது அரசுக்கு மட்டுமுள்ள உரிமை அல்ல, இது மக்களுக்கும் உள்ள உரிமையாகும்!" என்று தெரிவிக்கின்றது.

உலக நீதிமன்றமும், Inter-American Commission on Human Rights of the Organisation of the American State" உம், சுயநிர்ணய உரிமை குறித்துப் பொதுவான பல கருத்து நிலைகளை அறிவித்துள்ளன.

மக்களுடைய சுயநிர்ணயத்திற்கான உரிமையைச் சகலரும், சகல வேளைகளிலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவை தெரிவித்துள்ளன. சுயநிர்ணய உரிமைக்குச் சட்ட ரீதியான அந்தஸ்து உள்ளது என்றும், இவற்றை ஏற்று மதிக்க வேண்டியது சர்வதேசத்துக்குரிய ஒரு கட்டாயக் கடமையுமாகும் என்றும் இவை தெரிவித்துள்ளன.வரலாற்று ரீதியாக ஒருங்கிணைந்திருந்த தேசிய இனங்கள் முரண்பட்டுப் பிரிந்து புதிதாக நாடுகளை உருவாக்கி வருகின்றன.

ஆனால் ஏற்கனவே தனியாக இருந்து, பின்னர் பலவந்தமாக ஒன்று சேர்க்கப்பட்ட தமிழர் தேசம் ஏன் மீண்டும் தகுந்த காரணங்களுக்காகத் - தனியாகப் பிரிந்து செல்லக்கூடாது என்பதுதான் எமது கேள்வி!

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணயக் கோட்பாட்டை, உலக நீதிமன்றத்தின் சுயநிர்ணய உரிமைக்கான வரைவிலக்கணத்தை, ஐவெநச - Inter-American Commission on Human Rights of the Organisation of the American State" இன் சுயநிர்ணய உரிமை குறித்த கருத்து நிலையை, இன்று சிறிலங்கா அரசு மறுத்து, எதிர்த்து நிற்கின்றது.

இப்போது கொசொவோ தேசத்தின் சுதந்திரக் கனவு மெய்ப்பட்டிருக்கின்றது.இங்கே புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களுக்குச் செய்தியொன்று உண்டு.

தமிழீழக் கோரிக்கைக்கு நாம் முழுமையாக ஆதரவாக இருக்கின்றோம் என்கின்ற கொள்கைக்கு அப்பாற்பட்டு, எத்தகைய இடரோ, இன்னலோ, சோதனையோ வந்தாலும், எத்தகைய சக்திகள் எமக்கு எதிராக எழுந்தாலும் எமது தாயக விடுதலையை நாம் அடைந்தே தீருவோம் என்கின்ற அசைக்க முடியாத வல்லமையை நாம் எம்முடைய ஒருங்கிணைவின் மூலம் அடைய வேண்டும்- என்பதே எமக்கான செய்தியாகும்!

சுதந்திரத் தமிழீழம் விரைவில் அமையும்! அப்போது உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறே முதன்மைப் பாடமாக வைக்கப்படும்!.

Comments