பொங்கு தமிழ் நிகழ்வுகளும் தொடரும் அழுத்தங்களும்

சர்வதேச ரீதியில் “பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகள் பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன.
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் அங்கத்துவம் கிடைக்காத நிலையில் சர்வதேச நன்மதிப்பையும் அரசாங்கம் இழந்துள்ளது.

இந்த அங்கத்துவ இழப்பின் காரணிகளை தெளிவாக வெளிப்படுத்தும் களமாக “பொங்கு தமிழ்’ நிகழ்வு பல தேசங்களில் நடைபெறுகிறது.

இங்கு குறிப்பாக தாயகம், தேசியம், சுய நிர்ணயம் என்கிற உயர் நிலைக் கோட்பாடுளே உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன.இதனை மேற்குலக நாடுகள் உளப்பூர்வமாக வரவேற்பது போல் தெரியவில்லை.

தமது பிராந்திய அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவிட வேண்டுமென்கிற கோரிக்கையை இப்பொங்குதமிழ் நிகழ்வுகள் முதன்மைப்படுத்தினால் மேற்குலகிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனாலும் டென்மார்க், நோர்வே இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமைக் முழக்கமே மேலோங்கியிருந்தது.

தமது கேந்திர நலனிற்கு இசைவற்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளை, அந்நாட்டு அரசுகள் இனிமேலும் அனுமதிக்குமாவென்கிற கேள்வியும் எழுகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று நாடுகளில் இத்தாலி தேசமானது 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் ஆரம்ப கால உறுப்பு நாடாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடான இத்தாலியில் பொங்கு தமிழ் நிகழ்வு முடிவடைந்ததும் 31 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் காத்திரமான பணிபுரிந்த உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தடைகளும் கைதுகளும் “பொங்கு தமிழ்’ நிகழ்வின் பின்னர் மேற்கொள்ளப்பட்டதன் பின்புலத்தில் வெறுமனே இலங்கைத் தூதரகத்தின் அழுத்தம் இருப்பதாக மட்டும் கருதி விட முடியாது.

நிகழ்வினை நடத்த அனுமதி அளிப்பதும் முடிந்ததும் கைது செய்வதும் போன்ற நகர்வுகள், சில மேற்குலக நாடுகளின் மனித உரிமை குறித்த இரட்டை வேடத்தை அம்பலமாக்குகிறது.

தூதரகங்களிலிருந்து அழுத்தங்கள் வராவிட்டாலும் இலங்கை அரசு சார்பான ஒரு நிலைப்பாடு உயிர்ப்புடன் இருப்பதாக வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் மேற்குலகிற்கு உண்டு.

இதில் சீனா, இந்தியாவின் ஆதிக்கப் போட்டியும் இரண்டறக் கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த அரசாங்கம் ஆட்சி புரிந்தாலும் அல்லது ஜே.வி.பி. தவிர்ந்த ரணில் கட்சியினர் பதவியில் இருந்தாலும் இவ்வகையான அரசியல் இராஜதந்திர நிலைப்பாட்டையே மேற்குலகம் கடைப்பிடிக்கும்.

இங்கு அரசுடனான உறவு என்கிற விடயமே, மேற்குலகின் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவுடன் ஏற்படுத்தப் போகும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டால் மேற்குலகின் கவலைக்கு தற்காலிக ஓய்வு கிட்டலாம்.

அடுத்த மாதம் அமெரிக்க விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமரின் நகர்வுகள், பிராந்தியத்தின் எதிர்காலத்தை வேறு பாதையில் கொண்டு செல்லுமெனக் கணிப்பிடப்படுகிறது.

இதேவேளை புதுடில்லிக்கு அடுக்கடுக்காகப் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை அரசின் உயர்நிலைப் பிரதிநிதிகளும் தமது இறுக்கமான நிலைப்பாட்டினை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

இந்தியா இப்போது என்ன பங்களிப்பினை செய்கிறதோ அதே தொடர்ந்து செய்ய வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல புதுடில்லியில் கூறியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் தலையிடும் இந்தியாவிற்கான பங்களிப்பு வரைமுறைகளையும் சிங்களமே தீர்மானிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதாவது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் புலிகளை ஒடுக்குவதற்கான ஆயுதப் பங்களிப்பினையும் ஒன்றாக இணைத்து குழப்பகரமான சூழலைத் தோற்றுவிக்கக் கூடாதென்பதே சிங்கள தேசமானது இந்தியாவிற்கு சொல்லும் அழுத்தமான செய்தி.

இதேவேளை கடந்த சனிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் எரித்திய அமைப்பின் பிரதிநிதி சாம் யாறட் என்பவரும் ஒரு செய்தியைக் கூறியிருந்தார்.

அதாவது தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கும் நீதியான சமாதானத்திற்கும் எரித்திய மக்களின் ஆதரவு என்றும் உண்டென்பதே அச் செய்தியின் சாராம்சமாகும்.

தமது 30 ஆண்டு கால நீடித்த ஆயுதப் போராட்டம், “வெற்றி’ என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்றென தமக்கு உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.

தம்மை ஒடுக்கிய எதியோப்பிய தேசத்துடன் சோவியத் யூனியன் கூட்டுச் சேர்ந்ததால் விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்களை தாம் இழக்க நேர்ந்ததையும் அவர் விளக்கினார்.

ஆனாலும் இலட்சிய வேட்கையும் இலக்கு மீதான நம்பிக்கையும் தமது இறுதி வெற்றியை அடைவதற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்ததென்பதை கூறியதோடு தமிழ் மக்களின் போராட்டத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

தற்போதைய நிலையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச கருத்துருவத்தில் இருவேறு பட்ட நிலை உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. சபை மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டத் தொடரில் இப்பிளவு மிதப்பு நிலை அடைந்துள்ளது.

ஐ.நா. வினால் முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைப்புக்கள் இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டதால் வளர்ச்சியுறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அரசிற்கு ஒரு கால அட்டவணையை ஏற்படுத்த வேண்டுமென டென்மார்க் தெரிவித்தது.

அதற்கு கனடா, சுவீடன் போன்ற நாடுகள் ஆதரவளித்தன. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் யாவும் இலங்கை குறித்து தமது கடுமையான நிலைப்பாட்டை வழமை போன்று வெளிப்படுத்திய வேளை சீனா, இந்தோனேசியா, அல்ஜீரியா, கட்டார், பஹ்ரைன் போன்ற நேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து கருத்துக்களை வெளியிட்டன.

சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் அறிக்கையில் கிழக்கில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக வன்மையான கண்டனங்கள் இடம்பெற்றிருந்தன.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆயுதக் குழுக்களின் பாலியல் வதைக்கு உள்ளாகிய இளம் பெண்கள் குறித்து விரிவாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதோடு அது பற்றி எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் விசனத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. வின் காணாமல் போகடிக்கப்பட்டோர் தொடர்பான செயற்குழு, கடந்த வாரம் விடுத்த அறிக்கையில், மனிதாபிமானத் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் பெண்களும் இலக்கு வைக்கப்படுகிறார்களென குறிப்பிட்டதோடு ஏப்ரலில் 22 பேரும் மே மாதம் 18 பேரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு உதவி புரிவதற்குமாக ஒரு மசோதாவை நாடாளுமன்றில் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது.

வேலிக்கு ஓணான் சாட்சி என்கிற நிலையில் யாரிடம் சென்று எவர் பாதுகாப்பு கோருவது என்கிற கேள்வியும் எழுகிறது.

இதனை பிரான்ஸை தளமாகக் கொண்டிருக்கும் ஏ.சி.எப். அமைப்பு அண்மையில் தெளிவாக விளக்கியிருந்தது.

இரண்டாண்டுகளுக்கு (2006) முன்னர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களின் நிலை குறித்த அரச விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியதோடு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏ.சி.எப். அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் அரசிற்கு எதிரான ஒரு வழக்கினைத் தொடரும் ஏது நிலைகளும் இங்கு காணப்படுகின்றன.இதேவேளை வித்தியாசமான பிறிதொரு சர்வதேச நகர்வொன்றையும் அவதானிக்க வேண்டும்.

சில மேற்கு நாடுகள் ஐ.நா. சபையில் அரசிற்கெதிரான நகர்வுகளை மேற்கொண்டவாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தொண்டர் அமைப்புக்கள், பொதுஜன ஊடகங்கள், கலாசார ஒன்றியங்கள் மீதும் தமது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன.

புலம்பெயர் மக்கள் மீது செலுத்தும் அழுத்தங்கள், தாயகத்தில் இலட்சிய மாறுதலைக் கொண்டு வருமென தவறாகக் கற்பிதம் கொள்ளப்படுகிறது.

இவை யாவும் இலக்கு நோக்கிய பயணத்தின் வேகத்தை அதிகரிக்குமென்பது உணரப்படவில்லை.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட காணொளி ஊடகமொன்றும் தடை செய்யப்படப் போவதாக செய்திகள் கசிகின்றன.

இறுக்கங்கள் நெருக்கும் பொழுதே இருப்பிற்கான நியாயங்களும் தரிசனங்களும் உறுதிப்படுத்தப்படும்.

தமிழர் தாயகமென்பது இன்னுமொரு நைஜீரியா நாட்டின் பயாப்ரா (BIAFRA) வல்ல என்பதை மக்கள் சக்தியே எடுத்துக் கூறுமென்பதே மனித குல வரலாறு.

-இதயச்சந்திரன்

Comments