ஈழத் தமிழர், இந்தியா தொடர்பாக மிக விழிப்பாக இருக்க வேண்டும்

ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் அதன் உச்சத்தைத் தொட்ட சந்தர்ப்ங்களிலெல்லாம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதன் மூச்சு தடுக்கப்பட்ட வரலாறுகளை நாம் பார்த்துள்ளோம். 2002 இல் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையும், அதன் பின் நடைபெற்ற பேச்சுக்களும் இதற்கு நல்ல உதாரணம்.

2007 டிசம்பரில் நோர்வே அனுசரணையை வரவேற்கும் நோக்குடன் ஒருதலைப் பட்சமான போர்நிறுத்தத்தை விடுதலைப் புலிகள்; அறிவித்தபோது களத்திலே அவர்கள் மிகவும் பலமான நிலையில் இருந்தார்கள். தென்மராட்சியில் நடந்த தீச்சுவாலை நடவடிக்கையின் போது எதிரிக்கு மரண அடி தந்து தமது பலத்தை நிரூபித்திருந்த வேளையிலேயே நோர்வேயின் தலையீடு ஆரம்பமானது.

யாழ் குடாநாட்டை விடுவிக்கம் நோக்குடன் யாழ்நகரின் வாசல்வரை சென்று விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த வேளையில், குடாநாட்டில் முற்றுகைக்கு உள்ளாயிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரைப் பாதுகாக்க இந்தியாவின் உதவியை நாடியிருந்தது சிங்கள அரசு.

'ஈழ மண்ணில் மீண்டுமொரு முறை கால்வைக்க தான் தயாராக இல்லை" எனத் தெரிவித்த இந்தியா 'கடலில் வேண்டுமானால் சிங்களப் படைகளுக்கு பாதுகாப்பு வழங்க தான் தயார்" எனத் தெரிவித்திருந்தது.

இத்தகைய நிலையில் விடுதலைப் புலிகள் யாழ் முற்றுகையில் இருந்து வெளியேறினார்கள். 'ஆட் பற்றாக்குறையே தமது வெளியேற்றத்துக்குக் காரணம்" என விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்த போதிலும், இந்தியாவின் அழுத்தமே விடுதலைப் புலிகள் யாழ் முற்றுகையைக் கைவிடக் காரணம் என ஒரு சேதியும் அப்போது கசிந்திருந்தமை நினைவிருக்கலாம்.

இது உண்மையோ, பொய்யோ அதற்கான வாய்ப்பு இருப்பதை மறுத்துவிட முடியாது என்பதே யதார்த்தம். ஏனெனில், முதலாளித்துவ அரசுகள் தமது பூகோள அரசியல் நலன்களைப் புறக்கணித்துவிட்டு ஒன்றுபட்டு நிற்பது புரட்சிகளை நசுக்குவது என்ற அம்சத்தில் மாத்திரமே அவை அதற்காக இரண்டு விதமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றன.

ஒன்று நேரடியான மற்றும் மறைமுகமான இராணுவத் தலையீடு.

இரண்டாவது பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக போராட்டத்தின் முனைப்பை மழுங்கடிப்பது, இழுத்தடிப்புக்கு ஊடாக போராட்டத்தைச் சிதைப்பது. இத்தகைய தந்திரங்களைப் பாவித்து உலக சரித்திரத்தில் பல போராட்டங்கள் சிதைக்கப்பட்டும் உள்ளன.

கடந்தவாரம் சிறிலங்காத் தலைநகருக்கு இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மேற்கொண்ட பயணமும் இத்தகைய பின்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜய் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசிய இக்குழு தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தனையும் சந்தித்து உரையாடியுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கான மகாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியே ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும்,

இதன் பின்னணி வேறாக இருக்கலாம் என்பதை அவர்கள் இராசம்பந்தனுடன் மேற்கொண்ட சந்திப்பு கோடி காட்டி நிற்கின்றது.

சிறி லங்காவில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களை அறிந்து கொள்ள ஒருவர் கொழும்புக்கு செல்லத்தான் வேண்டும் என்று கூறவது சிறுபிள்ளைத் தனமானது. ஏனெனில், கொழும்பில் நடைபெறும் சம்பவங்கள் உடனுக்குடன் சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த வண்ணமேயே உள்ளன.

மறுபுறம், இவர்களது வருகை தொடர்பாக வெளிவருகிற ஒருசில ஊடகச் செய்திகளில் முல்லைத்தீவு நோக்கிய இராணுவ நடவடிக்கையை சிங்களதேசம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென இவர்கள் அழுத்தம் தந்தாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இது உண்மையாயின், இந்தியா தனது குள்ளநரித் தந்திரத்தை மீண்டும் வெளிக்காட்டப் புறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கே வரமுடியும்.

சிறி லங்காவுக்கு ஆயுத உதவி வழங்கும் முன்னாள் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

வான் புலிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ராடர் உபகரணங்களை வழங்கியுள்ள இந்தியா, கடற் புலிகளை முடக்குவதற்கும் பல்வேறு உதவிகளை நல்கி வருகிறன்றது.

இவை தவிர, பொருண்மிய உதவிகள் வேறு.

ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவில் சிறி லங்காவின் மீள் நியமனத்தை தடுத்துவிட உலகம் முனைந்து நின்ற வேளையில், சிறி லங்கா மீள நியமனம் பெறுவதற்கு ஆதரவாக பகிரங்க பிரசாரத்தில் ஈடுபட்ட நாடு இந்தியா.

நோர்வே அனுசரணையுடன் செய்து கொள்ளளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிங்களம் ஒருதலைப் பட்சமாக வெளியேறியமையை உலகின் பலநாடுகள் கண்டித்த போதிலும்

இந்தியா இதுவரை வாயே திறக்கவில்லை. நோர்வே அனுசரணை இன்று ஸ்தம்பித நிலையில் நிற்பதற்கும் முழுமுதற் காரணம் இந்தியாவே.

இத்தனையும் செய்துவிட்டு இந்தியா இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது எதற்காக?

விடுதலைப் புலிகள் இந்தியா தொடர்பாக எப்போதுமே நிதானமான, எதிர்பார்ப்புடன் கூடிய கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றமை வழக்கம். அப்படி இருந்தும் கூட அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து காட்டமான கருத்துக்களே இந்தியா தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதன் ஊடாக வரலாற்றுத் தவறை இழைத்து வருவதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இத்தகைய கருத்துக்கள் மத்தியில், திடீரென அரசியல் ஆசாடபூபதியான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் தமிழகத்தில் வைத்து 'விடுதலைப் புலிகள் பேச்சுக்குத் தயார் இந்தியத் தலையீட்டை அவர்கள் விரும்புகிறார்கள்" என்ற தொனியில் தெரிவித்த கருத்துக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு புதிய சுற்றை ஆரம்பிக்கப் போகின்றது என்பதற்கான கட்டியமாகக் கொள்ளப்பட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழர் இந்தியா தொடர்பாக மிக விழிப்பாக இருக்க வேண்டும். 'ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது " ஆட்டின் மீது பரிதாபப் பட்டதனால் அல்ல.

களத்தில் இதுவரை தற்காப்பு யுத்தத்தில் மட்டுமே ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகள் புதிய பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார்கள்.

அதேவேளை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு கேரி புலம்பெயர் தமிழர்களும் புதிய உத்வேகத்துடன் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

மறுபுறம், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகத்திடையே ஒரு புதிய புரிதல் ஏற்பட்டு வருகின்றது. இந்த மூன்று அம்சங்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் போது, தமிழீழத் தேசத்துக்கு அங்கீகாரம் கிட்டி விடலாம் எனச் சிங்களமும், அதனை ஆதரிக்கும் பாரதமும் அஞ்சுகின்றன.

இத்தகைய சூழ்நிலையிலேயே, 'வெண்ணை திரண்டு வருகையில் தாழியை உடைத்துவிட" இந்தியா தயாராகின்றது.

இந்தச் சுழலில் இருந்து தப்பிப் பிழைப்பதிலேயே ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது!


Comments