மன்மோகன் கொண்டாடும் மகிந்த சகவாசம்:தன்மானம் இழப்பதா? தமிழ்மானம் காப்பதா?

ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களின் முன்வைத்து கபடி விளையாடும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆட்டத்தின் பிந்தைய நிலவரம் தான் அண்மையில் கொழும்பு வந்து சென்ற அந்நாட்டு உயர்மட்டக்குழுவின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்பது போலவும் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்பது போலவும் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பது போலவும் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்பது போலவும் இந்தியாவும் இந்தியா சார்ந்த இடமும் பிரச்சினை என்ற வரைவிலக்கணத்துக்குள் வந்துவிட்ட அளவுக்கு அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் காண்பிக்கும் பகை வளர்க்கும் படலத்தின் ஒரு அங்கமாகவே ஈழத்தமிழர்கள் விடயத்தை அவர்கள் கையாள்வது தென்படுகிறது.

இதன் மறுபுறத்தில், சிங்கள தேசத்துடன் கைகோர்த்து நின்று தனது தேச நலன்களை முன்னெடுக்கலாம் என்ற 'அறிவுசார்ந்த" தீர்மானத்துடன் இலங்கையை சீனப்புற்றெடுக்காத - தனக்கு சார்பான - புனித பிரதேசமாக பேண இந்தியா மகிந்த அரசுடன் கைகோர்க்க முடிவெடுத்துள்ளமை அவர்களின் வெளியுறவுக்கொள்கையின் அடுத்த குறைப்பிரசவம்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தை எண்பதுகளில் இருந்தே அருகில் இருந்து தொடர்ச்சியாக நாடிபிடித்து பார்த்து வரும் இந்தியா, சிங்கள தேசம் தனக்கான - தனது தேச நலனுக்கு உதவுக்கூடிய - நிரந்தர நண்பனாக இருக்கும் என்று இன்றும் நம்பி தனது காய்களை நகர்த்துவதானது, சிங்கள தேசத்துக்கு தமிழர் போராட்ட நியாயப்பாடுகளை விளக்க முனைவதிலும் பார்க்க முட்டாள்தனமான முடிவு என்பதில் இரண்டாம் கேள்விக்கு இடமிருக்க முடியாது.

இந்தியாவின் நலனுக்காக சிங்கள தேசம் இன்றுவரை செய்த காரியங்களை பட்டியலிட்டுப் பார்த்தால் முன்னாள் பிரதமர் ராஜீவை துப்பாக்கிப் பிடியால் அடித்தது முதல் இந்தியாவுக்கு ஆகாதவர்கள் என்று தெரிந்துகொண்டும் சீனாவுடனும் பாகிஸ்தானுடன் கூட்டணி வைத்தது வரை எல்லாமே எதிர்மறையானவையே.

இந்த இடைவெளிக்குள் இந்தியாவுக்கு எதிராக புரிந்த சம்பவங்கள் இலங்கையின் தமிழ்த் தேசிய அழிப்புப்போரின் வெம்மையின் கீழ் வெளிவராமல் போயிருக்கலாம் அல்லது இந்தியா அவற்றை மறந்திருக்கலாமே தவிர சிங்கள தேசத்தின் இந்திய எதிர்ப்பு என்ற அடிப்படை நிலை இன்றுவரை மாறவில்லை. இனிமேலும் மாறப்போவதில்லை.

இலங்கையின் அரசியல் கட்டமைப்பை நோக்கினால், பிரதான கட்சிகள் எனப்படும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை விட, அதன்பின்னர் உருவான பெரிய கட்சிகள் எல்லாமே இந்திய எதிர்கொள்கைகளுடன்தான் தமது அரசியல் பாதையை அமைத்திருக்கின்றன.

அது ஜே.வி.பியாக இருக்கட்டும் ஹெல உறுமய எனப்படும் முன்னாள் சிஹல உறுமயவாக இருக்கட்டும் இல்லை தற்போது பிளந்துபோயுள்ள அவற்றின் உதிரிக்கட்சிகளாக இருக்கட்டும். எல்லாமே தமக்குள் வேறுபட்ட அரசியல் முரண்பாடுகளை கொண்டிருப்பினும் தமிழ்மக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து பேணி வந்திருக்கின்றன. அவ்வாறு ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அன்றும் இருந்தது. இன்னமும் உள்ளது. அதனை தாம் பெற்ற நாடாளுமன்ற ஆசனங்களின் ஊடாகவே அவர்கள் நிரூபித்தும் இருக்கிறார்கள்.

ஆகவே, இலங்கையின் இந்த அரசியல் பாரம்பரியத்தை ஒட்டிய எதிர்கால அரசியல் வழித்தோன்றல்களும் இவ்வாறான ஒரு கொள்கையையே - சிங்கள மக்கள் மத்தியில் செல்லுபடியாகும் என நம்பும் இந்த நிலைப்பாட்டையே - எடுக்கப்போகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஜே.வி.பியிலும் விட கொடூர இனவெறிகொண்ட சிஹல உறுமய போன்று இனிவரப்போகின்ற அரசியல் பிதாமகன்களின் இந்திய - தமிழ் எதிர்வெறிப்போக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதே தவிர குறையும் என எதிர்பார்க்க முடியாது.

சிங்கள தேசத்தின் கொள்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று இன்று சிங்கள புத்திஜீவிகளும் சான்றோர்களும் தமது கட்சிகளுக்கு ஆலோசனைகள் கூறுவது அன்றாட செய்திகளலேயே அறியக்கூடியதாக உள்ளது.

தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவேண்டும். அதனூடாக அவர்களது தேசியத்தை சிதைக்க வேண்டும். பௌத்த நாடாக இலங்கை திகழ வேண்டும். இதற்கு இணங்குபவர்கள் சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழவேண்டும். இதில் எந்த சக்தியுடனும் சமரசம் கிடையாது. குறிப்பாக இந்தியாவின் தலையீடு கூடவே கூடாது. மீறி, இந்தியா தன் மூக்கை நுழைக்க வேண்டுமானால் அதனை தமிழர்களின் போராட்டத்துக்கு எதிராக பயன்படுத்துவது.

இதைத்தான் காலகாலமாக சிங்கள தேசம் கடைப்பிடித்து வருகிறது.

இதனை எதிர்த்து - அதாவது தமிழரின் உரிமைகளை பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் நலனையும் தமது நலனாக மதித்து - சிங்கள தேசத்துக்கு எதிராக வெடித்ததுதான் தமிழின ஆயுதப்போராடடம்.

அப்போது, தமிழர்களுக்கு சிங்கள தேசத்திடமிருந்து விமோசனமளிப்பதாக வந்த இந்தியா அன்று என்ன செய்தது?

இந்தியாவால் தமக்கு விடிவு கிடைக்குமென தமிழன் பட்டுவேட்டிக்கனவுடன் இருக்கும்போது, வந்த இந்தியா தமிழன் கட்டியிருந்த கோமணத்தையும் கழற்றிக்கொண்டோடியது.

தனது நலனுக்கும் சேர்த்துத்தானே தமிழன் போராடுகிறான் என்ற அறிவுசார்ந்த - தூர நோக்குடைய அரசியல் தீர்க்கதரிசனம் - இல்லாமல் அன்று இந்தியா தமிழனுக்கு செய்த அந்த கைங்கரியத்தால் சிங்கள தேசமே கைகொட்டி சிரித்தது. எமது எதிரிகள் இருவரையும் ஆளுக்கு ஆள் எதிரிகளாக்கி விட்டோம் என்று புளகாங்கிதமடைந்தது.

ஆனால், இதனால் இந்தியாவை சிங்கள தேசம் நட்புசக்தியாக பார்த்ததா என்றால் இல்லை. தனது நலனுக்காக தம்முடன் சேர்ந்து நின்று தமிழனை எதிர்த்த இந்தியா என்றோ ஒருநாள் அதேபாணியில் சிங்கள தேசத்துக்கு எதிராக தனது பழைய ஆயுதத்தை பயன்படுத்தும் என்ற ஓயாத பயம் சிங்கள தேசத்துக்கு இன்றுவரை அடிமனதில் இருந்து கொண்டுதான் உள்ளது.

இந்தியாவிலுள்ள ஆறு கோடி தமிழர்களின் வாக்கு பலம் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை என்றோ ஒருநாள் ஈழத்தில் உள்ள தமிழனுக்கு ஆதரவாக திருப்பி அது இலங்கைத்தீவை பிளக்கப்போகும் ஆப்பாக இறங்கும் என்றும் -

அது நடைபெறும் நாளில் தனது நலனை காப்பாற்றிக்கொள்ள இந்தியா நிச்சயம் சிங்கள தேசத்துக்கு எதிராக தனது தர்ம சக்கரத்தை வீசும் என்றும் சிங்கள தேசம் உசாராக உள்ளது.

இந்தியாவுக்கு இல்லாத இந்த தூரநோக்க பார்வையே இன்று சிங்கள கட்சிகளால் சிங்கள மக்களின் மனங்களில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளன.

அன்று இதை இந்தியா உணரவில்லை சரி. இன்றுமா உணரவில்லை.

இந்த துன்பியல் சம்பவங்கள் நடந்து இருபது வருடங்கள் ஆகியும் இந்தியா இன்றும் தனது பழைய பஞ்சாங்க கால வெளியுறவுக்கொள்கையுடன் மீண்டும் சிங்கள தேசத்துடன் பேரம் பேசிக்கொண்டு தமிழர் போராட்டத்தை நடுவில் வைத்து கபடி ஆடுகிறது.

இதனிடையில் தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுப்பதைப்போல, இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சரிவராது என்று திருவாய் மலர்ந்திருக்கிறது. உண்மையிலேயே தமிழர்களின் நலனில் தான் அக்கறையுள்ள நாடு என்றால், இந்தியா இந்த ~கண்டுபிடிப்பை|, விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட யுத்த நிறுத்த ஓப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசு வெளியேறும்போது ஏன் கூறவில்லை?

இந்த முரண்பட்ட வெளியுறவுப்போக்குத்தான் இன்று இந்தியாவை சூழ எல்லா நாடுகளையும் அதற்கு எதிரிகளாக்கி வைத்திருக்கிறது. பாகிஸ்தான், வங்காளதேசம் முதல் சீனா வரை சகல நாடுகளும் தனக்கெதிராக என்ன செய்கின்றன என்று கண்ணிலே எண்ணை ஊற்றிப்பார்த்துக் கொண்டிருப்பதுதான் இன்று இந்தியாவின் நாளாந்த நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

இந்தியவுக்குரிய தன்நேசப் பின்னணியில் பார்க்கப்போனால் கூட, இன்றைய தெற்காசிய அரசியல் சூழலில் பரவி வரும் சீனாவின் ஆதிக்கப்பிடியை சமநிலைப்படுத்துவதற்கு இந்தியாவை பொறுத்தவரை ஈழத்தமிழர் விவகாரம்தான் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஈழத்தமிழர் விவகாரத்தை இதயசுத்தியுடன் அணுகி, காத்திரமான ஒரு பங்களிப்பை நல்கி தமிழர்கள் விரும்பும் ஒரு தீர்வை பெற்றுக்கொடுத்து ஈழத்தமிழரை தனது நிரந்தர நண்பனாக்கி கொள்வது, தமிழீழத்தை மையமாக வைத்து இலங்கையை மொய்க்கும் எத்தனையோ சக்திகளை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அரசியல், இராணுவ, பிராந்திய ரீதியில் பாரிய பலத்தை கொடுக்கும்.

தனது சில்லறை தேவைகளுக்கு சிங்கள தேசத்தை பயன்படுத்துவதும் சிங்கள தேசத்தின் சிதைக்கும் வேலைகளுக்கு தான் பயன்படுவதும் இந்தியாவின் நீண்டகால நலனுக்கு என்றுமே பயன்தரப் போவதில்லை.

இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் அதனை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திய உறவு இன்று இரண்டு நாடுகளுக்குமிடையில் முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. அது இந்தியாவுக்கே தெரியும். இது ஒரு சிறு உதாரணம்.

இந்நிலையில், ஈழப்பிரச்சினையில் இந்தியா காண்பிக்கக்கூடிய காத்திரமான பங்களிப்பு எதிர்காலத்தில் தனது பிராந்தியத்தில் நேர் சீரான உறவுகளை பேண வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவின் இந்த வருகைக்காக ஈழத்தமிழர்கள் இன்றும் தமது கதவுகளை திறந்தே வைத்துள்ளனர். இந்தியா தன்மானத்தையும் தமிழ் மானத்தையும் ஒருங்கே காப்பாற்றக்கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பம்.

ஈழப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, இந்தியா தனது சரியான செல்செறியை கணிக்க தெரிவு செய்யக்கூடிய முறையான பாசித்தாள் பரிசோதனை.

-குலோத்துங்கன்-

Comments