சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்

வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

போகிற போக்கில் கிளிநொச்சியும் படையினர் வசம் போய் விடுமா?

புலிகளின் தற்காப்பு நிலைக்கு ஒரு வரையறை வேண்டாமா?

படையினரின் அறிக்கைப்படி இந்த வருடத்துக்குள் புலிகளை அழித்து விடுவார்களா?

- இப்படி பல்வேறு சந்தேகங்கள் இந்த அதிருப்தியாளர்கள் மத்தியில் முளைத்துள்ளன.

விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்கள் நடந்து முடிந்த பின்னர் வென்றோம், முடித்தோம் என்று நீட்டி முழங்கும் எழுத்தாளர்கள் எல்லாம் தற்போது ஏன் போர் தொடர்பான உன்னிப்பான ஆய்வை செய்வதில்லை. வேறு விடயங்களை அலசி, தப்பியோடும் எழுத்துக்களுக்குள் ஒளிந்துகொள்கிறார்கள் என்ற ஒரு விமர்சனம் இந்த மட்டத்தினரிடமிருந்து எழுந்துள்ளது.

உண்மைதான். அதற்கு, தற்போதைய களநிலைவரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதிலும் பார்க்க அதன் உண்மைநிலை குறித்து ஆய்வின் ஊடாக கள நிலைவரத்தின் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவது இங்கு சரியான அணுகுமுறையாக இருக்கும்.

விடுதலைப் புலிகளின் வடபோர் அரங்கில் தற்போது காண்பிக்கும் அணுகுமுறையை அவர்கள் சண்டையிடும் சந்தி சந்தியாக விவரிப்பதிலும் பார்க்க, அவர்களது ஒட்டுமொத்த போர் அணுகுமுறை குறித்த விமர்சனங்களை இங்கு நோக்குதல் பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் புலிகளின் இராணுவ இயந்திரம் அரச படைகளுக்கு எதிராக வடபோர்முனையில் சமரிடும் இக்காலப்பகுதியில் புலிகள் குறித்து இராணுவத்தரப்பு வெளியிட்ட கருத்துக்களின் ஊடாக எழுப்பப்படக்கூடிய கேள்விகளே இந்த விளக்கத்தை அளிக்கக்கூடியவை.

1) விடுதலைப் புலிகளிடம் உள்ளது சிறிய வான்படைதான். ஆனால், அவற்றை வைத்து போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அரச படை நிலைகளின் மீது பாரிய தாக்குதல்களை நடத்த முடியாது என்று படையினர் கணிப்பினும் அவற்றைக்கொண்டு பலாலியிலோ திருகோணமலையிலோ மற்றும் சிறிலங்காவின் ஏனைய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட இராணுவ இலக்குகள் மீதோ தற்கொலை தாக்குதலைக் கூட நடத்தமுடியாது என்று கூறிவிடமுடியாது.
அப்படிப்பட்ட புலிகளின் வான்படையில் உள்ள வானூர்திகளில் எத்தனையை தற்போது வடபோர்முனையில் புலிகளை அழிக்கும் தறுவாயில் நின்றுகொண்டிருப்பதாக தெரிவிக்கும் அரச படைகள் அழித்துள்ளன?

2) சம்பூரிலும் பூநகரியிலும் வைத்து இராணுவத்தின் முக்கிய தளங்களை புலிகள் இலக்கு பிசகாமல் தாக்கும்போது அவர்களிடம் 30 ஆட்லறிகள் உள்ளன என்று சிறிலங்கா இராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது. இராணுவத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையாகக்கொண்டாலும் அவற்றில் எத்தனையை இதுவரை வடபோர்முனையில் - புலிகளின் எத்தனையோ தளவாடங்களை கைப்பற்றியதாகக்கூறும் - இராணுவம் கைப்பற்றியிருக்கிறது?

3) விடுதலைப் புலிகளிடம் உள்ள தற்கொலைப் படையணிதான் தமக்கு பாரிய சவாலான விடயம் என்று பகிரங்கமாகவே கடந்தகாலங்களில் ஒப்புக்கொண்டு, அந்த அணி மூலம் நாட்டின் பல பாகங்களிலும் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்களை சந்தித்த சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகளிடம் 3,000 கரும்புலி வீரர்கள் உள்ளனர் என்று கணக்கு கூறியிருந்தது.
அவர்கள் கூறிய இந்த தகவலின் அடிப்படையிலேயே பார்க்கப்போனால் கூட, கிழக்கை மீட்டுவிட்டதாக கூறப்பட்ட காலப்பகுதி முதல் இன்று வன்னிக்களமுனை வரை இந்த கரும்புலிகளில் எத்தனை பேரை சிறிலங்கா அரச படைகள் அழித்துள்ளன?

இராணுவத்தின் நடவடிக்கைக்கு சமாந்தரமாக களமுனையில் ஏதாவது, ஒரு சந்தர்ப்பத்தில் இதுவரை ஒரு கரும்புலி வீரனாவது தாக்குதல் நடத்தியிருக்கிறானா?

4) விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க அரசு பேச்சு நடத்தியதால் அந்த அமைதிப் பேச்சுக்களை சாக்காக வைத்து விடுதலைப் புலிகள் கடல் வழியாக கப்பல் கப்பலாக ஆயுதங்களை கொள்வனவு செய்துவிட்டனர் என்று இதே மகிந்த தலைமையிலான கூட்டத்தினர் அப்போது எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு கூக்குரலிட்டனர்.

அப்படியானால், அவ்வாறு புலிகள் கொள்வனவு செய்த ஆயுதங்கள் அனைத்துமே புலிகளின் தற்காப்பு தாக்குதல்களிலேயே முடிவடைந்து விட்டனவா? இல்லையென்றால் அவற்றில் எவ்வளவை சிறிலங்கா படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்?

5) களமுனையில் பாரிய வெற்றிகளை ஈட்டி வருவதாக தினமும் அறிவித்துவரும் சிறிலங்கா அரசும் இராணுவத் தலைமையும் அரச ஊடகங்கள் தவிர கொழும்பில் வெளிவரும் எந்த ஊடகத்திலும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்திகளையோ விமர்சன கட்டுரைகளையோ ஆய்வுகளையா வெளிவர விடாமல் மறைமுக தணிக்கை ஒன்றை அமுல்படுத்தி வருவது ஏன்?

தாம் வெற்றிகளை தனியே களத்தில் கண்டுவருவது உண்மையான விடயம் என்றால் அதனை பகிரங்கமாக ஆய்வுசெய்ய அனுமதிப்பதில் என்ன பிரச்சினை அல்லது அச்சம் இருக்கிறது?

6) புலிகளின் தரைப்படையுடன் சமரிட்டு அதை வென்றால் அது புலிகளின் ஒட்டுமொத்த அழிவு என்று கணக்குப்போட்டு அறிக்கை விடும் சிறிலங்கா அரசு, கடற்புலிகளின் பலத்தின் எவ்வளவை இதுவரை அழித்திருக்கிறது?

விடத்தல்தீவின் வீழ்ச்சியை கடற்புலிகளின் வீழ்ச்சியாக சிறிலங்கா அரசு கூறுவதை கேட்பதற்கு இன்று வெளிநாடுகளே தயாரில்லை.

- இவை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, பெரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளின் அழிவுக்கு நாள் குறித்துக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசிடம் இன்று மட்டுமல்ல என்றுமே பதில் இருக்கப்போவதில்லை. இதுதான் யதார்த்தம்.

இன்று பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்வதாகக்கூறும் இராணுவம், அதற்கு பெயர் வைக்கவே அஞ்சி, வெறும் மனிதாபிமான நடவடிக்கை என்று வெளிநாடுகளின் காதுகளில் பூ சுற்றிக்கொண்டிருக்கிறது.

வடபோர் முனையின் உண்மை நிலைவரங்களை ஆழ நோக்கினால், இராணுவத்தின் களத்தளம்பல்கள் புரியும்.

1) புலிகள் பின்வாங்கிச்சென்ற இடங்களை கைப்பற்றியதாக அறிவிக்கும் நாட்களை ஊடகங்களில் அறிவிக்கும் இராணுவத்தின் பாணியானது அதன் அச்சத்தை மொழிபெயர்க்கும் சரியான எடுத்துக்காட்டு. மடு முதல் பல்வேறு இடங்களை கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்த நாட்கள் வேறு. உண்மையில் கைப்பற்றிய நாள் வேறு.

அதன் காரணம், புலிகள் குறித்த இடத்துக்கான ஆட்லறி ஆள்கூறுகளை குறித்துவிட்டு, வேண்டுமென்றே பின்வாங்கிவிட்டு தம்மை பொறிக்குள் சிக்கவைக்கம் விதமாக மீண்டும் திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் இராணுவத்துக்கு இன்றுவரை தொடர்கிறது.

அக்கினிச்சுவாலை முதல் கடைசியாக இடம்பெற்ற முகமாலை முறியடிப்புச்சமர் வரை புலிகள் மேற்கொண்ட இந்த தாக்குதல் வியூகமே படையினருக்கு இந்த தீராத அச்சத்தை புலிகள் மீது ஏற்படுத்தியிருக்கிறது.

2) குடாநாட்டுக்கான கைத்தொலைபேசிகளுக்கான இணைப்புக்களை அடிக்கடி துண்டித்துவிட்டு பாதுகாப்பு காரணங்களை கூறும் படையினரின் மறைமுகமான நோக்கம் தனது படைத்துறை சார்ந்த சுயநலம் மிக்கது என்பது அடுத்த விடயம்.

குடாநாட்டில் கைத்தொலைபேசிகள் தொழிற்பட்டால் அங்குள்ள படையினர் தென்னிலங்கையிலுள்ள தமது குடும்பத்தினருடனும் உறவினருடனும் நேரடியாக தொடர்புகொள்வது தவிர்க்கமுடியாதது. அவ்வாறு தொடர்பிலுள்ள படையினரை போர் சிந்தனைக்குள் திணிப்பது இராணுவ தலைமைக்கு சிக்கலான விடயம். அங்குள்ள படையினரில் தொண்ணூறு வீதமானவர்கள் தமிழ்மக்கள் போல உரிமைக்காக போராடுபவர்கள் அல்ல. ஊதியத்துக்காக போராடுபவர்கள்.

இவ்வாறு பல்வேறு கள யதாரத்தங்களை புரிந்துகொள்ளாதவர்களாக, சிறிலங்கா அரசின் ஊதக பரப்புரைகளை நம்பி தமிழ்மக்கள் தமது இன விடுதலைப்போராட்டம் தொடர்பாக இரண்டாவது சிந்தனை வலயத்திற்குள் சென்றுவிடக்கூடாது.

2000 இல் ஏற்பட்ட அமைதிப் பேச்சுக்காலத்திற்கு பின்னர், விடுதலைப் புலிகளுடன் முன்னரைவிட நெருங்கிப்பழகும் வாய்ப்பு எல்லா மக்களுக்கும் கிடைத்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று. இதனால், நாங்கள் நினைத்ததையே புலிகள் செய்வார்கள் என்ற ஒருவித பிரமையும் புலிகளின் ஒட்டுமொத்த முடிவுகளை எதிர்வுகூறக்கூடிய தன்மை எமக்கு வந்துவிட்டது என்ற ஓரு எண்ணமும் பலருக்கு இருக்கலாம். அதன் அடிப்படையில், தற்போது புலிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அதிருப்தி தமிழ் மக்களில் ஒரு பகுதியினருக்கு எழலாம்.

அது முற்றிலும் தவறான விடயம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்மக்கள் எல்லோரும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்காக களத்தில் அவசரமாக புலிகள் ஒரு வெற்றிச்சண்டையை செய்துகாட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அங்கு நடைபெறுவது ஒன்றும் வித்தை காட்சி அல்ல என்பதையும் -

எத்தனையோ சர்வதேச சதிகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்கு ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் என்பதையும் -

சரியான தருணங்களில் முறையான முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழ் மக்களின் இருப்பு உறுத்திப்படுத்தப்படும் என்பதையும் -

புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்கள் உட்பட அனைவரும் நன்கு அறிவர். தமிழினப் போராட்டத்தின் கடந்த கால வரலாறு இதையே சான்று பகர்ந்து நிற்கிறது.

ஆகவே, இன்று அக்கினிக்களமாக விரிந்திருக்கும் வடபோர்முனையில் நாளை தமிழ்மக்கள் ஈட்டப்போகும் வெற்றிகளுக்கு, தாங்கள் செய்யக்கூடிய அடுத்த கட்டப்பணிகளை நோக்கி புலம்பெயர்ந்த மக்கள் இப்பொழுதே தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவே இக்காலப்பகுதிக்குரிய இன்றியமையாத வேலைத்திட்டமாக அமையும்.

-ப.தெய்வீகன்-


Comments