வரலாற்று ரீதியிலான உண்மைகளை மறுத்து தமிழ்த் தேசியத்தை புறக்கணிப்பது ஏன்?

இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரத் தில் தமிழர் தரப்பின் நியாயபூர்வமான அபிலாஷைகளைப் புறந்தள்ளி, கொழும்பு அரசின் தீவிரப் போக்கு நிலையைத் தூக்கிப்பிடித்துத் தாங்கி நிற்கும் இந்தியாவும் ஏனைய முக்கிய சில மேற்கு நாடுகளும் அதை ஒட்டிக் கூறும் ஒரு விளக்கம் விநோதமானது.

இலங்கையின் இறைமையையும் ஆள்புல ஒருமைப் பாட்டினையும் தாங்கள் பங்கம் பட்டுப் போக அனுமதிக்க முடியாது என்றும்

அதன் காரணமாக ஐக்கிய இலங்கைக்குள் காணப்படக் கூடிய தீர்வு ஒன்றுக்கு மட்டுமே தாங்கள் ஒத்துழைக்க முடி யும் என்றும்

அந்த நாடுகள் தரப்பில் விளக்கம் வியாக்கியானம் கூறப்படுகின்றது. குறிப்பாக இந்தியா திரும்பத் திரும்ப இதனையே கூறி வருகின்றது.

ஆனால் இலங்கைத் தீவு என்பது தனித் தனி மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை, வாழிடத் தாயகம் ஆகியவற்றைக் காலம் காலமாக வெவ்வேறாகக் கொண்ட இரு தேசியங்களின் பூமி என்பதும் அந்தத் தீவில் தமிழரின் தேசியத்திற்கான இறைமையும் சிங்களவரின் தேசியத்திற்கான இறை மையும் தனித்தனியாக நிலைபெற்று வந்துள்ளன என்பதும், மேற்படி விளக்கத்தைக் கூறும் சர்வதேச சமூகத்திற் குத் தெரியாத புரியாத விடயங்கள் அல்ல.

எனினும் பின்னோக்கிப் பார்த்தால் சரித்திர காலம் வரை நீட்சி பெற்று தொடர்ந்து வேரோடிச் செல்லும் தமிழ்த் தேசி யமும் அதன் இறைமையும் இத்தீவில் தனித்துவமாக நிலை பெற்று, நீடித்து, உறுதியாக விளங்கி வந்தமையை சர்வதேசம் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கைத் தீவை ஆக்கிரமித்து தமிழர் சிங்களவர் ஆகிய இருதரப்பினரதும் தேசியங்களையும் இறைமைக ளையும் கபளீகரம் செய்து தன்னுடைய மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்திய ஆங்கில காலனித்துவம், தனது நிர்வாக வசதிக்காக அதுவரை தனித்தனியாக ஆளப்பட்டு வந்த இலங்கையின் தமிழர் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் 1833இல் ஒன்றாக்கி ஒற்றையாட்சி முறையைத் திணித்தது. அதன் தொடர் நிகழ்வாகவே இப்போதைய துன்பியல் கொடூரங் களை இலங்கைத் தீவு அனுபவித்து நிற்கின்றது.

ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களால் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு பின்னர் சிங்களத் தேசியத்திடம் அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்களின் இறைமையை மீட்டெடுப் பதற்காக தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை அதன் பின்னணியில் புதைந்து கிடக்கும் சரித்திர நியாயங்களையும் நீதி யையும் புறக்கணித்து "பிரிவினை வாதம்' என்று முலாம் பூசுகின்றது மேற்குலகம்.

சிங்கள தேசத்தின் இறைமையிடம் அடிமைப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசியம் சிறைவைக்கப் பட்டிருப்பதை மறந்து மறுத்து இலங்கையின் தேசியத்தையும் இறைமையையும் பாதுகாக்கும் கடமை குறித்து சர்வ தேச சமூகம் பிதற்றுகின்றது.

சரி, இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இறை மையையும் பாதிக்க விட்டுவிடக் கூடாது என்று கூறி, அதற்காக இப்போது கொடூர யுத்தம் ஒன்றைத் தமிழர் தேசம் மீது ஏவி விட்டிருக்கும் சிங்களவர் தேசத்தின் செயற்பாடுகளுக்கும் யுத்த முனைப்புக்கும் முழு ஆதரவு காட்டும் இந்தியாவும் மேற்குலகும் இந்த இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் எப்படி நடந்து கொள்கின்றன?

தமக்கு வாய்ப்பான வசதியான விதத்திலேயே, "இறைமை'க்கும் "ஆள்புல ஒருமைப்பாட்டு'க்கும் அவை விளக்கம் கொடுக்கின்றன. அவற்றைப் பொறுத்தவரை பிறநாட்டின் அல்லது தேசியத்தின் "இறைமை' என்பது தத்தமது நாட்டின் நலனின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகவே உள்ளது.

மேற்குப் பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பாகிஸ்தானை துண்டாடி பங்களாதேஷை உருவாக்குவதற்காகப் பாகிஸ்தான் மீது இந்தியா பெரும் போர் தொடுத்தபோது பாகிஸ் தானின் இறைமையும், ஆள்புல ஒருமைப்பாடும், ஐக்கியமும் புதுடில்லியின் கண்களுக்குப் படவே இல்லை.

சுமார் எட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஸேர்பி யாவின் இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு குறித்தெல்லாம் பேசிய அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்குலகு, சில மாதங் களுக்கு முன்னர்தான் அந்த இறைமையைத் துண்டாக்கி, ஸேர்பியாவின் ஆள்புல ஒருமைப்பாட்டைக் குலைத்து கொஸோவோ என்ற தேசத்தின் தேசியத்தின் இறைமையை அங்கீகரித்தது.

அப்போது அந்த உடைவுக்கு கால்கோள் இட்ட மேற் குலகு இப்போது ஜோர்ஜியாவின் ஆக்கிரமிப்புப் பிடிக்குள் ஒசப்டிய மற்றும் அப்காசிய மக்களின் இறைமை அடிமைப் படுவதற்கு உத்வேகமும் உதவியும் கொடுக்கிறது.

மறுபுறத்தில், கொஸோவோ தனித்தேசமாகி, அதன் தனித்துவ இறைமையை பிரகடனப்படுத்துவதை முற்றாக எதிர்த்து நின்ற எதிர்த்து நிற்கின்ற ரஷ்யாவோ, இப்போது ஒசப்டிய மற்றும் அப்காசியாவை மேற்குக்குச் சார்பாக நிற்கும் ஜோர்ஜியாவின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரே முனைப் பாக முயல்கிறது.

ஒசப்டியாவின் தனி இறைமையை நிலைப் படுத்தி, உறுதிப்படுத்துவதற்காக ரஷ்யா தனது படைபல வலிமையையே நேரடியாகவே பிரயோகிக்கின்றது.

இவற்றில் இருந்து தெரிவது புரிவது என்ன?

சர்வதேச நாடுகளின் குறிப்பாக வல்லாதிக்க சக்திகளின் தேவைகள், விருப்பங்கள், நலன்கள் மற்றும் அவற்றுடனான அணி சேரல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பிற சிறிய தேசியங்களினதும், தேசங்களினதும் இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு ஆகியன தீர்மானிக்கப்படுகின்றன.

நீதி, நியாயம், வரலாற்றுப் புறநிலைகளின் அடிப்படையிலான உண்மைகள் என்பவற்றின் அடிப்படையில் அல்ல என்பதே.

இலங்கை விவகாரத்திலும் ஈழத்தமிழர்களின் தேசியம், இறைமை, தமிழர் தேசத்தின் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றினால் மேற்குலகிற்கு விசேட நன்மைகள் ஏதுமில்லை.

அந்த இறைமையை நிலைநிறுத்துவதன் மூலம் மேற் குலகின் தேவைகள், விருப்பங்கள் எவையும் நிறைவேறப் போவதுமில்லை.

அத்தோடு தமிழ் தேசத்துக்கு வெளியே எந்தச் சக்தியோடும் அணி சேராமல், கூட்டிணைவு கொள்ளாமல் தனித்தே சுயாதீனமாகவே தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

அதனால்தான் தமிழர்களின் தேசியம், தேசம், இறைமை ஆகியவை குறித்து அலட்டிக் கொள்ளாமல் தள்ளி நிற்கின்றன சர்வதேச சக்திகள்.


Comments