தேர்தல் முடிவு வாயிலாக யுத்தத்திற்கு தெற்கு அங்கீகாரம்

தீர்க்கமான தேர்தல் என்று நாம் சுட்டிக்காட்டிய தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காத்திரமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்காக நடத்தப்பட்ட இத்தேர்தல் வெறும் பிரதேச மட்டப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது இது என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.

பெரும் தேர்தல் வன்முறைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு மட்டும் ஓரளவு அமைதியாக நடந்தேறத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.

தமிழர் தாயகம் மீது தமது அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்குத் தென்னிலங்கைச் சிங்களத்திடம் அங்கீகாரம் பெறும் தேர்தலாக நாட்டினதும் அரசினதும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலை முன்நிறுத்தியிருக்கின்றார் என்றும்

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவினது தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவோ பட்டினியில்லாத வாழ்க்கைக்கும் சமரசம் நிலைநிறுத்தப்படுவதற்கும் மக்களின் அனுமதியைக் கோரும் வாக்கெடுப்பாக இதனை வெளிப்படுத்தி வருகின்றார் என்றும்
தேர்தலுக்கு முன்னரே சுட்டிக்காட்டி வந்தோம்.

இப்போது தென்னிலங்கை மக்கள் தமது பொன்னான வாக்குகள் மூலம் தமது தீர்ப்பை கருத்தை வெளிப்படுத்தி விட்டனர்.

பட்டினியில்லாத வாழ்வும், சமரசமும் எமக்கு முக்கியமல்ல. தமிழர் தாயகம் மீதான யுத்தத்தில் சிங்களப் படைகள் அரசுப் படைகள் வெற்றியடைவதே எமக்குப் பிரதானம் என்ற தீர்ப்பை அவர்கள் தமது வாக்குகள் மூலம் தெளிவாகத் தெரியப்படுத்தி விட்டார்கள்.

2001 டிசெம்பர் பொதுத் தேர்தல் சமயம், "போரா? சமாதானமா?' என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது "போர் வேண்டாம்; சமாதானம்தான் வேண்டும்' என்று தென்னிலங்கை மக்கள் கூச்சலிட்டனர்.

ஆனால் இன்றோ, "போரா ? சமரசமா?' என்ற கேள்விக்குப் போரே தமது தெரிவு என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் தென்னிலங்கை மக்கள்.

"பட்டினி கிடந்தாலும் சரி, போரில் வென்றால் போதும்' என்ற கருத்தையே தங்களின் ஒரே நிலைப்பாடாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் அவர்கள்.

"மனிதாபிமானத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கை' என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஷ அரசு மேற்கொண்டுவரும் யுத்தத்துக்கு தென்னிலங்கை அங்கீகாரம் அளித்துவிட்டது என்பதே இந்தத் தேர்தலின் முடிவாகும்.

தென்னிலங்கை மக்களின் கருத்து சரியா, பிழையா? அது ஏற்புடையதா? அது நியாயமானதா? என்பவையெல்லாம் வேறு விடயங்கள்.

ஆனால் யுத்தத் தீர்வு ஒன்று தமிழர்கள் மீது திணிக்கப்படுவதையே இன்றைய நிலையில் அவர்கள் அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டு, தமது முடிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பது தெளிவு.

நமது அயல் தேசமான இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய தேர்தல் முடிவும் விடயமும் இதுவாகும்.

""பேச்சுமூலம் நியாயத் தீர்வு ஒன்று காணுங்கள். யுத்தம் மூலமான அடக்குமுறைத் தீர்வைத் திணிக்க எத்தனிக்காதீர்கள்.

சிறுபான்மை இனச் சமூகத்தின் நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் கௌரவ வாழ்வை அவர்களுக்கு உறுதிப்படுத்தும் சமாதானத் தீர்வை பேச்சுமூலம் எட்டுவதற்கான எத்தனங்களை மேலும் தாமதியாமல் ஆரம்பியுங்கள்!''

என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசுத் தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் அதைச் செய்வதாக சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்து, அதற்குப் போக்குக் காட்டிக்கொண்டு, தனது அடக்குமுறைத் தீர்வை யுத்தத் தீவிர நெருக்குதல் மூலம் தமிழர் மீது திணிப்பதற்கு மஹிந்த அரசு கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது.

அமைதித் தீர்வு காண வலியுறுத்தும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு, வெளிப்பகட்டுக்கு எடுபடுவது போலக் காட்டிக்கொண்டு, தனது யுத்த நிகழ்ச்சி நிரல்படியே காய்களை நகர்த்தி, காரியங்களை ஆற்றுகின்றது ஜனாதிபதி மஹிந்தவின் அரசு.

அந்தக் கபடத் திட்டத்துக்கு தென்னிலங்கை மக்களின் அங்கீகாரமும் வாக்களிப்பு மூலம் கிடைத்திருக்கின்றது என்றால் அதன்பின் இவ்விடயத்தில் அரசுத் தலைமை எவ்வளவு முனைப்புக் காட்டும் என்பது ஊகிக்கத்தக்கதே.

ஈழத் தமிழர்களுக்கு பேச்சுமூலம் அமைதி வழியில் சமாதானத் தீர்வு இல்லவே இல்லை என்பது இத் தேர்தல் முடிவு மூலம் தென்னிலங்கையால் வெளிப்படையாக எடுத்தியம்பப்பட்டு விட்டது.

ஆகவே, இனி ஈழத் தமிழர்களுக்கு அமைதி வழியில், சமாதான முறையில் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்து சர்வதேச சமூகம் அதற்கேற்ப தனது காய்களை நகர்த்த வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்பதையே இத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவில் புதைந்து கிடக்கும் தாற்பரியத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளுமா?




Comments