விகடன் மூலம் கிடைத்த தமிழக மக்களின் உறவு ஈழ மக்களின் விடுதலை பறவைக்கு புதிய சிறகு

ஈழத்தமிழர்களின் போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள், விடுதலைப் புலிகளின் கடந்த கால வரலாறு ஆகியவற்றை முன்வைத்து தமிழ்நாட்டு சஞ்சிகையான 'விகடன்", தமிழ்நாட்டு மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

எந்த அரசியல் கலப்படமுமற்ற இந்த முயற்சி இதுவரை காலமும் வேறு எந்த அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்படாத ஒன்று.

அந்தவகையில், ஈழத்தமிழர்களின் வாழ்வுநிலை மற்றும் அவர்களின் போராட்டம் பற்றிய ஒரு பொறுப்புடன் 'விகடன்" ஆற்றியிருக்கும் இந்த பணி வரவேற்க வேண்டியது.

தனது இதழ் வெளியிடப்படும் மொழி மற்றும் அது சார்ந்த இனம் ஆகியவை சார்ந்து நின்று 'விகடன்" தனது தார்மீகக்கடமையை செய்திருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கிட்டத்தட்ட முழுமையாகவே, ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக வெளிவந்திருந்தாலும் கூட, ஒரு சில விடயங்களில், வாக்களித்த வாசகர்களுக்கு மயக்கநிலை இருப்பது போல தெரிகிறது. அந்த மயக்க நிலைக்கு உரிய வாக்காளர்கள் ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாகக்கூட இருக்கலாம்.

வாக்களித்த வாசகர்கள் எல்லோரும் எல்லா விடயத்திலும் ஈழத்தமிழர்களதும் விடுதலைப் புலிகளதும் கொள்கைகளை ஆதரித்திருக்க வேண்டும் என்ற வரட்டு பிடிவாத்தத்துடன் கூடிய வாதத்தை இங்கு முன்வைக்கவிரும்பவில்லை.

ஆனால், அவ்வாறு அவர்கள் முரண்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதற்கு தூண்டிய காரணிகளையும் அந்த காரணங்களின் பின்னணியில் உள்ள தெளிவற்ற நிலைமையையும் சற்று விரிவாக நோக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

அதில் முக்கியமான விடயம் ராஜீவ் கொலையுடன் விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் விவாதம்.

அதாவது, ராஜீவ் காந்தி கொலையின் பிறகு விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் கரும்புள்ளி குத்தப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில், அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த இந்தியனும் தான் தேசத்துரோகிய முத்திரை குத்தப்பட்டுவிடுவானோ என்ற அச்சத்தினால், அந்த அமைப்புக்கு மாத்திரமல்ல ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கும் தயங்குகிறான் என்ற ஒரு மறைகருத்து இந்த கருத்துக்கணிப்பின் பின்னணியில் ஒலித்துநிற்பது போல தெரிகிறது.

இது தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசுக்கும் அதனை இயக்குகின்ற சுயநல அரசியல்வாதிகளுக்கும் பின்னணியில் இயங்குகின்ற புலி எதிர்ப்புவாதிகளுக்கும் கடும்போக்கு - அடங்காத கோபம் - பழிவாங்கும் ஓர்மம் ஆகியவை இருக்கலாம். ஏனெனில், அவர்கள் சார்ந்த அரசியல் அவர்களை யதார்த்தத்தை ஒட்டி சிந்திக்க விடுவதில்லை.

ஆனால், தமிழீழமே ஈழத்தமிழனின் துன்பத்துக்கும் துயரத்துக்கும் தீர்வு, விடுதலைப் புலிகளே அதனை பெற்றுக்கொடுக்கக்கூடிய சரியான தலைமை என்ற கொள்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவிடயத்தில் மயக்கமான அணுகுமுறைகளை கொண்டிருக்ககூடாது என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

அவ்வாறான மயக்கம் நாளையே அவர்களை எந்தப்பக்கமும் தீவிரமாக ஈர்த்துவிடும் காரணியாக அமையலாம். ஆகவே, இது விடயத்தில் ஒரு பண்பட்ட பரந்த பார்வையை கொண்டிருப்பது அவசியம்.

ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கு ராஜீவ்காந்தி கொலை விடயத்தை துருப்புச்சீட்டாக பயன்படுத்துவது சரியான அணுகுமுறையா?

இந்த கேள்வியை அணுகுவதாயின் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ராஜீவ் காந்தி ஆற்றிய பங்கு என்பதை சற்று ஆழமாக பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் நிரந்தரமான - நிம்மதியான - வாழ்வுக்குரிய தீர்வினை சிறிலங்கா அரசிடமிருந்து பெற்றுத்தருவோம் என்று ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளிடம் உறுதியளித்த இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, தீர்வு என்ற பெயரில் ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசுடன் சேர்ந்து வரைந்து என்ன செய்தார்?

புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லி அசோக் ஹோட்டலுக்கு அழைத்து, அங்கு அவரையும் மதியுரைஞர் பாலசிங்கத்தையும், புலிகளின் அப்போதைய அரசியல்துறை பொறுப்பாளர் திலீபனையும் 'சிறை" வைத்தபடியே, கொழும்புக்கு வந்து இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

1987 ஜூலையில் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தினத்திற்கு முதல்நாள் நள்ளிரவு முதல் அன்று அதிகாலை 2:00 மணிவரை - அதாவது, காலையில் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் புறப்படுவதற்கு சற்று முன்வரை - விடிய விடிய, புதுடில்லியில் உள்ள தமது பிரதமர் இல்லத்தில் பிரபாகரனுடனும் பாலசிங்கத்துடனும் நேரடியாக மந்திராலோசனை நடத்தியிருந்தார் பிரதமர் ராஜீவ் காந்தி.

அச்சமயம் அவர்களுடன் இரண்டு பேர் உடனிருந்தனர். ஒருவர் தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரன்.

மற்றையவர், அப்போது இந்திய உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவரும், இப்போது இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவரும், அண்மையில் சம்பந்தரோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, பொட்டம்மானை பணயம் தருமாறு கேட்டவருமான எம்.கே.நாராயணன்தான்.

அந்த விடிகாலைச் சந்திப்பில், ராஜீவ் - பிரபாகரன் இடையில் எழுதப்படாத ஒரு கனவான் ஒப்பந்தம் உடன்பாடு உருவானமை தற்போது ஈழத்தமிழர் விடயத்தில் முரண்டு பிடித்துக்கொண்டு நிற்கும் நாராயணனுக்கு நன்கு தெரியும்.

அப்போது தாம் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிமொழிகளை அடுத்த சில நாட்களிலேயே பிரதமர் ராஜீவ் காந்தி காற்றில் பறக்கவிட்டார்.

அதனாலேயே -

அந்த வாக்குறுதிகளை நிலைநாட்டக் கோரியே, திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தான் என்பதும் -

அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பின்னணியிலேயே இந்திய அமைதிப்படைகள் - புலிகள் யுத்தம் வெடித்தமையும் பின்னர் நடந்த சம்பவங்கள்.

அதாவது, ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தருவதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக சிங்கள தேசத்திடம் தூது அனுப்பப்பட்ட ராஜீவ் காந்தி, ஈற்றில் சிங்கள தேசத்தின் கைப்பாவையாகி தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்ததுடன் தனது தேசத்தின் நலன்களை பாதுகாத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இந்த ஒரு நிலையில்தான் ராஜீவ் படுகொலை இடம்பெற்றது.

அதாவது,

விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டவர் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக சிங்கள தேசத்திடம் தூதுசென்று பேச்சு நடத்தப்போய் ஈற்றில்

தமிழ் மக்களின் துரோகியாகிவிட்ட ராஜீவே

தவிர, இந்தியப் பிரதமர் ராஜீவ் அல்ல.

இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதற்கு பாகிஸ்தானுடன் பேசுகிறோம் என்று கூறிக்கொண்டுவரும் வெளிநாடு ஒன்று இந்தியாவின் பிரதிநிதியாக பாகிஸ்தானுடன் சென்று பேசிவிட்டு, கடைசியில் அந்நாட்டுடன் சேர்ந்து நின்றுகொண்டு,

இந்தியாவுக்கு எதிராக செயற்பட்டால் அதை இந்தியாவின் அரசோ மக்களோ ஜீரணித்துக்கொள்வார்களா?

அதுபோன்றதொரு துன்பியல் நிகழ்வே ஈழத்தமிழர் விடயத்தில் அன்று இடம்பெற்றது. அது ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் வாழ்நாளுக்கும் ஆறாத ஆழமான வடு.

ஆனால்,

இந்த நிலைமை இந்தியாவின் அதிகார வர்க்கத்துக்கு புரிகிறதா?

அல்லது

அந்நாட்டு மக்களைத்தான் புரிய விட்டிருக்கிறார்களா?

என்றால் இல்லை.

அவர்கள் கூறுவதெல்லாம், தமது தேசத்தில் எல்லோராலும் மதிக்கப்பட்ட அரசுத்தலைவரை விடுதலைப் புலிகள் கொன்று விட்டார்கள் என்பது மட்டும்தான். ஆனால், அதற்கு பின்னணியில் இத்தனை வரலாறுகள் உள்ளதை உணர மறுக்கிறார்கள். ஒருவித வரட்டுக்கௌரவத்தையே இன்னமும் பேணி வருகிறார்கள்.

சரி. அப்படியே நடந்தது நடந்து முடிந்து விட்டாலும் கூட, இனியும் அவர்கள் அந்த விடயத்தை சிரங்கு போல தொடர்ந்து சொறிந்து சுகம் காண்பதில் நியாயம் இருக்கிறதா?

அன்னை இந்திராவை சுட்டுக்கொன்றவர் ஒரு சீக்கியர் என்றதற்காக சீக்கிய இனத்திலிருந்து வந்த ஒருவரை இந்தியப் பிரதமராக பதவிவகிக்க இந்தியா அனுமதிக்கவில்லையா அல்லது அதனை இந்திய மக்கள்தான் எதிர்த்து போரிட்டார்களா?

இந்த வரலாற்று உண்மைகளையும் அதற்கான நியாயப்படுகளையும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களில் ஒரு பகுதியினர் திட்டமிட்டு மூடிமறைத்து, தம்மை ஏதோ நியாயத்தின் பக்கம் உள்ள நிரந்தர நீதிபதிகளாக இனம் காட்டிக்கொள்கிறார்கள்.

வரலாற்றின் நீட்சியில் பகைமையை மறவாத கொள்கையை பின்பற்றும் எந்த தேசமும் தனது இலக்கினில் வென்றதாக சரித்திரம் இல்லை.

இந்த நிலைமையை விடுதலைப் புலிகள் தொடர்பில் முடிவெடுக்க தயக்கமுறும் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தை நோக்கி அவர்கள் நீட்டியுள்ள நேசக்கரங்களால் ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் சிலிர்த்திருக்கிறான்.

தொலைந்துபோன பழைய உறவுகள் மீளக்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் பூரித்துப்போயுள்ளான்.

ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வழுவற்ற - தெளிவான - தூரநோக்குடைய - ஈழ ஆதரவு நிலைக்கு எந்த விடயத்திலும் மயக்கமற்ற ஒரு உறுதி எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்த வரலாறுகளின் மறுபதிவும் அவற்றில் உள்ள மர்மமான பக்கங்களின் விமர்சனங்களும் ஆகும்.

அந்த ஒரு தெளிவுநிலைதான், நாளை தமிழகத்தின் வாக்கு அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் ஈழத்தமிழர் விவகாரம் கனமான பாத்திரத்தை வகிக்க வழிகோலும்.

இன்று விகடன் ஊடாக தமிழக மக்கள் அளித்திருக்கம் வாக்குகள், சகோதர தேசத்தின் வருங்கால இருப்புக்கு பூட்டப்பட்டுள்ள அச்சாணி. எத்தனையோ இழப்புக்களை சந்தித்தும் இன்னமும் உறுதியின் உறைவிடங்களாக உள்ள ஈழத்தமிழ் மக்களின் நரம்புகளில் பாய்ச்சியுள்ள புதிய இரத்தம்.

அறுவடையின் பின்னால் பொங்குவது வழமை. தமிழினம் பொங்கிய பின்னர்தான் அறுவடை செய்யும். அந்த உண்மை களத்திலே விரைவில் ஒலிக்கும்.

-ப.தெய்வீகன்-


Comments