இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ! எவர் தலையிலே மிளகாய் ? எவர் காதிலே பூ ?

சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகை தந்த இந்தியப் பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் இந்தியா இலங்கைத் தமிழ் மக்களைக் கைவிடாது என வாய் கூசாது தமிழ் தேசியக் கூட்டணிக்கும் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாக்குறுதி வழங்கி எல்லார் காதிலும் கூடை கூடையாய் பூ வைச்சு அழகு பார்த்திருக்கிறார்.

அவரோ சில சிங்கள அரசியல் வாதிகளின் வார்த்தையில் கூறுவதானால் உலக வல்லரசான இந்தியாவின் பிரதமர். விருந்தாளியாக வந்த இடத்தில் காதிலை பூச் சுற்றினார் என்று வெளியில் சொன்னால் உண்மையாக இருப்பினும் அது அவமதிப்பது போல் ஆகிவிடும் என்பதால் எவருமே மறு பேச்சின்றி கை கட்டி வாய் பொத்தி மௌனம் காத்திருப்பர். மறுத்து எவரும் பேசாத வரை அவருக்கும் தமது பேச்சு ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது என்ற ஒரு ஆத்ம திருப்தி. ஆனால்; பலரும் விதியே என நினைத்துக் கொடுப்புக்குள் சிரித்திருப்பர்.

எப்படியும் சிங்களத்தின் தயவைப் பெற்று விடப் புலிகளையும் தமிழரையும் அழிக்கும் போருக்கு அனைத்து வழங்களையும் கொடுத்துப் பெற நினைக்கிறது.
மன்மோகன் சிங்குக்கு ஒரு வேளை 800 பேருக்கு மேற்பட்ட தமிழ் நாட்டு மீனவர்கள் சிங்களக் கடற்படையால் இந்தியக் கடல் எல்லையில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டது தெரியாது இருக்கலாம்.

இதே தமிழர் தேசியக் கூட்டணிப் பா.உ.கள் அவரை பிரதமரைப் பார்க்க முடியாது கதவடைக்கப் பட்டதும் தெரியாது இருக்கலாம். தடா சட்டத்தின் கீழ் வருடக் கணக்கில் சிறை வைக்கப் பட்ட தமிழீழ உணர்வாளர்களான பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வை.கோ. ஆகியோர் செய்த குற்றமும் தெரியாது இருக்கலாம்.

தமிழீழ மக்களுக்காகப் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப் பட்ட உணவு மற்றும் மருந்துவகையைச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அனுப்ப இந்திய அரசு அனுமதி வழங்காது விட்டதும் தெரியாது இருந்திருக்கலாம்.

இவர் போல் நாட்டு நடப்பை அறியாத கிணற்றுத் தவளைகள் இந்தியாவின் ஆட்சியில் இருப்பதுதான் இந்தியாவின் கடந்த 30 ஆண்டுகளாக நிலவும் பரிதாப நிலை. இதனை இந்தியா தமிழருக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டது என எமது ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக் குவிக்கலாம். கூலிக்கு மாரடிக்கும் வானொலி தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும் ஆர்வம் மிகுதியாகி ஆர்ப்பரிக்கலாம். அவற்றை நம்பி ஏமாறும் அப்பாவிகளும் இருப்பர். கொஞ்சம் அறிவு கொஞ்சம் நிதானம், கொஞ்சம் நினைவாற்றல் இருந்தால் போதும் உண்மைகள் புரிந்து விடும்.

அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்றொரு பழமெமாழி தமிழில் உண்டு.

அது உண்மை என இந்தியா புரிந்து வைத்திருப்பது தெரிகிறது. 1987ல் ராஜீவ் காந்திக்கு படை அணிவகுப்பில் சிங்களச் சிப்பாய் கொடுத்த அடியை 21 வருடங்கள் வருடங்கள் கழிந்த பின்னரும் நினைவில் கொண்டு மன்மோகன் சிங் தமது வருகைக்குச் சிறப்பு இந்தியப் பாதுகாப்புப் படையணிகளையே அனுப்பிவைத்து அவரது பாதுகாப்பை உறுதிப் படுத்தியது. ஆனாலும் என்ன புண்ணியம் ?

மகிந்தரின் மாளிகையிலிருந்து மன்மோகன்சிங் திரும்புவதற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய இலங்கைக் காவல்துறை அதிகாரி கடைசி நேரத்தில் காணாமல் போய்விட்ட கண்றாவிக் காட்சியும் கச்சிதமாய் நிறைவேறியது.

இது கவனக் குறைவா அல்லது சிங்களம் இந்தியாவுக்கு காட்டிய கண்ணியமா கௌரவமா என்பதை யார் அறிவார் ?

கடந்த 60 ஆண்டுக் காலமாக இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை சகிப்புத் தன்மையோ புரிந்துணர்வோ இல்லாமலும் சரியாகத் திட்ட மிடப் படாமலும் தடுமாறி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. முதல் சறுக்கலாக இந்தியாவின் சுதந்திரமே பிரிவினையும் பிரச்சனையும் நிறைந்து அமைந்து விட்டது. பிரித்தானியர் ஒரு தேசமாக வைத்து ஆண்ட இந்தியாவை, வடக்கு கிழக்கு பாகிஸ்தான் எனவும் , இந்தியா , ஜம்மு கஷ்மீர் எனவும் பல பிரிவுகளாகிச் சிதைந்த கதையே இந்தியாவின் வரலாறு. காந்தியின் அகிம்சையும் சத்தியாக்கிரகமும் பலனின்றிப் பல்லாயிரம் மக்களின் மரணத்துக்கும் குடும்ப உறவுகள் பிரிந்து வேறு வேறு நாடுகளாகிப் போகும் துயரக் கதைகள் பல நிகழ்ந்தன.

அன்றைய இந்தியத் தலைவர்களாய் இருந்த பெருந் தலைவர்கள் எனப் பெயர் பெற்ற காந்தி, நேரு , சர்தார் வல்லபாய் பட்டேல் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ,ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி , காமராஜர் போன்ற பெருந் தலைவர்கள் இருந்தும் புரிந்துணர்வும் பெருந்தன்மையும் தூரநோக்குடனும் சிந்தித்து ஜின்னாவின் சமவாய்ப்புக் கோரிக்கைக்கு இணங்கிச் செயற்படத் தவறியதால் மிகப் பெரும் பாரத தேசம் சிதறித் துண்டுகளாய் ஆனது. அது மட்டும் அல்ல இன்று வரை காஷ்மீர் சம்பந்த மான பாக்கிஸ்தானுடன் உள்ள பகைமை புற்று நோய் போலப் புரையோடிய நிலையே இன்றும் தொடர்கிறது. பிறப்பிலேயே இந்திய பாகிஸ்தான் எதிரிகளாகிவிட்ட நிலை 60 வருடங்கள் கழிந்த நிலையிலும் அனல் கக்கும் எரிமலையாக உள்ளது.

மூன்று போர்களை நடத்திய பின்னரும் தீராத நிலையில் பேசித் தீர்க்கும் அறிவார்ந்த சிந்தனை இரு நாடுகளுக்கும் ஏற்படவே இல்லை. இது எத்தகைய ஆபத்தான நிலை என்பதை இன்னமும் உணராத இரு நாடுகளின் கொள்கை வகுப்hபாளர் எந்த அளவுக்கு குறகிய மனப்பான்மை கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. தீராத பகையால் அணுஆயுத ஏவுகணைத் தயாரிப்புகளில் இரு நாடுகளும் பல்லாயிரம் கோடி பணம் செலவு செய்து வரட்டுப் பகைமை பாராட்டுகின்றனர். அப்பாவிப் பொது மக்கள் உணவின்றியும் நோயாலும் கடன் சுமையாலும் தற்கொலை செய்வது வரை தினம் வரும் அவலச் சேதிகள் இந்தியாவின் ஆழுவோர் கவனத்துக்கு எட்டுவதே இல்லை.

சமாதானப் புறா என வருணிக்கப் பட்ட நேருவின் தங்க இலட்சியங்களாக அவரது அணிசாராக் கொள்கையும் நடுநிலையும் விளங்கின. அன்று உலகம் அமெரிக்க ரஷிய வல்லரசுகளுக்கு இடையே நடந்த பனிப் போரில் உலகம் இரண்டு பட்டுக் கிடந்தது. முதலாளித்துவம் அமெரிக்காவின் தலைமையிலும் கம்மியூனிசம் ரஷியாவின் தலைமையிலும் விளங்கிய இரு அணிகளில் எந்த அணியிலும் தன்னைச் சேர்த்துக் கொள்ளாத நிலையே நேருவின் அணிசாராக் கொள்கை எனப் பட்டது. உலகப் பொது விடையங்கள் என வரும் பொழுது எந்த அணிக்கும் சார்பாகவே எதிராகவோ சுதந்திமாகத் தர்மம் நேர்மை கருதிச் செயற்படுவதே நேருவின் நடுநிலைக் கொள்கையாய் இருந்தது. இதனால் இந்தியாவுக்கு நண்பர்களோ எதிரிகளோ இல்லாத நிலை. இப்படியான இந்தியாவின் நிலைப்பாட்டில் இலங்கை பர்மா யப்பான் போன்ற ஒரு சில நாடுகளே இருந்தன.

சீனாவை நெடுங்காலம் ஐ.நா.சபை உறுப்பினராக நுழைய விடாது மேற்குலக நாடுகள் தடுத்த படியே இருந்தன. அப்போது நேரு மட்டுமே சீனாவின் அனுமதிக்காக அரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். ஆனால் அதே சீனா இந்தியாவுடன் தனது எல்லையை முன்னறிவித்தலோ முன்னெச்சரிக்கையோ கொடுக்காது ஆக்கிரமித்தது.

அந்நேரம் இந்திய வெளி நாட்டு அமைச்சராய் இருந்த திரு. கிருஷ்ண மேனன் சீனாவின் இச்செயலால் மனம் வருந்தித் தமது அமைச்சுப் பதவியைத் துறந்தார். இந்த இரு நாடுகளும் உலக ஒப்புக்காக நட்புப் பாராட்டினாலும் உள்ளுக்குள் சந்தேகமும் போட்டியும் இவர்கள் இலங்கையின் இன அழிப்புப் போரில் காட்டும் வெறித்தனமான ஈடுபாட்டில் இருந்து வெளிப் படையகவே தெரிகிறது.

இந்தியாவின் சுயநலப் போக்கும் அதன் அணிசேராக் கொள்கையும் உலகில் அதற்கு உண்மையான நட்பு நாடுகள் என்று எவையுமே இல்லாத நிலையை உருவாக்கி விட்டது. அதன் தவறான வெளியுறவுக் கொள்கையும்; பகமை உணர்வும் அதற்குப் பாக்கிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு மூன்று பக்கமும் நெருக்கடி கொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது.

இலங்கையுடன் ஓடும் புளியம் பழமுமாக நடந்து தமிழர்களின் வெறுப்பைச் சேர்த்துக் கொண்டதோடு இந்திய வம்சாவழித் தமிழரைக் கூடச் சிங்களத்தின் இன வெறியிலிருந்து காப்பாற்றத் தவறி விட்டது. பெருமளவு இந்திய வர்த்தகர்களின் நாடு கடத்தலுக்கும் வழி செய்தது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.

பொருளாதரர உதவிகளை வழங்கி இலங்கை அரசுகளை வளைத்துப் பிடிப்பதில் 1950 களிலிருந்து சீனா யப்பான் போன்ற நாடுகள் ஈடுபட்டபோதும் இந்தியா எதுவுமே செய்யாது கல்லுளி மங்கனாக இருந்த காரணத்தால் சிங்கள மக்களின் மனத்தையும் நட்பையும் ஏனைய நாடுகள் பிடித்துக் கொண்டு விட்டன. 1980களில் ஜே.ஆரின் ஆட்சியில் அவரது கவனம் அமெரிக்கா சார்ந்ததாக வெளிப்பட்டு வொயிஸ் ஒவ் அமெரிக்கா வானொலி நிலையத்தை இலங்கையில் நிறுவ அனுமதித்த பின்னர்தான் இந்தியாவுக்குத் தனது நிலைமை தெரியவந்தது.

பாகிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் அமைந்த இராணுவத் தளபதி அயூப் கானின் ஆட்சியில் இந்தியா எதிர்கொண்ட இராணுவ அழுத்தங்களுக்கு ஈடு கொடுக்க இந்திரா காந்தி ரஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். இப்படிப் பலப் படுத்திக் கொண்ட இந்தியா 1971ல் கிழக்குப் பாக்கிஸ்தானாக விளங்கிய வங்க தேசத்தில் மக்களுக்குள் சித்து விளையாட்டுக்களை நடத்தி முக்தி வாஹினி இயக்கம் மூலமான கிளர்ச்சியைக் காரணம் காட்டிப் பல இலட்சம் மக்களின் உயிரழிவுடன் வங்க தேசத்தை உருவாக்கியது. பின்னர் தன் விருப்பப்படி நடக்காத முஜிபுர் ரகுமானையும் தீர்த்துக் கட்டியது. இன்று வங்க தேசம் தேடுவாரற்று வறுமையில் வாடுகிறது

இதே பாடத்தை இலங்கை விடையத்திலும் இந்திரா காந்தி எழுதி தயாரித்து இயக்க முற்பட்டார். இவரது முக்கிய பாத்திரங்களாகத் தமிழரசுக் கட்சியும் மாணவர் பேரவையும் விடுதலை இயக்கங்களும் காட்சிகளை அரங்கேற்றினர். அவரது உண்மை நோக்கம் வெளிப்படும் முன்னரே அவரது முடிவு சீக்கியரின் கரங்களால் எற்பட்டு விட்டது. அவரது மறைவு எமக்கு பேரிழப்பு என நினைத்து நாம் இன்று ஆறுதல் படுவதே எமக்கு ஒரு நிம்மதிதான். இந்திரா காந்தியின் வாழ்வும் அரசியலும் கொலையும் பல மர்மங்கள் நிறைந்தே காணப் படுகின்றன. அவரது அரசியல் வாரிசாக வளர்க்கப் பட்ட மகன் சஞ்சய் காந்தியின் மரணமும் அப்போது எதிர்கொண்ட அரசியல் சவால்களும் மர்மம் நிறைந்தே காணப் பட்டன.

எது எப்படியோ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திய மக்களுக்கும் கூட நன்மையளிக்காத நிலைதான் காணப்படுகிறது. காஷ்மீரப் பிரச்சனையின் விளைவாக இந்தியாவின் எந்தப் பாகத்திலும் குண்டு வெடிப்புக்கள் நிகழும் நிலை உருவாகி விட்டது. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் எங்கேயும் எந்த வேளையிலும் குண்டு வெடிக்கும் நிலையை இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையைச் சரி செய்வதன் மூலமே ஒரு முடிவு காணமுடியும். ஆனால் அப்படி யாரும் சிந்திக்கும் நிலையில் இந்திய அரசியலில் யாரும் இல்லை என்பதே யதார்;த்த நிலை.

இந்தியாவின் பரிதாபநிலை அதன் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் பரவி விட்ட நிலை தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் பாக்கிஸ்தான் உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி கொழும்பு வீதியில் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானார். அதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை எனப் பாக்கிஸ்தான் குற்றம்சாட்டியது. இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்திக்கு அருகே குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அது பாக்கிஸதானின் உளவுத் துறையின் பணி என்கிறது இந்தியா. அப்படி எதுவும் இல்லை என மறுக்கிறார் பாக்கிஸ்தானின் வெளியுறவுச் செயலர்.

பாக்கிஸ்தான் சீனா ஆகிய மூன்று நாடுகளின் ஆடுகளமாக இலங்கை மாறிவிட்டது. இந்த அணியில் ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வருகையும் சேர்ந்து விட்டது. அன்று தொடக்கம் கொழும்பு அரசைக் கைக்குள் போட்டு விடுவதிலே அமெரிக்கா, யப்பான் நாடுகளும் சேர்ந்து கொண்டு விட்டன. பாக்கிஸ்தானுக்கு இந்தியாவின் செல்வாக்குப் பரவாமலும் தான் தனது செல்வாக்கை நிறுத்திக் கொள்வதும் நோக்கமாய் கொண்டுள்ளது.

சீனாவுக்கு பண்டாவின் காலத்தில் ரப்பர் -அரிசி வர்த்தக உடன் படிக்கை செய்தது முதல் 1960களில் ஸ்ரீமாவின் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்த்து வந்த உறவைத் தக்க வைப்பது முதலாவது குறிக்கோள். இரண்டாவது அதனது இன்றைய எண்ணெய்க் கப்பல் வழித் தடமான முத்து மாலையில் இலங்கை ஊடாக மத்திய கிழக்குக்கும் ஆபிரிக்க நாடுகளுக்குமான தொடர்பை உறுதிப் படுத்துவது. அதன் வெளிப்பாடாக ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் உருவாகி இருப்பதை நாம் காணலாம்.

அமெரிக்காவுக்கு திருமலைத் துறைமுகம் கிடைக்குமானால் அதை ஒரு போனஸாக போற்றிக் காக்கும். ஆனால் அதன் இந்தியாவுடனான இன்றைய உறவுகளைப் பார்க்கும் போது இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுத்து அனுபவிக்க விரும்பும் நிலையே தெரிகிறது. அதற்குத் தேவையான புல்மோட்டை இல்மனைற் மணலில் பெறும் டிட்டானியம் உலோகத்தை யப்பான் மூலமாகப் பெற்று வந்தது. அதனைப் புலிகள் இயக்கம் தடைசெய்து விட்டதால் அமெரிக்காவுக்கும் யப்பானுக்கும் புலிகள் மீதான வெறுப்பு இயல்பாக எழக்கூடியதே. எனவே அமைதி வழித் தீர்வு என இடைக்கிடை இராகம் பாடி எப்படியாவது இலங்கை அரசின் கைக்குள் இவை வரும் நாளுக்காக இந்நாடுகள் தவம் இருக்கின்றன.

இந்தப் பந்தயத்தில் இறுதியாக நுழைந்த நாடு இந்தியா. தமிழரசுக் கட்சி மீதும் விடுதலை இயக்கங்கள் மீதும் நம்பிக்கை வைத்து கிழக்குப் பாக்கிஸ்தானில் 1970ல் ஆடிய ஆட்டத்தை இலங்கையிலும் ஆடத் தொடங்கியது. சிங்களத்தின் விடாப் பிடியான ஆரிய சிங்கள பௌத்த மேலாதிக்க வெறியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேதகு தலைவர் வே.பிரபாகரனின் உறுதியான நிலைப்பாடும் இந்தியாவின் கனவை நிறை வேற்றுவதற்குத் தடையாக உள்ளன. எனவே எப்படியும் சிங்களத்தின் தயவைப் பெற்று விடப் புலிகளையும் தமிழரையும் அழிக்கும் போருக்கு அனைத்து வழங்களையும் கொடுத்துப் பெற நினைக்கிறது.

இதற்காக அது 1987ல் மேற்கொண்ட முயற்சியால் மூக்குடை பட்டுப் பின்வாங்கியது. சந்திரிகாவின் அமைதிப் பேச்சை உடைத்து தான் விரும்பிய வழியில் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் ஆனந்தசங்கரி எனப் பல பொம்மைகளை தனது தீர்வின் நாயகர்களாக்கிச் சரிசெய்ய முயன்று தோற்றுப் போனது.

நோர்வேயின் அனுசரணையுடன் இடம் பெற்ற பேச்சுக்களைத் தடைகள் போட்டும் ரணிலின் அரசைக் கலைக்க வைத்தும் புலிகள் இயக்கத்தைச் சர்வதேச அளவில் தடைசெய்தும் கருணாவைப் பிரித்தும் தமிழருக்கு எதிரான முக்கிய சக்தியாகத் தன்னை அடையாளப் படுத்தி நிற்கிறது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.

இந்தியத் தமிழக மீனவரையே இலங்கைக் கடற் படையிட மிருந்து காப்பாற்ற எள்ளளவும் இயலாத இந்திய அரசு இலங்கைத் தமிழரைக் கை விடாது என பொம்மைப் பிரதமர் கூறினால் யார் நம்புவார் ?

யாருடைய தலை போனாலும் திருமலை எண்ணெய்த் தாங்கிகளும் மூதூரில் அனல் மின் நிலையமும் திருமலைத் துறைமுகத்தையும் வடக்கே மன்னார் எண்ணெய் வளங்களும் சீமெந்துச் சாலையையும் மடக்கிக் கொண்டுவிட்ட மகிழ்ச்சியில் இந்தியா மிதக்கிறது.

தமிழகத்தின் மின் தேவை 1000 மெனாவாட் மின்சாரம் தேவை எனக் கேட்டுக் கொண்ட கருணாநிதிக்கு வெறும் 100 மெகாவாட் மட்டுமே கொடுக்க மத்திய மின் வளத்துறை இணங்கியிருக்கிறது.

பல நகரங்களும் கிராமங்களும் விசாயிகளும் மிகப் பெரிய மின் வெட்டக்கு உள்ளாகி உள்ள நிலையில் இந்தியா இலங்கைக்கு கடலடி இணைப்பின் மூலம் மின் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி உள்ளது என்ற செய்தியை எப்படி நம்புவது ?

சுத்துறார் சுத்துறார் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது ?

-ஈழப்பிரியன்-

Comments