தமிழ் - சிங்கள தேசியங்கள் சுட்டமண்; இனி அவை ஒட்டுமா?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகக் கூறி யிருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும்,

நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதிக்கு அடுத்து அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட வருமான கோத்தபாய ராஜபக்ஷ.
செயன்முறையில் தமக்குள்ள நேர்மையை சாதித்துள்ள போதிலும், அது பற்றிய பிரசாரத்தில் தாம் துரதிஷ்ட வசமாகத் தோற்றுவிட்டோம் என்கிறார் அவர்.

ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையோ, அதிகாரப் பகிர்வையோ வழங்குகின்ற நேர்மையான எண்ணமே மஹிந்த வின் அரசுக்கு கிஞ்சித்தும் இல்லாதபோது, அதை செயலில் அரசு காட்டுவதற்கோ, அப்படிக் காட்டும் முயற்சியில் தோற்பது பற்றிப் பேசுவதற்கோ ஏதுமே இல்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்து கின்ற பேரினவாதத் திமிரும், அந்த அடிப்படையில் எழுந்த போர் வெறியும்தான் மஹிந்தரும் அவரது சகோதரர்களும் அதிகாரம் செலுத்தும் இந்த ஆட்சிப் பீடத்தின் ஒரே கொள்கைப் போக்கு; இலட்சியம்.

அப்படி இருக்கையில், அரசியல் தீர்வு காணும் நேர்மைத்திறம் அந்த அரசிடம் இருப்பது போலவும், அதை வெளிப்படுத்துவதிலும், பிரசாரப்படுத்துவதிலும் மட்டும்தான் அந்த அரசு தோற்றுப் போனமை போலவும் படம் காட்டுவது வெறும் அபத்தமாகும்; சுத்த ஏமாற்றுத்தனமாக.

இதேசமயம், "தமிழர்கள் இலங்கை அரசின் பக்கம் இல் லாத காரணத்தால் இலங்கையில் நடைபெறும் மோதல்களில் இலங்கை அரசுத் துருப்புகள் வென்றாலும், இறுதி யுத்தத்தில் வெல்ல முடியாது' என்று இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோ சகர் எம்.கே. நாராயணன் கூறிய கருத்துப்பற்றி தமது பிரதி பலிப்பைக் காட்டிய இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக்ஷ, அச்சமயம் தெரிவித்த மற்றொரு தகவலும் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகின்றது.

""இறுதியாக, நாம் அனைவரும் இலங்கையர் என்பதை உணர்ந்தேயாக வேண்டும். முதலில் நாங்கள் இலங்கையர்; பின்னர்தான் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் என்று எப்போது எங்களால் எண்ண முடிகின்றதோ, அந்த நாளில்தான் நாம் வெல்கிறோம். அதுதான் வெற்றிக்கான திருப்புமுனை.'' என்று கோத்தபாய கூறுகிறார்.

இப்படிக் கூறுகின்ற இலங்கையின் பாதுகாப்புச் செயலா ளர் கடந்த அறுபது ஆண்டுகளாகக் கட்டவிழ்ந்த சரித்திரத்தை ஒருதடவை மீட்டுப் பார்ப்பாராயின், வெற்றிக்கான திருப்பு முனை அல்ல, தோல்விக்கான திருப்புமுனை எங்கு, எப்படி ஏற்பட்டது என்பதையும், அது மீளமுடியாத திருப்புமுனைக்கு வழி செய்து விட்டது என்பதையும் ஓரளவு புரிந்து கொள்வார்.

1940 களிலும், 50 களிலும் இலங்கைத் தமிழர்கள் தங்க ளைத் தமிழர்களாகப் பார்க்க முன்னர் இலங்கையர்களாகவே பார்த்தனர். அதனால்தான் தமது சக இலங்கையரான சிங்க ளவர் அரசியல் ரீதியாக வைத்த பொறிகளைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காமல், சக இலங்கையனோடு ஒத்துப்போக இணங்கினார்கள். அதன் விளைவைத்தான் இன்றும் தமது தலையெழுத்தாக அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று தமிழர்கள் "இலங்கைத் தேசியம்' பற்றித்தான் சிந்தித்தார்கள். "தமிழ்த் தேசியம்' குறித்து அவர்கள் அப்போது எண்ணவே இல்லை. ஆனால் தென்னிலங்கைச் சிங்களமோ "பௌத்த சிங்கள தேசிய வாதம்' பற்றி மட்டும் சிந்தித்து, அதன் அடிப்படையில் சக இலங்கையனை அவன் சிறு பான்மை இனத்தவன் என்று ஒதுக்கிவைக்கும் எண்ணத் தோடு அணுகியது.

சிறுபான்மை இனங்களின் தனித்துவ அடையாளங்களைச் சிதைத்து, அவற்றின் இருப்பை இல்லா தொழிக்கும் பேரினவாதப் பூதம், தமிழ் பேசும் மக்கள் மீது சிங் களத் தேசியத்தால் கொடூரமாக ஏவிவிடப்பட்ட போதே தங்க ளின் இனத்தின் இருப்பையும், இனக் கட்டமைப்பையும், பாரம்பரியத் தனித்துவத்தையும் கட்டிக் காப்பதற்காகத் தத்தமது தேசியங்கள் குறித்தும் அவற்றை நிலைநிறுத்து வதற்கான போராட்டங்கள் பற்றியும் அவர்கள் சிந்திக்க வேண்டி யவர்களானார்கள்.

அதுதான் இலங்கைத் தீவின் தலையெழுத்தையே மாற்றி வைத்த திருப்புமுனை.
அன்று பௌத்த சிங்களத் தேசியம் தனது பெரும்பான்மை எண்ணிக்கை என்ற அதிகாரத்தை பலத்தை சிறுபான்மைத் தேசியங்கள் மீது பிரயோகித்து அத் தேசியங்களை அழிக்க முற்பட்டதன் விளைவே இன்று இலங்கைத் தீவைப் பெரும் உள்நாட்டு இனப் போரில் ஆழ்த்தியிருக்கின்றது.

சிறுபான் மைத் தேசியங்களும், பெரும்பான்மைத் தேசியமும் "இலங்கை' அல்லது "இலங்கையர்' என்ற ஒரு தேசியத்துக்குள் இணைய முடியாத வகையில் சுட்டமண்ணாக மாறும் நிலையை அந்தப் பேரினவாத அதிகார மமதையின் பலாத்காரப் பிரயோகமே ஏற்படுத்தியது.

இன்றும், அந்த சிங்களத் தேசியம் அந்த அதிகாரப் பலப் பிரயோகத்தையே சிறுபான்மைத் தேசியங்கள் மீது ஏவிவிட்டு அதன் மூலமே சுட்டமண்ணை ஒட்டவைக்கும் முயற்சியாக "இலங்கையர்' என்ற ஐக்கிய தேசியத்தை உருவாக்கும் கனவில் மூழ்கிக் கிடக்கின்றது.

அந்தக் கனவு நனவாகும் என்ற எண்ணத்தில் கோத்தபாய தத்துவம் பேசுகிறார்.
அவரது போர் வெறித் தீவிரமும், யுத்த முனைப்பும் அவர் எதிர்பார்த்த வெற்றித் திசையில் நகர்ந்தாலும் கூட சிறுபான் மைத் தேசியங்களை இல்லாதொழிக்கும் அவரது கனவு ஈடேறினாலும் கூட அத்தேசியங்கள் எல்லாம் பெரும்பான் மைத் தேசியத்துடன் ஒன்றுபட்டு "ஐக்கிய இலங்கை', "நாம் எல்லோரும் இலங்கையர்' என்ற உணர்வு ரீதியாக ஒன்றுபடும் எனும் எதிர்பார்ப்பு மட்டும் நிறைவேற மாட்டாது.

இத் தேசியங்கள் பேரினவாதப் போறணையில் தகித்து சுட்டமண் ணாகி விட்டன. இனி அவை ஒட்டா.

சிங்களம் மட்டும் சட்டம், தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், தமிழின ஒதுக்கல் என்று தமிழரின் தனித்துவ உரிமைகளையும், இருப்பையும் சிதைக்கும் கைங்கரியத்தைக் காலங்காலமாக ஒப்பேற்றும்போது வராத "நாம் அனைவரும் இலங்கையர்' என்ற சிந்தனை இப்போது இனப்போர் கொடூர கட்டத்தை எட்டும்போது மட்டும் இப்போது உறுத்துவது விந்தைக்குரியதுதான்.


Comments