திருந்தாத நாராயணன்களும் மாறாத சிங்களமும்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் வாகனத்திற்காக அல்லற்பட்ட கதை சமீபத்தில் குறிப்பிட்ட சில ஊடகங்களில் மட்டுமே வெளியாகியிருந்தன.

சார்க் மாநாட்டிற்காக வந்த நாராயணன் சரியான வாகன வசதியில்லாமலும், மாநாட்டிற்கு போகும் வழி தெரியாமலும் அல்லாடியிருக்கிறார்.

இது நாராயணன் பிழையே தவிர இதில் தங்களுடைய பிழை எதுவும் இல்லை என்று வழமைபோல் சிங்களம் நழுவியிருக்கிறது.

வழமை போல் இந்தியாவும் அதனை நம்பியிருக்கிறது.

உண்மையில் மகிந்த நிர்வாகம் நாராயணனுடன் தமக்குள்ள முரண்பாட்டைத்தான் இவ்வாறு காட்டியிருக்கிறது.

சார்க் மாநாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மகிந்த மற்றும் அவரது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த மூவர் அடங்கிய இந்திய உயர்மட்டக் குழுவினர் கடுமையான சில நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

இதில் என்.கே.நாராயணனே முக்கிய பங்காற்றியிருந்தார்.

சார்க் மாநாட்டை காரணம் காட்டியே இந்தியக் குழுவினர் மகிந்தவை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட மகிந்த அவர்கள் மீது மிகுந்த சினம் கொண்டிருந்தார்.

குறிப்பாக நாராயணன் மீதே மகிந்த அணியினர் சினம் கொண்டிருந்தனர்.

நாராயணனை நேரடியாக விமர்சிக்கவோ அல்லது அலட்சியம் செய்யவோ முடியாத மகிந்த நிர்வாகம் சரியான தருணம் பார்த்து அவரை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது.

நாராயணன் இந்திய நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் முதல்தர அதிகாரிகளில் ஒருவர். அது மட்டுமல்லாது இந்திய கொள்கை வகுப்பை நெறிப்படுத்தும் அணியினரில் ஒருவர்.

அப்படிப்பட்ட ஒருவருக்கு நேர்ந்த மேற்படி அனுபவம் சாதாரணமான ஒன்றல்ல.

மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்ற சார்க் மாநாட்டில் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு வாகன வசதியைச் செய்ய முடியாமல் போவதென்பது தவறுதலாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.

அது வேண்டுமென்றே செய்யப்பட்டால் ஒழிய அவ்வாறு ஒரு சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

ஏற்கனவே, இந்திய பிரதமர் வந்த வாகனத்தை ஓட்டி வந்த சிங்கள சாரதி, அலரி மாளிகை வாயிலில் வைத்து காணாமல் போனதும் சிறிது நேரத்தில் அருகில் எங்கோ இருந்து வந்ததும் கூட ஒருவகையில் இந்திய பிரதமர் குறித்த சிங்களத்தின் அலட்சியமான நடவடிக்கைகளில் ஒன்றே.

ஏனைய எந்தவொரு நாட்டு பிரதமருக்கும் நடக்காத விடயம் இந்திய பிரதமர் விடயத்தில் மட்டும் நடந்திருக்கிறது.

பின்னர் நாராயணன் வழி தெரியாமல் அல்லாடியிருக்கிறார்.

இரண்டையும் பார்த்தால், இரண்டு சம்பவங்களும், இந்தியா குறித்து மகிந்த நிர்வாகம் ஒருவிதமான அலட்சியப் போக்கை கடைப்பிடித்திருப்பதன் விழைவாக இடம்பெற்றவையே அன்றி தவறுதலாக இடம்பெற்றவையல்ல.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஒரு மிகப்பெரிய அவமானம் என்பதில் வேறு கதைக்கு இடமில்லை.

ஆனாலும் இந்தியா என்ன திருந்தவா போகிறது?

அதன் கதை எப்போதும் பழைய குருடி கதவைத் திறடி என்பதாகத்தான் இருக்கும்.

ஏலவே நாராயணன், மகிந்த நிர்வாகம் சீனா மற்றும் பாக்கிஸ்தானிடம் ஆயுதங்களை பெறுவது இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று எச்சரித்திருந்தார்.

அதன் பிறகும் சிங்களம் தனது சீன மற்றும் பாக்கிஸ்தான் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளவில்லை.

கடுப்படைந்த இந்திய நிர்வாகம் சரியான சந்தர்ப்பம் பார்த்து சிங்களத்தை தனது பிடிக்குள் கொண்டுவர முயற்சித்தது.

சார்க் மகாநாட்டை சரியான சந்தர்ப்பமாக கருதிய இந்தியா அதனை சாட்டாக வைத்து மகிந்த நிர்வாகத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க முயன்றது.

இதில் பிரதான பங்கு வகித்தவர்தான் நாராயணன்.

இதனால் சீற்றமடைந்த மகிந்த நிhவாகத்தினர் நாராயணனை அவமானப்படுத்தும் வகையிலேயே அவ்வாறு நடந்து கொண்டனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா குறித்து மகிந்த நிர்வாகம் பெரிய ஈடுபாட்டை காட்டும் நிலையில் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனாலும் ஒரு பிராந்திய வல்லரசு என்ற வகையில் தனது வழமையான நழுவல் இராஜதந்திரத்தை பிரயோகித்து இந்தியாவுடனும் நாங்கள் இருக்கிறோம் என்பதாக காட்டிக் கொள்கிறது.

இந்தியா இதனை புரிந்து கொள்கிறதா என்றால் அதுதான் இல்லை. நாராயணன்களின் வழமையான தமிழர் விரோத மனோபாவத்திலேயே இந்தியா தொடர்ந்தும் நடைபோடுகிறது.

நாடு திரும்பிய நாராயணன் அங்கு வழங்கிய நோர்காணல் ஒன்றில் தனக்கு நேர்ந்த அவமானகரமான அனுபவம் குறித்து எந்தவிதமான கண்டணங்களும் அற்று, மீண்டும் சிங்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்களை வென்றெடுக்காத வரையில் போரில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்பதுதான் அந்த நாராயண ஆலோசனை.

இப்போதும் கடந்த அரை நூற்றாண்டையும் தாண்டி மிக மோசமான ஒடுக்குமுறைகளை அனுபவித்து வரும் ஈழத் தமிழ் மக்கள் குறித்து எந்தவிதமான கரிசனையும் அற்ற பார்ப்பண நாராயணன் விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்த அக்கறையில்தான் சிங்களத்தை எச்சரித்திருக்கின்றார்.

தமிழர் விரோத செயற்பாடுகளில் பெயர் பெற்றவர் நாராயணன்.

ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிக்கின்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருமுறை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் அரசைக் கலைப்பதற்கு காரணமாக இருந்தவர்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பதை தடுத்தவர்.

விடுதலைப் புலிகள் போதைவஸ்த்து வியாபாரம் மூலம் நிதி சேகரிப்பதாக கூறியவர் நாராயணன்.

இப்படி தமிழர் விரோத நாராயண சாதனைகள் பல.

அப்படிப்பட்டவருக்கு சிங்களம் எந்த விசுவாசமுமற்று அவமானகரமான படிப்பினையை வழங்கியிருக்கிறது.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்த காலத்தில் சிறிலங்காவுக்கு வந்திருந்த ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது, ஒரு சிப்பாயின் தாக்குதலை எதிர்கொண்டு மயிரிழையில் உயிர் தப்பினார்.

அன்று ஜே.ஆரின் தந்திரோபாயத்திற்கு பலியாகிய ராஜீவ், ஜே.ஆரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே விடுதலைப் புலிகளுடன் மோதும் முடிவை எடுத்தார்.

வரலாற்று ரீதியான எதிரியாகிய சிங்களம் வரலாற்று ரீதியான நண்பர்களை இரு துருவங்களாக்கும் தந்திரோபாயத்தில் வெற்றிபெற்றது.

அதன் பின்னரும் இந்திய ஆளும் வர்க்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக, சிங்களத்திற்கு முண்டு கொடுக்கும் வேலைகளை செய்து வந்தது.

அன்று சிப்பாயின் தாக்குதல், இன்று அலட்சியமான பாதுகாப்பு ஏற்பாடு.

அன்றும் இன்றும் சிங்களத்தின் இந்தியா குறித்த அணுகுமுறையில் மாற்றங்கள் ஏதுமில்லை. இதற்கு காரணம் வரலாற்று ரீதியாகவே சிங்களத்திடம் நிலைபெற்றிருக்கும் இந்தியா குறித்த எதிர் மனோபாவமாகும்.

சாமானிய சிங்களவர்கள் மத்தியில் தமிழர் விரோத மனோபாவத்தின் மூலம் அது வெளிப்படும்போது, புத்திஜீவிகள் மத்தியில் கருத்திலாக வெளிப்படுகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்த முட்டாள்தனமான அரசியல் நிலைப்பாட்டிற்கு காரணம் இந்திய கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் பார்ப்பனிய சக்திகள்தான்.

தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பதுதான் நாராயணன்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆனால், தனது வரலாற்று ரீதியான பகை உணர்ச்சியிலிருந்து சிங்களம் இம்மியளவும் மாறவில்லை.

ஆனால் நாராயணன்களோ திருந்தத் தயாராகவும் இல்லை.


இந்திய ஆளும் வர்க்கத்தில் நிலை கொண்டிருக்கும் தமிழர் விரோத மனோபாவத்தில் மாற்றங்களை எதிர்பார்ப்பதை காட்டிலும் நம்மை பலப்படுத்திக் கொள்வதில் அக்கறை கொள்வதுதான் காலத் தேவையாகும்.

-தாரகா-

தினக்குரல்

Comments