மானாட மயிலாடுகிறது தமிழகம், தான் வாழப் போராடுகிறது தமிழீழம்


தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும்.

காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை.

புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மற்க்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள்.

மாற்றான் நம் மொழியை உச்சரித்தானே எனும் மனம் மகிழ்வில் நாமும், கைகொட்டிக் களிப்படைவோம். ஆனால் மகிந்தவின் தமிழ்ப்பேச்சு, எந்தவொரு தமிழனுக்கும் தங்கம் தரும் தமிழ்ப்பேச்சல்ல. தமிழ் மக்களின் மனம் வெல்லப் போட்டியிடும் மகிந்தவின், மயக்கப் பேச்சு என்பது புரியும்.

வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும், யுத்த மேக மூட்டத்தை கூட்டவிழையும் சிறிலங்கா அரசின் சிறுமையோ, அல்லது இநதப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமையோ, ஐ.நா மன்றுக்கோ, அல்லது, ஐரோப்பிய ஒன்றியத்துக்கோதெரியாததல்ல.

தெரிந்திருந்தும் வேண்டுமெனவே மெளனம் சாதிப்பதற்குக் காரணம் ஆயிரம் உண்டு. ஆனாலும், அந்த மக்கள் மீது அக்கறைப்பட மனிதாதபிமானம் எனும் ஒருகாரணம் போதுமே.

ஆனால் ஆருக்குப் பயந்து இப்படியொரு மெனம், இந்தச் சர்வதேசத்துக்கு?.

இதுவே ஒரு ஐரோப்பிய நாடென்றால் அடித்தழுது கொண்டோடுகின்றீர்களே?

அப்படியென்றால் உங்களிடம் ஒளிந்திருப்பது நிறவாதமா? இனவாதமா?.

இல்லையென்றால் என்ன ?.

பிராந்திய வல்லருகளின் பெரும் பகை வேண்டாமெனும் பயமா? .

அப்படிப் பயப்படுவதாயின் பின் ஐ.நா சபை என்றும், அதற்குள் பல நலப்பிரவுகள் என்பதும் என்னபம்மாத்தா?

என எண்ணத் தோன்றுகின்றது.

சரி இவர்கள்தான் அந்நியர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எங்கள் அயளவர்கள்?

அதுதான் நம் தொப்பள் கொடியுறவென்று கொண்டாடுகின்றோமே. அவர்களுக்கு இதுவெதும் புரியவில்லையா?

அல்லது புரிந்தும் புரியாத தோற்றமா? அல்லது வேறேதும் மயக்கமா?

இலக்கியங்கள் இருக்கலாம், இன்றியமையாத கலாச்சாரம் இருக்கலாம், தொன்று தொட்ட மொழி பேசலாம், ஆனால் தொலைந்து போகா வாழ்வு ஒன்று வாழ, சொந்தமான மண் வேண்டும்.

அதுமலர வேண்டும். உறவே, உடன்பிறப்பே சற்று நேரத்துக்கு நிறுத்து உன் மயிலாட்டத்தை.

திருப்பிப் பார். உன் அயலில் சிறு தீவில், திறந்த வெளியில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் உன் உறவுக்காக ஒரு குரல், ஒரேயொரு குரல் உரத்துக் கொடுக்கமாட்டாயா?

என்ன உனக்கதற்கு நேரமில்லையா?

நல்லது நடந்துசெல் உன் திசையில்..
மானாட மயிலாட பாத்திரு, மகிழ்ந்திரு.

மரணத்துள் வாழப் பழகியவர் நாம்.
வருவோம் மீண்டு வருவோம்.
அதுவரை நீ அமைதியாகப் பாத்திரு.
நாகன் .நேரமுண்டாயின் இதைக் கொஞ்சம் கேட்டிரு.

கவிதை: புதுவை, இரத்தினத்துரை.



Comments