பிராந்திய ஆதிக்கப்போட்டியும் போருக்கான உதவிகளும்

மீட்கப்பட்ட அல்லது இழந்த பிரதேசங்களை அளவுகோலாகக் கொண்டு, சமகால நிலைவரங்களை மதிப்பீடு செய்தால், அவை இறந்த கால நிகழ்வுகளிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாமல், திரும்பத் திரும்ப அதே விதமான சில வரலாற்றுத் தவறுகளை உருவாக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மைய நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆங்கிலத்தில் கூறிய விடயம் இதுதான்:

“If persons are assessing the situation based on gained and lost territory, my perception is that such people have not learned from the past and are likely to repeat some of the historical mistakes all over again.“

இக் கூற்றைத் திரிபுபடுத்தி, விடுதலைப் புலிகளின் பலவீனத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்கிற வகையில் அரச சார்பு ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

விஞ்ஞான பூர்வமான சமூக வரலாற்று இயங்கியல் போக்கு முன்னோக்கியே நகரும். அவை திரும்பவும் அதே அளவுப் பரிமாணத்தோடு மறுபடியும் நிகழ்த்தப்படுவதில்லை.
ஆனாலும் வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நிகழ்கின்றன. மனித இனத்தின் அழிவிற்கே இத்தவறுகள் வழிவகுத்து சமூக விழுமியங்களை கரைத்து விடுகின்றன. ஜெயசிக்குறு, யாழ். முற்றுகை காலத்தில் தற்போது நிகழ்வது போன்று, பாரியளவு மனித இடப் பெயர்வுகளும், சொத்தழிவுகளும் ஏற்பட்டு, மோசமான மனிதப் பேரவலம் நடந்தேறியதை பழைய வரலாற்று பதிவேடுகளில் காணக் கூடியதாகவுள்ளது.

இவை தந்த வரலாற்றுப் படிப்பினைகளை சிங்களப் பெருந்தேசிய இனவாதம் இன்னமும் புரிந்து கொள்ளாமல் போர் வெறி கொண்டு சன்னதமாடுகிறது. விடுதலைப் புலிகள் ஆறு தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தும் அதேவேளை தாம் 6000 தடவைகள் நடத்தினோமென அரச தரப்பு கூறுகின்றது.

6 ஆயிரம் தடவைகள் அரசு விமானத் தாக்குதல் நடத்தும் போது பாதிப்படையாத “தொண்டு’ நிறுவனப் பணியாளர்களுக்கு இனிமேல் பாதுகாப்பு இல்லையெனக் கூறும் ஐரோப்பிய யூனியன் ஆணையாளர் லூயிஸ் மிச்செல்லின் புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியமானதுதான்.

உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனங்களின் வேண்டுதலைச் செவிமடுக்க வேண்டிய தேவை, ஐ. நா.விற்கு இல்லையென்பதையே, இவர்களின் வெளியேற்றம் புலப்படுத்துகிறது.
அதேவேளை கடந்த திங்கட்கிழமையன்று (15.09.2008) லண்டன் றெயினர்ஸ் லேனில் நிகழ்ந்த தமிழ் மக்களின் ஒன்றுகூடல் ஒன்றில் உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் பேச்சு மிகவும் விசித்திரமாக அமைந்திருந்தது. கேள்விக் கணைதொடுத்த புலம் பெயர்ந்த பிரித்தானியத் தமிழ் மக்களுக்கு, அந்த அமைச்சர் கொடுத்த பொதுவான பதிலில் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

ஈழத் தமிழினத்திற்கு சுயநிர்ண உரிமை கோரும் அதிகாரம் இருந்தாலும், மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட –இலங்கை அரசிற்கு எதிராக தம்மால் எதுவும் செய்ய முடியாதெனக் கூறியதோடு, பேசித் தீர்க்க வேண்டுமென்கிற சர்வதேசப் பாடலைப் பாடி முடித்தார்.

இதே பாடலை வேறு மொழியில் பாடுகிறது இந்தியா. சகலவிதமான உதவிகளையும் இலங்கை அரசிற்கு வழங்குவோமென கூறுவதால், ஏனைய பிராந்திய நாடுகளின் பிரசன்னத்தை தடுக்கலாமென்பதே இந்தியாவின் இராஜதந்திர நகர்வாக இருக்குமென சிங்கள தேசம் எண்ணத் தலைப்படுகிறது.

அதாவது ஆசியப் பிராந்திய, முப்பெரும் அணுஆயுத வல்லரசு நாடுகளான சீனா, பாகிஸ்தான், இந்தியாவுடன் உறவினைப் பேணும் அதேவேளை புலி அழிப்பு இறுதிப் போரிற்கான இக்காலகட்டத்தில் இந்தியாவுடனான நெருக்கத்தைப் பேணுவதில், பல அனுகூலங்கள் தமக்குக் கிடைக்குமென்பதே அரசாங்கத்தின் தந்திரோபாய நிலைப்பாடு.

சிங்களத்தின் காய் நகர்த்தல்களைத் தவறாகப் புரிந்து கொள்ளும் காந்திதேசம், அரசாங்கம் முன்னெடுக்கும் வன்னி முற்றுகைக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், முழு நாட்டையும் தமது பாதுகாப்பு அரணிற்குள் உள்ளடக்கும் அற்புதமான வாய்ப்பினை இதனூடாகப் பெற்றுக் கொள்ளலாமெனக் கற்பிதம் கொள்கிறது. இந்த மூன்று வல்லரசுகளின் முற்றுகைக்குள் விடுதலைப் புலிகள் அகப்பட்டுள்ளதாகவும் சில கொழும்பு ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன.

அரசாங்கத்தின் வன்னி முற்றுகையும் வளையமும், வல்லரசுகளின் அடுத்த நிலையிலுள்ள பெரிய முற்றுகையும் வளையமும் சேர்ந்து தமிழர் தலைமையை நசுக்க முற்படுகின்றதென்ற தோரணையில் முடிவுகளும் எட்டப்படுகின்றன.

ஆனாலும் பிராந்திய மட்டத்தில் தமக்குள் மோதிக் கொள்ளும் வல்லரசுகள், விடுதலைப் புலிகள் விடயத்தில் ஒருவித இணைக்கப்பாட்டிற்குள் வந்தது போல் கொடுக்கப்படும் விளக்கங்கள் யாவும் உள்ளார்ந்த முரண்நிலையை சரிவரப் புரிந்து கொள்ளாத கற்பிதப் பிறழ்வுகளிலிருந்து உருக்கொள்கின்றன.

மன்னார் எண்ணெய் படுக்கைக்காகவும், அம்பாந்தேர்டடை துறைமுகத்திற்காகவும் மோதிக் கொள்ளும் சீனாவும் இந்தியாவும், தேசிய இனப் பிரச்சினையை முன் வைத்து இலங்கைக்கு வழங்கும் ஆயுத, நிதி உதவிகள், ஆதிக்கப் போட்டியின் அங்கங்களாகவே கருதப்படுகின்றன.

வானைக் கண்காணிக்கும் ராடர்கள், தற்பாதுகாப்பு ஆயுதமெனக் கூறியவாறு, கொடுக்கும் நிதியில் சீனா, பாகிஸ்தானிடமிருந்து தாக்குதல் ஆயுதங்களை வாங்கச் சொல்கிறது காந்தி தேசம்.தமிழ்நாடு என்கிற மாநிலமொன்று இந்தியாவில் இல்லாமல் இருந்திருந்தால் டெல்லியிருந்து சகல வகையான ஆயுதங்களும் நேரடியாகவே கொழும்பிற்குச் சென்றிருக்கும். ஆனாலும் இவ்வகையான சிக்கல்கள், ஏனைய வல்லரசுகளான சீனா, பாகிஸ்தானிற்கு கிடையாது.

தென்னிந்தியாவிலுள்ள அணுஆயுத நிலைகளைக் காப்பாற்ற, அதன் எல்லையோடு ஒட்டிய இலங்கையின் வடகிழக்கில், இந்தியப் பிரசன்னம் நிலை கொள்வதை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளும் சீனா, தெற்கில் காலூன்ற அனுமதிக்குமாவென்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

ஏற்கனவே பாகிஸ்தான், மியன்மார், பங்களாதேஷ் துறைமுகங்களில் கால் பதித்து, இந்தியாவைச் சூழ, இறுக்கமானதோடு கடல் பாதை அரணை அமைத்திருக்கும் சீன தேசம், மீதமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை இழக்க விரும்பாது.

அதேவேளை அமெரிக்காவோடு செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தினால் விரிவடையப் போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கப் பலமானது, எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தலை தமக்கு ஏற்படுத்துமென்கிற கலக்கமும் சீனாவிற்கு உண்டு.

இந்தியாவின் இராணுவ, பொருளாதார கேந்திர முக்கியத்துவமிக்க பகுதியாக மாறி வரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்ய தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இலங்கை வரவேண்டுமென்கிற அவசியத் தேவை இந்தியாவிற்கு உண்டென்பதை சீனா புரிந்து கொள்கிறது.

இருவேறு நலன் விரும்பிகளின் பங்கு பிரித்தல் போட்டியில், வடக்கு கிழக்கின் பூரண கட்டுப்பாடு என்கிற விடயமே இந்தியாவின் முதன்மைத் தெரிவாக இருக்கிறது.
ஆகவே, புலி அழிப்பிற்கான பூரண ஆதரவுடன், தமிழர் தாயகப் பகுதிகளை தமது பொருளாதார, அரசியல் ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வருவதனூடாக தென்னிலங்கையையும் தனது கட்டுக்குள் நிலை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள் யாவும் மறுபடியுமொரு வரலாற்று இராஜதந்திரத் தவற்றினை உருவாக்கப் போகிறது.

இன அழிப்பிற்கெதிரான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை, பகடைக் காயாகப் பயன்படுத்தும் இந்தியாவும், சீனாவும், சிங்களம் வெல்லுமென்கிற பிராந்திய ஆதிக்கக் கனவில் மிதக்கின்றன.

ஆனாலும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழர் தலைமை, அழிய வேண்டுமென்கிற முனைப்பில் தீவிரமாகச் செயற்படும் இந்திய அரசு, வரலாற்றிலிருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.
தமிழ் நாடு பிரியும் என்பது போன்ற சோடிப்புக்களெல்லாம், புலி அழிப்பிற்கு உதவி புரிவதை, நியாயப்படுத்துவதற்கான இந்தியக் கற்பிதங்களே.

வன்னி மக்களின் அவல நிலை குறித்து தமிழ் நாடு கதறும். புதுடில்லி பேசாது. இதுதான் யதார்த்தம். இவர்களிடம் இரட்டை வேடம் கிடையாது. அந்த மூடி மறைப்புக்களெல்லாம் தற்போது வவுனியாவில் அம்பலமாகியுள்ளன.

ஓடும் ஆறு, வந்த திசையில் திரும்பி ஓடாது. அவ்வாறு ஓடவைக்க முயற்சிக்கிறது இந்தியா.

-சி.இதயச்சந்திரன்-


Comments