பயம் – மதம் – பகுத்தறிவு – பரிணாமம்

“உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு” என்பது கடவுள் கோட்பாட்டு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் முடிவு.

“ ஏன்” என்ற கேள்விக்கு சிந்தனை பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற விடை அறிவியல் முடிவுக்கும், “ அப்படித்தான்” என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உண்டான மதக் கருத்துக்கும் அடிப்படைகள் ஆகின்றன.

மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும், திட்டமிடுதலும் வேட்டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தனது அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு கருவிகளையும் கண்டறிந்தான். அவன் சிறு சிறு குழுக்களாக அமைந்து வேட்டையாடிய பின்னர், உணவை குழுவினருடன் பகிர்ந்து கொண்டான்.

இவ்வாறு கூட்டு வாழ்வாகத் தொடங்கிய வாழ்வு காலப்போக்கில் சமூக வாழ்வாக மாறியது. கூட்டு வாழ்க்கையின் பொருட்டு மனிதர் பரிமாற்றம் இடம் பெற்றது. காலம் செல்ல செல்ல கருத்துப் பரிமாற்றங்களால் கூட்டு வாழ்க்கை வலுப்பெற்றது. வேட்டையாடுதலைத் தொடர்ந்து பயிர்த் தொழில் நடைமுறைக்கு வந்தது.

கடவுள் மனிதனை படைத்தான் என்று கூறிக்கொ்ண்டே மனிதன் கடவுள்களை படைப்பது இன்னமும் முற்றுபெறவில்லை

மனிதன் இவ்வாறு வளர்ச்சி அடைந்து வாழத்தொடங்கியதும் தனக்கு ஆச்சரியமாகவும், புதுமையாகவும் தோன்றியவற்றை எல்லாம் தனக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட சக்திகளால் உண்டாக்கப்பட்டவை என்று நம்பினான். மனிதன் மீது இயற்கை செலுத்திய ஆதிக்கம் அவனது உணர்வில் பயத்தை உண்டாக்கியது. இவ்வாறு உண்டான நம்பிக்கை, பயம் போன்றவை மனிதனது உணர்வில் ஏதோ ஓர் சக்தி கடவுள் பற்றிய எண்ணங்களைத் தோற்றுவித்து விட்டன.

சூரியன், மழை, காற்று, நெருப்பு முதலானவற்றைக் கடவுள் எனக் கருதினான். இயற்கையின் ஆற்றல்மிகு வெளிப்பாடுகளின்போது துணிவிழந்து துணை அற்றவன் ஆனான். வழக்கத்துக்கு மாறான புயலால் அவன் வாழ்வு மற்றும் உடமைகளின் அழிவுகளைக் கண்டபோது, காணும்போது காற்று, மழை முதலியவற்றை கடவுளின் சீற்றத்தால், வெறுப்பால் விளைந்த விளைவுகள் என்று நினைத்தான்.

எனவே அவன் தன்னைத் தானே கடவுளை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டான். வழிபாடுகள் தோன்றின. இவ்வாறுதான் அறிவின் பலவீனத்தால், அறியாமையால் காரண காரியம் தெரியாததால் எழுந்த பயத்தின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உருவானது. கடவுள் நம்பிக்கையினால் மதம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறான எண்ணங்களே பின்னர் உண்டாக்கபட்ட மதக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

இவ்வாறாக தோன்றிய மதத்தின் பேரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்குக் கிடைக்கப்பெற்றது. இக்கொள்கைகளை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதனால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக் காத்து வந்தன

மனிதன் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் அவன் இயற்கைக்கு மேலான சக்திகளிடம் திரும்பினான். தன் விருப்பு, வெறுப்பு முயற்சிகளில், சிலவேளைகளில் சில இயலாமைகளின் போது தன் உறுதியான எண்ணத்தாலும், எண்ண ஒருமைப்பாட்டாலும் “ முடிக்க முடியும்” என்ற தீர்மானத்திற்கு வந்தான். மனிதன் தன் வாழ்வின் முக்கிய நிலை மாற்றங்களான பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு ஆகியவை கடவுளின் விருப்பத்தால் நிகழ்பவை எனவும் நினைத்தான். எனவே, கடவுளது அனைத்து செயல்களும் தூய்மையாக கொண்டாடப்படப் பட வேண்டும் என எண்ணினான்.

இப்படியான எண்ணங்கள், கருத்துக்களின் விளைவான கடவுள் நம்பிக்கையும், மதக்கோட்பாடுகளும் இயற்கையை விளங்கிக் கொள்ளாமல் தன்னில் நம்பிக்கை இல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளின் மீதுள்ள நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை.

இவ்வாறாக தோன்றிய மதத்தின் பேரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்குக் கிடைக்கப்பெற்றது.

இக்கொள்கைகளை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதனால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக் காத்து வந்தன. இதனால் மதம் சமூகத்தில் வலிமையான ஆதரவையும் ஆதாரத்தையும் பெற்றது. இவ்வர்க்கத்தினர் மடலாயத் தலைவர்களாகவும், மதத் தலைவைர்களாகவும் ஆனார்கள்.

இத்தலைவர்கள் சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தமையால் அரசியலில் ஈடுபடவும், அரசுகளை தம் வசப்படுத்தவும் வலிமை பெற்றிருந்தார்கள். இன்னும் இவ்வாறான நிகழ்வுகள் பரவலாக உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதனின் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என நினைத்து பல கடவுள்களை வணங்கினான். மடலாயத் தலைவர்களும், மதத் தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்கள், சுயநலங்கள் காரணமாகவும் கடவுள்களுக்குள் பிரிவுகளை உண்டாக்கினார்கள். கடவுள் மனிதனைப் படைத்தார் என்று கூறிக்கொண்டு மனிதன் கடவுள்களைப் படைப்பது முற்றுப்பெறவில்லை.

காட்டு மனிதனை தேவை, கூட்டு மனிதன் ஆக்கியது. கூட்டு மனிதனை சிந்தனை, பகுத்தறிவு, துணிவு ஆகியன விஞ்ஞான மனிதன் ஆக்கின. மனிதனின் முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவின் பங்கு அளப்பரியது. விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத நிலையில் மதங்கள் போன்ற சமுதாய இயக்கங்கள் இயற்கை அமைப்புக்களை நிகழ்ச்சிகளை அதாவது உலகம், உயிர் தோன்றியது பற்றி தன்னுடைய வளர்ச்சிக்கு சாதகமாக பல கற்பனைகளைப் பிறப்பித்து விட்டன.

இதனால் அறிவுக்கு ஒவ்வாத விஞ்ஞானத்திற்கு எதிரான, மனித வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற எத்தனையோ மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைச் செயல்கள், நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு வளர்ச்சி முதலியவற்றை எல்லாம் அடியோடு கெடுத்துவிடுகின்றன.

மதங்கலவரங்கள் இடம்பெறும் போது இழக்கபட்ட உயிர்களின் எண்ணிக்கையும், அழிக்கபட்ட சொத்துக்களின் அளவும் மனிதனுக்கு மதவெறி வந்தால் மனிதத் தன்மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். “பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும்.

உலக வரலாற்றில் மதங்களின் தோற்றத்தை நோக்கும் போது, பழைய மதங்களின் மறு மலர்ச்சியாகவே புதிய மதங்கள் தோன்றியதைப் பார்க்கலாம். மேலும் மனிதர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து அபிப்பிராய வேறுபாடுகளினால் மதங்களில் பல பிரிவுகள் ஏற்படலாயின.

ஒவ்வொரு மதக்காரனும் தன் மதம் மூலமாகத்தான் மக்கள் முழுவதும் மோட்சத்திற்கு போக முடியும் என்றும், தன் தன் மதத்தலைவைர் தான் கடவுள் மகன், கடவுள் தூதன், கடவுள் அவதாரம் என்றும் சொல்லித் திரிகின்றான். இவர்களில் யார் உண்மையானவர்களாக இருக்க முடியும் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை.

ஒவ்வொரு மதக்காரனும் அவனவன் மதத்தை நம்பாதவனுக்கு பாவம் என்றும், மோட்சம் இல்லை என்றும் சொல்லக்கேட்கிறோம். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதங்களுக்காக எத்தனை நரகத்திற்குப் போய் வருவது?

மக்களின் நலத்திற்காக ஒழுக்கத்தைப் போதிப்பதற்காகவும், உலகத்தில் நியாயத்தை நிலை நாட்டவும் மதம் உருவானதாகவும், அவற்றிற்கு கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றது. பல இனிப்பான, அழகான, செல்வாக்கான வார்த்தைகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.

மதவாதிகளை கூறுவதுபோல் சொல்கின்ற ஒழுக்க விதிகளின்படி யார் ஒழுகுகிறார்கள்?

கடவுள் சொன்னபடி மதக் கோட்பாடுகளின்படி யார் நடந்து கொள்கிறார்கள்?

மதங்களைப் போதிக்கின்றவர்களாவது அவர்கள் கூறும் ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகளின் படி வாழ்ந்திருப்பார்களா?

“அன்பே சிவம்” என்பவர்களும்
“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்பவர்களும்
“அன்பே கடவுள்” என்று சொல்பவர்களும்
“கடவுள் இல்லை” என்று சொன்னதும் தன்னை இல்லை என்று சொன்னமாதிரியான கோபத்தில்

“ஊருக்குபதேசம் உனக்கில்லையடி பெண்டாட்டி” என்பது போல் சீறாமல் ஆத்திரப்படாமல் இருக்கிறார்களா?

“ஒரு மனிதனின் நல்ல பண்புகள் அவன் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும்” தத்துவ மேதை பேர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியது நடைமுறையில் பலரிடம் காணக்கூடியதே.வாழ்க்கையில் இருந்து வரும் பழக்க வழக்கங்கள், மூட பக்தி, குருட்டு நம்பிக்கைகள் போன்றவைகள் எல்லாம் மதம், கடவுள், பாவபுண்ணியம், மோட்ச நரகம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே நடைபெற்று வருகின்றன.

எந்த ஒரு காலத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு மத உணர்ச்சி அதிக தீவிரமாகவும், மதத்தில் மக்களுடைய பிடிவாதமான நம்பிக்கை அதிகமாகவும் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு உலகில் கொடுமையும் மிகவும் மோசமான நிலையும் இருந்திருக்கின்றன. இதற்கது மதக் கலவரங்களைக் கூறலாம்.

மதங்கலவரங்கள் இடம்பெறும் போது இழக்கபட்ட உயிர்களின் எண்ணிக்கையும், அழிக்கபட்ட சொத்துக்களின் அளவும் மனிதனுக்கு மதவெறி வந்தால் மனிதத் தன்மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். “பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும் என பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.

ஒரு காலத்தில் மத்தலைவர்கள் கூறுவதுதான் வேதம். அவர்கள் கூறும் வேதம் தான் அறிவியல் என்றிருந்தது. ஆனால் காலப்போக்கில் மதத்தலைவர்களின் கற்பனைக் கட்டுப்பாட்டுக் கதைகள் துணிவான சில சிந்தனையாளர்களால் பொய்யாக்கபட்டன. பூமித்தட்டையானது என பைபிளில் சொல்லப்பட்டிருகின்றது.

ஆனால் பூமி உருண்டையானது. பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கோபெர்னிக்கசும் பிறகு வாதிட்ட கலிலியோவுக்கு வயதான கிழவர் என்றுகூட இரக்கப்படாமல் சிறைத்தண்டனை வழங்கியது இங்குயிஸிஸன் (Inguisition) திருச்சபை.

மனிதனின் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் என்றும், சக்தி என்றும் , கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், அவற்றிற்கு காரணகாரியம் தோன்றிய பின்பு அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நோய்கள் என்றும், சூரிய கிரகணம் சூரியனை விழுங்குவது என்றும், பெண்களுக்கு மாதவிலக்கு வருவது கடவுளின் சினத்தால் என்றெல்லாம் என்றெல்லாம் பல மாதிரியான நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

(இன்னும் அவ்வாறு நம்பி வருபவர்களும் உண்டு)அம்மை போடும் நோய்கள் வைரசுகளால் வரும் தொற்று நோய்கள் என அறிகிற போது அம்மனுக்கு செய்யும் படையல் பொங்கல் குறைந்து விட்டன.

மனிதனின் நல்ல பண்புகள் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும் - தத்துவமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

பூமி சூரியன் அவற்றின் இயக்கம், அதன் கால அளவுகளைக் கண்டு பிடித்தது தெரியவந்தபின்னர் சூரியன் கடவுள்களும் இல்லை சூரியனை இராகு பாம்பு கடிப்பதில்லை எனவும் ஒரு தெளிவு ஏற்பட்டது. மாதவிலக்கானது பெண்கள் பருவமடைந்த பின்னர் இரு சூலகங்களிருந்தும் ஒன்று விட்ட 28 நாட்களுக்கு ஒரு முறை விடும் சூல், கருக்கட்டலுக்கு உட்படாததால் அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது. இதனால் மாதவிலக்கு ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளப்பட்டது

அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சி குறைந்து கொண்டே போகும்.எதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனவே, அண்டத்திற்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாவே கடவுள் என்றும், கடவுள் எல்லாவற்றுக்கும் மேலான சக்தி என்றும் பல காலமாக பரவலாக காரணம் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இந்த உலகில் நாம் வாழ்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனும் அமைப்பு திட்ட வாதத்தையும் கடவுள் நம்பிக்கைக்காரர்களும் வாதிடுகின்றார்கள்.

இந்த வாதம் மூக்குக்கண்ணாடி போட்டுக்கொள்ளவே மூக்கு என்று சொல்வது போல் வேடிக்கையானது. உயிரினங்களுக்கு ஏற்றதாக இடத்தில் நிலைமைகள் அமைவதில்லை. ஆனால் உயிரினங்கள் இடத்திற்கு தக்கவாறு வளருகின்றன. உயிரினங்கள் அவை வாழும் இடத்திற்கேற்ப உடலமைப்பு பெற்றிருக்கின்றன.

இந்த அண்டத்தில் பெருஞ் சக்திகளாக அணுக்கருச்சக்தி (Nuclear Energy) ஈர்ப்புச்சக்தி, (Cravitional Energy) , மின் காந்த சக்தி,(Electro Magnectic) கதிரியக்கச்சக்தி,(Radio Activity) என்பனவற்றை விஞ்ஞானத்தில் குறிப்பிடுவர். மேலும் பொருளின் நிலையைப் பொறுத்து இயக்கப்பண்புச்சக்தியாகவும், நிலைப்பண்புச்சக்தியாகவும் ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு சக்தியும் செயற்படுகின்றன.

படைப்பு என்பது இன்மையிலிருந்து உண்டாக்கபடல் என்ற பொருளை உடையது. ஆனால் இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உண்டாக முடியாது என்றும், உள்ள பொருளிலிருந்தே எதுவும் காலப்போக்கில் உருமாறி உருமலர்ச்சி (Evolution) பெற்றுத் தோற்றம் அளிக்கும் என்பதே அறிவியல். சார்ல்ஸ் டாவினின் பரிணாமக்கொள்கையின் படி ஒரு கல உயிர் கால ஓட்டத்தில் பல கலமுள்ள உயிராகிப் பெருகி வளர்ந்து மென்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறிக் கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது.

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் பெருவெடிப்பின் (Big Bang) காரணமாகப் இப்பேரண்டம் (Universe) தோன்றியது. எங்கும் பரவியிருந்த நைதரசன் நெருப்புக்கோளமாக ஆகி பல இலட்சக்கணக்கான கிலோமீற்றர் விட்டம் கொண்டதாக அமைந்து வெப்பம் தாங்க முடியாமல் பேரொலியுடன் வெடித்து சிதறியது.

வெடித்து சிதறிய துண்டங்கள் அண்டங்கள் (Galaxy) ஆகியன, இவ்வண்டங்களின் நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆகின. சூரியன் 5500 c பாகை வெப்பநிலை உடைய ஒரு நட்சத்திரமே. சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்களாக அந்தரேல் (Antares) பெரேல்கூஸ் (Betegeuse) ஆர்க்துருஸ் (Arctturus) ஆகியன உள்ளன.

460 கோடி ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரங்களுக்கு இடையிலான வாயுவும், தூசியும் சுருங்கி, செறிந்து இயக்க விளைவினால் பூமி தோன்றியது. “பிரம்மா பூமியைப் படைத்தர் “ என்றும் ஆதி நிலைத் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் சொல்லப்பட்டும் வருபவை பொய்யாகின்றன.

பூமியின் போர்வையான வளி மண்டலத்தில் நைதரசன், அமோனியா, மிதேன், நீராவி முதலான மூலக்கூறுகள் ஓயாது பெய்த பெருமழையின் வாயிலாக புவியின் பரப்பில் இருந்த கடல்களில் கரைந்து கலந்தன. இவ்வாறு கல்லில் கரைந்த மூலக்கூறுகள் சூரிய வெப்பம், மின்னல் புற ஊதா கதிர் வீச்சு முதலியவற்றால் இரசாயனத்தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றிலிருந்து அமினா அமிலங்களும் , அமினோ அமிலங்களிலிருந்து புரதங்களும் உருவாகி அவை பின் கலவுருவாகி (Protoplasm) காலப்போக்கில் ஒரு கல் (monocell) உயிர்கள் ஆகின.

உயிரினங்களின் உடலமைப்பியல், தொழிலியல் அடிப்படை அலகு கலம் (Cell) ஆகும். கலங்களில் சுவாசம் நிகழ்வதால் பல இரசாயனத்தாக்கங்கள் கலங்களில் நிகழ்கின்றன. தொடரும் இரசாயனத்தாக்கங்களால் உயிரினங்கள் வாழுகின்றன. வளருகின்றன. பெருகுகின்றன.

எளிமையான அமைப்புடன் தோன்றிய உயிரினங்களில் படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. தற்போது காணப்படுகின்ற உயிரினங்கள் பல தொடக்க காலத்தில் இருந்திருக்கவில்லை. இவையெல்லாம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவானவையே. பரிணாம வளர்சியின் உச்ச நிலையே மனிதன்.

ச.சச்சிதானந்தம்


Comments

Thamizhan said…
இன்று படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூட மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி இருப்பது சிந்திக்க வேண்டியது.ஜோசியம்,காலம், நேரம்,ராசி பலன்,கையில் கயிறு(எவ்வள்வு அழுக்காணாலும் )இதையெல்லாம் அவரவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உண்மையான அமைதியும்,மகிழ்ச்சியும் கைமாறு கருதாமல் தேவையானவர்களுக்குச் செய்வதில் தான் என்பதை அனுபவித்துப் பார்த்தால் தான் உணர முடியும்.அதுவே பரிணாமத்தின் அடுத்த படியாகவும் இருக்கிறது.