தென்னாசியாவின் மையசக்தியாக மாற்றமடையும் ஈழப்போராட்டம்

உலக மயமாக்கிகளுடன், அணுசக்தி ஒப்பந்தம் ஊடாக புதிய நட்புறவொன்றை இந்தியா உருவாக்கியுள்ளது.தமது இனத்துவ தேசியத்தை பேணியவாறு, சந்தைக் களமாகத் திகழும் வளர்ச்சியடையாத நாடுகளின் பூர்வீக தேசிய இனத்துவ விழுமியங்களை சிதைக்க வேண்டிய தேவையும் இவ்வுலக மயமாக்கலின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கிறது.

தமக்குச் சாதகமான பிராந்தியங்களில் பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதும் புதிய வல்லாதிக்கத் தலைமை உருவாகும் பிராந்தியத்தில் அவ்வகையான விடுதலைப் போராட்டங்களை நிராகரிப்பதும் பொதுவான நடைமுறைத் தந்திரோபாயமாக இருக்கிறது.

மேற்குலக ஆதிக்க வட்டத்துள் முரண்பட்டு நின்ற சோவியத் ஒன்றியத்தை "பெரோய்ஸ்ரிகா' மூலம் உடைத்தார்கள்.தமது எல்லைகளில் ஒட்டி நின்ற குடியரசுகளில் ஜனநாயக மீட்புப் போராட்டத்தை தூண்டி, நாட்டிற்குரிய இறையாண்மையையும் அங்கீகரித்து, நேட்டோ கூட்டமைப்பிற்குள் அந்நாடுகளை இணைத்தார்கள். இத்தகைய மேற்குலக சாம்ராஜ்ஜிய மீட்பு நகர்வுகள், தற்போது ஜோர்ஜியா, உக்ரேயின் வரை விரிந்து செல்கிறது.

அதாவது அமெரிக்க பொருளாதாரம், கீழ்நிலை நோக்கி வேகமாகச் செல்லும் வேளையில், ஜோர்ஜியாவின் நிமிர்விற்கு நான்கு பில்லியன் டொலர்களை மேற்குத் தலைமை வழங்கவிருப்பதாக வரும் செய்திகள் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.சீரழிவிற்கு மத்தியிலும், ஆதிக்க எல்லைகளை விரிவாக்கும் ஓருலக அதிகாரக் கருத்து நிலையில் மாறுதல் ஏற்படாது என்பதுவே சரியான கணிப்பாகும்.அதாவது சீன இந்திய பொருண்மிய எழுச்சி வடிவம் மேல் எழுகையில், மேற்கின் எதிர்வினைச் செயற்பாடு ஐரோப்பிய விரிவாக்கத்தினை முன்னிலைப்படுத்துகிறது.

இத்தகைய அமெரிக்க வழிமுறையின் ஓருலகச் சிந்தனைப் பிரதிபலிப்பில், சீனாவும் இந்தியாவும் தமது முகங்களைப் பொருத்திக் கொள்ள முற்படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.அதேவேளை சீனாவிற்கு நிகரான வளர்ச்சி நிலையை எய்த வேண்டுமென்கிற இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கும், தேக்கமுறும் உலகப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து தனது வளர்ச்சியுற்ற பொருண்மியக் கட்டமைப்பை தக்க வைக்க வேண்டுமென்கிற சீனாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு.

அணுசக்தி ஒப்பந்தம் ஊடாக மேற்குலகோடு இணைவான பொருளாதார அரசியல் உறவினை நீடித்து, சந்தைகளை விரிவுபடுத்தலாமென புதிய உலக கோட்பாட்டிற்கேற்ப இந்தியா உத்திகளை வகுக்கிறது.மேற்குலகின் தனிப் பெரும் வல்லரசாளராக அமெரிக்கா விளங்குவது போன்று, ஆசியப் பிராந்தியத்தில் அத்தகைய நிலைபெற பல தடைகளை இந்தியா தாண்ட வேண்டும்.தாய்வான் ஊடாக சீனா மீது மேற்குலகம் செலுத்தும் அரசியல் அழுத்தத்தை விட, பன் முனை அழுத்தங்களை இந்தியா தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறது.இந்தியாவைச் சூழவுள்ள கடல் எல்லைகளில் சீனா மேற்கொள்ளும் துறைமுகக் கட்டுமாணப் பணிகள், மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் கடல் வணிகப் பாதையில் அமைந்திருப்பது சிக்கலான நிலையை உருவாக்குகிறது.

ஈரான் ஜனாதிபதி அஹமது நிஜாட்டின் அண்மைய விஜயத்தின் பின்னர், தென்னிலங்கையில் முன்னெடுக்கப்படும் சீனாவின் பாரிய முதலீடுகள் குறித்த தகவல்கள் புள்ளி விபரங்களோடு வெளிப்படத் தொடங்கின.நேபாள மாவோயிஸ்டுக்களின் அதிகார வரவும், இலங்கையில் அதிகரிக்கும் சீன பாகிஸ்தானின் பொருண்மிய படைக்கல ஒத்தாøசகளும் இந்தியாவின் தென்னாசியப் பிராந்திய முக்கியத்துவத்தை புறந்தள்ளி விடுமென்கிற அச்சம் புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் உருவாகி இருந்ததை அவர்களின் ஆய்வு இணைய தளங்களில் காணக் கூடியதாகவிருக்கிறது.

இந்நிலையில் இராணுவ கேந்திர முக்கியத்துவமிக்க நிலைகள் அமைந்துள்ள இந்தியாவின் தென் பகுதியோடு ஒட்டியுள்ள சிறிய இலங்கைத் தீவின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டிய தேவை புதுடில்லிக்கு உண்டென்பது காலத்தின் நிர்ப்பந்தமாகும்.1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், சீன பாகிஸ்தானை நோக்கி தன்னியல்பாக நகரும் இலங்கை அதிகார மையத்தை, துளியளவும் அசைக்கவில்லையென்பதை இந்தியா உணர்ந்து கொண்டது.திரும்பவும் உள்நுழையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த இந்திய அரசு, மேற்குலகின் நோர்வே அனுசரணை இலங்கையை விட்டு வெளியேற்றப்படும் வரை தலையிடாக் கொள்கையென்று எதையோ கூறி மௌனம் காத்தது.

அதாவது வெளியுலகிற்கு இந்தியாவின் அமைதிக் கொள்கையானது அமைதிப்படைக் காலத்து விரல் சுட்ட கதையின் வெளிப்பாடு போல் காட்டப்பட்டாலும் மூன்றாம் உலக சக்திகளின் அரசியல் ஆதிக்க உள் நுழைவினை அகற்றுவதற்கு இந்தியா பெரும் பங்கு வகித்ததை சகலரும் அறிவார்கள்.சமாதான மேடையிலிருந்து நோர்வே அகற்றப்பட்டதும் இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் தம்மிடம் பூரண சரணாகதியடைவார்களென இந்தியா எதிர்பார்த்திருந்தது.ஆனாலும் அந்த எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தியாவின் பிராந்திய எதிரிகளை நோக்கியே இலங்கையின் ஈர்ப்பு அதிகரித்தது.

ஆனால் நிறுவன மயப்பட்ட இராணுவ முனைப்பு, அதிகார பீட ஆட்சிக் கருத்து நிலையில் மேலோங்கி புலி அழிப்பிற்கான பாதையில் இணைபவரே, பிராந்திய நட்புச் சக்தி என்கிற தந்திரோபாய நிலைப்பாடு சிங்களத்தால் முன்னிறுத்தப்பட்டது.தவிர்க்க முடியாதவாறு சிங்களத்தின் இராஜதந்திர பொறி வலைக்குள் வீழ்ந்த இந்திய நடுவண் அரசு, அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடலடி நீரோட்டப் பாணியில் மறைமுகமான படைக்கல உதவிகளைப் புரிய ஆரம்பித்தது.அத்துடன் தாக்குதல் கருவிகளைக் கொடுக்கவில்லையென்றும் படையினரின் தற்காப்பு நிலைக்குரிய ராடர்களை மட்டுமே வழங்கி வருவதாக இந்தியா வியாக்கியானம் செய்தது.

ஆனாலும் இந்தியா முன்னாள் உயர்நிலை அதிகாரிகளும் இன்னாள் ஆய்வார்களாக உருமாறியுள்ள கொள்கை வகுப்பு அறிவுரையாளர்களும் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்ட கதைகளையும் செய்மதியிலிருந்து புலிகளின் நகர்வுகளை படம் பிடிக்கும் ஆதாரச் சான்றுகளையும் வெளிப்படுத்தி, இந்தியாவின் முழுமையான இராணுவப் பங்களிப்பினை அம்பலமாக்கினார்கள்.80 களில் முனைப்படைந்த பல ஈழப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியில் நேரடிப் பங்காற்றிய இந்திய அரசு அவ்வாறு உதவி செய்யவில்லையென்கிற கருத்தையே அன்று உலகிற்கு அழுத்திக் கூறியது.

அதாவது தமது பிராந்திய கேந்திர நலனை உறுதி செய்யும் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்படும்வரை, போராட்ட இயக்கங்களுக்கு படைக்கல உதவி புரியவில்லையென்கிற தந்திரோபாயச் சொல்லாடல்களை, இன்று போலவே அன்றும் பிரயோகித்தது.ஆனாலும் தற்போதைய களநிலைமைகளும் பூகோள அரசியல் மாற்றங்களும் வேறு பரிமாணத்தை தொட்டு நிற்பதை இந்தியா இன்னமும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.

வவுனியா கூட்டுப் படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் ஈரூடகத் தாக்குதலில் காயமுற்ற இரு இந்திய படைத்துறை அதிகாரிகளின் பிரசன்னம் அம்பலமான நிலையில் கடந்த 2 ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரால் சென்னை சேப்பாக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணா நிலைப் போராட்டம், சிங்களத்தின் சார்பான இந்திய நிலைப்பாட்டை உலகிற்கு அம்பலமாக்கியது.அன்று வெடித்தெழுந்த தமிழக எழுச்சி, சிங்களத்தோடு கூட்டுச் சதியில் ஈடுபட்டு தமிழின அழிவிற்கு துணை புரியும் இந்திய அரசின் ஆதிக்க முகத்தை சர்வதேசத் தமிழர்களுக்கு இனங்காட்ட உதவி புரிகிறது.

இந்நிலையில் சிங்களப் பேரினவாதத்திற்கு துணை போகும் இந்திய அரசாங்கத்தின் தவறான தோல்வியடையும் வெளியுறவுக் கொள்கை சர்வதேச மட்டத்தில் பல அதிருப்திகளை உருவாக்கப் போகிறது.சிங்கள தேசத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையின் பங்காளராக இந்தியா தொடர்ந்தும் செயற்படுமாவென்பதை, நடுவண் அரசுக் கொள்கை வகுப்பாளர்களே தீர்மானிக்க வேண்டும்.தமிழக மக்களின் உணர்வெழுச்சியை மழுங்கடிக்க மேற்கொள்ளும் உள்நாட்டு அரசியல் சதி நகர்வுகளை, நீடித்தால், நிலைமை மேலும் சிக்கலடையலாம்.

புலி எதிர்ப்பு ஆயுதம் ஊடாக, அ.தி.மு.க.வை தூண்டிவிட்டு தமிழக சர்வ கட்சித் தீர்மானத்தில் பங்கேற்ற காங்கிரஸாரை பிரித்தெடுக்க முனையும் குறுகிய தந்திரோபாயங்கள் ஒட்டுமொத்த தமிழக தமிழ் மக்களின் எழுச்சியை மேலும் வீரியமடையச் செய்யும்.தமிழக புதிய எழுச்சியின் ஆரம்ப கால கட்டத்தில், ஒற்றையாட்சிக்குள் சுய நிர்ணய உரிமை என்கிற நவீன அரசியல் கோட்பாட்டை கண்டு பிடித்த செல்வி ஜெயலலிதா தற்போது புலி அழிப்பு நிலைப்பாட்டைத் தூக்கிப் பிடிக்கிறார்.

மக்களின் உண்மையான இன உணர்வெழுச்சியை தவறாகப் புரிந்து கொள்ளும் ஜெயலலிதா, வருகிற தேர்தலிற்குரிய புதிய கூட்டணியை உருவாக்கும் கனவில் இருப்பதாகத் தென்படுகிறது.கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை உடைத்து, காங்கிரஸோடு கூட்டுச் சேர்ந்து மத்தியில் ஆட்சிபீடமேறலாமென்பதே ஜெயலலிதாவின் அரசியல் கணக்கு.ஆகவே தமிழக எழுச்சியை நீர்த்துப்போகச் செய்ய ஜெயலலிதாவின் துணையை மத்திய அரசு நாடிச் செல்லலாம்.தமிழக காங்கிரஸாரின் சமீபகால, விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்களும் இதனையே புலப்படுத்துகின்றன.

ஆனாலும் தமிழக முற்போக்குச் சக்திகளின் தொடர் போராட்டங்களும் தன்னாட்சியுடன் கூடிய சுய நிர்ணய உரிமையே ஈழத்தமிழ் மக்களிற்கான நிரந்தரத் தீர்வாக அமையுமென்கிற அரசியல் நிலைப்பாடு நோக்கிய நகர்வு தமிழின எதிர்ப்புச் சக்திகளை தமிழக அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தும்.

அழிவின் விளிம்பில் தரித்து நிற்கும்ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான சக்திகளைத் தேடி அலைவதை நிறுத்தி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதோடு சுய நிர்ணயப் பிறப்புரிமையை அங்கீகரிப்பதே இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இசைவாக அமையும்.

- சி.இதயச்சந்திரன்

Comments