தமிழீழம் தொடர்பான தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு பேராசிரியர் சுப.வீ அவர்களின் பதில்கள்

பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்
தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.

அவரின் சிந்தனைகள்.

தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல் கொடுப்பது


தமிழீழம் தொடர்பான பல கேள்விகள் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்றன, மேலும் தமிழீழ பிரச்சினை தொடர்பான சில பொய் பரப்புரைகள் இன்றைய தலைமுறையை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன, எனவே ஈழம் தொடர்பான சில விளக்கங்களை அது சார்ந்த தெளிவுடையவர்களிடம் தமிழ்வெளி தம் வாசகர்களுக்காக தொடர்பு கொண்டு பெற்று வெளியிட முயற்சி எடுத்துள்ளது, பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்காக நேரம் ஒதுக்கி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்ததை நன்றியுடன் வணங்குகிறோம்...

பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் தமிழ்வெளிக்காக நேர்காணல் நடத்திய நண்பர் பிரின்சு அவர்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளும் அதற்கு பேராசிரியர் சுப.வீ அவர்களின் பதில்களும்

1. தனி ஈழம் உருவானால் இங்கே தனித்தமிழ்நாடு கேட்பார்களே? இது இந்தியஇறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காதா?


இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு கேள்வி, இப்போது பங்களாதேஷ் என்ற நாடு உருவானவுடன் யாரும் தனி வங்காளம் கேட்கவில்லை, அதாவது இது வேறு கோரிக்கை, அது வேறு கோரிக்கை. திராவிட நாட்டு கோரிக்கை என்பது எப்போதோ இங்கு கைவிடப்பட்ட ஒன்று.

எனவே இன்று தனித்தமிழீழத்திற்கும் தனி தமிழ்நாடு என்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இரண்டாவதாக இன்றைக்கு தனித்தமிழீழம் என்பது தலைமுறையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள��
�, அதே போன்று இங்கு எந்த வித போராட்டமு இல்லை, அதனால் தமிழீழம் வந்த உடனே தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்பது வெறும் பயம் மட்டுமல்ல, வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் வதந்தி,

எப்படியாவது தமிழீழத்தை தடுத்துவிட வேண்டுமென்று கருதுபவர்கள் அதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள் அதிலே இதுவும் ஒன்று, இதிலே துளிகூட உண்மையில்லை

2. இந்தியா ஆயுதம் தரவில்லையென்றால் பாக்கிஸ்தானோ, சீனாவோ இலங்கைக்குஆயுதம் தரும் வேறு யாரோ தருவதற்கு இந்தியாவே தரலாமே?

இந்தியா ஆயுதம் தருகிறபோதும் கூடத்தான் பாக்கிஸ்தானும் சீனாவும் ஆயுதம் தந்து கொண்டிருக்கிறார்கள், இன்னொன்று இது இந்தியாவுக்கு நல்லது தானே என்பது கூட அடிப்படையில் வெளியுறவுக்கொள்கையில் உள்ள புரிதலில் தவறானது என்பதை காட்டுகின்றது.

உண்மையை சொல்லப்போனால் இந்தியா தனக்கொரு சரியான நேச நாட்டை அண்டை நாடாக உருவாக்கிகொள்ளவேண்டும் பங்களாதேஷைப்போல ஒரு தமிழீழத்தை உருவாக்கிக்கொள்வதில் தான் அது கவனத்தை செலுத்த வேண்டும், ஆனால் இன்றைக்கு ஈழத்தை தாக்கி சிங்கள இனவெறியர்களுக்கு துணை போவதன் மூலம் மேலும் மேலும் தனக்கு எதிரான ஒரு சூழலைத்தான் இந்தியா உருவாக்கிக்கொண்டுள்ளது.

இந்த இந்தியா தான் இலங்கைக்கு உதவியிருக்கிறதே தவிர, ஒரு நாளும் ஒரு போது ஸ்ரீலங்கா அரசு ஒரு போரிலும் இந்தியாவிற்கு உதவியாக இருந்ததில்லை,

இப்போது அதைக்காட்டிலும் சீனா முத்துமாலை நடவடிக்கையின் அடிப்படையில் இந்தியாவை சுற்றியிருக்கிற இடங்களையெல்லாம் கைப்பற்றிக்கொண்டிருக்கிறது.

இதற்காகத்தான் அது இலங்கையையும் கைப்பற்ற முனைகிறது,

ஒரு தமிழீழம் என்கிற நேசம் மிகுந்த ஒரு நாட்டை அண்டை நாடாக உருவாக்கிக்கொள்வதற்கான ஒரு வழி. எனவே இந்தியா ஆயுதத்தை சிங்கள அரசுக்கு கொடுப்பதன் மூலம் மேலும் மேலும் அது இந்திய நலனுக்கே எதிரான செயல்களில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

3. அமெரிக்காவின் தலையீடு என்பது இலங்கை அரசுக்கு உதவியாக அமையும் பட்சத்தில் அதுவும் இந்தியாவிற்கு ஆபத்து தானே? பிறகு ஏன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது?

இந்தியா வெளியுறவுக்கொள்கை தமிழீழத்தை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாகவே பிழையாக உள்ளது, இந்திராகாந்தி இருந்த போதும் திரு பார்த்தசாரதி இந்தியாவின் தூதராக இலங்கையில் இருந்த காலகட்டத்திலும் அது மிகச்சரியாக இருந்தது.

பிறகு ராஜீவ்காந்தி தலைமை அமைச்சராக வந்து பார்த்தசாரதிக்கு பதில் ரமேஷ் பண்டாரியை வெளியுறவுச்செயலாளராக நியமித்த அந்த நாளிலிருந்து வெளியுறவுக்கொள்கை தவறுதலான பாதையில் நடை போடத்தொடங்கி இன்று வரை அதே பாதையில் தான் அது தொடர்ந்து நடை போட்டுக்கொண்டுள்ளது,

எனவே அமெரிக்காவினோட அங்கிருக்கும் ஆட்களைமைப்பு, சீனாவின் உதவி சீனா இலங்கையோடு தமிழீழத்தையும் வளைத்துப்போட முயற்சித்தல் இவை அணைத்துமே இந்தியாவோட நலனுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது.

எனவே தமிழீழத்தை ஆதரிப்பது என்ற ஒரே ஒரு கொள்கையினால் தான் இந்தியா தன் நாட்டிற்கான நலனை உருவாக்கிக்கொள்ளமுடியும் மற்ற எல்லா வழியும் இந்தியாவுக்கு எதிரானது.

4. கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தரப்பட்டது?

கச்சத்தீவு 1959இலிருந்து அது பற்றிய பேச்சுவார்த்தையை அங்கிருக்கும் இலங்கை அதிபர்கள் தொடங்குகிறார்கள் அது நேருவின் காலத்திலேயே பேசப்படுகிறது. ஆனால் அப்போது அது வலுப்பெறவில்லை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் திரும்ப திரும்ப அவர்கள் கச்சத்தீவை ஒரு வித வெறியோடு பேசுகிறார்கள், அது இந்திராகாந்தியின் காலத்திலும் கூட தொடக்கத்திலே அது மறுக்கப்படுகின்றது.

ஒரு முறை நாடாளுமன்றத்திலே கூட கச்சத்தீவு முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்க்கு கீழாகத்தான் இருந்திருக்கிறது, சேதுபதி அரசரின் ஆளுமையில் தான் இருந்திருக்கிறது, என்று நாடாளுமன்றத்திலே கூட வெளிப்படையாக சொல்லப்பட்டது,

ஆனால் அதற்கு பிறகு ஒன் டு ஒன் மீட்டிங் என்று சொல்லப்படுகின்ற இந்திராகாந்தி சீரிமாவோவும் சேர்ந்த ஒருவருக்கொருவர் ஆன அந்த சந்திப்பில் கச்சத்தீவை கொடுப்பது என்ற முடிவு ஏற்படுகின்றது, அது தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றது அப்போது தமிழக அரசு அதை எதிர்க்கிறது, கலைஞர் தலைமையிலான அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மாணம் இயற்றுகிறது.

ஆனால் தமிழக அரசினுடைய அதிகார எல்லை என்ன என்பதை நாம் அறிவோம், அந்த காரணத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எதிர்ப்பை செலுத்த முடியவில்லை. மேலும் கூடுதலாக அன்றைக்கு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் கூடுதலாக அழுத்தத்தை தரமுடியவில்லை ஆனாலும் கூட அன்றைக்கு கச்சத்தீவை கொடுப்பதை எதிர்க்கத்தான் செய்தார்கள், அதையும் தாண்டி இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது, அது நமக்கு பெரிய இழப்புதான்கிட்டத்தட்ட

5. இன்றைக்கும் அதே சூழல்தான், திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றைக்கும் அன்றைக்கும் வேறுபாடு என்ன?

இன்றைக்கு முழுமையாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையிலும் உணர்வுகளை பதிவு செய்யும் வகையிலும் தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்கிறது. மேலும் தொடர்ச்சியான மத்திய அரசோடு ஒரு பேச்சுவார்த்தை என்கிற நிலையில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழக அரசும் திமுகவும் கூட ஒரு கூட்டணியிலே மத்திய அரசில் பங்கு பெற்றிருந்தாலும் கூட இன்றைக்கு ஈழத்திற்கு ஆதரவாக குரல் உயர்த்தி மனித சங்கிலி, மற்ற போராட்டங்கள் போன்றவைகள் எல்லாம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற��
�,
இன்னொன்றையும் நாம் எப்போதும் கவனத்திலே கொள்ளவேண்டும் திமுக என்கிற ஒரு கட்சிக்கும் தமிழக அரசுக்கும் இருக்கிற எல்லைகளுடைய அதிகார எல்லைகளுடைய வரம்பு என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு கட்சியோ ஒரு தலைவரோ எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. மக்களினுடைய எழுச்சிதான் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும்.

இன்றைக்கு தமிழகத்திலே தாய் தமிழகத்திலே எழுந்திருக்கிற தமிழீழ ஆதரவு என்பது ஒரு பெரிய நம்பிக்கை கொள்வதாக இருக்கிறது, எனவே இதை வைத்துக்கொண்டு திமுகழகம் வலிமையாக ஆளுங்கட்சியாக இருக்கிற திமுக்ழகம் மத்திய அரசிடம் மறுபடியும் மறுபடியும் இந்த கோரிக்கைகளை எடுத்து செல்லும் என்று நாம் நம்புகிறோம்

6. தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழக கட்சிகள் இப்போது செய்ய வேண்டியது என்ன? ஒருங்கினைந்து போராட வேண்டியதா? அல்லது தனிநபர் போராட்டங்களை இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியதா?

தனித்தனியாக போராட்டங்கள் நடத்துவது என்பது அவ்வளவு பிழை இல்லை, ஆனால் தனித்தனியாக அனைத்துக்கட்சிக்கூட்டங்களை கூட்டுவது தனித்தனியாக சில கட்சிகள் சேர்ந்து முடிவெடுப்பது என்பதெல்லாம் ஆதரவு இயக்கத்தை பிளவு படுத்தும் என்பதோடு மட்டுமல்ல, பலவீனப்படுத்தவும் செய்யும்.

ஆகையினால் இன்றைக்கு ஆளுங்கட்சியே இதற்கு ஆதரவாக இருக்கும் கட்டத்தில் முதலமைச்சரையும் ஆளுங்கட்சியையும் முன்னிறுத்தி அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும், இவைதான் வலிமை சேர்க்கும், ஒரு வேளை எதிர்கட்ச்சிகளாக இருக்கும் சில கட்சிகள், அதற்கு இணக்கம் தெரிவிக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் தனித்தனி குடைகளின் கீழ இயங்கினாலும் கூட ஒரே கோரிக்கையை முன்வைத்தால் அதுவும் கூட பயன் தரக்கூடியதாகவே இருக்கும், வேறு அணிகளில் இருந்து கொண்டு வேறு முழக்கங்களை வைப்பது தான் சிக்கல்கள் வந்து சேரும் எனவே எல்லோரும் ஒன்றாக ஒரே கூட்டமைப்பின் கீழ் நின்று குரல் கொடுப்பதுவும் போராடுவதும் பயனுடையது. வாய்ப்பில்லாமல் போகுமானால் தனி அணிகளாக நின்று கொண்டு ஒரே கோரிக்கையை எழுப்புவது

7. ஈழப்பிரச்சினை பற்றி அதிகம் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

முதலில் ஈழப்பிரச்சினையை அவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும், தெரிந்தவர்கள் அவர்களூக்கு தெளிவிப்பதில் முனைப்பாக ஈடுபடவேண்டும், இது முதல்பகுதி, தெரிவிப்பது எனப்து வெறும் கூட்டம் போட்டு பேசுவதல்ல, இன்றைக்கு நவீன விஞ்ஞான வடிவங்கள் எவ்வளவோ வந்துவிட்டன, அவற்றையும் நாம் மிகச்சரியாக பயப்படுத்த வேண்டும், குறிப்பாக இந்த ஆவண காட்சி படங்கள் பெருவாரியான மக்களிடத்திலே ஒரு ஈடுபாட்டை உருவாக்குகின்றன, இப்போது கூட எனக்காகவும் பேசுங்களேன் என்ற குறுந்தகடு தமிழகத்திலே ஒரு பெரிய அசைவை ஏற்படுத்தியிருக்கிறது, என்று சொல்லலாம், எனவே நாமும் நவீன வடிவங்களை எல்லாம் கையாள வேண்டும்.

இன்றைக்கு திரையுலக கலைஞர்கள் பலர் இதற்கு ஆதரவாக வந்திருக்கிறார்கள், அவர்கள் மூலமாகவும் இந்த செய்திகள் சொல்லப்படுகிற போது இளைஞர்கள் இந்த செய்திகளை கூடுதலாக கேட்பார்கள், எப்போதும் இந்த நாட்டில் என்ன சொல்லப்படுகிறது என்பதை விட அதை யார் சொல்லுகிறார்கள் என்பது தான் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது, அது முறையானதல்ல என்பது வேறு ஆனால் அதுதான் நடை முறையாக இருக்கிறது, எனவே இளைஞர்களை கவர சொல்லுவது, நவீன உத்திகளை கையாண்டு சொல்லுவது, தொடர்ந்த முயற்சிகளில் சலிக்காமல் சொல்லுவது, என்கிற அடிப்படையிலேதான் நாம் இந்த கருத்துகளை இளைஞர்களிடத்திலே கொண்டு போக முடியும், அந்த செய்திகளை புரிந்து கொண்டால் கண்டிப்பாக இளைஞர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,


8. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா? அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா?

அதாவது தடை செய்யப்பட்ட இயக்கங்களை வாய்மொழியாக ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றமே ஒருமுறைக்கு இருமுறை சொல்லிவிட்டது, அதிலும் குறிப்பாக எங்களினுடைய பொடா பிணை வழக்கில் நான் அதை தேதியோடு குறிப்பிட வேண்டுமென்று சொன்னால் 2003 வது ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இந்தியாவினுடைய உச்ச நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள், நீதிபதி இராஜேந்திரபாபு தலைமையில் எங்களுக்கு பிணை அளித்த போது வாய்மொழி ஆதரவு பொடா சட்டத்தின் கீழ் கூட குற்றமாகாது என்று அறிவித்திருக்கிறார்கள், மறுபடியும் மறுபடியும் நாம் ஆதரித்து பேசுவது குற்றம் என்று சொல்லுவது, ஒரு விதத்திலே நீதிமன்ற அவமதிப்பு என்று நான் கருதுகிறேன்.

இரண்டாவதாக தடையென்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் தான் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம், தடை என்பது எந்த இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அந்த இயக்கம் இந்த மண்ணில் செயல்படக்கூடாது என்பதற்கான தடை, இரண்டாவது அந்த இயக்கத்திற்கு நிதி உதவியோ ஆயுத உதவியோ வழங்குவதற்கு மற்றவர்களுக்கு தடை என்பது தான் அதனுடைய சாராம்சமான செய்தியே தவிர ஒரு இயக்கத்தை பற்றி பேசுவது, அது பற்றி கருத்து வெளியிடுவது அதை கூட பயங்கரவாதம் என்று சொல்லுவதும், அதை தடை செய்ய வேண்டுமென்று சொல்லுவதும் அடிப்படை சனநாயக உரிமைகளையே மறுப்பதாக ஆகும், மேலும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்தையும் அதனுடைய தடையை விலக்க வேண்டுமென்று கோருவதும் ஒரு சனநாயக கோரிக்கை, அது எந்த விதத்திலும் பயங்கரவாதம் ஆகாது, தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையே பயங்கரவாதமென்று சொல்லுகிறவர்கள், உண்மையில் ரொம்பவும் பயந்து போயிருக்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது, ஆகவே சட்டத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் பேசமாட்டார்கள் பேசக்கூடாது, இன்னும் சரியாய் சொன்னால் இதனை ஆதரித்து பேசுபவர்களை கைது செய் என்று சொன்னால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது என்னுடைய கோரிக்கை.


9. தற்போது இந்தியா என்ன செய்ய வேண்டும்? தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா தலையிட வேண்டும், எப்படி செய்ய வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும், இப்போது இந்தியா மீண்டும் மீண்டும் அந்த சிங்கள் இனவெறி அரசுக்காக ஆதரவாக தலையிட்டுக்கொண்டுள்ளது, ரேடாரை அனுப்புஇவதும், இங்கே பயிற்சி அளிப்பதும் அங்கே போய் பயிற்சி அளிப்பதற்கு அதிகாரிகளை அனுப்புவதுமாக இந்தியாவினுடைய நடைமுறைகள் இருக்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று, இவற்றை மாற்றிக்கொண்டு சிங்கள அரசை மிக்கக்கடுமையாக எச்சரிக்க வேண்டும், ஏறுக்கொள்வதல்ல, வேண்டுகோள் விடுப்பதல்ல, எச்சரிக்கை விட வேண்டும், அதையும் மீறி சிங்கள அரசு தமிழீழ மக்களை படுகொலை செய்தால் அதற்கு அடுத்த நடவடிக்கை எதனையும் இந்திய அரசு எடுக்கலாம்,

ஏனென்றால் அது உள்நாட்டு பிரச்சினை அல்ல, வங்க தேசத்திலிருந்து அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்ததை காரணம் காட்டித்தான் இந்திராகாந்தி அவர்கள் இது எங்கள் நாட்டு பிரச்சினையாகவும் ஆகிவிட்டது என்று சொன்னார், அதைப்போல இது வரை கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக வந்திருக்கிறார்கள், என்று சொல்லப்படுகிறது, எனவே தொடர்ந்து அகதிகள் வருகிற போது இது நம் நாட்டு பிரச்சினையாகவும் ஆகிறது, அதை தீர்ப்பதற்கு இந்தியா நேரடியாக நடவடிக்கை எடுத்தாலும் அதில் பிழை இல்லை,

இந்திய அரசை வலியுறுத்துவதை பல அறநெறி போராட்டவகைகளில் முன்னெடுக்கலாம், தங்களுடைய சொந்த சகோதரர்கள், சாவின் விளிம்பில் அவர்களுக்கு உதவுகிற வண்ணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது போல நிதி அளிக்கலாம், உணவளிக்கலாம், உடையளிக்கலாம், இன்னும் பல்வேறு விதங்களில் உதவலாம், எல்லாவற்றையும் தான்டி வடமாநிலங்களில் வெளிநாடுகளிலும் கூட தமிழீழ மக்களின் போராட்டத்தில் இருக்கிற நியாயத்தை அவர்கள் என்ன விதமாக கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லலாம், இவையெல்லாம் ஒரு கட்டம் வரிக்கும் தான் நிகழும், மேலும் மேலும் அங்கே தமிழீழ படுகொலை நடந்து கொண்டே இருந்தால் தமிழகத்திலே ஒரு தன்னெழுச்சியான போராட்டம் வெடிக்கும், வெளிப்படும் அதற்கும் பிறகு அதனை தடுப்பதென்பது அரசுகளுக்கே கடினமானதாக ஆகும் அது மக்களினுடைய போராட்டம், மக்களினுடைய எழுச்சி, அது இந்த தேதியிலே வரும் என்று குறிப்பிட்டு நாள் குறிக்க முடியாது, எனவே தமிழ்மக்களினுடைய பொறுமை எல்லை மீறுவதற்கு முன்பாக இந்திய அரசு நம் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் எனப்து தான் நல்லது,

10. பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும் ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள?

அதாவது இந்தியாவிலேயே தமிழகத்தின் நிலை ஒரு மாதிரியான வினோதமானது என்று தான் சொல்ல வேண்டும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை,

தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை.,

தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது.

11.பிற இந்தியர்கள் தமிழரல்லாதவர்களின் எதிர்ப்புக்கு அல்லது ஆதரவின்மைக்கு என்ன காரணமிருக்க முடியும்?

அதற்கு நம்முடைய குறைபாடும் கூட இருக்கின்றது என்று நான் கருதுகிறேன் நாம் இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே ஒரு எழுச்சியை கொண்டு வந்திருக்கிறோம், இன்றைக்கு தான் அது தானாக எழுந்து இருக்கிறது, நாம் இது வரை இந்த பிரச்சினையை வடநாட்டிற்கு எடுத்து செல்லவில்லை என்பது நம்முடைய குறைபாடு இங்கொன்றும் அங்கொன்றுமாக நாம் தெரிவித்திருக்கிறோம் என்பது போதவில்லை,

பெரிய அளவில் பெரிய வீச்சில் இந்த கோரிக்கையை வட நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போனால் இன்றைக்கு வடநாட்டிலும் கூட குறைந்த பல பகுதிகளில் நமக்கு ஆதரவு வந்து சேரும் ஒட்டு மொத்தமான ஆதரவு கிடைக்காதென்றாலும் பெரும்பாலான பரவலான ஆதரவை நாம் பெற முடியும் அதை நோக்கியும் செயல்பட வேண்டும் இங்கே இருக்கிற சின்ன சின்ன .... வெறியர்கள் நம்முடைய ஆவணப்படங்கள் இவற்றையெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்த்து அல்லது குறைந்த பட்சம் ஒலிபெயர்த்து அதை நாம் கொண்டு செல்ல வேண்டும் அந்த வேலையை செய்தால் தான் ஓரளவிற்கு ஆதரவை நம்மாக் அங்கே திரட்ட முடியும்.

12.தொடக்க காலத்தில் வாஜ்பேய், போன்றவர்களையெல்லாம் அழைத்து டெசோ நடத்தியிருக்கிறது, ஆய்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறது, அது தொடர்ந்து செயல்படவில்லை என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்குமில்லையா?

அப்படி சொல்ல முடியாது, அன்றைய சூழல் இன்றைய சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது அன்றைக்கு பல்வேறு போராளி குழுக்கள் இருந்தார்கள், அந்த போராளி குழுக்களை இணைக்க முயற்சியும் கூட இருந்தது, இன்றைக்கு களத்தில் ஒரே ஒரு போராளி குழு மட்டுமே இயங்கிகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்

அது போலவே தமிழகத்திலும் அன்றைக்கு இன்றிருக்கும் திமுக, அண்ணா திமுக என்ற இரண்டு வலிமையான கட்சிகள் அன்று இல்லை, எனவே அன்றைக்கு எல்லா கட்சிகளையும் சேர்ப்பது எளிதாக இருந்தது, இண்றைக்கு அதற்கான சூழல் குறைந்து போயிருக்கிறது, எனவே மீண்டும் டெசோவை கொடுத்தாக வேண்டுமென்றோ, டெசோ இருந்தால் தான் இது நடக்குமென்றோ கருத வேண்டியதில்லை. இண்றைய சூழலுக்கு ஏற்பதான் நாம் இன்றைய அரசியலை அமைத்துக்கொள்ள முடியும்.

பேராசிரியர் சுப.வீ அவர்களின் வலைப்பதிவு

http://subavee.wordpress.com/


தமிழ்வெளிக்காக நேரம் ஒதுக்கி வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்த பேராசிரியர் சுப.வீ. அவர்களுக்கும், சந்திப்பை நடத்திய நண்பர் பிரின்சு அவர்களுக்கும் தமிழ்வெளி நிர்வாகம் மற்றும் வாசகர்கள் சார்பில் நன்றி கூறுகிறோம்.

- தமிழ்வெளி-



Comments