புலி வாலைப் பிடித்த கதையான போரும் போர் நிறுத்தமும்

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் மீண்டும் போர்நிறுத்தம் ஏற்படுமா? இந்தக் கேள்வியை அரச தரப்பில் யாரிடமாவது கேட்டால் அதற்கு அவர்கள் இல்லையென்றே பதிலளிப்பார்கள்.

அந்தளவுக்கு அரசாங்கம் போரில் உறுதியாக இருக்கிறது.

எப்படியாவது புலிகளைத் தோற்கடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது. புலிகளை முற்றாகத் தோல்வியடையச் செய்வதற்கு இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் அரசாங்கத்துக்குக் கிடைக்கவே கிடைக்காது என்பது அரச மற்றும் இராணுவத் தரப்பில் உள்ளோரில் பெரும்பாலானோரின் கருத்து.


அதனால் தான் புலிகளைத் தோற்கடிப்பதற்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம் இது என்று எல்லோரும் கூறிக் கொண்டு திரிகின்றனர். போர்நிறுத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் புலிகள் மீண்டும் பலம் பெற்று விடுவார்கள். அவர்களைத் தோற்கடிக்கின்ற வாய்ப்பு பறி போய்விடும் இவ்வாறு விமல் வீரவன்ச தரப்பு, ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களும் கூறுகின்றனர். இப்படி போர் நிறுத்தத்தை எதிர்க்கின்ற சக்திகள் தான் இப்போது தென்னிலங்கையில் வலுவாக இருக்கின்றன என்பது ஒன்றும் யதார்த்தத்துக்குப் புறம்பான கருத்தல்ல.

இரண்டு கைகளும் தட்டினால் தானே ஓசை வரும். தென்னிலங்கையும் அரசதரப்பும் ஒரே நோக்கில் போரை நடத்தும் கங்கணத்துடன் இருக்கின்ற போது எவ்வாறு போர்நிறுத்தத்துக்கான சூழல் உருவாகும் என்பது முக்கியமானதொரு கேள்வி தான். அதேவேளை புலிகள் தரப்பு போர் நிறுத்தத்தை தாமாக வலிந்து கோரும் நிலையில் இல்லாத போதும் அதற்கு முரணாகத் தாம் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கையின் போர் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இரண்டு தரப்பும் போரில் களைத்துப் போனதொரு கட்டத்தில் தான் போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன. படைவலுச் சமநிலை உருவாகி அல்லது எந்தத் தரப்பும் வெற்றிக்கான உரிமையைக் கொண்டாட முடியாத நிலையில் போர்நிறுத்தத்துக்கு இணங்கியிருப்பது தான் வரலாறு.

இப்போது அப்படியானதொரு சூழல் இருக்கிறதா எனப் பார்ப்பது முக்கியம். தற்போதைய போரில் இரு தரப்புமே களைத்துப் போய்விட்டதாகக் கருதும் நிலையில் இல்லை என்றே சொல்லலாம். இராணுவத் தரப்பு வெற்றி மிதப்பில் இருக்கிறது. புலிகள் வன்னியின் கணிசமான பகுதிகளையும் கிழக்கையும் இழந்திருப்பினும் இன்னும் வலுவான நிலையில் தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் போரிட்டுக் களைத்துப் போய் போர்நிறுத்தத்துக்கு வரும் நிலையில் இருதரப்புகளுமே இல்லை எனலாம். புலிகளும் அவ்வப்போது வான் தாக்குதல்கள், கடற்சண்டைகள் என்று நடத்தி படைத்தரப்புக்கு அதிர்ச்சியூட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதேவேளை இப்போது படைவலுச் சமநிலை காணப்படுகிறதா என்பது சிக்கலானதொரு விடயமாகும்.

புலிகளைப் பொறுத்தவரையில் நிலப்பரப்புகளை இழந்து நிற்கின்ற நிலையை வைத்துப் பார்த்தால், 2002ஆம் ஆண்டில் போர்நிறுத்தம் ஏற்பட்டபோது இருந்தளவுக்கு படைவலுச் சமநிலையைப் பேணும் நிலையில் இல்லையென்றே சொல்லலாம். இதற்கு போரில் அவர்கள் சந்தித்திருக்கின்ற இழப்புகள் மட்டும் காரணமல்ல. இராணுவத்தின் படைபலப் பெருக்கத்தையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம். இப்போதைய நிலையில் இரண்டு தரப்புமே வெற்றிக்கு உரிமை கோரமுடியாத நிலையில் இருக்கின்றன என்றும் சொல்லமுடியாது. இராணுவத்தரப்பு எத்தகைய இழப்புகளைச் சந்தித்திருப்பினும் பிரதேசங்களை கைப்பற்றுவதற்கு எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பினும் கைப்பற்றிய இடங்களை தக்க வைக்க எவ்வாறான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பினும் அதற்கு இருக்கின்ற ஒரே சார்பு நிலை வெற்றிக்கு உரிமை கோரும் நிலையில் இருப்பதேயாகும்.

புலிகளிடம் இருந்து பெருமளவு நிலப் பிரதேசங்களைக் கைப்பற்றியிருக்கின்ற படைத்தரப்பு வெற்றிக்கு உரிமை கோரும் நிலையில் இருக்கிறது. அதனால்தான் புலிகளை 80 வீதம் தோற்கடித்து விட்டதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார். இந்தநிலையில் ஒருபோதுமே கள யதார்த்தங்களின்படி போர்நிறுத்தம் ஒன்றுக்கான வாய்ப்பு இருக்கவே முடியாது. அவ்வாறு இருதரப்பும் ஒரு போர்நிறுத்தத்துக்கு இணங்க வேண்டுமானால் புலிகள் பாரிய வலிந்த தாக்குதலின் மூலம் இராணுவத்தை தோற்கடிக்க வேண்டும். அப்போது படைவலுச் சமநிலைக் குழப்பங்கள் உருவாகும். அது போர்நிறுத்தத்துக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும். இப்போது புலிகள் பாரிய வலிந்த தாக்குதலை நடத்தும் சாத்தியங்கள் இருக்கிறதா? அதற்கான பலம் அவர்களிடம் இருக்கிறதா? என்பதெல்லாம் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள்.

அதனைப் போர்க்களத்துக்கு வெளியே இருந்து கொண்டு சாதாரணமாக எடைபோட முடியாது. களத் தரிசிப்பின்றி அப்படி எழுதுவது யதார்த்தமாகவும் இருக்காது. போரியல் ரீதியாக இப்போது போர்நிறுத்தத்துக்கு வாய்ப்புகள் அற்ற ஒரு சூழ்நிலையே தான் காணப்படுகிறது. இந்தக் களச் சூழலில் தான் தமிழகத்தில் இருந்து போர்நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தொடக்கத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி போர்நிறுத்தத்தை வலியுறுத்தி காலக்கெடு ஒன்றையும் மத்திய அரசுக்கு வழங்கியிருந்தார். அந்தக் காலக்கெடு முடிவடைந்தபோதும் போர்நிறுத்தம் ஏற்படவேயில்லை.



போரில் நேரடியாக ஈடுபடாத தரப்பான இந்தியாவை போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோருவது சரியானது தானா என்பது ஒருபுறத்தில் இருக்க, போர்நிறுத்தத்துக்கு புலிகள் இணங்குவார்களா என்ற சந்தேகம் கருணாநிதிக்கு வந்திருந்தது போலும். அதனால் ஒரு கட்டத்தில் போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை மட்டும் கோரினால் போதுமா புலிகளும் இணங்க வேண்டாமா என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் புலிகள் தரப்பில் இருந்து அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் "நாங்கள் எப்போதுமே போர்நிறுத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. நாமாக வலிந்து போரைத் தொடக்கவும் இல்லை. இப்போதும் தற்காப்புக்குத்தான் சண்டையிடுகிறோம் என்று பதிலளித்திருந்தார் அவர். புலிகள் போர்நிறுத்தத்துக்குத் தயாராகவே இருப்பதாக பா.நடேசன் அறிவித்திருந்த போதும் அது சரணாகதி அடைவது போன்ற பதிலாக இருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேவேளை அரசாங்கமோ உடனடியாகவே போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணாகதி அடைந்தால் மட்டுமே போர்நிறுத்தப்படும். இல்லையேல் அவர்கள் கூண்டோடு அழிக்கப்படும் வரையில் போர் நிறுத்தப்படாது என்று அறிவித்திருக்கிறது. இப்போது தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது போர்நிறுத்தம் செய்து இலங்கை அரசு தமது படைகளை பழைய நிலைகளுக்குத் திருப்பி அழைக்க வேண்டும் என்பதே அது. இது வெறும் தீர்மானமாக இருந்தாலும் கூட இலங்கை அரசு போர்நிறுத்தத்தை நிராகரிக்கப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டதொரு புதிய விவகாரமாகவே தெரிகிறது. முன்னர் படைகளை விலக்குவது பற்றி யாருமே தமிழகத்தில் இருந்து குரல் கொடுக்கவில்லை. ஆனால் சட்டசபையில் பழைய நிலைகளுக்குப் படைகளை இலங்கை அரசு விலக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இது பெரும் விவகாரமாகும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

ஆக, போர்நிறுத்தம் என்ற இலங்கை அரசின் மீதான அழுத்தம் இப்போது படைவிலக்கல் என்ற அழுத்தமாகவும் மாறிவருகிறது. இது இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. போர்நிறுத்தத்துக்கான வாய்ப்புகளை இலங்கை அரசு எந்தளவுக்குப் புறம் தள்ளிக் கொண்டு போகிறதோ அந்தளவுக்கு நெருக்கடிகள் உருவாகும். இங்கே போர்க்கள யதார்த்தத்துக்குப் புறம்பாக அரசியல் கள யதார்த்தம் போர்நிறுத்தத்துக்கான புறநிலை அழுத்தங்களை கொடுக்கும் வகையில் மாறி வருவதைக் காணமுடிகிறது. இந்தநிலையில் அரசாங்கம் இந்தியாவின் அழுத்தங்களுக்காக குறிப்பிட்டதொரு காலத்துக்குப் பின்னர் போர்நிறுத்தம் ஒன்றை அது தற்காலிகமாகவேனும் செய்யும் நிலையை ஏற்படுத்தலாம். அதற்கு முன்னர் கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு போன்ற கேந்திர நிலைகளை வெற்றி கொள்ள அரசு முனையலாம். அப்படியான நிலையில் அரசாங்கம் பலமான நிலையில் இருந்து கொண்டு போர்நிறுத்தம் செய்து புலிகளைப் பேச்சுக்கு அழைப்பதன் மூலம் அவர்களை வலிந்த தாக்குதல் சமருக்குத் திரும்ப முடியாத நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கட்டத்தில் புலிகள் தரப்பை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு, வெளியுலக நெருக்கடிகளில் இருந்து தான் தப்பிக்கின்ற உத்தியாக போர்நிறுத்தத்தை அரசாங்கம் கையாளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தென்னிலங்கையைப் போர் வெற்றி மாயைக்குள் இழுத்துச் சென்று விட்டு அரசாங்கம் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்று இறங்குமேயானால் அரசாங்கத்தின் செல்வாக்கும் ஆதரவுத்தளமும் தகர்ந்து போய்விடும். இப்போது அரசுடன் கூடிக் குலவும் கட்சிகள் பலவும் அதிலிருந்து விலகிவிடும் ஆபத்தும் உள்ளது. இந்தக் கட்டத்தில் அரசாங்கத்துக்கு போரும் சரி, போர்நிறுத்தமும் சரி புலிவாலைப் பிடித்தவன் அதை விடவும் முடியாமல் பிடிக்கவும் முடியாமல் எப்படி திண்டாடுவானோ அந்த நிலையைத் தான் தோற்றுவித்து வருகிறது.

-சத்திரியன்

Comments