புலிகளுக்கு சார்பாகமாறும் போர்க்கள நிலைமைகள்

தெற்கே குமுழமுனை, கிழக்கே மாங்குளம்- கொக்காவில் - முறிகண்டி, வடமேற்கே
நீவில் - கிளாலி - முகமாலை என்றுமுல்லைத்தீவை நோக்கிய பாரிய நெருக்குதலைப் படைத்தரப்புகொடுத்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது.பெரும் நிலப்பரப்புகளை புலிகள் இழந்துள்ள கட்டம்.பூநகரியைக் கைப்பற்றிய படையினர் இப்போது கிளிநொச்சி,பரந்தன், பளை, ஆனையிறவைக் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.மாங்குளத்தைக் கைப்பற்றிய 63 ஆவது டிவிசன் படையினர் ஏ-9 வீதியில் கணிசமான பிரதேசங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர்.

அடம்பன், பாலம்பிட்டி களமுனைகளில் இருந்து புலிகள் பின்வாங்கிய பின்னர் வன்னியின் மேற்குப் பகுதி நகரங்கள் அடுத்தடுத்து விழுந்தது போலவே இப்போதும் நடந்திருக்கிறது. நாச்சிக்குடா தடுப்பரண் உடைந்து போனதும் பூநகரி, மாங்குளம்,குமுழமுனை என்று பல பிரதேசங்களுக்குள் இராணுவம் புகுந்திருக்கிறது.இந்தக் கட்டத்தில் புலிகள் பலவீனப்பட்டுப் போனதால் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியாகப் பலரும் சித்திரிக்க முற்படுவதைக் காணமுடிகிறது. அரசாங்கத்தின் பிரசாரம் அந்தளவுக்கு வேகமாக
நடந்து கொண்டிருக்கிறது.

கிளிநொச்சிக்கு தென்மேற்கே அக்கராயன் தடுப்பரணை உடைத்தால் சரி, அடுத்தது கிளிநொச்சிதான் என்று கூறிக் கொண்டிருந்த படைத்தரப்பு, அக்கராயனைக் கைப்பற்றி பல
வாரங்களாகி விட்ட போதும், கோணாவில், முட்கொம்பன்,ஸ்கந்தபுரம் பகுதிகளை நோக்கி முன்னேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. பூநகரியைக் கைப்பற்றினால் பரந்தன் இலகுவாக வீழ்ந்து விடும் என்று படைத்தரப்புகணித்திருந்தது. அதற்காகவே வடபோர்முனையில் இருந்து புதிய தாக்குதல்களையும் ஆரம்பித்தது. ஆனால், நீவிலுக்கு கிழக்கே முன்னேற முடியாமல் அதாவது பரந்தனுக்கு சுமார் 09 கி.மீ தொலைவில் தடுத்து
நிறுத்தப் பட்டிருக்கிறது.

இப்போது கிளிநொச்சி மற்றும் பரந்தனை உள்ளடக்கியதாக சுமார் 14 கி.மீ. நீளமான பாரிய தடுப்பரணைப் புலிகள் அமைத்திருப்பதாகப் படைத்தரப்பு கூறுகின்றது. ஆக இந்தப் பிரதேசங்களில் தாம் முடக்கப்பட்டிருப்பதை தடுப்பரண்களின் மூலம் நியாயப்படுத்துவதே படைதரப்பின் வழக்கமாக மாறிவிட்டது. நாச்சிக்குடா தடுப்பரண் உடைக்கப்பட்ட பின்னர்
பூநகரியைத் தக்க வைப்பது இலகுவான விடயமல்ல. அதன் காரணமாகவே புலிகள் விலகிச் சென்றனர். அதன் புவியியல் அமைப்பு அத்தகையது.

1990 களின் தொடக்கத்தில் பூநகரி மட்டுமே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அதற்கு தெற்கேயும்,கடனீரேரிக்கு வடக்கேயும் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்
விரிவடைந்திருப்பதால் இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று சண்டையிடுவது போரியல் ரீதியான முட்டாள்தனமாகவே இருக்கும். இதனால் தான் புலிகள் இந்தப் பகுதியைக் கைவிட்டுப் பின்நகர்ந்திருந்தனர்.

அதேவேளை புலிகள் இந்தப் பகுதியில் பலத்த இழப்புக்களை படையினருக்கு ஏற்படுத்தி விட்டே பின்வாங்கியதாக தெரியவந்துள்ளது. 58 ஆவது டிவிசன் இப்போது முடங்கிப் போகும்
அளவுக்கு பூநகரிக்கான கடைசிச் சண்டைகளில் படைத்தரப்பு பலத்த இழப்புகளை சந்தித்திருந்தது.

அதுமட்டுமன்றி பூநகரி கைப்பற்றப்பட்ட பின்னர் கூட அங்கு புலிகள் வைத்து விட்டுச் சென்ற பொறி வெடிகள், கண்ணிவெடிகள் படைத்தரப்புக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 11ஆவது இலகு காலாற்படையின் தளபதியான லெப். கேணல்கீத்சிறி எக்கநாயக்க இத்தகைய கண்ணிவெடியொன்றில் சிக்கி காயமடைந்திருக்கிறார்.

அதற்கு முன்னர் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 5 ஆவது கவசப் படைப்பிரி;வின் தளபதி லெப்.கேணல் சமரக்கோன் காயமடைந்ததும் குறிப்பிடத் தக்கது.
பிரதேசங்களை இழந்த போதும் புலிகளின் நடவடிக்கைகனோ அவர்களின் பலமோ குறையவில்லை என்பதே முக்கியமானது. புலிகளின் ஆட்பலம் குறைந்து, படைபலம்
குறைந்து, பலவீனப்பட்டுப் போவதே போரின் தோல்வியாகக் கருதப்படும். ஆனால், புலிகள் அத்தகையதொரு நிலையில் பிரதேசங்களை கைவிட்டுப் பின்நகரவில்லை. பலமின்றி
பின்வாங்குவதாக இருந்தால் சில கேந்திர இடங்களை விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் படைத்தரப்பை அகலக்கால் பதிக்க இழுக்கும் வகையில் புலிகளின் தந்திரோபாயம் மாறியிருப்பது படைத்தரப்புக்கு பலத்த
சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது வட போர்முனையிலும் சரி வன்னியின் ஏனைய களங்களிலும் சரி படைத்தரப்பு பன்முனைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருப்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று, மாவீரர் தினத்துக்கு முன்னர் கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளைப் பிடித்து புலிகளுக்கு மிகப்பாரிய நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்பது. அடுத்தது, புலிகளின் வலிந்த தாக்குதல்களை தடுக்கவேண்டும் என்பது.

மாவீரர் தினத்தை புலிகள் அனுஷ்டிக்கக் கூடாது, மாவீரர் தினஉரையை புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்த அனுமதிக்கக்கூடாதென்று படைத்தரப்பு நினைக்கிறது. அதற்காகவே பளை,
பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி என்று ஏ-9 வீதியைக் கைப்பற்றி புலிகளின் முகத்தில் கரியைப் பூசி மாவீரர் நாள் உரையை நிகழ்த்த முடியாதளவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த
படைத்தரப்பு நினைக்கிறது. அதற்காகத் திறக்கப்பட்டதே நீவில்,
கிளாலி, முகமாலை போர்முனைகள்.

அதேவேளை, படைத்தரப்பு இப்போது கால்களை அகட்டி விரித்து படுத்துக் கிடக்க புலிகள் எங்கு வேண்டுமானாலும் பாய்ச்சல் நடத்தலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இப்போது
புலிகளுக்கு நெருக்கடி அதிகமாக இருப்பினும் ஆளணி வள நெருக்கடி என்பது குறைந்து கொண்டே போகும்.

கட்டுப்பாட்டுப் பிரதேசம் சுருங்கச் சுருங்க புலிகளின் பலம் கூடும். அத்தகைய நிலையில் படைத்தரப்புக்கு நெருக்கடி கொடுக்க புலிகளுக்கு ஒன்றுக்குப் பத்து வாய்ப்புகள் கிடைக்கும்.
புலிகளின் சுடுபலசக்தி அதிகரிக்கும். அது படைத்தரப்பின்சேதங்களை அதிகரிக்கச் செய்யும்.

இந்த நிலையில் புலிகள் மாவீரர் நாளுக்கு முன்னதாக எங்கேனும் பாரிய வலிந்த தாக்குதலைத் தொடுக்கலாம் என்று படைத்தரப்புக்கு அச்சம் இருந்தது. கேணல் தீபன் தலைமையில் பெருமளவு போராளிகள் முல்லைதீவில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு பயிற்சி பெற்று வருவதாக இந்த மாதத் தொடக்கத்தில் இராணுவப் புலனாய்வுப்பிரிவு எச்சரித்திருந்தது. இதனால் இந்தப் பயிற்சி மற்றும் தாக்குதலைக் குழப்ப வடபோர்முனையில்
தாக்குதலைத் தொடங்க படைத்தரப்பு தீர்மானித்தது. புலிகளின் தாக்குதல் இலக்காக குடாநாடு இருக்கலாம் என்பது படைத்தரப்பின் கணிப்பு. அதன் காரணமாகவே தனது கடைசி பலாலிப் பயணத்தின் போது குடாநாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நீண்ட நேரம் ஆராய்ந்திருந்தார்.

இந்த கூட்டத்தின் பின்னரே வடபோர் முனைத் தாக்குதல் திட்டம் தயாரானது.

2000 ஆம் ஆண்டில் புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது பாரிய படையெடுப்பை நடத்தியபோது அதற்குள் சிக்கிப் போயிருந்த 35,000 படையினருக்கும் தப்பி ஓட வழியில்லாததால் தான்
புலிகளின் முன்னேற்ற வேகம் தடைப்பட்டது. எந்தவொரு தாக்குதலையும் நான்கு புறத்திலும்
சுற்றிவளைத்து நடத்துவதில்லை. இது போரியல் ரீதியான உத்தியல்ல. ஒரு பக்கத்தை அல்லது இரண்டு பக்கங்களை திறந்து விட்டே தாக்குதல் நடத்தப்படும். காரணம் எதிரி தப்பிச்
செல்ல ஒரு வழி கொடுக்க வேண்டும். ஏதிரி தப்பி ஓட வழி இருந்தால் தான் இலகுவாக வெற்றி பெற முடியும். இல்லையேல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படையினர் கடைசி வரை போராடுவார்கள்.

ஆனையிறவில் 1991 இல் படையினர் தாக்குப் பிடிக்கக் காரணம் அதுவே. அதேவேளை 2000 இல் படையினர் அங்கிருந்து தப்பி ஓட கடல்நீரேரி ஓரமாக வழியிருந்தது. அதனால் ஆனையிறவு வீழ்ச்சியடைந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் தப்பி ஓட இப்போது
பூநகரிப் பாதை இருக்கிறது. இதனால் புலிகளின் கவனம் யாழ் குடாநாட்டின் மீது இருக்கலாம் என்று படைத்தரப்பு நம்புகிறது.

புலிகள் பலவீனப்பட்டு விட்டதாக அரசாங்கமும் படைத்தளபதிகளும் சொன்னாலும் அது உண்மையற்றதென்பது படையினருக்கு நன்கு தெரியும். புலிகளின் எதிர்த் தாக்குதலின் வீரியத்தைக் கொண்டே அவர்களால் அந்தக் கணிப்பைச் செய்ய முடியும்.ஆக, குடாநாட்டின் மீதான புலிகளின் வலிந்த தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் தான் பிரதானமாக
வடபோர்முனை தாக்குதல் தொடங்கப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தாக்குதல் படைத்தரப்பை பெரும் நெருக்கடிக்குள், பலத்த இழப்புக்களுக்குள் சிக்க வைத்திருக்கிறது.
15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடந்த சண்டைகளில் நூற்றுக் கணக்கில் படையினர் கொல்லப்பட்டும்காயமடைந்தும் இருக்கின்றனர்.

20 ஆம் திகதி நடந்த சண்டைகளில் 250 படையினர் கிளாலி-முகமாலை பகுதிகளில் கொல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்திருக்கிறார்.
காயமுற்ற படையினரின் எண்ணிக்கை இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கலாம்.இந்தச் சண்டைகளில் கொல்லப்பட்ட, காயமற்ற படையினர் உயர் பயிற்சி பெற்ற எயார் மொபைல் பிரிகேட் மற்றும் இயந்திர காலாற்படைப் பிரிவினர் என்பது முக்கியமானது. படைத்தரப்பு வட போர்முனையில் எதிர்பார்த்ததற்கு மாறாகப் புலிகளின் கடும் எதிர்ப்பையும் இழப்புக்களையும் சந்தித்திருப்பதால் அது பற்றி அடக்கியே வாசிக்கின்றது. இதற்கிடையே பரந்தனுக்கு மேற்கே நிPவில் பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதையை கைப்பற்றியதாக கதைவிடப்பட்டிருக்கிறது. இதன் அகலம் 10 மீற்றர் என்றும் நீளம்200 மீற்றர் என்றும் படைத்தரப்பு கூறுகிறது. புலிகளின் விமானத்தைத் தரையிறக்கத் தேவையான ஓடுபாதையின் ஆகக் குறைந்த நீளம் 645 மீற்றர். 200 மீற்றர் நீள ஓடுபாதையில் விமானத்தை இறக்க முடியாது.

அதுதவிர, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கின்ற விமான ஓடுபாதையின் படத்தில் அது வளைந்து செல்வதையும்,பனைமரங்கள் காணப்படுவதையும் கொண்டு இது வீதியின்
ஒரு பகுதியே என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதேவேளை பரந்தன் - பூநகரி வீதியில் விமானத்தை தரையிறக்க புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கிளாலியில் நிலைகொண்ருக்கும் படையினரின் கண்ணுக்கு
தெரியத் தக்கதாக, அவர்களின் ஆட்டிலறிச் சூட்டெல்லைக்குள் புலிகள் விமான இறங்குதளத்தை அமைத்திருக்க வாய்ப்பே இல்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுக்கதையை கட்டுவதில் படைத்தரப்பு குறியாக இருக்கிறது.
முன்னர் கொக்காவில் ரூபவாஹினி கோபுரத்தை அடைந்து விட்டதாக படைத்தரப்பு சில படங்களையும் வெளியிட்டது. ஆனால், மீணடும் இப்போது அது கைப்பற்றப் பட்டிருப்பதாக
கூறுகிறது. அப்படியானால் இந்தக் கால இடைவெளிக்குள்

நடந்ததுதான் என்ன?

இராணுவத் தளபதி 12,000 புலிகள் கொல்லப்பட்டு விட்டதாக கூறியிருந்தார். இன்னும் 4,000 புலிகள் இருப்பதாக அவரது கணிப்பு. அதேவேளை, புலிகள் வெளியிட்டிருக்கின்ற தகவல்களின் படி இந்த வருடத்தில் ஒக்ரோபர் மாதம் வரை 1974 புலிகளே வீரச் சாவடைந்திருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களில் 4,180 புலிகள் உயிரிழந்திருக்கின்றனர். இராணுவத்தளபதியின் இறப்புக் கணக்கு, இருப்புக் கணக்கைப் பார்த்தால் புலிகளின் பலம் 16,000 ஆக இருந்திருக்க வேண்டும். இதில் 4,180 பேரின் உயிரிழப்பு புலிகளால் உறுதி செய்ததுபோக, புலிகளின் இப்போதைய ஆட்பலம் 11,500 ஆக இருக்கும்
என்றே கருத வேண்டியிருக்கிறது.

இந்த வருடத்தில் புலிகள் தரப்பில் 2,000 இற்கும் அதிகமானோர் மரணமாகியிருப்பது பெரும் இழப்பே.ஆனால் 1997 ஆம் ஆண்டில் புலிகள் 2,112 போராளிகளை இழந்திருந்தனர். அதன் பின்னர் தான் அவர்கள் 1998 இல் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையையும், 1998 இல் ஓயாதஅலைகள் -3 நடவடிக்கையையும் மேற்கொண்டனர். எனவே இப்போதைய இழப்பை புலிகள் சந்தித்த தோல்வியாக எவராலும் கருத முடியாது.

ஆக, புலிகளின் பலம் குறைந்து போய்விட்டதாகவோ அவர்கள் பலவீனமடைந்து போய்விட்டதாகவோ கருத முடியாது.அவர்களின் நகர்வுகள் படைத்தரப்பை பெரும் பொறிக்குள்
சிக்க வைப்பதற்கான நோக்கங்களைக் கொண்டதாகவேபார்க்கப் படுகிறது.

மட்டுப்படுத்தபட்ட நிலப்பரப்புக்குள் புலிகளின் பலம் ஒன்று குவிக்கப் பட்டிருக்கின்ற நிலையில் படையினரின் வளம் சிதறிப் பரந்து கிடக்கிறது. இந்த நிலையில் புலிகளை நோக்கி அழுத்தத்தை அதிகரிக்கும் போது பாரிய வெடிப்பு ஒன்று நிகழும். இது இயற்கையின் நியதி.அத்தகையதொரு நிகழ்வுக்கான அறிகுறிகளே இப்போதுதென்படுகின்றன. அதாவது, புலிகளுக்கு சார்பான நிலை போர்க்களத்தில் உருவாகி வருகிறது.

-அங்கதன்-

Comments