திஸ்ஸ விதாரணைவின் அறிவிப்பு

அனைத்துக்கட்சிக் குழுவின் இறுதித் தீர்மானங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறியிருக்கின்றார். இவர் இவ்வாறு அறிவித்திருப்பது இதுதான் முதற்தடவையுமல்ல.

முக்கியமான விடயங்களில் சர்வகட்சிக்குழு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அடிக்கடி இவர் அறிவிப்பதும் உண்டு. ஆனால் அனைத்துக்கட்சிக் குழு வில் எந்தவித தீர்மானங்களும் எடுத்து விடக்கூடாது எட்டிவிடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அக்குழுவில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவானது அவ்வாறான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என அவ்வேளைகளில் அறிவிக்கும்.
அத்துடன் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எந்த வொரு தீர்மானத்தையும் ஆதரிக்க ஜாதிக ஹெல உறுமய தயாராக இல்லை எனவும் அது அறிவித்து வருகின்றது. எனவே பேராசிரியர் திஸ்ஸவிதாரணவின் அறிவிப்பு எவ்வளவு ஏமாற்றுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் திஸ்ஸ விதாரண தலைமையிலான இக்குழு இடைக்காலத் தீர்வெனக் கூறிக் கொண்டு, மாகாண சபைகளை அறிவித்தது. உண்மையில் இது திஸ்ஸ விதாரணவின் அறிவிப்பு அல்ல. மகிந்த தனது தேவைக்காக எடுத்த முடிவை அவ்வாறே அறிவித்தது மட்டுமே திஸ்ஸ விதாரண செய்த பணியாக இருந்தது.

இதனைக் கிழக்கு மாகாண ஆக்கிரமிப்புக்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் வடக்கில் பாரியளவில் கட்ட விழ்த்துவிடப்பட்டுள்ள யுத்தத்தை நியாயப்படுத்தும் வகையிலுமே இந்த அறிவிப்பு விடப்பட்டது.

இந்த அறிவிப்பிற்குக் கூட சிங்கள இனவாதிகள் ஆதரவு வழங்கவில்லை. ஆனால் யுத்தத்தைப் பாரிய அளவில் தொடரப் பயன்படும் என்பதற்காகவும் 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுவிடமாட்டாது என உறுதி மொழி வழங்கப்பட்டுமே சம்மதம் பெறப்பட்டது.

இப்போது இந்தியா ஓர் அரசியல் தீர்வுபற்றி மெல்லிய குரலில் வலியுறுத்தும் அதேவேளை அமெரிக்காவின் சிறிலங்காவுக்கான தூதுவர் றொபர்ட் ஓபிளாக் அரசியல் தீர்வு பற்றி அடிக்கடி பேசிவருகிறார்.

சிறிலங்கா அரசு தற்போது மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைக்குச் சமாந்தரமாக ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பதானது இந்த இராணுவ நடவடிக் கைக்குப் பக்கபலமாக அமையும். புலிகளை அரசியல் ரீதியில் பலமிழக்கச் செய்யும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது.

உண்மையில் சிறிலங்கா அரசானது யுத்தத்தில் வெற்றிபெறும் அதேசமயம் அரசியல் ரீதியாகவும் வெற்றிபெற்று தமிழ் மக்களின் போராட்டத்தை அழித்து விட முடியும் என்ற ரீதியிலேயே இந்த ஆலோசனை முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு சிங்கள இனவாதிகள் மத்தியிலிருந்து பாரிய எதிர்ப்புக் கிளம்பியதே தவிர அதனைக் கருத்தில் எடுத்துச் செயற் படுத்த எவருமே முன்வரவில்லை.
இப்பொழுதும் கூட திஸ்ஸ விதாரண எதனையும் முன்வைத்துவிடப் போவதில்லை. அவ்வாறு மிகக் குறைந்த தீர்வுத்திட்டம் வைக்கப்பட்டால் கூட அது மகிந்த ஆட்சிக்கு வேட்டு வைப்பதாகவே முடியும்.
இன்று சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பலமானவர் போலத் தோற்றம ளித்தாலும் அது ஒரு பலவீனமான அரசாங்கமே என்பது வெளிப்படை. இதில் ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி.யிலிருந்து வெளி யேறிய தேசிய விடுதலை முன்னணி என்பன யுத்தத்திற்கு மட்டுமே ஆதரவானவையாகும். அரசியல் தீர்வு எதனையும் மகிந்தவால் முன்வைக்கப்ப டுமாயின் அதனைச் சாட்டாக வைத்து அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதுடன் அதனையே தமது அரசியல் போராட்டத்திற்கும் தமது கட்சி வளர்ச்சிக்கும் பயன்படுத்தத் தயங்கமாட்டா.அதே வேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஒரு சில மூத்த அமைச்சர்களைவிட ஏனையோர் மகிந்த மீதும் அவரது ஆட்சி மீதும் அதிருப்தி கொண்டவர்களாகவே உள்ளனர். இவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது மகிந்தவின் நிறைவேற்று அதிகாரமும் அவர் நடத்தும் யுத்தமுமேயாகும்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்திக் குழுவின் தலைவர் கருஜய சூரிய மீண்டும் பிரதித் தலை வர் பதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டமை மகிந்த ராஜபக்சவின் பாராளுமன்ற அதிகாரத் திற்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.அதாவது அவர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டபோது எத்தகைய பலன் கிடைக்கும் என எண்ணி னாரோ அது கிட்டாத நிலையிலேயே அவர் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

முதலாவதாக அதிருப்திக் குழுவைச் சேர்ந்தவர் களுக்கு அதிகாரம் உடைய அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்படவில்லை என்பது முக்கியமானது. கருஜய சூரியவுக்கு பொதுநிர்வாக அமைச்சேகிட்டியது. இதில் ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சவின் தலை யீடானது அவருக்கு சினமூட்டுவதாகவே இருந்திருக்கும்.
இரண்டாவதாக அமைச்சுப் பதவியுடன் அவர் இருந் தாலும் பொதுசன ஐக்கிய முன்னணியில் அவர் இணைந்து கொண்டு ஐ.தே.க.வில் அவருக்கு இருந்த முதன்மைப் பதவியை எட்டுவ தென்பது இலகுவான காரிய மாக இருந்திருக்காது. ஆனால் அடுத்த தேர்தலில் வேட் பாளர் நியமனம் வழங்குவதற்கு அவர் சிறிலங்கா சுதந் திரக் கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும் என மகிந்த ராஜபக்ச வலியுறுத்தி வந்தார். அவ்வாறு போட்டியிட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யில் ஆரம்பந்தொட்டே இருப்பவர்களின் விருப்பு வாக்கு களிலும் அதிகமாக இவர் பெறுவ தென்பதும் கடினமான காரியமாகும். அத்துடன் மகிந்த அரசானது யுத்தத்தில் வெற்றி பெறுவதுபோல தோற்றம் காட்டினாலும் அதன் இறுதி முடிவு குறித்து நம்பிக்கை கொள்ள க்கூடியது அல்ல என்பது கருஜயசூரிய போன்றோருக்கு தெரியாததுமல்ல.

அத்துடன் பொருளாதார ரீதியில் சிறிலங்காவானது மகிந்த ஆட்சியில் மிகுந்த கீழ் நிலைக்குச் சென்றுள்ளது. ஆட்சியின் அடிமட்டத்திலிருந்து உச்சமட்டம் வரை ஊழல் கள் முறைகேடுகள் வெளிப்படையாகவே இடம்பெறு கின்றன.

எனவே மகிந்தவின் ஆட்சி நீடிக்குமா? என்கின்ற கேள்வி எழுகின்றது. மகிந்தவே தமக்கிருக் கின்ற மக்கள் ஆதரவு பற்றிப் பேசினாலும் பொதுத் தேர்தல் குறித்து அச்சமுறவே செய்கின்றார். அத்து டன் அடுத்து ஒரு தேர்தல் வருமாயின் இ.தொ.கா, ம.ம.முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் போன் றன ஐ.தே.க.வுடனேயே நிற்கும்.

இவ்வாறான நிலையில் இனவாதிகளையும் கைவிட்டு விட மகிந்த ராஜபக்ச தயாராக இருக்க மாட்டார். எனவே திஸ்ஸ விதாரணவின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமேயிருக்கும்.

- வேலவன் -
தமிழ்க்கதிர்


Comments