ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.

காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

"மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால், ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும்" என்று கூறிய அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.


Comments