தி.மு.க. உதய சூரியன் காண்பது அதிகாலையா அந்திப் பொழுதா ?

தமிழில் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பதுதான் அது. வாய்ச் சவடால் அடித்துப் பேசிவிட்டுக காரியத்தில் கோட்டை விடுவது என்பதே அதன் அர்த்தம்.

உலகத் தமிழ் மக்களின் தலைவன், முத்தமிழ் அறிஞர், முதுபெரும் அரசியல் சாணக்கியன் எனப் பல அடைமொழிகளோடு போற்றப் பட்டவர,; தமிழகத்தில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் டாக்டர் கலைஞர் கருணாநிதி.

இத்தனை புகழாரங்களும் உண்மைதான் என இதுவரை காலமும் நம்பி இருக்கும் ஈழத் தமிழர் உட்பட தமிழக மற்றும் உலக நாடுகிளல் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் இன்று கூட அப்பாவித்தனமாக நம்பிக்கையுடன் காணப் படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என இலங்கை இராணுவத் தளபதி கூறிய போது கொதித்து எழாத தமிழர் யாரும் இல்லை என்றே கூறலாம்

இன்று இலங்கை இராணுவத் தளபதியை ஒரு தீர்க்கதரிசி எனும் அளவுக்கு தமிழக அரசியல் தேர்தல் கள உண்மைகள் சுட்டெரிக்கின்றன. தமிழகத்தின் சட்டசபை ஏக மனதாக மூன்று தடவைகள் தீர்மானம் நிறைவேற்றியது. பலன் மட்டும் ஏதும் கிடைக்கவில்லை. மாநிலச் சட்டசபைத் தீர்மானங்களால் ஆன பலன் என்ன ? அவை போன கதி என்ன என்ற விபரங்கள் குப்பைத் தொட்டிக்குத்தான் உண்மை புரியும்.

தமிழகத் தமிழ் மக்களின் ஆட்சி மன்றம் மூன்று முறை எடுத்த தீர்மானத்துக்கு இப்படி ஒரு கதி அதன் மத்திய அரசால் தரப் பட்டது என்றால் அத்தகைய அரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் வாதிகளை என்ன தரத்தில் இந்திய அரசு வைத்திருக்கிறது? அதுவும் அந்த அரசில் தமிழக அரசியல் கட்சிகளின் தமிழ் மந்திரிகள் பதவி வகிக்கும் போது?

மேலும் ஏட்டிக்குப் போட்டியாக கலைஞர் கொட்டும் மழையிலும் அநியாயமாக மக்களை இழுத்து வந்து சென்னையில் இருந்து செங்கல் பட்டு வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீதி ஓரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம்(?) நடத்திக் கின்னஸ் சாதனை நிகழ்த்திய கலைஞரின் தயவில் மத்திய அரசே செயற்படும் போது தமிழக அரசியல் வாதிகளைக் கோமாளிகள் எனக் கூறுவதில் என்ன தவறு காண முடியும்?

சர்வ கட்சிகளைக் கூட்டிப் புது டில்லிக்கு போய் புஸ்வாணம் விட்டார். இதற்கென அவரது மகள் மேலவை உறுப்பினர் கனிமொழியும் பாராளுமன்ற உறுப்பினரும் பேரனுமான தயாநிதி மாறனும் தமது பதவி விலகல் கடிதத்தை வேறும் பலருடன் இணைந்து கலைஞரிடம் கொடுத்தனர். இதோ போர் நிறுத்தம் வருகிறது அல்லது ஆட்சி கலைகிறது ஈழத் தமிழர் துயர் தொலைகிறது என்ற ஆரவாரம் வானைப் பிளந்தது. வாயைப் பிளந்து பார்த்திருந்த பொது மக்கள் வயிற்றெரிச்சல் தாங்காது இதுவரை 10 பேர் வரையான தமிழக மக்கள் தீக்குளித்து மரணித்து மரத்துப் போன அரசியல் வாதிகளின் மனச்சாட்சியைச் சுட்டெரிக்க நினைத்தனர்.

முன்னர் பழ.நெடுமாறன் சேர்த்து அனுப்ப முடியாமல் போன உணவு மருந்துகளை ஈழத் தமிழரு;கு அனுப்பச் சிறிதும் முயற்சி எடுக்காத கலைஞர், பழைய கதை மறந்து ஊர் ஒப்பனைக்குத் தாமும் உதவிப் பொருட்களை அனுப்புவதாக நினைத்து அனுப்பினார். தமிழக அரசும் தமிழரும் ஈழத் தமிழ் மக்களிடம் கொடுபடும் அன்பளிப்பாக ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை அனுப்பினார்;. பெருமாள் எடுத்த பிச்சையை பருந்து பறித்த கதைபோல தமிழ் மக்களுக்கு அவை வாய்க்கு எட்டாமலே பெரும் பகுதியை இலங்கை அரசும் படைகளும் பசியாறின.

மகிந்தரின் தம்பி பசில் டில்லிக்கு வந்தார். மறு விநாடியே பிரணாப் முகர்ஜி முதல்வரின் காதுக்குள் கிசு கிசுத்தார். உடனே முதல்வர் தாம் தமிழக முதல்வர் தமிழன் என்பதையே மறந்து மன்மோகன் சிங், சோனியா காந்தி ,மகிந்த ராஜபக்ஷவின் காலடியில் மண்டியிட்டு விட்டார். எந்தத் தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கிறானோ அந்தத் தமிழினத்தின் தமிழக அரசையும் அதன் ஆதரவுடன் இயங்கும: மத்திய அரசையும் தான் போடும் தாளத்துக்கு எல்லாம் ஆட வைக்கிறான் சிங்களவன். அப்படியான சிங்களவன் தமிழக அரசியல் வாதிகளைக் கோமாளிகள்: என அழைப்பவதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஆயினும் இந்தியப் படை வழங்கும் பயிற்சியும் அரசின் ஆயுத ஆளணி உதவிகளும் ஈழத் தமிழின அழிப்புக்கு எந்த இடைஞ்சலும் இன்றி இலங்கை சிங்கள அரச படைகளின் தமிழின அழிப்புக்குப் போய்க் கொண்டே உள்ளன. இதன் வரிசையில் புல்மோட்டையில் இந்திய இராணுவத்தின் வைத்தியசாலை யாருக்கானது என்ற கேள்வியை எழுப்பியபடி தொடங்கப் பட்டுள்ளது. அதுவும் இந்திய இராணுவத்தின் ஆளணி அதில் பணியாற்றுவது வன்னித் தமிழ் பொது மக்களுக்கு வாழ்வு கொடுக்கவா வாழ்வைப் பறிக்கவா?

முத்துக்குமாரு என்ற முத்தான தமிழன் ஏற்றிவைத்த தீ இந்தியா மலேசியா, இலண்டன் எனப் பல அருந்தமிழ் அளைஞர்களை உலக மன்றமான ஜெனிவா ஐ.நா.சபை முற்றம் வரை சுட்டுப் பொசுக்கி முடிவின்றித் தொடருகிறது. போர் தீவிரம் அடைந்து வன்னித் தமிழ் மக்கள் அன்றாடம் மக்கள் அரச படைகளால் கொன்றொழிக்கப் நிலைதான் இன்று வரை நீடித்து வருகிறது. தமிழ்க் கர்ப்பிணித் தாய்மாரும் தாய் வயிற்றுக் கருவும் பெண்களின் கருப் பைகளும் தமிழ்ப் பெண்களின் கற்பும் வாய் கூசும் அளவுக்கு கொடுமைகள் வன்மம் நிறைந்து பெருகி விட்டன.

இவை எதுவும் தமிழனையும் தமிழ் மொழியையும் அரசியல் சரக்காக்கி 246 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சொத்துக் குவித்து விட்ட கலைஞர் போன்ற மனச்சாட்சி அற்ற அரசியல் வாதிகளின் பணியால் தமிழன் தலைவிதி சிங்களவனிடம் சிக்கிக் கிடக்கிறது. மனச்சாட்சி என ஒன்று இருந்தால் அல்லவோ நல்ல மாற்றங்கள் ஏற்படமுடியும்? அருமை உயிர்கள் எரிந்த நெருப்பிலே அரசியல்வாதிகள் ஆளுக்காள் குளிர்காயத் தொடங்கி விட்டார்கள். பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக தேர்தல் கூட்டணிக்கு ஆளைஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலால் ஆபத்து எவர் எவரால் ஏற்படும் எனக் கருதப் படுகிறார்களோ அவர்கள் எல்லாம் வழக்கோ விசாரணையோ இன்றி மறியலில் போடப் பட்டு விட்னர். மேலும் அவ்வாறானவர் அனைவரும் உள்ளே போடப் படுவர் என்பதும் தெரிய வருகிறது. நியாயமான சட்டங்களின் அடிப்படையில் நீதி மன்றங்களினால் விடுதலை செய்யப் பட்டவர்களே அடுத்த நிமிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளப்பட்டு வருகின்றனர். கலைஞர் பல அரசியல் போர்க் களங்களில் வெற்றிவாகை சூடி இந்த நிலைக்கு வந்தவர்.

அவரது காலத்தில் தூக்கு மேடையே பஞ்சு மெத்iதாயாக இருந்தது. இவரைப் போன்ற அறிவாளிகளிகன் கைகளில் அன்றைய ஆட்சி இருந்திருந்தால் கலைஞரது வாழ்நாளே இன்றும் சிறைக்குள் கழியும் நிலைதான் இருந்திருக்கும். அன்று காமராஜர், ராஜாஜி போன்ற முட்டாள்கள் ஆட்சி செய்ததால் தடா பொடா தேசியப் பாகாப்புச் சட்டம் போன்றவைகளைப் போடத் தெரியாது இருந்து விட்டனர். இன்று இவர் செய்வதைப் பார்க்கும்போது இரவு பன்னிரண்டு மணியில் கலைஞரை இழுத்துச் சிறையில் தள்ளிய ஜெயலலிதா அன்று செய்தது சரியே என நியாயப் படுத்தவும் மனம் நினைக்கிறது.

உலகின் மிகப் பெரும் ஜனநாயகத்தில் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளாலோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அல்ல. மாறாக மாநில மத்திய காவல் துறையாலும் மத்திய மாநில அரசியல் வாதிகளின் அடியாட்களாலும் என்பதே உண்மை. வேடிக்கை என்ன வென்றால் இதுவரை புலிகள் தடை செய்யப் பட்ட இயக்கம் அதனால் அவர்களைப் பற்றிப் பேசாதே என்றவர்கள் இப்போ ஈழத் தமிழர் பிரச்சனை பற்றியே பேசக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மூலம் தடை போடப் பட்டுள்ளது.

இப்படியான தடையைப் போடும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருக்கிறதா இல்லையா எனக் கேட்கும் துணிச்சல் எவருக்காவது வருமோ தெரியவில்லை. தேர்தல் செலவினங்கள் ஊழல் பற்றியே உருப்படியாக எதுவும் செய்ய முடியாத தேர்தல் ஆணையாளருக்கு இப்படி ஒரு முன் யோசனை ஏன் வந்ததோ தெரியவில்லை; பாவம் அவரும் வாங்கும் சம்பளத்துக்கு இந்த அளவுக்காவது எசமான விசுவாசம் காட்டக் கூடாதா?

ஆனால் மீண்டும் ஜெயலலிதா கலைஞருக்கு ஆப்பு வைக்கும் பணியில் முன்னணியில் நிற்கிறார். முன்பு புலிகள் ஆதரவு என்று பூச்சாண்டி காட்டிக் கலைஞரின் அரசியல் செயற் பாடுகளைத் திசை திருப்பிப் சீமான் அமீர் போன்ற தமிழ் உணர்வாளர்களைச் சிறைக்குள் தள்ள வைத்தவர். அதனால் தமிழக மக்களின் பெருஞ் சீற்றத்துக்குக் கலைஞரை உட்படுத்துவதில் வெற்றியும் கண்டார். இன்று ஜெயலலிதா தாமே ஈழத் தமிழர் பிரச்சனையையும் ஈழத் தமிழ் ஆதரவாள அரசியல் கட்சிகளின் கூட்டுடனும் ஒரு பலமிக்க அணிக்குத் தலைமை தாங்கி நிற்கிறார்.

ஜெயலலிதா அணியில் கம்மியூனிஸ்ட் கட்சி, ம.ம.தி.மு.க, பா.மா.கா ஈழத் தமிழர் பற்றிய ஆழமான கருத்துகளை வெளியிட்டு வருபவை. இதில் தொல்.திருமாவளவனும் சேர வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. அப்படி அவரும் சேர்ந்து விட்டால் கலைஞரும் தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியுடன் மரணப் பள்ளத்தாக்கு நோக்கிய பாதையில் பயணிப்பதாகவே இருக்கும். ஆனால் அரச அதிகாரம்: காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வின் கரங்களில் இருப்பதால் தேர்தல் திருமங்கள இடைத் தேர்தல் போன்று பணம் மற்றும் அதிகார ஊழல் வன்முறைகள் பெருமளவு ஆட்டம் போடும் நிலை உருவாகும்.

ஜெயலலிதாவும் இவை போன்ற சித்துகளில் கை தேர்ந்தவர் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க: வுக்கும் முடிவு கட்டும் களமாகவும் அமைய வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ் இன உணர்வு எந்த அளவுக்கு மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளன என்பதிலும் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்னெடுக்கும் கட்சிகளின் உண்மைத் தன்மையிலுமே தங்கி இருக்கிறது. இங்கே அனைத்துத் தரப்பிலும் காணக் கிடைக்காத பொருளாக இருப்பது உண்மை தன்மை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆய்வு:பத்மா

Comments