புலம் பெயர் போராட்டங்கள் தேய்வடைந்து போனது ஏன் ?


வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன.

இன்று, வதை முகாம்களில் அல்லும் பகலும் அவலத்தைச் சந்தித்தவாறே அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றவே, அன்றைய நாளில் எமது உறவுகள் ஐரோப்பிய வீதிகளில் களமிறங்கினர். வரையறைகளையும் சட்டங்களையும் மீறி எமது உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். கண்மூடிக் கிடந்த சர்வதேச சமூகமும், பன்னாட்டு ஊடகங்களும் அதனால் சற்று விழிப்படைந்தன.

அதன் விளைவாக எமது மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையையும் காப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக அவை வெற்றியளிக்காமல் போய்விட்டன.

எமது கண்முன்னே நடந்து முடிந்தவை கசப்பானவை, ஜீரணிக்க முடியாதவை, வாழ்நாளில் மறக்கப்பட முடியாதவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அதற்கும் எமது தற்போதைய செயற்பாடின்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.

சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஈழத் தமிழினத்தை வேரோடு ஒழிப்பது எனக் கங்கணங் கட்டிச் செயற்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் இன்றுவரை தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவும் இல்லை, எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவும் இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைமை அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் கூட எஞ்சியுள்ள முக்கியஸ்தர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக அது வேட்டையாடியே வருகிறது.

ஆனால், எமது மக்களை எறிகணை வீச்சுக்களிலும், குண்டு வீச்சுக்களிலும் இருந்து காப்பதற்காக இரவு பகல் என்றில்லாது ஊன் உறக்கம் இன்றிப் போராடிய நாம் இன்று அதே மக்கள் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியே சொல்ல முடியாத அவமானங்களைச் சந்தித்து வரும் நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

எமது கவலையைப் பற்றிப் பேசியவாறு எமது கடமையை மறந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். இது சரியா? இது தகுமா?

வானம் பார்த்த பூமியைப் போன்று, எம் உறவுகள் எமக்கு வாழ்வு தேடித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் எமது மக்கள் எம்மைப் பார்த்து நிற்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு நாம் கூறப்போகும் பதில் என்ன?

மறுபுறம், புலி எதிர்ப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசி வந்தவர்கள் வவுனியா வதைமுகாம்களைப் பற்றி வாய் கூடத் திறக்காதவர்களாக உள்ளனர்.

எம்மவரை விட அந்நியரே எமது மக்களைப் பற்றித் தற்போது அதிகம் கவலைப் படுவதைப் போன்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வைத் தவிர வேறு பல காரணங்களும் இருப்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

முன்னைய காலங்களில், எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் கூட பொதுவான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தமது விருப்புக்கு ஏற்ற – முக்கியமற்ற அல்லது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத – கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்ளும் போது அவற்றோடு உடன்படாதோர் – மூலக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் – குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. இவை தவிர்க்கப்படுவது நல்லது.

இன்றைய சூழலில் எமது மக்களிடையே மீள் எழுச்சி ஒன்று ஏற்படுத்தப் படுவது இன்றியமையாதது. எமது சோர்வும் செயற்பாடின்மையும் எதிரிக்கே உவப்பானவை.

போராட்டம் ஆரம்பமான காலப்பொழுதில் பிரசுரங்கள், ஊடகங்களை என்பவற்றை மாத்திரம் நம்பியிராது வீடு வீடாகச் சென்றே போராட்டத்துக்குப் பலம் சேர்க்கப் பட்டது. இன்றும் அதைப் போன்ற செயற்பாடுகளே அவசிய தேவையாக உள்ளது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அநேக கேள்விகளும், ஐயங்களும் உள்ளன. அவற்றுக்கு விடை காணப்படுவதன் ஊடாகவே மக்களை மீண்டும் அணிதிரட்ட முடியும்.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இதுபற்றி அதிகம்; சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போன்று ~அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது| என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.

உள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய “நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!” எனும் வாசகத்தை நினைவு படுத்துதல் உசிதமானது.

மறுபுறம், தமிழ்ப் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், விடுதலை விரும்பிகளும் கூட தமிழ் மக்களிடையே மீள் எழுச்சியை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் கரம் கோர்க்க வேண்டும்.

நாம் வீழ்வதற்காக எழுச்சி பெற்றவர்கள் அல்ல. தவறுதலாக வீழ்ந்து விட்ட நாம் மீளவும் எழுச்சி பெறத் தவறுவோமாயின் வரலாறு எம்மை என்றென்றும் மன்னிக்காது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.

- சண்தவராஜா

Comments