உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 4

கடந்த இரு அங்கங்களில் தமிழீழம் என்ற தனிஅரசு உருவாகுவதனை உலக ஒழுங்கு விரும்பவில்லை என்பதனையும் அனைத்துலக அரங்கில் ஆயுதப் போராட்டங்களுக்கான ஏற்புடமை மிகவும் சுருங்கி வந்த நிலைமைகளைப் பற்றியும் பேசியிருந்தோம்.

தமிழீழம் ஒரு தனிஅரசாக மலர்வதனை ஏன் உலக ஒழுங்கு விரும்பவில்லை என்ற கேள்வி இங்கு எழுகிறது.

இதற்கான பதிலைத் தேட தமிழீழத்தின் புவிசார்அரசியல் (Geo-politics) பற்றி ஆராய வேண்டியுள்ளது.

தமிழீழத்தின் புவிசார் அரசியலைப் பற்றி ஆராய்வதற்கு புவிசார் அரசியலின் அடிப்படைகள் சிலவற்றை நோக்கிச் செல்லுதல் பயன் தரக் கூடியது.

புவிசார் அரசியல் என்பது அடிப்படையில் புவியியல் அம்சங்களையும் அரசியல் அம்சங்களையும் இணைத்து மேற்கொள்ளப்படும் உலக அரசியல் நடைமுறைகள் தொடர்பான ஒரு நோக்காகும். உலக அரசியலில் வலுபலம் (power) முக்கிய பாத்திரம் வகிப்பதனால் புவிசார் அரசியல் வலுபலத்திற்குக் கூடுதல் கவனம் கொடுக்கிறது.

உலகில் புவிசார் அரசியல் ஒரு அறிவியல் எண்ணக்கருவாகத் தோற்றம் பெற்று 110 வருடங்கள் ஆகி விட்டன.

1899 ஆம் ஆண்டு ரொல்ப் கியல்லன் (Rudolf Kjellen) என்ற சுவீடன் அறிஞர் முதன் முதலில் அரசுகளின் புவிசார் அமைவிடங்களிலிருந்தும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களது செழுமைகளிலிருந்தும் அவற்றின் பலம் தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை புவிசார் அரசியல் எண்ணக்கருவாக முன் வைத்திருந்தார்.

முதலாம் உலகப்போருக்குப் பிந்திய காலத்தில் ஜேர்மனியர்களால் புவிசார் அரசியல் எண்ணக்கரு நாஸி விரிவாக்கத்திற்கு வித்திட்ட ஜேர்மானியத் தேசியவாதத்திற்கு கோட்பாட்டு அடிப்படையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இரண்டாம் உலக மகா யுத்தக்காலத்தில் புவிசார் அரசியல் என்பது ஒரு ஜேர்மானியக் கோட்பாடாகக் கருதப்பட்டு ஆங்கிலம் பேசும் உலகினால் ஒரு பேசாப்பொருளாக முடக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு முடங்கிப் போயிருந்த புவிசார் அரசியல் எண்ணக்கருவை தூசுதட்டி எடுத்து வந்து அரசுக்கட்டிலில் வைத்தவர் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்தவரும் ஒரு சிறந்த இராஜதந்திரியாகக் கருதப்பட்வருமான ஹென்றி கீசிங்கர் (Henry Kissinger)அவர்களே.

யூத இனத்தைச் சேர்ந்தவரான ஹென்றி கீசிங்கர் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பின்னரான கெடுபிடி யுத்தகால (Cold war) நிலைமைகளை விபரிக்க புவிசார் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிகழ்ந்த – அரசுகளையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வளங்களையும் தம்வசப்படுத்துவதற்கான உலகளாவிய ரீதியிலான போட்டிகளை கீசிங்கர் புவிசார் அரசியல் என்ற கண்ணாடியூடாகப் பார்வையிட்டு தமது நகர்வுகளை மேற்கொண்டார்.

தற்போதய காலத்தில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு எண்ணக்கருவாகவும் பல்துறை சார்ந்த ஒரு கோட்பாடாகவும் மாற்றம் கண்டு விட்டது.

மரபுசார் புவிசார் அரசியல் (Conventional Geo politics) விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு திரும்பகட்ட புவிசார் அரசியல் (Critical Geo politcs) தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

இத் திரும்பகட்ட புவிசார் அரசியலின் வகைப்பட்டு புவிசார் அரசியலின் பிரிவுகளை நோக்குவோம்.

புவிசார் அரசியலை, ஏகாதிபத்தியக் கால புவிசார் அரசியல் (Imperialist Geopolitics), கெடுபிடிக்கால புவிசார் அரசியல் (Cold war Geo Politics) 21ம் ஆம் நூற்றாண்டு புவிசார் அரசியல் (21st Century Geo politics), உலக ஆபத்துப் புவிசார் அரசியல் (Geo politics of Global dangers) எனத் திரும்புகட்ட புவிசார் அரசியல் வகைப்படுத்துகிறது.

இதில் 21ம் ஆம் நூற்றாண்டு புவிசார் அரசியல், உலக ஆபத்துப் புவிசார் அரசியல் ஆகியன இணைந்த வகையில், பனிப்போருக்குப் பிந்திய காலத்துப் புவிசார் அரசியல் (Post cold war Geo Politics), பனிப்போருக்குப் பிந்திய-பிந்திய காலத்துப் புவிசார் அரசியல் (Post-post cold war Geo politics) எனவும் அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறன.

தமிழீழத்தினைப் பொறுத்தவரை 1948 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி காலனித்துவ – ஏகாதிபத்தியக் கால புவிசார் அரசியலுக்குரிய காலப்பகுதியாக இருந்திருக்கிறது.

இக் காலப்பகுதியில்தான் தமிழீழம் தனது அரசுரிமையை இழந்தது. இறுதியில் சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடிக்குள்ளும் அகப்பட்டுக் கொண்டது.

1949 – 1989 ஆம் ஆண்டு வரையிலான கெடுபிடிக்கால புவிசார் அரசியல் காலப்பகுதியில்தான் தமிழ்த் தேசிய இனம் தனது அரசுரிமையை மீளக் கோரிப் போராடத் தொடங்கியது.

இக் கெடுபிடிக்கால புவிசார் அரசியல் காலப்பகுதிக்குள் நின்று சில விடயங்களை நாம் நோக்குவோம்.

1960 களின் பிற்பகுதியிலேயே தனியரசுக் கோரிக்கை முளைவிடத் தொடங்கியிருந்தாலும் 1975 ஆம் ஆண்டின் காங்கேசன்துறை இடைத்தேர்தல், 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆகிய நடைமுறைகளுக்கூடாக தமிழீழக் கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட்டது.

ஆனால், 1977 ஆம் ஆண்டு தமிழீழத்திற்கான மக்கள் ஆணை கோரிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிடம் தமிழீழத்தை வென்றடைவதற்கான எவ்வித திட்டங்களும் இருக்கவில்லை.

தந்தை செல்வா அவர்களிடமும் தமிழீழத்தினை வென்றெடுப்பதற்கான திட்டங்கள் ஏதாவது இருந்தனவா என்பது எமக்குத் தெரியாது. தந்தை செல்வா அவர்களும் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமாகி விட்டதானால் வரலாற்றுச் சோதனையிலிருந்து காலம் அவரைக் காப்பாற்றியிருந்தது.

ஏனைய தலைவர்கள் தமது பேரம் பேசும் பாராளுமன்ற அரசியலுக்கு முன்வைக்கப்பட்ட பேரப்பொருளாகத் தமிழீழக் கோரிக்கையை நோக்கினரேயன்றி தமிழீழத்தை வென்றெடுப்பதில் விசுவாசம் கொண்டவர்களாக இருக்கவில்லை.

இதனால் தமிழீழத்தின் சர்வதேச உறவுகள் குறித்தோ அல்லது தமிழீழத்தின் புவிசார் அரசியல் குறித்தோ அவர்கள் பெரிதும் அக்கறை செலுத்தவில்லை.

உண்மையில் தமிழீழத்தின் புவிசார் அரசியலில் மிகக் காத்திரமான பாத்திரம் வகித்திருக்கக்கூடியவை இரு அரசுகளே.

ஓன்று இந்தியா. இதில் எவருக்கும் பெரிதும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.

மற்றையது அமெரிக்காவா அல்லது சீனாவா? இதனைப் பலரும் விவாதத்திற்கு உள்ளாக்குவார்கள்.

நாம் குறிப்பட வந்தது இவ்விரு அரசுகள் பற்றியும் அல்ல. எமது கவனத்தைத் தொட்ட மற்றைய அரசு சிறிலங்காவே.

இவ்வாறு குறிப்பிடுவதன் நோக்கம் தமிழீழத்தின் புவிசார் அரசியலில் அமெரிக்காவினதும் சீனாவினதும் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவது அல்ல.

மாறாக தமிழீழத்தின் புவிசார் அரசியலில் நாம் அனைவரும் குறைத்து மதிப்பீடு செய்திருக்கக்கூடிய சிறிலங்கா அரசின் முக்கியத்துவத்தை நம் கவனத்திற் கொள்வதற்காகவே.

சிறிலங்காவை நமது அயல்நாடாகவும் நம்மை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசாகவும் நாம் உருவகப்படுத்திக் கொண்டால் இதனை நாம் புரிந்து கொள்ளல் இலகுவாகி விடும்.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் சிறிலங்காவோ அல்லது இந்தியாவோ தமிழீழம் தனிஅரசாக உருவாகுவதனை ஏற்றுக் கொள்ளின் தமிழீழம் தனிஅரசாக அமைவதற்கான உலகக் கதவு திறக்கும்.

தமிழீழத்திற்கான வாசல் சிறிலங்காவுக்கூடாகவோ அல்லது இந்தியாவுக்கூடாகவோதான் திறக்கப்பட்டாக வேண்டும்.

இதனால் தமிழீழம் தனி அரசாவது சிறிலங்காவினதும் இந்தியாவினதும் புவிசார் அரசியலிலுடன் மிகவும் தொடர்புபட்டிருக்கும்.

இங்கு சிறிலங்காவினதும் இந்தியாவினதும் தென்னாசிய மற்றும் இந்து மகா சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான புவிசார் அரசியலிலுடன் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெரிதும் தொடர்புபடும். இந்த வகையில் தமிழீழத்தின் புவிசார் அரசியலிலும் இந் நாடுகள் முக்கிய பாத்திரம் வகிக்கும்.

தமிழர்களைக் கையாளும் ஒவ்வாரு சந்தர்ப்பத்திலும் சிங்கள தேசம் புவிசார் அரசியலைக் கவனத்திற்கெடுத்தே தனது நகர்வுகளை மேற்கொள்கிறது. வெற்றியும் கொள்கிறது.

தமிழீழம் என்ற தனிஅரசுக்கான மக்கள் ஆணையினைப் பெற்ற பின்னரும் தமிழர் தேசத் தலைவர்கள் புவிசார் அரசியல் குறித்து கவலை கொள்ளவில்லை.

சிங்கள தேசம் மகாவம்ச இதிகாசச் சிந்தனைகளில் மூழ்கிப்போய் இலங்கைத்தீவு முழுவதும் தமது உடமை என்றும் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் உறுதியாய் நம்பிச் செயற்பட்டுக் கொண்டிருந்தது

இனக்கபளீகரக் கொள்கையினூடாக தமிழர் தேசத்தை விழுங்கி விடுவதற்கான முனைப்புடன் தனது செயற்பாடுகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தது. இதற்கான பல்வேறு வகையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது.

சிங்கள தேசத்தின் இவ் அணுகுமுறை தமிழர் தேசத்தினை தனது அரசுரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளியது. இதனால் சிங்கள தேசத்துடன் பகையுறவு தான் தமிழீழத்திற்கு இருந்தது.

எனினும் தமிழீழம் எனும் தனி அரசு அமைக்கப்படவேண்டும் என்பதில் விசுவாகமான பற்றுறுதி கொண்டிருந்திருந்தால் தமிழர் தலைவர்கள் தமிழீழத்திற்காக தடைகள் குறித்து புவிசார் அரசியல் சார்ந்து சிந்திக்கத் தலைப்பட்டிருப்பர்.

சிங்கள தேசமும் தமிழர் தேசமும் கைகுலுக்கிக் கொண்டதும் தமிழீழ போராட்ட வரலாற்றில் நடந்துதான் இருக்கிறது. 1989-1990 ஆம் ஆண்டுகளில் இந்திய இராணுவத்தினை வெளியேற்றுவதற்காக பிரேமதாசா தலைமையிலான சிறிலங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் கைகுலுக்கிக் கொண்டனர். இது இந்தியப்படை வெளியேற வழிவகுத்தது.

இங்கு வலியுறுத்தப்படும் விடயம் என்னவெனில் பகையாளியாக இருந்தாலும்கூட தமிழீழம் தனது புவிசார் அரசியலில் சிறிலங்கா அரசுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதே.

ஆனால் தமிழீழத்திற்கு ஆணை கோரிய தமிழர் தேசத் தலைவர்கள் சிறிலங்கா அரசினை ஒரு அந்நிய அரசாகக் கருதும் அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தமிழீழம் – சிறிலங்கா ஆகிய இரு தேசங்களுக்கான இரு வேறுபட்ட புவிசார் அரசியல் இருக்கின்றது என்பதனை தமது எண்ணோட்ட இராஜதந்திரமாகக்கூடக் (Imagined diplomacy) கற்பனை பண்ண இத் தலைவர்களால் முடியவில்லை.

தமிழீழத்தின் புவிசார் அரசியலில் இந்தியாவின் பாத்திரம் குறித்தும் இத் தலைவர்கள் அறிவார்ந்த அணுகுமுறையினைக் கொண்டிருக்கவில்லை.

தமிழீழம் எனும் தனி அரசு உருவாகுவதனை இந்தியா விரும்புகிறதா? இவ்வாறு விரும்பாவிட்டால் தமிழீழத் தனி அரசினைச் வெற்றி கொள்வதற்கான மார்க்கம் என்ன? என்பது குறித்து எந்தவிதமான அக்கறையும் தமிழர் தலைவர்களால் வெளிப்படுத்ப்படவில்லை.

இவ்விடத்தில், 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் காலம் நினைவுக்கு வருகிறது. அப்போது நடைபெற்றது தொகுதிவாரியான தேர்தல். இப்போது நடைபெறுவது போன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் அல்ல.

இரு 15 வயதளவான பாடசாலைச் சிறுவர்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பந்தயம் நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) சார்பில் யோகேஸ்வரனும் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் குமார் பொன்னம்பலமும் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையார்) பேட்டியிடுகின்றனர். ஏனைய தொகுதிகள் போலல்லாமல் யாழ்ப்பாணத் தொகுதியில் இவர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

யோகேஸ்வரன் 5000 க்கும் குறையாத வாக்குகளால் வெற்றிபெறுவார் என்கிறான் ஒரு சிறுவன். இல்லை. குமார் பொன்னம்பலம்தான் வெற்றி பெறுவார் என்கிறான் மற்றச் சிறுவன். 5 ருபாவுக்குப் பந்தயம் வைத்துக் கொள்கிறார்கள் இச் சிறுவர்கள்.

இவர்களது பேச்சு தமிழீழம் குறித்துத் திரும்புகிறது. தமிழீழத்தை தீவிரமாக ஆதரிக்கிறான் யோகேஸ்வரன் வெல்வார் என்று கூறிய சிறுவன். எப்படிப் பெறுவது எனக் கேட்டுப் பரிகசிக்கிறான் குமார் பொன்னம்பலம் வெல்வார் எனக்கூறிய சிறுவன்.

தமிழீழத்தை ஆதரிக்கும் சிறுவனுக்கு கோபம் வருகிறது.

இந்தியா தமிழீழம் எடுத்துத் தரும் என்கிறான் ஆவேசமாக. ஏன் எடுத்துத் தர வேண்டும் என்கிறான் மற்றச் சிறுவன் ஏளனமாக.

‘பங்களாதேசை எடுத்துக் கொடுத்த இந்தியா ஏன் தமிழீழத்தை எடுத்துத் தரமாட்டாது’ என உரக்கக் கேட்கிறான் தமிழீழச் சிறுவன். மற்றச் சிறுவனிடம் இந்தத் துரும்படிக்குப் பதில் இருக்கவில்லை. அமைதியாகி விடுகிறான். இது உண்மையாக நடந்த ஒரு சம்பவம்.

இங்கு வேதனையான விடயம் என்னவென்றால், தமிழீழம் கோரிய தமிழர் அரசியல் தலைவர்களிடம் இந்த 15 வயதுச் சிறுவர்களிடம் இருந்த துடிப்போ நேர்மையோ அல்லது விவாதங்களோ கூட அக் காலகட்டத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

தமிழீழம் குறித்த இந்தியாவின் புவிசார் அரசியலையும் தமிழீழம் அமைவதனை இந்தியா விரும்பவில்லை என்பதனையும் அப்போதய தமிழர் தேசத்தில் பெரும் பான்மையோர் புரிந்திருக்கவில்லை. நாம் குறிப்பிட்ட 15 வயது சிறுவனின் மன நிலையில் தான் அநேகர்; இருந்தனர்.

தமிழீழம் உலகப் பந்தில் ஒரு நாடாக அமைவதனை ஏன் இந்தியா விரும்பவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலைத் தமிழர் தேசம் எப்போது தேடத் தொடங்கியது?

இதன் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை (24.03.10) நெருடலாய் தொடரும்…

- தாமரை காருண்யன்

முன்னைய பக்கங்கள்

Comments