சுருங்கிப்போன உள்ளங்களும் அருகிப்போன தலைமையும்

'கருநாடக மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா ஆகிய கட்சிகளில் எது பதவிக்கு வந்தாலும் எந்த அரசு வந்தாலும் தமிழகத்திற்கு நீர் கொடுப்பதில் ஆதரவு தருவதில்லையே ஏன் என்று கேட்கிறீர்கள். இது ஒரு உணர்ச்சிப் பூர்வமான பிரச்சனை. இதில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை'' என பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் 12-4-10 அன்று கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல மற்ற அகில இந்தியக் கட்சிகளும் இப்பிரச்சினையில் இதைப்போலவே நழுவல் கொள்கையை கையாளுகின்றன.

கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் அகில இந்திய கட்சிகள் தான் மாறிமாறி ஆளுகின்றன. காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்னை போன்றவற்றில் இந்த இரு மாநிலங்களிலும் இருக்கக்கூடிய அகில இந்திய கட்சிகளின் கிளைகள் ஒரு நிலையும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அதே கட்சிகளின் கிளைகள் மற்றொரு நிலையும் எடுக்கின்றன. இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமையோ வாய்மூடி அமைதி காக்கின்றன. தங்கள் கட்சிகளின் மாநிலத் தலைமைகள் செய்யும் தவறை சுட்டிக் காட்டவோ, இடித்துரைத்துத் திருத்தவோ அகில இந்திய தலைமைகள் முன்வருவ தில்லை. இதன் காரணமாக இந்தப் பிரச்சனைகள் முப்பதாண்டு காலத்திற்கு மேலாக தீர்க்கப்படாமல் இழுபறியாக உள்ளன. கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே மோதலும் கசப்புணர்வும் வளர்ந்துகொண்டே போகிறது. இதற்குப் பலிகடா ஆவது தேசிய ஒருமைப்பாடே ஆகும். அகில இந்தியக் கட்சிகள் உதட்டளவில் தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகின்றனவே தவிர, நடைமுறையில் அதற்கேற்ப செயல்படத் தவறுகின்றன.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப், சிந்து மாநிலங்களுக்கிடையே சிந்து நதி நீர் பங்கீடு சம்பந்த மாக பிரச்சினை எழுந்தது. அதைத் தீர்த்து வைப்பதில் ஆங்கிலேய ஆட்சி அக்கறை காட்டவில்லை. இந்தியா- பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிந்த பிறகு சிந்து நதிப்பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ற நிலையிலிருந்து இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது. பலமுறை இருநாடுகளும் இதுகுறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினாலும் முடிவு ஏற்பட வில்லை. இறுதியாக உலக வங்கி தலையிட்டு 1960 செப்டம்பரில் இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைத்தது. இரு நாடுகளும் சிந்து நதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. ஒரே நாட்டிற்கு உட்பட்ட மாநிலங்களாக இருந்தவரை தீராத பிரச்சினை அதே மாநிலங்கள் இரு நாடுகளாக ஆனபிறகு சர்வதேச அமைப்பு ஒன்றினால் தீர்த்து வைக்கப்பட்டது என்ற உண்மையை அகில இந்தியக் கட்சிகளின் தலைமைகள் உணரவேண்டும். இந்தியாவிற்குள் தமிழகம் ஒரு மாநிலமாக இருக்கும்வரை காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு வராது. தனி நாடானால் தான் விடிவு வரும் என்ற சிந்தனை தலை தூக்குமானால் அதற்குக் காரணம் உதட்டளவில் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசுபவர்களே.

காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளில் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்திற்கு நியாயமாக உரிய நீரை அளிக்க மறுப்பதினால் தமிழக உழவர்கள் பேரிழப்புக்கு ஆளாகிறார்கள் என்று பார்ப்பதைவிட அந்த இழப்பு இந்தியா முழுமைக்கான தேசிய இழப்பு என்பதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உணரவில்லை.

காவிரிப் பாசனப் பகுதியில் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிக அளவு நெல் உற்பத்தி செய்கிறது தமிழகம். அதற்கேற்ற இயற்கை சூழலும் உழைக்கும் திறன் மிக்க மக்களும் இங்கு உண்டு. ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கிலோ கிராம் நெல்லை தமிழகம் உற்பத்தி செய்தது. ஆனால் அதே காலக்கட்டத்தில் கர்நாடகம் ஒரு ஹெக்டேருக்கு 2,454 கிலோ கிராம் நெல்லை மட்டுமே உற்பத்தி செய்தது. ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 1062 கிலோ கிராம் குறைவாக உற்பத்தி செய்கிறது கர்நாடகம். இதன் மூலம் காவிரி நீரையும் வீணடித்து நெல்லுற்பத்தியையும் குறைக்கிறது கர்நாடகம். இந்த நீரைத் தமிழகத்திற்கு அளித்தால் நெல் உற் பத்தி கூடும். கர்நாடகத்தின் அடாத போக்கின் விளைவாக தமிழகத்திற்கு இழப்பு என்று பார்ப்பதைவிட, இந்தியாவின் உணவு உற்பத்தியில் பேரிழப்பு ஏற்படுகிறது என்று பார்க்கத் தவறுகிறார்கள்.

அதைப்போல கேரளத்தில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்தோடி அரபிக் கடலில் பல நதிகள் கலக்கின்றன. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவக் காற்றினால் மிகுதியான மழை பொழிகிறது. அம்மாநிலத்தின் சராசரி மழை யளவு 3,050 மி.மீ. ஆகும். அதாவது தமிழ்நாட்டில் பெய்யும் மழை அளவை விட 3.2 மடங்கு அதிக மாகும். கேரளத்தில் கார் காலத்தில் கிடைக்கும் நீர் வளத்தைத் தேக்கிப் பயனுறச் செய்ய நீர்த் தேக்கங்களை அமைக்கத் தகுதியான இடங்களும் போதிய அளவில் இல்லை. பயிர் செய்யக்கூடிய இடங்களும் போதிய அளவு இல்லை. கேரள ஆறுகளில் கிடைக்கும் நீர் வளம் 2,500 டி.எம்.சி. ஆகும்., இதில் கேரளத்திற்குள்ளேயே 500 டிஎம்.சிக்கு மேல் பயிர்செய்யப் பயன்படுத்த இயலாது. 350 டி.எம்.சிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கவும் வசதி யில்லை.

ஆக கார்காலத்தில் கேரளத்தில் சுமார் 2000 டி.எம்.சி. நீர் வளம் கடலுக்குள் வீணாகக் கழிகிறது. இப்படி வீணாகும் நீரில் 10ல் ஒரு பங்கு அளவான 200 டி.எம்.சி. நீரை மலைக்கு கிழக்கே உள்ள தமிழ்நாட்டின் வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பிக் கொள்வதற்குக் கொள்கை அளவில் மறுப்பு இருக்க முடியாது. தமிழ்நாட்டு வறட்சிப் பகுதிகளில் கேரளத்து நீர் மிகையைப் பயன்படுத்திப் பயிர்செய்ய தகுதியான நிலங்கள் போதிய அளவில் உள்ளன. இப்படித் திருப்பி விடப்படும் நீரின் அளவு கேரளத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரில் ஒரு சிறு பங்குதான். இது குறித்து இரு மாநிலங்களுக்கிடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் கேரளம் பிடிவாதமாக நீரைப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறது. வீணாக அரபிக் கடலில் நீர் விழுவதை அனுமதிப் போமே தவிர, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கமாட்டோம் என்று பிடிவாதமாக கேரள அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.

அதைப்போல வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் கங்கை நதி நீரை தென்மாநிலங்களுக்குத் திருப்பும் திட்டமும் ஏட்டளவிலேயே இன்னமும் உள்ளது. கங்கை நதி பாய்ந் தோடும் மாநிலங்கள் அந்த நீரைப் பகிர்ந்து கொள்வதற்கு எதிராக உள்ளன. நூறாண்டு காலத்திற்கு மேலாக கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் குறித்து பேசப்பட்டு வந்தாலும் இன்னமும் இத்திட்டம் நிறைவேறுவது என்பது கனவாகவே இருந்து வருகிறது.

ஆனால் சோவியத் ஒன்றியம் இருந்த போது துர்க்மேனிய குடியரசில் 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்ப ளவுக்கு மாபெரும் பாலைவனம் ஒன்று அமைந்திருந்தது. இதற்கு அருகில் உள்ள மற்றொரு குடியரசில் ஓடும் அமுதாரியா என்னும் ஆற்று நீரின் ஒரு பகுதியை இப்பாலைவனத்திற்குத் திருப் பிக்கொண்டுவந்து பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார்கள். சுமார் 1400 கிலோ மீட்டா தொலைவுக்கு பெரும் கால்வாய் ஒன்று வெட்டப்பட்டு 25 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு புதிய பாசன வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளில் நிறை வேற்றப்பட்டது. இந்தக் கால்வாயை வெட்டுவதற்கு சோவியத் ஒன்றியத்திலிருந்த 40க்கும் மேற்பட்ட பல்வேறு தேசிய இன மக்களும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார்கள். பல்வேறு குடியரசுகளைச் சேர்ந்த மக்கள் தொண் டர்களாக வந்து இக்கால்வாய் வெட்டும் பணியில் உதவி புரிந்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கிடையே பாய்ந்தோடும் நதிகள் உள்ளன. அவற்றின் நீரைப் பங்கீடு செய்வது குறித்து 1956ஆம் ஆண்டு ஆகஸ்டு இருபதாம் தேதி ஹங்கேரி நாட் டின் தலைநகரான ஹெல்சிங்கியில் சர்வதேச மாநாடு ஒன்று கூடி சர்வதேச ஆறுகளின் நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவாதித்து முக்கியமான முடிவுகளை மேற்கொண் டது. இம்மாநாட்டில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் சர்வதேச நதிகளின் நீரை பயன்படுத்துவதற்கான ஹெல்சிங்கி விதிமுறைகள் என அழைக்கப்பட்டன. இந்த விதிமுறைகளின்படி உலகெங்கும் முள்ள பலநாடுகள் அண்டைநாடு களுடன் உள்ள நதிநீர்த் தகராறுகளுக்கு சுமூகமான தீர்வுகளை கண்டுள்ளன.

1959ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சூடான்-எகிப்து நாடுகளுக்கிடையே நைல் நதி நீர்த் தகராறு குறித்தும் 1960ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக் கிடையே நீண்ட காலமாக நிலவிய சிந்து நதிப் பிரச்சினை குறித்தும் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கனடா வுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையே ஓடும் கொலம்பிய நதி பற்றி யும் உடன்பாடுகள் செய்துகொள்ளப் பட்டன. சர்வதேச நதிப் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு உதவும் ஹெல்சிங்கி விதிமுறைகளைப் பயன்படுத்தி இந்தி யாவில் பல்வேறு மாநிலங்களுக் கிடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினை களை சுலபமாக தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்கான அறிவாற்றல் படைத்த அகில இந்தியத் தலைவர்கள் இன்று இல்லை, தேசியக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சி களின் தலைவர்களுக்குத் தேசிய சிந்தனை இருப்பதாகவும் தெரியவில்லை.

1954ஆம் ஆண்டு திருவாங்கூர்- கொச்சி மாநிலத்தின் முதலமைச்சராக பட்டம் தாணுப்பிள்ள என்பவர் இருந் தார். அவர் பிரஜா சோசலிஸ்டுக் கட்சி யைச் சேர்ந்தவர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டோடு இணைய வேண்டுமென போராடினார் கள். பட்டம் தாணுப்பிள்ளை அப் போராட்டத்தை ஒடுக்க காவலர் படையை ஏவினார். பல தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்போது பிரஜா சோசலிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக டாக்டர் இராம் மனோகர் லோகியா அவர்கள் இருந்தார். அவர் உடனடியாகத் துப்பாக் கிச் சூட்டைக் கண்டித்தார். இதன் காரண மாக பட்டம் தாணுப்பிள்ளை பதவி விலக நேர்ந்தது.

டாக்டர் லோகியா போன்ற தலை வர்கள் இன்றைக்கு எந்த அகில இந்தி யக் கட்சியிலும் இல்லை. எனவே தான் பல்வேறு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப்பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் நடுவர் மன்றங்கள் தீர்ப் பளித்தாலும் அவற்றை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அத்த கைய மாநிலங்களைக் கண்டித்து அத் தீர்ப்புகளை ஏற்கவேண்டும் என்று சொல்லக்கூடிய தேசியத் தலைவர்கள் இல்லாமல் போனார்கள்.

நதிநீர்ப் பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்குரிய சட்டங்களைப் பயன் படுத்தும் துணிவு மிக்க தலைவர்களும் இல்லை. இந்திய அரசியல் சட்டத்தின் 262 ஆவது பிரிவிற்கு இணங்க 1956ஆம் ஆண்டில் இரு சட்டங்களை இந்திய அரசு கொண்டுவந்தது. முதலாவது சட்டம் நடுவர் மன்றம் அமைப்பது பற்றியதாகும். இரண்டாவது சட்டம் மிகமுக்கியமானது. நதிநீர் வாரி யங்கள் அமைப்பதற்கான சட்டம் அது. எந்த மாநிலமாவது உச்சநீதிமன்றம் - நடுவர் மன்றம் ஆகியவற்றை மீறுமா னால் உடனடியாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி அந்த நதி நீரை நிர்வகிப்பதற்கு ஒரு வாரியத்தை இந்திய அரசு அமைக்க இச்சட்டம் அதிகாரம் கொடுத்துள்ளது. ஆனால் கடந்த 56 ஆண்டுகாலமாக இச்சட்டத்தின்படி எந்த நதிநீர்ப்பிரச்சினையிலும் வாரியம் அமைக்க இந்திய அரசு முன்வர வில்லை. இது நமது நாட்டில் துணிவும், திறமையும், நேர்மையும் தொலை நோக்குப் பார்வையும், நடுநிலைபேணும் தன்மையும் உள்ள தலைவர்கள் அருகிப் போனதையே காட்டுகிறது.

நன்றி

-தென்செய்தி

Comments