எங்கள் தலைவர் உங்களுக்கு அப்பனா? மாமனா? சித்தப்பனா?

அன்றிரவின் அமர்க்களம், தேடுதல் எல்லாமே ஒரு புள்ளியில் முற்றுப் பெற்றது. எங்கே? எங்கே? என்று அலைந்த அவலக் குரல்கள் அந்த மாதா கோவில் கிணற்றைப் பார்த்து வயிற்றில் அறைந்து கொண்டன. எது நடந்திருக்கக் கூடாது... எது நடக்கக் கூடாது என்ற தவிப்புக்கள் எல்லாம் ஓலமாக வெளிவந்து இந்தப் பிதேசத்தையே குலுங்க வைத்தது.


அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு, அந்தக் கிணற்று நீரில் மிதந்துகொண்டிருந்தது. பெற்றவருக்கு அந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. அழவும் தோன்றவில்லை. தான் பெற்ற மகன் தலை குப்புறவாகத் தண்ணீரில் மிதப்பதை அந்தப் பேதை மனத்தால் கிரகிக்கத் தோன்றவில்லை. வெறித்த பார்வையுடன் அவர் நிலை குத்தி நின்றார்.

ஒரே மகன். மார்பிலும், தோளிலும் தாலாட்டிச் சீராட்ட, ஒற்றை வாரிசாகப் பெற்ற மகன். அந்த மனிதரின் எல்லாமே அவனாக... எல்லாமே அவனுக்காக... முற்றுப்பெற்றுவிட்ட அந்த நிதர்சனத்தை அவரால் எப்படித்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? அவரது அடிவயிற்றில் எழுந்த ஓலங்கள் எல்லாம் தொண்டையைத் தாண்டி வெளியே வர மறுத்தது. எல்லம் முடிந்துவிட்டது... எல்லாமே முடிந்துவிட்டது... அந்த வார்த்தைகளை மட்டும் அவரது உதடுகள் உச்சரித்தன.

நேற்றுவரை உண்மையாக... எல்லாமே சத்தியமாக... எல்லாமே சாத்தியமாகத் தெரிந்த அத்தனையும் இருளுக்குள் ஒழிந்து கொண்டன. பேச்சும், மூச்சும் இழந்த அந்தப் பாலகனைப் பார்க்கும் சக்தி இழந்து தவித்தார். நேற்றைய திருவிழாவின் நாயகன் அவன்தான். அவனுக்காக அவர் வருடம்தோறும் வரம் கேட்டு நடாத்திய அந்த வேள்வியின் தொடர்ச்சி... அந்த நாள்தான் அவனுக்கு இறுதி நாளாகியது.

மின்சார விளக்குகள் அறியா கிராமத்தில், இயந்திரம் மின் பாச்சியது. குழாய் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் குதூகலித்த அந்தச் சின்னஞ் சிறிய பிஞ்சு, தன் பாதங்கள் நாடிய இடமெல்லாம் பறந்து திரிந்தது. காலம் அவனுக்கு வலை விரித்ததை அவன் கண்டிருக்கவில்லை. அவனைப் பெற்றவரும் அதை அறிந்திருக்கவில்லை. ஓடிச் சென்றவனை இடறியது ஒரு கட்டு. அடுத்த கணமே அவன் அந்தக் கிணற்றினுள் சங்கமித்ததை யாருமே காணவில்லை. தண்ணீர் என்ன தாயா, தாங்கிப் பிழை பொறுக்க? ஆனாலும் மூன்று முறை முயன்றுதான் பார்த்தது, பாவி என்ற பழிச் சொல்லுக்குப் பயந்து. முடியவில்லை... அதனாலும் விதியை வெல்ல முடியவில்லை. உயிரடங்கிப்கோன அந்த உடலை மட்டும் ஏந்திக்கொண்டது.

இரவின் விழாக் கோலம் இழவாக விடிந்தது. ஊரெல்லாம் தேடியவர்கள் இறுதியாகவே கிணற்றை எட்டிப் பார்த்தார்கள். காலம் கடந்து வெகு நேரமாகியது. விறைத்துப் போயிருந்த தன் மகனைத் தவிப்புடன் பார்த்தார். ஒரே வாரிசு. ஒற்றைப் பிள்ளை. அவரது நம்பிக்கை குலைந்தது. ஆசைகள் தகர்ந்தது. அவரால் முடியவில்லை.

ஊனிலும், உயிரிலும், உள்ளேயும், வெளியேயும், எல்லாமாகி ஏந்திய மகனை எப்படித்தான் அனுப்பி வைப்பார்? சுற்றமும், உறவும், நட்புமாக அவரைச் சுற்றி எத்தனையோ உறவுகள் இருந்தபோதும் அவர் தன்னந் தனியாகவே இருப்பதை உணர்ந்தார். நாளை விடிந்தால் அவன் உடல் கூட அவருக்கு இல்லை. பேதை மனம் தவித்தது. முடிவெடுத்துவிட்டார். நானும் வருகிறேன் மகனே! என்ற ஓலத்துடன் சாய்ந்தார். ஆம், அந்த சோகத்தின் ராகங்கள் தன் கதையை முடித்துக் கொண்டது. அந்த மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொண்டார்.

அந்த மனிதரின் மரணத்தைக் கோழைத்தனம் என்றார்கள்... பாசமும் ஓர் கோழைத்தனம்தான். தன் அத்தனை பலத்தையும், அத்தனை சுகத்தையும், அத்தனை துக்கத்தையும், அத்தனை சந்தோசத்தையும் இன்னொருவருக்காக, இன்னொருவரிடம் கையளித்து விட்டபின்னர் வீரம் எங்கே எஞ்சியிருக்கப் போகின்றது?

அவரது பாசம் அவரைக் கோழையாக்கியது. அவர் எதிர்காலம் என்று கருதிய அவரது நம்பிக்கை சிதறிய போது, அவரால் இதை விடவும் வேறு முடிவு எடுத்திருக்க முடியாது.

பிள்ளை என்பதால் மட்டுமல்ல... பெற்றவராகினும், உற்றவராகினும், உடன் பிறந்தவராகினும், தான் வரித்த தலைவன் ஆகினும் மிச்சம் மீதியற்ற பற்று வைத்துவிட்டால், இழப்பதற்கு உயிர் துச்சமாகவே தோன்றும்.

இப்போதும் சிலர் கண்ணீர் வடிக்கின்றார்கள்... செத்துவிட்டாராம் அவர் தாம் நேசித்த தலைவர். மிச்சம் மீதியாக எதுவுமே இல்லாம்... எல்லாமே தலைவர்தான் என்றிருந்தவர்கள் இப்போது கூறுகிறார்கள்...''ஒரு படம் வைத்து விளக்கேற்றி, ஒருக்கால் அழுவம் வாறீர்களா?'' என்று.

வெட்கம் கெட்டவர்கள். வேதனையின் ஆழம் புரியாதவர்கள். தப்பான பேர்வழிகள் தப்புத் தாளம் போடுகிறார்கள். எங்கள் தலைவர் உங்களுக்கு அப்பனா? மாமனா? சித்தப்பனா? வாடகை மண்டபத்தில்... வடிவாக ஒரு படம் வைத்து... பூவும் விளக்கும் வைத்து... புலம்பலும், அலம்பலும் செய்துவிட்டு... வாகனத்தில் ஏறி... வாடிக்கை உணவகத்தில் ''சேஸ்'' சொல்ல ஊற்ற அடித்துவிட்டு, ஏற்றிய சுதியோடு, வீட்டில் சில கவளங்கள் விழுங்கிவிட்டு, மல்லாந்து படுத்து, வீணி வழியக் குறட்டைவிட... எங்கள் தலைவர் உங்களுக்கு அப்பனா? மாமானா? சித்தப்பனா?

நெஞ்சிலே நெருப்போடு... சிவந்த எம் விழியோடு... வஞ்சகப் பகை முடித்து... வதைத்தவர் குரலறுத்து... எஞ்சிய தாகம் தீர்த்து... எடுத்ததன் சபதம் தீர்க்க வஞ்சியர் திரௌபதைபோல் வதை பட்டோர் காத்திருக்க, இங்கொரு ஓநாய்க் கூட்டம் அழுதது கவலை பொங்க. ''அங்கொரு ஆட்டு மந்தை நனைந்தது ஐயோ! ஐயோ!!''

தாயைக் கற்பழித்தவனை விட்டுவிட்டு, தவறு என்று வருந்துபவனும், தந்தையைக் கொன்றவனை விட்டுவிட்டு, மயானத்தில் நின்று அழுபவனும் பிரபாகரன் காலத்திலும் வாழ்கிறார்கள் என்பது தமிழர்களின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறு வார்த்தை இல்லை!

Comments