யாரோ விதிக்கும் நிபந்தனைக் கோடுகளின் எல்லைக்குள் சுழலும் சில தனிநபர்கள்

கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் ஏற்பாட்டில், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஒன்பது தனிநபர்கள், சிங்கள தேசத்தின் உயர்நிலைத் தலைவர்களைச் சந்தித்ததாக வந்த செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. மனிதாபிமான நோக்கத்தைக் கொண்டதாகக் கருதப்படும் இப்பயணத்தில் கலந்து சிறப்பித்த இருவர், தமது அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஜீன் 15 இலிருந்து 20 வரை, பல நேர்முக தரிசனங்களை எதிர்கொண்ட இவர்கள், சிங்களத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலை தெளிவாக உணர்ந்துகொண்டார்களென்று நம்ப இடமுண்டு. வெளிப்பார்வையில், வீட்டுக் கைதி போன்று கே.பி இயங்கினாலும், அரசின் வேலைத்திட்டத்தோடு இவர் சேர்ந்து இயங்குவதை உணரக்கூடியதாக உள்ளதாக இவர்கள் கூறுகின்றார்கள்.

போராளிகள் விடுதலை, இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் குறித்து பேசச்சென்றவர்கள், தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு குறித்தும் உரையாடியுள்ளார்கள். நாடுகடந்த அரசு, சமஷ்டி, இன அழிப்பு, ஐக்கிய இலங்கை பற்றி பேச வேண்டாமென அழுத்தமாகக் கூறிய அரச தரப்பினர், கடந்த காலத்தை மறந்து, நாட்டைக் கட்டி நிமிர்த்துவதில் தம்மோடு இணைந்து செயற்பாடுமாறு கண்டிப்பான உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளனர்.

தம்மால் முடக்கப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி குறித்து கவலைப்படாமல், புலம்பெயர் நாடுகளில் போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட நிதியைக் கொண்டுவருமாறு சிங்களம் அறிவுரையன்றினையும் வழங்கியுள்ளது. சிங்களப் புனலாய்வுச் சக்கரவர்த்தி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, இந்த நிதி மீட்பு விடயத்தில் அதிக கரிசனை கொள்வதாக, வைத்தியர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தெரிவிக்கின்றார்.

கபில ஹெந்தவிதாரண பாணியில், புலம்பெயர் அமைப்பின் நாடுகடந்த அரசின் பிரதிநிதி ஒருவரும், இதே விதமான கருத்தினை வேறு கோணத்தில் முன்வைத்துள்ளார். பொறுப்புமிக்க பிரதிநிதியானவர், நிதிக் கையாடல் நிகழ்ந்ததாக, பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைக்கும்போது, அதற்கான ஆதாரங்களையும் மக்களிடம் தெரிவிப்பதுதான் ஆரோக்கியமானது. அதனைவிடுத்து, மாயமான் வேட்டையில் ஈடுபடுவது, கண்டிக்கப்படவேண்டிய விவகாரம் என்பதனை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும். தவறுகளை சான்றுகளோடு சுட்டிக்காட்டினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

இத்தகவல்களை அறிந்துகொள்ளும் முயற்சியிலேயே, புலனாய்வுச் சிங்கம் கபில ஹெந்தவிதாரணவின் குழுவினரும், முழு வீச்சோடு இறங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது விடுதலைப் புலிகளின் நிதியை எவ்வாறாயினும் இலங்கைக்குள்கொண்டு வரவேண்டுமென்கிற முனைப்பில் சிங்களம் இருப்பதனை இச் சந்திப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு சார்பற்ற உலக தொண்டு நிறுவனங்களை, முள்ளிவாய்க்கால் பேரழிவின் போதும், அதற்குப் பின்னரும் அனுமதிக்காத சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் ஈழ மக்களின் உதவி தேவைப்படுவது போல் நடிப்பதன் சூத்திரம் என்ன? முதலில் கே.பி.யின் இருப்பினை, எவ்வாறு கையாள இவர்கள் முற்படுகிறார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க்குற்ற விசாரணைக்கு, புலம்பெயர் மக்கள் வழங்கும் ஆதரவினையும், செயற்பாடுகளையும் முடக்குவதற்கு, கே.பி யை ஒரு கருவியாக சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்த முனையும் நோக்கம் துலாம்பரமாகத் தெரிகிறது. அங்கிருப்பவரோ அல்லது இங்கிருந்து சென்ற புலித்தோல் போர்த்திய பசுக்களோ, சிங்கத்தின் குகைக்குள் இருந்தவாறு நிபந்தனைகளை விதிக்க முடியாது. சர்வதேச அழுத்தங்களுக்கு அடங்காமல், கொழும்பிலுள்ள ஐ.நா.சபை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று திமிர்த்தனத்தோடு இயங்கும் சிங்களத்திடம், 10,000 போராளிகளை விடுதலை செய்யுங்கள் என்று இரந்து கேட்டாலும், அதனை அவர்கள் செவிமடுப்பார்களா? புலம்பெயர் மக்கள் குறித்து, சர்வதேச நெருக்கடிக்குழுவின் பரிந்துரைப்பில் சொல்லப்பட்ட விடயங்களை, நன்றாகவே புரிந்து
கொள்வார் மகிந்தர்.

இங்கு வந்தவர்களால், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், புலம்பெயர் நாடுகளிலிருந்து புதியவர்களைக்கொண்டு வருவோமென்று புலனாய்வுத் தலைவர் கபில, சவால் விட்டதாகவும் வைத்தியக் கலாநிதி கூறுகின்றார். இது கற்பனையா அல்லது நிஜமா என்கிற வாதங்களுக்கு அவசியமில்லை, ஏனெனில் போர்வெற்றிக்குப் பின்னர், சிங்களத்தின் பேரினவாத உளவுரண், அமெரிக்கா வையே எதிர்க்கும் அசட்டுத் துணிச்சலைப் பெற்றுள்ளது. ஐ.நா சபையின் கொடி எரிப்பு விவகாரமொன்றுதான் நடைபெறாத விடயம். நோர்வே கொடி எரித்தவர்கள் அதையும் செய்வார்கள்.

‘தேசப்பற்றுள்ளவர் நிரம்பிய நாடு இலங்கை’ என்று, கொழும்பிலுள்ள ஐ.நா.சபை அலுவலக வளாகம் முன்பாக நடாத்திய ஆர்ப்பாட்டத்தில், ஹெல உறுமயக்காரர்கள், ஓலமிட்டுள்ளனர். ஆனாலும் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய, 50,000 படையினரின் தேசப்பற்று குறித்து, சோபித தேரர் மறந்துவிட்டாரோ தெரியவில்லை. 2007 இல் இந்திய முன்னாள் நீதிபதி பகவதி அவர்களை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’, ஏப்ரல் 2008 இல் கலைக்கப்பட்டதுபோன்று, பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவினையும், அச்சுறுத்திக் கலைத்துவிடலாமென்று, அமைச்சர் விமல் வீரவன்ச கனவு காண்கிறார்.

ஆகவே வல்லரசுகளோடு மோதுவதற்கு தயாராகும் சிங்களத்தின் மனோ நிலையைப் புரிந்துகொள்ளாமல், பலவீனமான தளத்தில் இருந்தவாறு எதனைச் சாதிக்க முடியு
மென்று இப்பயணிகள் எண்ணுகிறார்கள். ‘யாரோ விதிக்கும் நிபந்தனைக் கோடுகளின் எல்லைக்குள் நின்றபடி, அங்கும் இங்கும் அங்கலாய்த்து ஓடும் இந்த முதுநரைக்குரியவர்களின்வாழ்வியல் தேவைகள்.’ என்று நீண்டு செல்லும் சாம்.பிரதீபனின் கவிதையில், இங்கு குறிப்பிடப்பட்ட வரிகள், சிங்களத்தோடு உறவுப்பாலம் அமைக்க புறப்பட்டவர்களின் அரசியல் இருப்போடு பொருந்திப் போவதைக் காணலாம்.

இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Comments