மறக்கமுடியாத ஆடிக்கலவரமும் தீர்க்க முடியாத இனப்பிரச்சனையும்

திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட இனக்கலவரம் நடந்து இன்றோடு இருபத்தேழு வருடங்கள் கழிந்து போய்விட்டன.

இந்த இருபத்தேழு வருட காலப்பகுதிக்குள் வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.

ஆனாலும் இனப்பிரச்சினைக்கும், இனக்கலவரங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்த விடயங்கள் கண்டறியப்படவோ அவற்றுக்குத் தீர்வு காணப்படவோ இல்லை.
1958, 1977, 1983 என்று காலத்துக்குக்காலம் நிகழ்ந்தேறிய தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் தான், தமிழர்களின் ஆயுதப்போருக்கான தூண்டுகோலாக இருந்தது.

புலிகள் இயக்கம் சரி ஏனைய அமைப்புகளும் சரி ஆயுதமேந்திப் போராடும் நிலைக்குச் சென்றதற்கு இனக்கலவரங்களும் தமிழருக்கு எதிரான இனவாதமே காரணமாக இருந்தன.

புலிகள் இயக்கம் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகப்பலமாக வளர்ச்சி பெற்றதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது இந்த இனப்பிரச்சினைதான். ஆனால் இந்த இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணக்கூடிய நிலை ஏற்படவில்லை.

இதற்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும்.

இனப்பிரச்சினையின் விளைவாகத் தோன்றிய ஆயுதப்போராட்டத்தை அரசாங்கம் படை பலத்தைக் கொண்டு இல்லாமல் செய்து விட்டது.

இந்தநிலையில் இனப்பிரச்சினை என்று எதுவுமே நாட்டில் இல்லை என்று கூறும் நிலைக்கு அரசாங்கம் வந்திருக்கிறது.

இப்போது இனப்பிரச்சினையே நாட்டில் இல்லை என்கிறது. ஒரே நாடு ஒரே இனம் என்கிறது. சிறுபான்மையினர் என்று யாரும் நாட்டில் இல்லை அனைவருமே ஒரே இனம் தான் என்கிறது.

இந்தக் கருத்துகள் அரசாங்கத்திடம் இருந்து எதற்காக வெளிவருகின்றன? இவற்றிற்கும் காரணம் இருக்கின்றன.

தமிழர்களுடன் அரசியல் ரீதியான உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள சம்மதமற்றபோக்கில் அரசாங்கம் இருப்பதன் வெளிப்பாடே இந்தக் கருத்துக்கள்.

இனக்கலவரங்களின் போது தென்னிலங்கையில் இருந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டார்கள். தமிழன் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, எரித்து அழிக்கப்பட்டு எதுவுமேயில்லாதவர்களாக வடக்கு, கிழக்கு நோக்கி துரத்தியடிக்கப்பட்டார்கள்.

கடைசியாக 1983ஆம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்துக்கு 13 படையினர் கொல்லப்பட்டது தான் காரணம் அல்ல.

தமிழர்களை அடித்துத் துரத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே அது.

அதற்குப் பின்னர் அப்படியானதொரு இனக்கலவரம் இலங்கையில் நடந்தேறவில்லை. இதற்குக் காரணம் தென்னிலங்கையில் தமிழரைப் பற்றிய சிந்தனை மாறி விட்டதாகவோ அல்லது இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டதாகவோ யாரும் தப்புக் கணக்குப்போட்டு விடககூடாது.

இடைப்பட்ட காலத்தில் தமிழர்கள் மீது எத்தனையோ முறை வனமு;றைகளை கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் அப்படியான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. காரணம் தமிழர்கள் பக்கத்தில் பலம்வாய்ந்த ஆயுதப்போராட்ட அமைப்பாக புலிகள் இருந்தனர். அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தினால் அதன் விளைவுகளை தாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற அச்சமே, தமிழருக்கு ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் இன்று அப்படியான ஒரு மறைமுகக் கவசம் இல்லை.

இந்தநிலையில் தமிழர் மீதான வன்றைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவது தொடக்கம், அவர்களை வடக்கு, கிழக்கிலேயே சிறுபான்மையினராக்கும் முயற்சிகள் வரை நடந்தேறுகின்றன.

ஒரே நாடுஒரே இனம் ஒரே மக்கள் என்று கூறும் அரசு, தமிழரை சிறுபான்மையினராக நினைக்கவில்லை என்ற கருத்தின் ஊடாக தமிழருக்கான இனப்பிரச்சினைத் தீர்வை நிராகரிக்க முற்படுகிறது.

இனப்பிரச்சினை என்ற ஒன்று கிடையவே கிடையாது பிறகெதற்கு அரசியல் தீர்வு என்ற நிலையை உருவாக்கும் முயற்சிகளே நடக்கின்றன.

ஏனென்றால் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு பற்றி இப்போது சர்வதேசம் அக்கறையோடு பார்க்கிறது.

ஆனால் அரசின் இதேபோக்கு நீடிக்குமயானால் காலப்போக்கில் சர்வதேசம் இலங்கையின் இனப்பிரச்சினையையும் சரி, அரசியல் தீர்வையும் சரி மறந்து போய் விடும்.
அப்படி மறக்கச் செய்யும் முயற்சிகளையே இலங்கை அரசு இப்போதும் தமிழர் மத்தியில் மேற்கொள்கிறது.
அபிவிருத்திதான் பிரச்சினை அதைச் சரி செய்தால் போதும் என்ற போக்கில் அரசு செயற்படுகிறது.

ஆனால் அபிவிருத்தியின் ஊடாக அரசியல் தீர்வு உருவாகப் போவதில்லை.

அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாகவே தமிழர்கள் தமது சொந்த நிலங்களில் நிம்மதியாக வாழ முடியும்.

ஆனால் அத்தகைய அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு அரசாங்கம் தயாராக இல்லை.

இது வெளிப்படையாகவே தெகிறது.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒரு அதிகாரப் பகிர்வு யோசனையைத் தயாரித்தது.

நேரகாலத்தையும் நிதியையும் செலவிட்டு நடத்திய கூட்டங்களின் முடிவில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கைக்கு நடந்தது என்ன?

அரசாங்கம் தென்னிலங்கைச் சிங்கள மக்களின் திருப்தியைப் பற்றியே சிந்திக்கிறதே தவிர, இனப்பிரச்சினையின் விளைவாகவும், இனங்கலவரங்களினாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலைபற்றி சிந்திக்க மறுக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதும் சரி, அரசியல் தீர்வை உருவாக்குவதும் சரி, சிங்கள மக்களைப்பாதிக்கும் விடயங்களாக இருக்கப் போவதில்லை.

ஆனால் அப்படியானதொரு தோற்றப்பாட்டை தமது நலன் கருதி உருவாக்கி வைத்துள்ளனர் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.

இந்த நிலையில் தமிழருக்கு எதிராக இன்னொரு இனக்கலவரம் ஏவிவிடப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. ஏனென்றால் தமிழர்களுக்கு இப்போது கவசமாக எந்தவொரு தரப்பும் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அமைதித்தீர்வு காணப்படுவதும் அதிகாரங்கள் பகிரப்பட்டு தமிழன் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதும்தான் நாட்டில் அமைதியை நீடித்து நிலைக்கச் செய்யும்.

அமைதியையும் ஒற்றுமையையும் நிலைக்கச் செய்வதற்கான பொறுப்பு அனைத்து தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கும் இருக்கிறது.

ஆனால் அதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.

இந்தநிலை நீடிக்கும் வரை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவது சாத்தியமற்றதாகவே இருக்கப்போகிறது.

- கபில்

Comments