பிரித்தானியாவில் BTF மற்றும் GTF அமைப்புகள் உறங்கு நிலையா ?

இன்றைய திடுக்கிடும் தகவல் என்ன தெரியுமா?

இந்தோனேசிய ஜனாதிபதி நெதர்லாந்து நாட்டிற்குச் செல்லவிருந்ததை ரத்துச் செய்தார். காரணம் அங்கு அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம். பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா போன்ற அனைத்து சர்வதேச தொலைக்காட்சிகளிலும் முதலிடம் பிடித்துள்ள செய்தி இதுதான்.

ஆனால் இலங்கை ஜனாதிபதி மகிந்த சர்வசாதாரணமாக பிரித்தானியா வந்து சென்றிருக்கிறாரே, லண்டனில் உள்ள பெரும் அமைப்புகள் என்ன செய்தன? அல்லது என்ன செய்ய முற்பட்டன என்று கேட்டால் ஒன்றுமே இல்லை.

பிரித்தானியாவில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும் அமைப்புகள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் BTF, GTF மற்றும் சில தமிழ் அமைப்புகள் மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தின் போது என்ன செய்தார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது அல்லது அவர் விஜயத்தை தடுக்க என்ன நடவடிக்கையில் இறங்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இது என்ன ஒரு சிதம்பர ரகசியமா? இவ்வமைப்புகள் மக்களுக்கு இதனைத் தெளிவுபடுத்தவேண்டும். தமது வேலைத் திட்டங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் மக்களுக்காவது அவர் அதைத் தெரிவிக்கவேண்டும். இல்லையே மக்களுக்கும் அவ்வமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் பாதிக்கப்பட்டு, நாளடைவில் அவை பலமிழக்கவே நேரிடும்.

ஒரு சிறு பிரிவினைவாதக் குழுவான தெற்கு மொலாகாஸ் குழுவினர்(RMS) நெதர்லாந்தில் தொடுத்த வழக்கால், இது சாத்தியமாகியுள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கராத் விமானநிலையம் சென்று தனது பிரத்தியேக விமானத்தில் ஏறியபின்னர், நிலைமை மோசமடையலாம் எனப் பயந்து, தனது சுற்றுப்பயணத்தை ரத்துச்செய்து வீடு திரும்பியுள்ளார். இந்தோனேசிய இலங்கை போல பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அங்கு 40,000 பொதுமக்கள் ஒரே நாளில் சாகவும் இல்லை. ஆனால் ஜனாதிபதி யூடோ யூனோ மனித உரிமைகளை மீறியுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. அவரால் பாதிக்கப்பட்ட சில மக்கள் எடுத்த புலம்பெயர் போராட்டம் தற்போது பெருவெற்றியை ஈட்டியுள்ளது. இதை ஏன் ஈழத் தமிழர்களால் செய்ய முடியவில்லை?

1950ம் ஆண்டில் இருந்து இந்தோனேசியாவில் இனக்கலவரங்கள் இடம்பெற்றுவந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கணக்கெடுப்பில் சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டதாகவும் 5 லட்சம் பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இலங்கை நிலையை எடுத்துப் பாருங்கள், இந்தோனேசியாவோடு ஒப்பிடும் போது இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் பன்மடங்கு அதிகம். அத்தோடு இலங்கை நிலைகுறித்து ஐ.நா சபை விவாதிக்கும் அளவுக்கு நிலை இருந்திருக்கிறது ஆனால் நாம் என்ன செய்தோம்?

பிரித்தானியா ஒரு பாரிய ஜனநாயக நாடு என்பது யாவரும் அறிந்த விடயம். அது அவ்வளவு எளிதில் ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. இருந்தாலும் அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள், அதுபோல பிரித்தானியாவின் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக மகிந்தவைக் கைதுசெய்வதற்காக எந்த ஒரு ஏற்பாட்டையும் எந்த ஒரு அமைப்பும் லண்டனில் செய்யவில்லை என்பதே இன்றைய நிலையாகும். போர் உக்கிரமடைந்த வேளையில் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்த வண்ணம், ஊடகங்களை கையகப்படுத்தி தமது செய்திகளை வெளியிடவேண்டும் எனச் சிலர் முனைந்ததும், தம்மை பாரிய மனித உரிமை ஆர்வலர் போலக் காட்டியவர்களும் தற்போது எங்கே? இவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா?

சண்டையோ சமாதானமோ, எதுவாக இருந்தாலும் தம்மை முன் நிலைப்படுத்தி அதில் அரசியல் லாபம், தற்பெருமை, தன்னை ஒரு ஆர்வலர் போலக் காட்டிக்கொள்வது, தன்னை பிரபல்யமாக்குவது, போன்ற ஈனத்தனமாக செயல்களிலேயே சிலர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் அப்போது தமிழர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருந்த தமிழ் அமைப்புகளைப் பயன்படுத்திவிட்டு தற்போது போர் முடிவுக்கு வந்த பின்னர் பின்வாங்கியுள்ளனர். இதனால் மேலும் நலிவடைந்துள்ளது தமிழ் அமைப்புகள். இதனை முதலில் சீர்செய்தாலே நாம் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும். பிரித்தானியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்பையும் நாம் இங்கு குறைகூறவில்லை, மாறாக பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நாம் ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!

அதிர்வின் ஆசிரியபீடம்.

Comments