தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் இறுதி அஞ்சலி எமக்குச் சொல்லும் செய்தி என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் கடந்த 20.02.2011 ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை நாம் அனைவரும் கேள்வியுற்று ஆறாத்துயரானோம். ஆனால் எமது அன்னையின் இறுதி அஞ்சலி நிகழ்வானது எமக்கெல்லாம் பல புதிய பாடங்களையும் செய்திகளையும் சொல்கின்றதைக் காணலாம். அன்னைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக யாழ் வல்வெட்டித்துறைக்கு சென்றிருந்தவர்களில் நானும் ஒருவன் என்ற ரீதியில் அங்கு அவதானித்த பல விடயங்களை உங்களின் பார்வைக்காக விடுகின்றேன்.

நானும் எனது நண்பரும் சுமார் 500 கி.மீற்றர் தூரத்திலிருந்து யாழ் வல்வெட்டித்துறையை நோக்கிப் புறப்பட்டு 10 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் பல கஸ்ரத்தின் மத்தியில் வல்வெட்டித்துறையை அடைந்தோம். நாங்கள் முதன்முதலாக அந்த ஊருக்கு செல்வதனால் பருத்தித்துறையில் இருந்து வல்வெட்டித்துறைக்கு செல்வதற்கு பலபேரிடம் பாதை கேட்டோம். ஆனால் அங்கிருந்த ஒருவரும் ஒழுங்கான முறையில் குறித்த இடத்தின் பாதை சொல்லவில்லை. இதற்கான காரணம் என்னவென எங்களுக்கு பிறகுதான் புரிந்தது. அது வேறெதுவும் இல்லை நாங்கள் சென்ற வாகனம் ஒரு வெள்ளை வான். அடுத்ததாக வல்வெட்டித்துறையை அடைந்த நாங்கள் அங்கிருந்து அஞ்சலி நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கும் பல சிரமங்களை எதிர்நோக்கினோம் குறித்த இடம் எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்தும் அவர்கள் அந்த இடத்தையும் அன்னையின் பெயரையும் சொல்வதற்கு பெரிதும் அஞ்சினார்கள் இதற்கான காரணம் இராணுத்தினரின் அச்சுறுத்தலாகும்.

பின்பு அன்னையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை மைதானத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினோம் அங்கு மிகவும் குறைந்தளவான பொது மக்களே அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்ததை அவதானித்தேன். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டனர். ஏனையோர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு வைத்திய கலாநிதி மயிலேறும் பெருமாள் அவர்கள் தலைமை தாங்கியதுடன், சிவாஜிலிங்கம் அவர்களுடன் இணைந்து அனைத்து வேலைகளையும் இருவருமே தங்கள் பொறுப்பில் செய்தனர். காரணம் அச்சம் காரணமாக வேறு யாரும் எந்த வேலைகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்து செய்ய முன்வரவில்லை.

கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களால் அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. அதன்போது சிலபேர் அந்த இடத்தை அரசியல் மேடையாக நினைத்து அரசியல் உரையும், பலபேர் மிகவும் உணர்ச்சிவசமாக அன்னையைப் பற்றியும், விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பேசினார்கள். அத்துடன் அஞ்சலி கூட்டம் ஒழுங்கான முறையில் நடாத்துவதற்கு தடைவிதித்த ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்தும் பேசினார்கள். அங்கு நிகழ்ந்த அன்னைக்கான இறுதி அஞ்சலி பற்றியும் மக்களினதும் அரசியல்வாதிகளினதும் செயற்பாடு பற்றியும் ஆராய்ந்தால். எமது இனத்தின் விடுதலைக்கான சுடரை ஏற்ற வேண்டியவர்களே அதை அணைக்கவும் முற்படுகிறார்களோ என எண்ணவும் தோன்றுகிறது. என்ன வேலைப்பழு இருந்தாலும் முக்கியமாக கலந்துகொள்ளவேண்டிய இந்த அஞ்சலி நிகழ்வில் எமது தேசிய விடுதலை வாதிகள் (தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட) அனைவரும் கண்டிப்பாக கலந்துகொண்டிருக்க வேண்டும்.

அடுத்ததாக இளைஞர்கள் யுவதிகள் தவிர்ந்த ஏனையோர் இந்த நிகழ்வில் ஓரளவேனும் கலந்துகொண்டிருக்கலாம் அச்சம் என்பதை முற்றுமுழுதாக காரணம் கூறமுடியாது. மேலும் ஒருவர் இறந்த பின்பு அவருக்கு அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுப்பதற்கு உரிமை இல்லை என்ற எண்ணப்பாடு சகலரிடத்திலும் இருந்திருக்கவேண்டும். எனவே எமது இந்த தாயாரின் மரணமும் இதனூடாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வும் பலபேரின் இரட்டை வேட தன்மையையும் தமிழ் மக்களின் விடுதலையின் பால் அவர்கள் கொண்டுள்ள அக்கறையையும் கோடிட்டுக் காட்டுவதனை அவதானிக்க முடிகின்றது.

Comments