அரசு – ஊடக மோதலின் வரலாற்றுப் பின்னணி

‘நான் திரு மேர்டொக் மீது போர் தொடத்துள்ளேன். நாங்கள் வெல்வோம் என்று நினைக்கிறேன்”ஐக்கிய இராச்சிய வர்த்தகச் செயலர் வின்ஸ் கேபிள் சென்ற டிசெம்பர் 2010ல் இப்படிக் கூறினார். அவருடைய சவால் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு டெயிலி ரெல்லிகிராப் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது.
RSF outraged over media ban from North for polls :

உலகின் மிகப் பெரிய ஊடக சாம்ராச்சியங்களில் ஒன்றான நியூஸ் கோர்ப் (news corp) நிறுவனத்தின் அதிபதி ரூப்பேட் மேர்டொக் (rupert murdoch) ஐக்கிய இராச்சியத்தின் மிகக் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனையாகும் நாளிதழ்களில் நான்கின் உரிமையாளராவார்.

ஐக்கிய இராச்சியத்தின் சந்தாப் பணத்திற்குத் திரைப்படங்களையும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ஒளியேற்றும் பீஸ்கைபீ (bskyb) தொலைக்காட்சி நிறுவனத்தில் 39விகிதப் பங்குதாரராக இருக்கும் மேர்டொக் மிகுதி 69 விகிதப் பங்குகளையும் கொள்வனவு செய்ய எத்தனித்த போது முரன்பாடுகள் தோன்றின.

பிரதமர் டேவிற் கமரனின் அமைச்சரவையில் வர்த்தகச் செயலராகப் பதவி வகிக்கும் வின்ஸ் கேபிள் கொள்வனவுக்கு ஆட்சேபம் தெரிவித்து சவால் விட்டார் இந்த மோதல் வர்த்தகப் பிரச்சனையாகப் பார்க்கப் படாமல் காலம் காலமாக நடக்கும் அரசுகளுக்கும் ஊடகத் துறைக்கும் இடையிலான முறுகல் நிலையாகப் பார்க்கப்படுகிறது.

இப்போது பதவியில் இருக்கும் டேவிற் கமரன் அரசின் வெற்றிக்கு மெர்டொக்கிற்குச் சொந்தமான சன் (sun) பத்திரிகை கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறது இரு பகுதிக்கும் இடையிலான முறகலை இது இன்னும் மோசமாக்கியுள்ளது.

அரசுக்கும் ஊடகத்தறைக்கும் இடையிலான முரன்பாடுகளின் தோற்றத்திற்கு இரு பகுதியினரின் மாறுபட்ட நோக்கங்கள் காரணமாகின்றன தகவல் வெளியிடும் சுதந்திரத்தையும் அரசை விமர்சிக்கும். தங்கு தடையற்ற வேட்கையும் ஊடகத்துறை வேண்டுகிறது.

அரசு தனக்குச் சாதகமான செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருவதை விரும்புகிறது. எவ்வளவு முற்போக்கான அரசாக இருந்தாலும் கசப்பான உண்மைகள் வெளிவருதை அது விரும்புவதில்லை அப்படியான விடயங்களை வெளியிடும் ஊடகங்களை அது கண்டிப்பதற்குத் தயங்குவதில்லை.

மிக மோசமான முரண்பாடுகள் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக எழுகின்றன பாதுகாப்புத் தொடர்பாக அரசு என்ன செய்கிறது என்பதை அறிய ஊடகத்துறை ஆவலாக உள்ளதோடு அறிந்ததை மக்களோடு பகிர்ந்து கொள்ளவும் அது உறுதி பூண்டுள்ளது.

தான் விரும்பியதை மாத்திரம் வெளியிடும் உரிமையையும் பொது மக்கள் அறியக் கூடாது என்று எதைப் பற்றி எண்ணுகிறதோ அதை மறைக்கும் சுதந்திரத்தையும் அரசு தனதாக்க விரும்புகிறது. இது புதிய முரண்பாடு அல்ல.. என்று அச்சு ஊடகம், நெடுங்காலத்தின் பிறகு எலத்திரனியல் ஊடகம் தோன்றினவோ அன்றே அரசுக்கும் ஊடகத்தறைக்கும் இடையில் இழுபறி ஆரம்பித்து விட்டது.

எந்தவொரு பொறுப்புள்ள ஊடகவியலாளனாவது எதிரிக்கு அனுகூலமான தகவலை வெளியிட மாட்டான். அதே போல் பொது மக்களின் தகவல் அறியும் தேவைகளுக்குச் சாதகமான தகவல்களை எந்தவொரு பொறுப்புள்ள அரசும் மறைக்க விரும்பமாட்டாது.

பிரச்சனை என்னவென்றால் இரு பகுதிக்கும் இடையிலான நடுக் கோட்டை எப்படிக் கீறுவது என்பது தான. ஊடகத்துறை திருப்திப்பட வேண்டும். அரசும் திருப்திப்பட வேண்டும். பாதுகாப்பு விவகாரங்களில் இதன் சாத்தியப்பாடு மிகக் குறைவு. போர்க் காலத்தில் அரசு பல மறைப்புக்களைச் செய்யும். என்ன மறைக்கப் படுகிறது. என்பதை ஊடகம் துருவித துருவி ஆராயும்.

இப்படியொரு நிலவரம் போர்க்காலத்தில் தோன்றும் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பல ஆயுதங்களை வைத்திருக்கிறது. மிகப் பரவலாகப் பயன்படுவது தணிக்கை (censorship) என்ற பத்திரிகைச் செய்திகளையும் வானொலி, தொலைக்காட்சி, இணையதளச் செய்திகளையும் வடிகட்டும் செய்முறை.

இலங்கை வரலாற்றில் தணிக்கை செய்யும் அதிகாரிகள் இனக் கலவரங்கள் நடக்கும் காலத்தில் நியமிக்கப்பட்டனர் இவர்களுக்குத் தகுதியுள்ள அதிகாரி (competent authority) என்ற பெயர் வழங்கப்பட்டது இவர் அரசுக்கு விசுவாசமானவராகவும் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையவராகவும் இருப்பார்.

வானொலி நிலையத்தில் ஒவ்வொரு மொழிக்கு ஒருவராக மூன்று உப அதிகாரிகள் தணிக்கைக் கடமையில் இருப்பார்கள. வானொலிச் செய்திகளைத் தணிக்கை செய்வது இவர்கள் தொழில். கொழும்பு இலங்கை வானொலித் தமிழ்ப் பிரிவில் ஒலிபரப்பாகும் பாடல்களும் ஒரு வகைத் தணிக்கைக்கு உட்பட்டன.

தமிழுணர்வைத் தூண்டும் எழுச்சி மிகு தமிழகத்தின் திரைப்படப் பாடல்களுக்கு நிரந்தர தணிக்கை விதிக்கப் பட்டுள்ளது. “பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியெடா, அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானெடா” என்ற பாடல் பல வருடங்களாகத் தடை செய்யப் பட்டிருந்தது.

மேற்கூறிய தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் தமிழர்களும் நன்றாக வடிகட்டப் படுகிறார்கள் அவர்களுடைய அரசியல் தொடர்புகள் குடும்பப் பின்னணி போன்ற பலதரப்பட்ட விடயங்கள் புலனாய்வு செய்யப்படுகின்றன. ஓரு பணியாளருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் சொன்னார், நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவதற்குத் தமிழைப் பயன் படுத்துவதில்லை யார் எவர் என்று தெரியாத சக ஊழியர்கள் எம்மைப் பற்றித் தவறான முறைப்பாடுகளை மேலிடத்தில் செய்வார்கள் இதனால் எமது வேலை பறிபோகலாம் ஏன் வீண் வம்பு நாங்கள் வாய்திறவாமல் இருந்து விடுவோம்.

தமிழீழத் தேசியத் தலைவர்அவர்கள் நவம்பர் 27ம் திகதி அன்று ஆற்றும் மாவீரர் உரையின் போது இலங்கை வானொலியில் நடக்கும் கூத்து நகைப்பிற்கு இடமானது. பீபீசி தமிழோசை,புலிகளின் குரல் வானொலி என்பன அவருடைய உரையை முழு அளவில் ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இலங்கை வானொலி திரைப்பாடல்கள், நாதஸ்வரக் கச்சேரி என்பனவற்றை ஒலிபரப்பும்.

வானொலித் தணிக்கையின் உச்ச கட்டமாக புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் கிளிநொச்சித் தலைமையகத்தின் மீது தேசியத் தலைவரின் மாவீரர் உரை நடந்து கொண்டிருக்கும் போது சிறி லங்கா வான்படை குண்டு வீச்சு நடத்தியது. இந்த வகைத் தணிக்கையை வேறெங்கும் காணமுடியாது.

அரசுக்கும் ஊடகத்தறைக்கும் இடையிலான இழுபறி அல்லது போராட்டம் பற்றிய கற்கைக்கு இலங்கை சிறந்த களமாக அமைகின்றது. தகுதியுள்ள அதிகாரி மூலம் நடத்தப்பட்ட தணிக்கை பற்றி இதில் படித்தோம் அதன் வளர்ச்சியாகச் சுய- தணிக்கை என்ற வடிவத்தை இனிப் பார்ப்போம்.

சுய தனிக்கை (self -censorship) என்பது பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும் தாமாகத் தமது வெளியீடுகளைத் தணிக்கை செய்ய வேண்டும். இது தகுதியுள்ள அதிகாரியை நியமிக்கும் தேவையை இல்லாமல் செய்வதோடு பொறுப்பை ஊடகங்களின் மடியில் தூக்கிப்போடுகின்றது.

சுய தணிக்கைச் சுமை மிகப் கொடியது எதைத் தவிர்ப்பது எதைச் சேர்ப்பது என்று தெரியாமல் அது செய்தி ஆசிரியர்களைத் தடுமாறச் செய்தது சிலர் ஆசிரியர் தலையங்கம் எழுதாமல் அது வெளிவரும் பகுதியை வெறுமையாக விட்டனர். இது அரசை அவமதிக்கும் பாரதூரமான குற்றமாகத் தண்டிக்கப்பட்டது.

அரசை விமர்சித்த பத்திரிகை நிறுவனத்தைத் தேசிய உடமையாக்கி ஒரு அரசுக்குத் துதிபாடும் அமைப்பை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்பு பிரதமர் சிறிமாவொ பண்டாரநாயக்காவுக்கு உண்டு. தனது குடும்பத்தையும் தனது சுதந்திரக் கட்சி ஆட்சியையும் விமர்சித்த ஏரிக் கரை பிரசுர நிறுவனத்தை (lake house publi shers) அவர் தேசியமயமாக்கினார்.

ஆசியாவின் முன்னணி நிறவனங்களில் ஒன்றான இந்த ஊடக ஸ்தாபனம் ஆங்கிலத்தில் டெயிலி நியூஸ், ஒப்சேவர் பத்திரிகைகளையும், சிங்களத்தில் தினமின, சிலுமினவையும் தமிழில் தினகரனையும் பிரசுரித்தது. மக்கள் மயப்படத்தி அனைவரையும் பங்குதாரராக்கி ஒரு நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பின் கீழ் இந்த நிறுவனத்தைக் கொண்டு வரப் போவதாக ஆரம்பத்தில் சிறிமாவோ சொன்னார்.

ஆனால் செய்யவில்லை என்பதோடு இந்த நிறுவனத்தை அரசின் தகவல் அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இவருடைய ஆட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த மாற்றுக் கட்சி அரசுகள் ஏரிக் கரை நிறுவனத்தைத் தனியார் மயப்படுத்தப் போவதாகச் சொன்னார்கள். அவர்களும் அப்படி ஒன்றும் செய்யவில்லை.

சிறிமாவோ ஊடகத்துறைக்கு எதிராகத் தொடுத்த போர் அத்தோடு முடியவில்லை இன்டிபென்டென்ற் நியூஸ்பேப்பர் குரூப் (independent newspaper group) என்ற பத்திரிகை நிறுவனத்தை முற்றாக இல்லாமற் செய்து மூடு விழா நடத்தினார்.

ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான பத்திரிக்கைகள் கொழும்பிலும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலும், பிரசுரமாகின. அமெரிக்கன் மிசனரிகள் ஆரம்பித்த மோர்னிங் ஸ்ரார் என்ற தமிழ்-ஆங்கிலப் பத்திரிகை மிகப் பழமையானது. ஆறுமுகநாவலர் ஆரம்பித்த இந்து சாதனம் என்ற தமிழ்- ஆங்கிலப் பத்திரிகை வயதில் சற்றுக் குறைந்தது இரண்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஈழநாடு, ஈழநாதம், வெள்ளிநாதம், போன்ற பழம் பத்திரிகைகள் நின்றுவிட்டன. உதயன், சுடர் ஒளி ஆகியன ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூத்த ஆசிரியர் வித்தியாதரனுக்கு இலங்கை அரசு செய்த வன்முறை மிகக் கொடியது. என்றாலும் துணிந்து வெளியிட்டு வருகிறார்.

இறுதியாக நடந்தேறிய ஈழப்போரைச் சாட்டாக வைத்து சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இளவல் பாதுகாப்புச் செயலர் கொத்தபாயாவும் ஊடகவியலாளர்கள் மீது தனிப்பட்ட போரைத் தொடுத்தனர். மகிந்த ராஜபக்ச வித்தியாதரனக்கு “நான் உனக்குச் சம்மட்டி அடி தருவேன்” (I WILL HAMMER YOU) என்று சொன்ன செய்தி பதிவில் இருக்கிறது.

தமது இன்;னுயிரைப் பாதுகாப்பதற்காக முதன் முறையாகச் சிங்கள ஊடகவியலாளர்களும் நாட்டைவிட்டு அவசர அவசரமாக ஓட்டம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஐபக்ச ஆட்சியில் தோன்றியது. இராணுவப் புலனாய்வாளர்களால் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட முன்னணிப் பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர். பலர் கடுமையாகத் தாக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டனர். பலர் காணமற்போய்விட்டனர்.

பத்திரிகையாளர் உரிமை பேணும் அமைப்புக்களின் கூற்றுப்படி அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிடும் ஊடகத்துறையினருக்கு மிகவும் உயிராபத்தான நாடு சிறிலங்கா என்று தெரிவிக்கப் படுகிறது. சுனவரி 08.2009ல் சுட்டுக்கொல்லப்பட்ட சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமத்துங்கவின் உயிரிழப்பிற்கு அவர் ஈழப்போர் தொடர்பாக வெளியிட்ட இரகசியத் தகவல்கள் காரணமாகும். ராஜபக்ச குடும்ப ஆட்சி தொடர்பாகவும் அவர் நெடுங்காலாமாக விமர்சனம் செய்தவர்.

இன்றைய இலங்கையில் அரசின் நிலைப்பாட்டிற்கு மாற்றீடாகச் செய்தி வெளியிடும் துணிச்சலுள்ள அச்சு ஊடகமோ எலத்திரினியல் ஊடகமோ இல்லை எனலாம். அரசோடு இணைந்து சிங்களத் தேசியவாதம் பேசும் ஊடகம் ஒன்றுதான் நிலைத்து நிற்கிறது.

அரசுக்கும் ஊடகத்திற்கும் இடையிலான போட்ட போட்டியும் இழுபறியும் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி விட்டன. அமெரிக்காவின் முதலாவது சனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்ரனுக்கும் அமெரிக்க ஊடகத்துறையினருக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் இருந்ததாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் அதே நிலவரம் காணப்படுகிறது.

ஆனால் சிறிலங்காவைப் போல் ஊடக நிறுவனங்களை இல்லா தொழித்தும் ஊடகவியலாளர்களைச் சுட்டுக்கொன்றும் காட்டாட்சி நடத்தும் பிறிதோர் நாட்டைக் காண்பது அரிதினும் அரிது.

Comments