வரலாற்றில் ஓடிய அதே பாதையால்...

முகமாலையில் மீண்டும் சிங்களப் படை பெரும் தோல்வி ஒன்றை சந்தித்திருக்கிறது. 2000ஆம் ஆண்டில் ஆனையிறவை கைப்பற்றும் நோக்கோடு நடத்தப்பட்ட தீச்சுவாலை நடவடிக்கை சிறிலங்காப் படையினருக்கு பேரழிவைக் கொடுத்தது. இந்த நடவடிக்கையில் 600 படையினர் கொல்லப்பட்டு 2500 பேர் காயமடைந்தனர்.

அதன் பிறகு 2006 ஓக்டோபரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையும் படுதோல்வியில் முடிந்தது. இதில் 300 படையினர் கொல்லப்பட்டும் 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2007 நவம்பரில் நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டது. இதில் 50இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு பல படையினர் காயமடைந்தனர்.இதற்கு இடையில் விடுதலைப் புலிகள் 2006 ஓகஸ்டில் நடத்திய வலிந்த தாக்குதலில் 400இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு 1000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தற்பொழுது நேற்று முந்தினம் புதன் கிழமை நடத்தப்பட்ட பாரிய படை நடவடிக்கையும் சிறிலங்காப் படையினருக்கு மரண அடியாக முடிந்திருக்கிறது. இதில் 175இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட 500 வரையிலான படையினர் காயமடைந்துள்ளனர்.மொத்தத்தில் முகமாலைக் களத்தில் நடந்த ஐந்து சண்டைகளில் ஏறக்குறைய 1500 படையினர் கொல்லப்பட்டும், 5000 வரையிலான படையினர் காயமடைந்தும் உள்ளர்.

முகமாலை போரரங்கு சிறிலங்காப் படையினரின் சவக்குழியாக இருக்கிறது.சிறிலங்கா அரசு ஒரு விடயத்தில் மிக அவதானமாக இருந்தது. கிழக்கில் நிலங்களை ஆக்கிரமித்ததன் பின்பு சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்து விட்டதாக கருதப்பட்ட படைவலுச் சமநிலை எக் காரணம் கொண்டும் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக மாறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. அதனால்தான் மன்னாரில் பெயர் அறிவிக்கப்படாத படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

பல மாதங்களாகச் சண்டையிட்டு கிழக்கை ஆக்கிரமித்ததன் பின்னர் சிறிலங்காப் படைகளின் கை ஓங்கி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாகவும் உலகை நம்ப வைப்பதில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றிருந்தது. 2006 ஒக்டோபரில் நடந்த முகமாலைச் சமர் சிறிலங்காப் படையினருக்கு பெரும் அழிவில் முடிந்த போதும் கூட, கிழக்கில் கிடைத்த வெற்றிகளை சிறிலங்கா அரசு தன்னுடைய பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.

அதன் பிறகு வான்புலிகளின் தாக்குதல்கள் சண்டையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. அப்பொழுதும் விடுதலைப் புலிகளால் இனி மரபுச் சண்டைகளை செய்ய முடியாது என்றும் சிறிலங்காப் படையினர் விரைவில் வன்னியையும் கைப்பற்றி விடுவார்கள் என்றும் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பரப்புரை செய்து வந்தது. இதை நம்பிக்கொண்டு ஒட்டுக்குழுக்களும், அவைகளின் ஊடகங்களும் இதையே எழுதி வந்தன.ஆயினும் சிறிலங்கா அரசுக்கு உள்ளுக்குள்ளே ஒரு அச்சம் இருக்கத்தான் செய்தது. வன்னி மீது ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு, அது தோல்வியில் முடிந்தால் நிலைமை தலைகீழாக மாறி விடும் என்பது சிறிலங்கா அரசுக்கு தெரிந்திருந்தது.

அதனால் எந்த ஒரு பெயரையும் வைக்காது மன்னாரில் ஒரு படை நடவடிக்கையை ஆரம்பித்தது.மன்னாரில் சில நூறு படையினரை ஈடுபடுத்தி மெது மெதுவாக முன்னேறி சில வாரங்களில் மடுவை கைப்பற்றி விட முடியும் என்று சிறிலங்கா அரசு கணக்குப் போட்டது. அது முடியாது போகவே சில ஆயிரம் படையினரை உள்ளடக்கிய அணிகளை சண்டையில் இறக்கி பல முனையில் முன்னேற முயன்றது. சிறிய நடவடிக்கைகளே இடம்பெறுவதாக வெளியில் சொல்லிக் கொண்டு பாரிய அளவில் சண்டையை நடத்திப்பார்த்தது. எதுவும் பலன் தரவில்லை.

கடந்த ஒரு வருடமாக மன்னாரில் சிறிலங்கா படையினர் தேங்கிப் போய் நிற்பதைப் பார்த்து, உலகம் உண்மையன கள நிலைமையை உணரத் தொடங்கியது. சிங்கள மக்களும் தமது அரசு தமக்கு பொய் சொல்கிறது என்பதை உணரத் தொடங்கினர்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் மிகப் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு சிறிலங்காப் படையினர் மடுவை நெருங்கினர். மடுவுக்குள் நுளைந்து மடுத் தேவாலயத்தில் ஒரு வெற்றி விழாவை நடத்தி விட சிறிலங்கா அரசு திட்டமிட்டிருந்தது.

கிறிஸ்தவரான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அந்த வெற்றி விழாவுக்கு தலைமை தாங்குவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தன.கடைசியில் கிறிஸ்தவ ஆயர்கள் மேற்கொண்ட முடிவால் மடுவை கைப்பற்றுவது சிறிலங்கா அரசுக்கு அர்த்தம் அற்ற ஒன்றாகி விட்டது. மடுமாதாவின் உருவச்சிலையை கிறிஸ்தவ மதகுருமார் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று விட்டனர். சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுக்களால் மடு தேவாலயம் சேதங்களை சந்தித்த நிலையில் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

இந்த நிலையில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். மடுமாதாவும் இல்லை, விழா நாயகனும் இல்லை என்று ஆனதன் பிற்பாடு மடுவை கைப்பற்றுவதில் சிறிலங்கா அரசுக்கு எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. அத்துடன் மடு தேவாலயத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் சிறிலங்காப் படையினரை மறித்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளை உடனடியாக தாண்டி வரவும் சிறிலங்காப் படையினரால் முடியவில்லை. (தற்பொழுது மடுவை சிறிலங்காப் படையினர் 500 மீற்றர்கள் வரையில் நெருங்கி விட்டதாக தெரியவருகிறது)

மன்னாரிலும் மணலாறிலும் சிறிய சிறிய முன்னகர்வு முயற்சிகளை தொடர்ந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்டு வந்தாலும், அவைகள் எவ்வித வெற்றியையும் அளிக்கவில்லை. அனைத்து முனகளிலும் விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பைக் கொடுப்பது சிறிலங்கா அரசுக்கு பெரும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. மன்னாரிலும் மணலாறிலும் விடுதலைப் புலிகள் காட்டி வரும் கடும் எதிர்ப்பினைக் கொண்டு, விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகள் அங்குதான் நிலைகொண்டுள்ளன என்று நம்பி சிறிலங்கா அரசு கணக்கு போட்டிருக்கக் கூடும்.

அதன் அடிப்படையில் முகமாலையில் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு அங்கு வெற்றி பெறலாம் என்று சிறிலங்கா அரசு கருதியிருக்கக் கூடும்.வழமைக்கு மாறாக சிறிலங்காவின் படைத் தளபதிகள் முகமாலையில் பெரும் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக முன்னறிவித்தல் செய்தனர். சிறிலங்காவின் படைத் தளபதி கூட ஈழப் போர் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு பெரும் போரை முகமாலை முன்னரங்கில் மேற்கொள்ளப் போவதாக கூறினார். ஆனால் சிறிலங்காப் படையினரிடம் வாய்வீரத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது.

வரலாற்றில் காணாத போரை நடத்தப் போவதாக சொல்லி விட்டு, ஏற்கனவே வரலாற்றில் நான்கு முறை கண்டது போன்று பெரும் இழப்பைச் சந்தித்து, படையினரின் உடல்களையும் ஆயுதங்களையும் இழந்து, ஏற்கனவே ஒடிய அதே பாதையால் சிங்களம் ஓடி விட்டது.கடந்த செவ்வாய்க் கிழமை சிறிலங்காவின் படைத் தளபதி சரத் பென்சகோ யாழ் குடாவிற்கு விஜயம் செய்திருந்தார். அன்றே சிறிலங்காப் படையினர் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலில் ஒரு டாங்கி முற்றாக அழிந்து போனது. அத்துடன் தமது முயற்சியை அன்றைக்கு சிறிலங்காப் படையினர் கைவிட்டனர்.

அதன் பிறகு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் எழுதுமட்டுவாளில் இருந்து சிறிலங்காப் படையினரின் இரண்டு ஆட்லறித் தளங்கள் அழிந்து போயின.ஆயினும் நடக்கப் போகும் விபரீதத்தை உணராது சிறிலங்காப் படையினர் அடுத்த நாள் தமது பாரிய படை நடவடிக்கையை ஆரம்பித்தினர். முன்னகர்ந்து சிறிலங்காப் படையினரை 500 மீற்றர்கள் தூரத்திற்கு முன்னேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதித்தனர்.

சரியான தருணம் வந்தவுடன் விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதலை ஆரம்பித்தனர்.விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலிலும், கண்ணி வெடிகளிலும், பொறிக் கிடங்குகளிலும் சிக்கி சிறிலங்காப் படை பேரழிவைச் சந்தித்தது. விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணியான சார்ளஸ் அன்ரனிப் படையணியும் முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலை வடபோர்முனை கட்டளைத் தளபதியான கேணல் தீபன் வழிநடத்தினார்.

உறுதியான தகவல்களின் படி 176 படையினர் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 500 வரையிலானோர் காயமடைந்தனர். அதில் 300 பேர் வரையிலானோர் மீண்டும் களத்திற்கு திரும்ப முடியாதபடி காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 4 யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டு, இரண்டு சேதமாக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.சிறிலங்கா அரசு புதிதாக உருவாக்கியிருந்த கவசப் படையணியை பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் 2006ஆம் ஆண்டில் சந்தித்ததைப் போலவே இம் முறையும் கவசப் படையணி பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் என்று சிறிலங்கா அரசு செய்து வந்த பிரச்சாரம் உண்மையல்ல என்பது இந்தச் சண்டையோடு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. விடுதலைப் புலிகள் பெரும் பலத்தோடு இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்கு இந்தச் சண்டை உணர்த்தி விட்டது.

முகமாலை ஊடான சிறிலங்காப் படையின் முன்னகர்வு என்பது சாத்தியம் அற்ற ஒன்று என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னாரிலும் மணலாறிலும் விடுதலைப் புலிகள் ஒரு ஆண்டாக நடத்தி வருகின்ற சண்டைகளும், முகமாலையில் நடந்த முறியடிப்புத் தாக்குதலும் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்கின்றன.

விரைவில் ஈழப் போரின் வரலாற்றில் காணாத அளவுக்கு ஒரு பெரும் போர் நடைபெறப் போகிறது. ஆனால் அதை நடத்தப் போவது சிறிலங்கா அரசு அல்ல.
வி.சபேசன் (24.04.08)

Comments