மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம்தமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதலாவது கட்டளைத் தளபதி ஆவார். 1993 ஆம் ஆண்டு வரையும் 1995-1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் அவர் அப்பொறுப்பை வகித்தார்.

தமிழர்களின் போரியல் திறமையை உலகுக்கு அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றியவர்.

அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிரிகேடியர் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்று விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments