இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவின் அரச தலைவர் முதற்கொண்டு அடிமட்ட சிப்பாய் வரை அதிர்ச்சியில் உறைந்து போன மாதம். மார்ச் 26 ஆம் நாள் அதிகாலை இரண்டு பற்றலியன் சிறப்புப்படை அணிகளைக் கொண்ட 1,200 விடுதலைப் புலிகள் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் தரையிறங்கியிருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி மற்றும் 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள் உட்பட 15,000 இராணுவத்தினர் ஆனையிறவில் இருக்க, 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள், 51, 52 ஆவது படையணிகள் மற்றும் 55 ஆவது படையணியின் சில பற்றலியன்கள் என ஏறத்தாழ 25,000 துருப்புக்கள், இதற்றுக்குப் பின்னால் இருக்க 1,200 விடுதலைப் புலிகள் நடுவில் தரையிறங்கிய துணிச்சல் தென் ஆசியாவை ஒருகணம் உறைய வைத்திருந்தது.

அதாவது, ஏறத்தாழ 40,000 படையினரின் அழுத்தங்களை சமாளிக்கும் திறன்கொண்ட சிறப்புப் படையணியே இந்த ஆபத்தான முயற்சியில் களமிறங்கியிருக்கும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஆம், விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உட்பட பல சிறப்புப் படையணிகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறப்பு கொமோண்டோக்கள், தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கியிருந்ததுடன், 3 கொம்பனிகளைச் சேர்ந்த 450 சிறப்புப் படையணிகள் சிறு நீரேரியைக் கடந்து ஏ-9 வீதியை பளைக்கும் - முகமாலைக்கும் இடையில் ஊடறுத்திருந்தனர். முதலில் இது ஒரு வழமையான ஊடறுப்பு தாக்குதல் என எண்ணிய அரசு பின்னர் நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்டது. இராணுவ இயந்திரம் வேகமாக சுழன்றது.

28 ஆம் நாள் காலை சந்திரிகா தலைமையில் பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியது. ஆனையிறவுக்கு ஆபத்து என்ற கூச்சல்கள் அங்கு பலமாக எழுந்தன. கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் கூட்டத்தின் முடிவில் ஒன்றை மட்டும் சந்திரிகா ஆணித்தரமாக கூறினார். அதாவது, நீங்கள் விரும்பிய ஆயுதங்களைக் கேளுங்கள், விரும்பிய படைத் தளபதிகளை நகர்த்துங்கள். ஆனால், கேணல் பால்ராஜின் கொமோண்டோக்களிடம் இருந்து இழந்த பகுதியை மீட்டு விடுங்கள் என்பதே அவரது கோரிக்கை (இதனை மன்றாட்டம் என்று கூட கூறலாம்).

மேலும் அவர் ஒன்றையும் கூற மறக்கவில்லை. அதாவது, பிரிகேடியர் பால்ராஜை அங்கிருந்து வெளியேற்றும் வரை முப்படைத் தளபதிகளும் பலாலியில் தங்கியிருக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார். இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, வான்படைத் தளபதி ஏயர் மார்சல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் லயனல் பலேகல்லவுடன் பலாலிக்குப் பறந்தனர்.

தம்மால் சுமக்க முடிந்த ஆயுதங்கள், சிறிதளவு உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றுடன் விடுதலைப் புலிகள், அவர்களை வழிநடத்தும் தளபதி, அருகில் திட்டம் வகுத்து கொடுத்த தலைவர் அவர்களுக்கு துணை வழங்கும் பொருட்டு மற்றைய களமுனைகளின் தாக்குதல்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் தனது சிறப்புப் படையணிகளையும், அதீத சுடுவலுவையும் கொண்டு விடுதலைப் புலிகளால் ஊடறுக்கப்பட்ட 4 கி.மீ அகலமான ஏ-9 வீதியை கைப்பற்ற தாக்குதலை ஆரம்பித்தது. சிறீலால் வீரசூரியவுடன் சந்திரிகா தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். 53 ஆவது படையணியின் வான் நகர்வு பிரிகேட் (53-2), சிறப்பு தாக்குதல் பிரிகேட் (53-4) என்பவற்றுடன் சிறிலங்காவின் பல பகுதிகளில் இருந்தும் தருவிக்கப்பட்ட சிறப்பு கொமோண்டோக்களும் இழந்த பகுதியை கைப்பற்ற தாக்குதலை தொடுத்தன.

34 நாட்கள் கடுமையான மோதல், நாற்புறமும் இராணுவத்தினர்.
எனினும் பிரிகேடியர் பால்ராஜின் கட்டளைகள் பிசகவில்லை. எம்-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும், டாங்கிகளையும் தாக்குதலில் இணைந்து கொண்ட போதும், விடுதலைப் புலிகளை இராணுவத்தின் சிறப்பு அணிகளால் பின்தள்ள முடியவில்லை. முதற் சமரில் ரி-55 ரக டாங்கியும், ரி-63 ரக துருப்புக்காவி வாகனங்கள் இரண்டு, யுனிகோன் கவச வாகனங்கள் இரண்டு என்பன அழிந்து போக இராணுவம் பின்வாங்கியது. இராணுவம் பல வழிகளில் முயற்சித்தது.

53 ஆவது பயைணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் காமினி கெட்டியாராட்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் றொசான் சில்வா ஆகியோர் மாற்றப்பட்டனர்.

மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரிய 53 ஆவது படையணிக்கு நியமிக்கப்பட்டார். சமர் தொடர்ந்தது. இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா களத்தில் இறக்கப்பட்டார். ஆனால் பலன் எதுவும் இல்லை.

சிறிலங்கா வந்திருந்த பிரித்தானியாவின் பாதுகாப்பு பிரிவுத் துணைக் கொள்கை வகுப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஜோன் றீத்திற்கும் நிலமையின் விபரீதத்தை விளக்கினார் லயனால் பலேகல்ல.

பாகிஸ்தான் வருமாறு அழைத்த ஜெனரல் பெர்சாவ் முசராஃப்பின் கோரிக்கையையும் புறக்கணித்தார் சிறீலால் வீரசூரிய.

செறிவான சூட்டு வலுவுடன் தாக்குதல் உக்கிரமடைந்தது. 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவும் மாற்றப்பட்டார். பிரிகேடியர் சிவாலி வனிகசேகரா நியமிக்கப்பட்டார். ஆனாலும் ஆனையிறவின் சரித்திரம் மாறிப்போனது.
ஆனையிறவின் இந்த சரித்திரத்தை மாற்றியமைத்தது, குடாரப்பு தரையிறக்கமே.

அதாவது ஆனையிறவுக்கான விநியோக வழிகளின் மூடலும், முற்றுகைச்சமருமே அந்தப் பெரும் தளத்தை வீழ்த்தியதுடன், 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுத் தளத்தை தக்கவைக்க இராணுவம் மேற்கொண்ட கட்டைக்காட்டு தரையிறக்கத்தை குடாரப்பு தரையிறக்கம் சமப்படுத்தியது.

தற்காப்புத் தாக்குதலுக்கு ஏற்றதே ஆனையிறவு களமுனை என்ற கருத்தை தாக்குதலுக்கு ஏற்றதாக மாற்றிய தேசியத் தலைவரின் திட்டத்திற்கு களமுனையில் செயல்வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.

'சிறந்த ஒரு போர் வீரன் மேலதிக உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. தன்னிடம் உள்ள வளங்களே அவனுக்குப் போதுமானது" என்ற சீனப் போரியல் மேதை சன் சூ வின் கருத்துக்களை குறுகிய வளங்களுடன் குடாரப்பு தரையிறக்கத்தில் சாதித்த மிகச்சிறந்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.
போரில் புதிய உத்திகளையும், பெரும் வெற்றிகளையும் நிலைநாட்டிய கட்டளைத் தளபதிகளுக்கு உலகின் சரித்திரத்தில் நீங்காத ஒரு இடம் எப்போதும் இருப்பதுண்டு. இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் தாக்குதலை நெறிப்படுத்திய குநைடன ஆயசளாயட றுடைடயைஅ து. ளுடiஅ கி.மு 218 ஆம் ஆண்டுகளில் போரியலில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்திய ர்யnniடியடஇ ரோமன் இராணுவத்தை திணறடித்த மிகச்சிறந்த போரியல் தளபதி இவர்.

வலிமை மிக்க எதிரியை பின்புறமாக தாக்கி அவர்களின் விநியோக வழியை மூடிய பின்னர், முற்றுகைச்சமரை நடத்தும் உத்திகளையும், புதிய படைக்கலங்களுடன் அதிர்ச்சிகரமான தாக்குதல்களை நடத்தும் உத்திகளையும் வகுத்து கொடுத்தவர் இந்த கானிபல். இவரது உத்திகளையே 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போரில் பயன்படுத்தியதாக அமெரிக்காவின் கட்டளைத் தளபதி தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போரின் சரித்திரத்தை மாற்றிய நோமன்டி தரையிறக்கத்தை வழிநடத்திய நேச நாட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் னுறiபாவ னுயஎனை நுளைநnhழறநச என சாதனை படைத்த தளபதிகளின் பட்டியல் நீளமானது. தமிழீழ வரலாற்றிலும் பல தளபதிகளின் வரலாறுகள் பதிவாகி இருந்தாலும், பிரிகேடியர் பால்ராஜின் போரியல் அனுபவம் வேறுபட்டது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைகளில் இருந்து மணலாற்றின் இதயபூமியை காப்பாற்றியதில் இருந்து, தற்போதைய அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி வரையில் பிரிகேடியர் பால்ராஜின் போரியல் அனுபவங்கள் ஒரு போரியல் புத்தகத்திற்கு ஈடானது.

1990 களில் நடைபெற்ற மாங்குளம், கொக்காவில் படை முகாங்கள் தகர்ப்பு
1991 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆகாய கடல்வெளி சமர்
1993 களில் மேற்கொள்ளப்பட்ட மண்கிண்டிமலை படைமுகாம் தகர்ப்பு
1993 ஆம் ஆண்டு நவம்பர் மேற்கொள்ளப்பட்ட பூநகரி படை முகாம் தகர்ப்பு
இதற்கு முன்னர் நடைபெற்ற யாழ்தேவி படை நடவடிக்கை முறியடிப்பு
1995 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புலிப்பாய்ச்சல் நடவடிக்கை
1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படட முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு (ஓயாத அலைகள் -01)
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பரந்தன் ஆட்டிலறி பீரங்கித்தளம் மீதான ஊடறுப்புச் சமர்
1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் செப்ரெம்பரில் நடைபெற்ற கிளிநொச்சி தளம் தகர்ப்பு (ஓயாத அலைகள் - 02)
1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் - 03
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவுப் பெரும்தளம் தகர்ப்பு
தீச்சுவாலை முறியடிப்பு


என்பன பிரிகேடியர் பால்ராஜ் வழிநடத்திய மற்றும் முக்கிய பாங்கு வகித்த சமர்களில் முக்கியமானவை.

இவர் பங்கு கொண்ட ஒவ்வொரு சமர்களுக்கும் ஒவ்வொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.

மண்கிண்டிமலை தாக்குதல் முதன் முதலில் 81 மி.மீ பீரங்கியை விடுதலைப் புலிகளுக்கு பெற்றுக்கொடுத்திருந்தது.

பூநகரிச் சமர் போர் டாங்கியையும், நீருந்து விசைப்படகுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தது.

முல்லைத்தீவுச் சமர் 122 மி.மீ பீரங்கிகளை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், இராணுவத்தின் 21 ஆவது படையணியின் 5 ஆவது பிரிகேட்டை முற்றாக அழித்திருந்தது.

இவ்வாறு இந்தச் சமர்களின் வரலாற்று முக்கியத்துவங்களும் அதனால் விடுதலைப் புலிகள் எட்டிய வளர்ச்சியும் அதிகமானவை. 1991 ஆம் ஆண்டு ஆனையிறவில் உக்கிரமடைந்த சமரை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் சிறப்புப்படையை அமைத்த போது, விடுதலைப் புலிகளின் முதலாவது சிறப்புப் படை றெஜிமென்டான சாள்ஸ் அன்ரனி றெஜிமென்டின் முதலாவது கட்டளைத்தளபதியும் பிரிகேடியர் பால்ராஜ் தான்.

முல்லைத்தீவில் ஒரு பிரிகேட் படையணிகளை முற்றாக அழிக்கும் திறன் பெற்ற விடுதலைப் புலிகள், ஆனையிறவில் ஒரு டிவிசன் படையினரை முற்றாக அழிக்கும் நிலைக்கு உயர்ந்ததற்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும் அதன் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் முக்கிய பங்காற்றியிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது. கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு சமர்களில் ஏற்பட்ட இழப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி கலைக்கப்பட்டதும் ஒரு போரியல் வரலாறு தான்.

எங்கே களமுனைகளில் தொய்வுகள் எற்பட்டாலும் அங்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும், பிரிகேடியர் பால்ராஜூம் களமிறக்கப்படுவார்கள். திடீரென நடத்தப்படும் சிறப்புத்தாக்குதல்களுக்கும் இதே நிலைமைகள் தான். 1993 களில் பூநகரி தளம் மீதான தவளைப் பாய்ச்சலுக்கு புலிகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளை இராணுவம் கிளாலியை நோக்கி யாழ்தேவி நடவடிக்கையை ஆரம்பித்தது.

யாழ்தேவியை தடம்புரளச் செய்ய ஒரு அதிரடி நடவடிக்கை தேவைப்பட்டது. பயிற்சி நடவடிக்கைகளில் எந்த மாற்றங்களும் எற்படாதவாறு இரண்டு கொம்பனி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையினர் (ஏறத்தாழ 250 பேர்) பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் களமிறக்கப்பட்டனர்.
பொட்டல் வெளிகளில் மண்ணுடன் மண்ணாக உருமறைந்து கிடந்த விடுதலைப் புலிகள் டாங்கிகள் சகிதம் நகாந்த படையினரை ஊடறுத்த போது, யாழ்தேவி தடம்புரண்டது.

ரி-55 டாங்கிகள் இரண்டும் தகர்க்கப்பட்டன. அவற்றில் ஒன்று நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் 1990 களின் நடுப்பகுதி வரை இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

'மிகச்சிறந்த போர் வீரன் தோல்விக்கான சாத்தியங்களில் இருந்து தனது படையணியை பின்னோக்கியே வைத்திருப்பான் ஆனால் எதிரியை தோற்கடிப்பதற்கான தருணத்தை அவன் தவற விடுவதில்லை" என்ற சீன போரியல் மேதை சன் சூ வின் கருத்துக்களுக்கான அர்த்தத்தை கற்பித்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.

இவர் வழிநடத்திய சமர்களே அதற்குச் சான்று பகரும்.
அராலி - கல்லுண்டாய் வெளியின் ஊடாக 1992 களில் பிரேமதாசா அரசு நகர்ந்து யாழ். குடாநாட்டை கைப்பற்றும் திட்டத்தை முன்னெடுத்த போது அதற்கான எதிர் நடவடிக்கைகளில் பிரிகேடியர் பால்ராஜ் முக்கிய பங்கு வகித்திருந்தார். அந்த நடவடிக்கையை தடுப்பதற்கு விடுதலைப் புலிகளிடம் இரண்டு திட்டங்கள் இருந்தன.

ஒன்று இராணுவத்தின் வட போர்முனை கட்டளைப் பீடத்தை சிறப்பு நடவடிக்கை மூலம் தகர்ப்பது. அது தவறினால் அராலித்துறையின் ஊ}டாக நகரும் படையினரை இலகு காலாட் படையினர் மூலம் எதிர்கொள்வது. புலனாய்வுதுறையும், சிறப்புப் படை கொமோண்டோக்களும் முதலாவது திட்டத்திற்கு அமைவாக செயற்பட்டுக்கொண்டிருக்க, பிரிகேடியர் பால்ராஜ் இரண்டாம் கட்ட நகர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

அராலித்துறை ஊடாக யாழ். நகர் நோக்கி நகரும் படையினரை கல்லூண்டாய் வெளியில் எதிர்த்து சமர் புரிவதற்கான ஆயத்தங்களில் அவர் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தார். போரில் காயமடையும் வீரர்களை முதலில் சிகிச்சை அளிப்பதற்கு என நிலத்திற்கு அடியிலான பதுங்கு குழி ஒன்று நவாலியின் ஒருமுனையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

போராளிகளும் மக்களும் அந்த வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், இராணுவ பச்சை நிறத்திலான பிக்-அப் வாகனம் ஒன்று சடுதியாக வந்து நின்றது. அந்த வாகனத்தில் இருந்து இறங்கியது, வேறு யாரும் அல்ல, பிரிகேடியர் பால்ராஜ் தான். பதுங்கு குழியின் பாதுகாப்பை பார்வையிட்ட அவர், அந்த மண்ணில் அமர்ந்து சாதாரண போராளிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதும், அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததும் அங்கிருந்தவர்களின் உற்சாகத்தை பல மடங்கு அதிகரித்திருந்தது.

அது மட்டுமல்லாது, போராளிகளுடன் மிகவும் இயல்பாகவும், நெருக்கமாகவும் பழகும் தளபதி அவர். எந்தக் களமுனையானாலும், போர் என்று மூண்டுவிட்டால் போராளிகளுக்கு அருகில் எப்போதும் அவர் நிற்பார் என்று போராளி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பிரிகேடியர் பால்ராஜைப் பொறுத்த வரையில் அவர் ஒரு போரியல் புத்தகம். அவரின் வரலாற்றை நான்கு பக்க ஏ-4 காகிதத்தில் அடக்கிவிட முடியாது.

களமுனைகளில் அரிய பல வெற்றிகளை ஈட்டுவதற்கு ஈடாக மிகச்சிறந்த பல தளபதிகளை உருவாக்குவதும் ஒரு சிறந்த தளபதிக்கான அழகு.

அதனையும் பிரிகேடியர் பால்ராஜ் மிகவும் தரமாகவே செய்து காட்டியிருந்தார். தற்போதைய களமுனைகளில் நிற்கும் அவரின் கைகளில் வளர்ந்த கட்டளைத் தளபதிகளின் வேகம் பல மடங்கானது.

தேசியத் தலைவரின் சிந்தனையில் பிரிகேடியர் பால்ராஜின் முயற்சியில் உருவான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பால்ராஜ் தற்போது இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த தளபதிகள் தற்போது அதனை வழிநடத்தி வருகின்றனர். போரின் கொடுமைகளுக்கு மத்தியில் இயற்கை காவு கொண்ட தளபதிகள் மற்றும் போராளிகளின் எண்ணிக்கைகளும் அதிகம். மேஜர் சோதியா, கேணல் ராஜு, தற்போது பிரிகேடியர் பால்ராஜ்.

விடுதலைப் புலிகளின் முதற் தாக்குதல் தளபதியும் திருமலை மண் தந்த முதல் போரளியுமான லெப். சீலன் 1983 களில் வீழந்த போது கலங்கி நின்ற உள்ளங்களில் உறுதியை பாய்ச்சியிருந்தது ஒரு வாசகம்.

அதாவது,

'இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை, விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை"

என்ற அந்த வாசகம், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதற் தளபதியின் இழப்பினால் உடைந்து போன உள்ளங்களை தூக்கி நிறுத்தவும் போதுமானது.

-வேல்சிலிருந்து அருஸ்-

Comments