‘சிறுத்தீவுத் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்’

இந்து சமுத்திர பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்தமுறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உரிமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.

மேலும் இலங்கையில் நடைபெறும் போரில் மக்கள் பெருமளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, சோமாலியா, சூடானின் டார்பர் பகுதி, பலஸ்தீனத்தின் காசா பகுதி, கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் போரினால் கடுமையான பாதிப்புக்களை அனுபவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது போரியல் குற்றம், இனஅழிப்பு (Genocide) போன்ற குற்றங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான கருத்துக்களை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மனிதாபிமான பணிகளுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்திருந்தார். அதேநேரம் உலகளாவிய ரீதியில் மக்களை பாதுகாப்பதற்காக உத்தியோகப்பற்றற்ற நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.

போரில் பாதிக்கப்படும் பல மில்லியன் மக்களுக்கு உதவும் முகமாக இந்த நிபுணர் குழு அமைப்பது முன்னேற்றகரமானது என கோல்ம்ஸ் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதனிடையே மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துவரும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தனது 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் , நீதிக்கு புறம்பான படுகொலைகள், எழுந்தமானமான கைதுகள், துன்புறுத்தல்கள் என்பன 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் மோசமடைந்து காணப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் மக்கள் பலவந்தமாக காணாமல்போகின்றனர் என்றும் படையினரோடு இணைந்துள்ள ஆயுதக்குழுவினரே இந்த கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருகையில் அரசின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களும் தலை துõக்கி வருகின்றன. இலங்கை அரசு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளது முக்கியமானது.

அரசின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை வடபோர்முனையில் உள்ள சிறுத்தீவு பகுதியில் அமைந்திருந்த இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்படை காவல்நிலை மீது விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் (Special Marine Wing) தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிறுத்தீவு, மண்டைதீவுக்கும் குருநகருக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய தீவாகும். அதற்கு அண்மையாக பூநகரியின் முனைப்பகுதி அமைந்துள்ளது. பூநகரியின் இந்த முனைப்பகுதியில் இருந்து 6 விசைப்படகுகளில் வந்த புலிகளின் ஈரூடகப்படையினர் அதிகாலை 1.30 மணியளவில் சிறுத்தீவில் அமைந்திருந்த படை நிலை மீது தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதாகவும், 3 படையினரின் சடலங்களும், ராடார் சாதனங்கள், 12.7 மி.மீ கனரக இயந்திரத் துப்பாக்கி, 60 மி.மீ மோட்டார் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் வெடிபெருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் கைப்பற்றிய ஆயுத தளபாடங்களில் ஏறத்தாள ஒரு டசின் நச்சுவாயு பாதுகாப்பு முகமூடிகள் (Gas Masks with Filters and Drinking Tubes) உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாள 12 தொடக்கம் 18 பாதுகாப்பு தரப்பினர் இந்த சிறிய முகாமில் பணியாற்றுவது வழமை. யாழ்.குடாநாட்டின் தென்மேற்குபுற நுளைவாயிலில் சிறுத்தீவு அமைந்திருப்பதனால் விடுதலைப்புலிகள் கடல் வழியாகவோ அல்லது ஆகாயவழியாகவோ யாழ்.நகர பகுதிக்குள் ஊடுருவுவதை கண்காணிப்பதே இந்த முகாமின் பிரதான நோக்கம்.

முதலில் சிறிய காவலரணாக காணப்பட்ட இந்த காவல்நிலையின் பாதுகாப்புக்கள், கடந்த வருடம் மே மாதம் நெடுந்தீவில் அமைந்திருந்த கடற்படையினரின் முகாம் விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக சிறிய ராடார் நிலை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டதுடன், ஏறத்தாள 2000 மீ. தூரவீச்சுக் கொண்ட 50 கலிபர் துப்பாக்கி, இலகு காலாட்படையினர் பயன்படுத்தும் 60 மி.மீ மோட்டார் என்பனவற்றுடன் இரண்டு பிரிவுக்குரிய (Section) தளமாக இந்த தளம் மாற்றமடைந்தது (பிரிவு என்பது இராணுவத்தின் மிகச்சிறிய பிரிவு, இது 7 தொடக்கம் 8 படையினரை கொண்டிருப்பதுண்டு)

பூநகரியின் கல்முனை புள்ளியில் (K-Point) உள்ள விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலையிடம் தொடர்பான தகவல்களை திரட்டும் மையமாகவும் இது தொழிற்பட்டு வந்தது.

அதிகாலையில் சமர் ஆரம்பித்ததும், சிறுத்தீவுக்கு அருகில் உள்ள மண்டைதீவு மற்றும் யாழ்.நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தளங்கள் உசார்படுத்தப்பட்டன. 2007 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அமைந்திருந்த கடற்படையினரின் முகாமை விடுதலைப்புலிகள் தாக்கிய போதும், 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டை சேர்ந்த இரு பற்றாலியன்கள் தரையிறங்கிய புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்தன.

ஆழம் குறைந்த யாழ்.கடல்நீரேரியில் நீருந்து விசைப்படகுகள் மற்றும் சாதாரண கண்ணாடி இழைப்படகுகளையே கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதுண்டு. எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குருநகரை அண்டிய பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் 3 உட்கரையோர ரோந்து படகுகள் (Inshore Patrol Vessel) கடற்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து நீருந்து விசைப்படகுகள் மண்டைதீவு கடற்படைத் தளத்திலேயே நிறுத்தி வைக்கப்படுவதுண்டு.

விடுதலைப்புலிகளின் தாக்குதலின்போது மண்டைதீவு கடற்படைத்தளத்தில் இருந்து நீருந்து விசைப்படகுகள் எவையும் உதவிக்கும் வரவில்லை. தாக்குதல் ஆரம்பித்ததும் இந்த காவல்நிலையத்துடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், மேலதிக உதவிகள் அங்கு சென்றடையும் முன்னர் விடுதலைப்புலிகள் தாக்குதலை முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இந்த மாதத்தில் அவர்களின் ஈரூடகப்படையினர் நடத்திய இரண்டாவது கடல்தரை இணைந்த நடவடிக்கை இதுவாகும். கடந்த 5 ஆம் திகதி அதிகாலை மன்னார் நகரத்தின் கரையோரம் அமைந்திருந்த கொந்தைபிட்டி காவல்நிலையத்தின் மீதும் ஈரூடகப்படையினர் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

அதிகாலை 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதுடன், ஒருவரது சடலமும், ஆயுத தளபாடங்களும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணியினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

கொந்தைபிட்டி மற்றும் சிறுத்தீவு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்கள் படையினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தீவில் தாக்குதல் ஆரம்பமாகியதும், கடற்படையினரின் வடபிராந்திய கட்டளைப்பீடம் உசார்படுத்தப்பட்டதுடன், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளை நோக்கி கடுமையான பீரங்கி தாக்குதல்களும் பலாலி தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் ஆயுதங்களையும், படையினரின் சடலங்களையும் விடுதலைப்புலிகள் எடுத்து சென்றது, அவர்களின் சிறப்பு படையணிகளின் நடவடிக்கைகளின் வேகம் தொடர்பான ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் கடற்புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதுடன், கடற்படையினர் இழப்புக்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த காலப்பகுதியில் 4 கடற்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன், கடல்வழி தரையிறக்கம் மூலம் இரண்டு தாக்குதல்களையும் விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மண்டைதீவு கடற்படை முகாம் மீதான ஈருடகப்படையினரின் தாக்குதலை தொடர்ந்து, நெடுந்தீவு தரையிறக்கம், மன்னார் கரையோர தரையிறக்கம், சிறுத்தீவு தரையிறக்கம் என ஈரூடகப்படையினரின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது.

அதிகமான நீரேரிகளையும், குடாக்கடல்களையும் கொண்ட பகுதி வடபோர்முனையாகும். இந்த பிரதேசத்தில் ஈரூடகப்படையினரின் தாக்குதல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இலங்கை கடற்படையினரும் ஈரூடக கொமோண்டோக்களை கொண்டுள்ளபோதும் அவர்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

1996 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்புலிகளின் ராடார் நிலையத்தை கைப்பற்ற அவர்கள் வான்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை (Operation Dirithara) தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து பெரும் நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.

எனினும் திருமலையின் திரியாய் காட்டுப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் திடீர் தரையிறக்கங்களை மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதுண்டு. மேலும் துறைமுகங்களையும், கடற்படையினரின் முக்கிய தளங்களையும் பாதுகாப்பதும் அவர்களின் பிரதான தொழில்.
ஆனால் விடுதலைப்புலிகளின் கடல் கொமோண்டோக்களின் நடவடிக்கை முற்றிலும் வேறுபட்டது.

அவர்கள் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் தரையிறங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப்புலிகள் தமது ஈரூடகப்படையினரை தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருவது அவர்களின் பயிற்சி நடவடிக்கையின் ஓரங்கமாக கூட இருக்கலாம் என படைத்துறை அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது பெரும் தாக்குதல் ஒன்று ஆரம்பிக்கும்போது விடுதலைப்புலிகள் தமது இலகுகாலாட் படையினருடன் ஈருடகப்படையிரையும் பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. ஈரூடகப்படையினரை பொறுத்தவரையில் விரைவாக தரையிறங்கி எதிர்த்தரப்பு பாதுகாப்பு அரண்களை தாக்கி அழிப்பதன் மூலம் இலகுகாலாட்படையினரின் நகர்வை இலகுவாக்கும் தன்மை கொண்டவர்கள்.

இந்த நோக்கத்திற்காகவே உலகின் வலிமை மிக்க நாடுகள் ஈரூடகப்படையினாரின் நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தாக்குதல் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருந்த படைநிலை ஒன்று விரைவாக தாக்கி அழிக்கப்பட்டது பல தரப்பிலும் பலத்த ஆச்சரியங்களை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே, குடிநீர் குழாய்களுடன் கூடிய நச்சுவாயு தடுப்பு முகமூடிகளை இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள், படையினரிடம் இருந்து கைப்பற்றி உள்ளதும், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


அதாவது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரி பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த தளத்தையும், மண்டைதீவு தளத்தையும் படையினர் பூநகரி கல்முனை பகுதி மீதான ஒரு அதிரடி நடவடிக்கைக்கு தயார்படுத்தி வந்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடபோர்முனையின் கட்டளை தலைமையகமான பலாலி கூட்டுப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தும் நோக்கத்துடன், மயக்க வாயுக்களை அல்லது இரசாயன புகை குண்டுகளை செறிவாக பயன்படுத்தி பூநகரியின் கல்முனை மீது படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

சிறுத்தீவு கடற்படை காவல்தளம் மீதான கடற்புலிகளின் தாக்குதல், படைத்தரப்பின் பாதுகாப்பு கட்டமைப்புக்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதாவது யாழ்.குடாநாட்டை சுற்றியுள்ள தீவுக்கூட்டங்கள் மற்றும் கரையோரப்பகுதிகளை பாதுகாப்பதற்கு பெருமளவான படையினரும், ஆயுதங்களும் அரசிற்கு தேவைப்படலாம் என்பது ஒருபுறமிருக்க, படையினரின் இரகசியத் திட்டங்களும் இந்த தாக்குதல் மூலம் அம்பலமாகி உள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

வேல்ஸிலிருந்து அருஷ்

Comments