பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு

கனடிய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக

உலகத் தமிழர் இயக்கம்- ஒன்ராறியோ வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2001 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சமூக அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் கனடிய அரசினால் சேர்க்கப்பட்டது இதுவே முதன்முறை ஆகும்.

இந்நடவடிக்கை உலகத் தமிழர் இயக்கத்துக்கும் பரந்துபட்ட கனடிய தமிழ்ச் சமூகத்துக்கும் பாரதூரமான அபாய ஒலி ஆகும். 1986 ஆம் ஆண்டில் உலகத் தமிழர் இயக்கம் ஒரு இலாப நோக்கற்ற குழுமமாக ஒன்ராறியோவில் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அது குடியமர்வு ஆலோசனை மற்றும் பண்பாட்டுச் சேவைகளை பல்லாயிரம் கனடிய தமிழர்களுக்கு வழங்கி வந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் அண்ணளவாக 200,000 கனடிய தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் கடந்த 20 ஆண்டுகளுக்குள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் ஆவர்.

தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் வேண்டிய எல்லாவித உதவிகளையும் செய்வதற்குக் காரணமாக உலகத் தமிழர் இயக்கம் இருந்துள்ளது.

கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற் பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புக்கள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உலகத் தமிழர் இயக்கம் வழங்கி வந்துள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பினாலும் மக்களின் நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த அமைப்பாகும். பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட காரணத்தால் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்டடத்தினை விட்டு உலகத் தமிழர் இயக்கம் வெளியேறுகின்றது.

இயக்குநர், அவை உறுப்பினர்கள் தங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

இன்று முதற்கொண்டு உலகத் தமிழர் இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். பொதுமக்களுக்கு உரிய நூலகமும் மூடப்படும். உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம், கனடிய அரசின் நடவடிக்கையானது ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் அல்லாது இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் இயக்கத்தைப் பட்டியலிட்டது சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கின்றது.

சிறிலங்காவின் பாரதூரமான மனித உரிமை மீறல்களை ஜக்கிய நாடுகள் அவை மற்றும் பொது மன்னிப்பு அவை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே. பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து வழக்காட முடிவு செய்துள்ளது.

கனடிய அரசின் இந்த நடவடிக்கையானது உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்து உரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக கருதுகின்றோம்.
உலகத் தமிழர் இயக்கத்தினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தமை எமது அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படியாக அமையலாம்.

எனவே கனடிய தமிழர்கள் இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்து விடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கின்றனர்.

ஆகவே உலகத் தமிழர் இயக்கத்தின் இயக்குநர் அவை இந்தப் (பயங்கரவாத) பட்டியலை எதிர்த்து நீதிமன்றத்தில் முழுப்பலத்தோடு வழக்காடுமாறு வழக்கறிஞர்களைக் கேட்டுள்ளோம் என்று உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்தார்.

கனடிய அரசியல் சட்டத்தைத் கனடிய நீதித்துறை உறுதியாகத் தாங்கிப் பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கின்றது. எனவே எமக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை முழு அக்கறையோடு முன்னெடுப்போம்.

இது தொடர்பில் உலகத் தமிழர் இயக்க வழக்கறிஞர்கள்
Marlys Edwardh, Adriel Weaver (Ruby & Edwardh, தொலைபேசி எண் 416-964 9664) மற்றும்
Barbara Jackman (Jackman & Associates), தொலைபேசி எண் 416-653 9964) ஆகியவர்களோடு தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments