ஈழத்தமிழர் மீதான கலைஞரின் வெறுப்பு வெளிப்படுகின்றது ? நெடுமாறன்

தமிழ்நாட்டை தமது இரண்டாம் தாயகமாக்கொண்ட ஈழத் தமிழ் மக்கள் மீதான முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெறுப்புணர்வு தற்பொழுது வெளிப்படுத்தப்படுவதாக, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்து, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள இன வெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு கருணாநிதி விதித்துள்ள தடை, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் செயல் என இந்த அறிக்கை கண்டிக்கின்றது.

தமிழ்நாட்டை மலையாளிகளும், மார்வாடிகளும், குஜராத்திகளும் சுரண்டுவதற்கு இடமளித்துள்ள கருணாநிதி, போர் முடிவடையும்வரை தமிழ்நாட்டில் தங்கியிருக்க முனையும் ஈழத் தமிழர்களை விரட்டியடிக்க முனைவதாகவும் கண்டிக்கப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களைக் கைது செய்து சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் வேலூர் கோட்டை அடைத்து வைத்த கருணாநிதியில் கடந்த கால செயற்பாடுகளை மக்கள் மறந்துவிடவில்லை எனவும், பழ. நெடுமாறனின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

முகாம்களுக்கு வெளியே வாழும் ஈழத் தமிழர்கள் மீதான கெடுபிடியை தனது கடந்தகால ஆட்சியிலும் கருணாநிதி நடைமுறைப்படுத்தியதுடன், அது தற்பொழுதும் தொடர்வதாகவும், ஈழத் தமிழர்கள் மீதான கருணாநிதியின் கெடுபிடிகளை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்கமாட்டாது எனவும், பழ.நெடுமாறன் தனது அறிக்கை ஊடாக கடுமையான கண்டனத்தை முன்வைத்திருக்கின்றார்.


Comments