சிங்களப் பேரினவாதத்துக்கு தமிழினம் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும்: துணைத்தளபதி அமுதாப்

சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழினம் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத்தளபதி அமுதாப் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்கவுரை ஆற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்கள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தவர்கள்.

எதிரியுடன் நேருக்கு நேர் மோதி சிறப்புப் படையணியின் மரபுக்கேற்ப வீரச்சாவடைந்தவர்கள்.

இம் மாவீரர்களின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம்.

இன்றைய அரசியல் சூழலை எடுத்துக்கொண்டால் மகிந்த அரசாங்கம் உலகம் எல்லாம் ஓடி போர்க்கலங்களை வாங்கிக் குவித்து படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழினம் கடந்த காலத்தில் கூட சிங்களப் படைகளின் போர் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது.

இந்த கிளிநொச்சி நகரம் கூட ஒரு காலத்தில் சிங்களப் படைகளின் வன்பறிப்புக்குள் இருந்து விடுதலைப் புலிகளினால் ஓயாத அலை - 02 நடவடிக்கை மூலம் மீட்டு எடுக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இன்றைய சிங்களப் படைகளின் போர் நடவடிக்கைகளை தமிழினம் முறியடித்து சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் காலம் நெருங்கி வருகின்றது என்றார் அவர்.

திருவையாறு வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அமுதன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.

லெப். கேணல் வாணனின் வித்துடலுக்கு தாய், தந்தையர் சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினர்.

மேஜர் ஜெயசீலனின் வித்துடலுக்கு தாய், உடன் பிறப்புக்கள் பேரனார் ஆகியோர் சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டினர்.

வீரவணக்க உரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.

மலர் வணக்கத்தைத் தொடர்ந்து இரு வித்துடல்களும் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுபடைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன.

மேஜர் ஜெயசீலன்

மேஜர் ஜெயசீலன் புலிகளின் குரல் கலைஞரும் போராளிப் படைப்பாளியும் ஆவார்.

புலிகளின் குரல் வானொலியில் கவிதை நிகழ்ச்சிகள் என்பனவற்றை எழுதியும் குரல் வழி வழங்கியும் வந்தவர் மேஜர் ஜெயசீலன் ஆவார்.

புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சிப் படைப்பாளராக விளங்கிய அதேவேளை இசைப் பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

குறும்படத்திலும் அவர் நடித்துள்ளார்.

அவரின் கவிதைத் தொகுதி ஒன்று நூலுருவாகி வரும் சூழலில் அவர் வீரச்சாவடைந்துள்ளார்.

Comments