மட்டக்களப்பில் பாரிய மனிதப் புதைகுழி! 16 பேரது எலும்பு எச்சங்கள் மீட்பு

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றார் தொலைவில் அமைந்துள்ள பாலமீன்மடு என்ற கடற்கரை கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடு கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றை தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


சுமார் ஐந்து அடி ஆழத்தில் கிட்டத்தட்ட 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தோண்டி எடுக்கும் போது 32 மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் மாவட்ட மஜிஸ்ரெட் நீதிமன்ற நீதவான் பி.இராம கமலன், மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஏ ரகுமான் முன்னிலையில் குறித்த புதைகுழி தோண்டப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட எலும்புத் துண்டுகள் எடுக்கப்ட்டு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பனிமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்ப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்தப் புதைகுழியில் கூடதலாக பெண்களின் உள்ளாடைகள் சிதைவடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் இந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், புதைகுழியில் இதுவரை 4 தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மனித புதைகுழியில் மேலும் எலும்புக் கூடுகள் காணப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்த மனித புதைகுழி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments