சுதுமலைப் பிரகடனம் - 1987 - 2008|

1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், நான்காம் திகதியன்று, அதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள்.

21 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத்தலைவர் ஆற்றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது.

தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று 21 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்று அவர் கூறிய கருத்துக்களையும், அவற்றை ஒட்டிப் பின்னாளில் அவர் ஆற்றிய உரைகளையும் இன்றைய காலகட்டத்தில் நாம் சிந்திக்க வேண்டியது பயனுடையதாகும் என்று நாம் கருதுகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான பார்வை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு சாதுரியமாகத் தக்க வைத்து, முன்னகர்த்தி வந்துள்ளது என்பதையும், அதனூடே இன்றைய அரசியல் நிலவரத்தைத் தர்க்கிப்பதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

21 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது 1987 ஆம் ஆண்டும் - ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அரசியல் கட்சிகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அல்ல! வரலாற்றில் முதல் தடவையாக, 'தமிழர்களின் பிரச்சனைக்கான ஒப்பந்தம் என்று கூறிக்கொண்டு", இரண்டு வேறு அரசுகளுக்கிடையே - அதாவது இந்திய அரசிற்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் அதுவாகும்.

இந்த இரண்டு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதியன்று கொழும்பில் இரண்டு அரச தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் என்று இந்த ஒப்பந்தம் குறித்து அன்று தெரிவிக்கப்பட்டது. இன்றும் சிலர் அவ்வாறே தெரிவித்து வருகின்றார்கள்.

ஆனால், தமிழர்களின் பிரச்சனைகளைத் 'தீர்ப்பதற்காக" உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்போது தமிழர்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை.

அவர்களுடைய ஒப்புதலோ, அங்கீகாரமோ பெறப்படவில்லை. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய நலன் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் தமிழர்களின் நலன் சார்ந்து இருக்கவில்லை.

இதனடிப்படையில், இந்த ஒப்பந்தம் குறித்துச் சில கருத்துக்களை முன்வைக்க விழைகின்றோம்.

இந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்கவில்லை.

ஆனால், கோட்பாடு ரீதியில் இரண்டு விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கைத் தீவில், வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் தாயகப் பகுதி என்பதுவும், தமிழர்களின் தாயகப் பகுதி பிரிக்கமுடியாத ஒரு பகுதி என்பதுவும், இந்த ஒப்பந்தத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டது.

ஏனெனில் இந்த ஒப்பந்தம் அடிப்படையிலேயே பல தவறுகளைக் கொண்டிருந்த ஒப்பந்தமாகும். தமிழ் மக்கள் என்கின்ற ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை, இந்த ~இந்திய-இலங்கை ஒப்பந்தம் மிகத் தவறாகச் சித்திரித்திருந்தது.

தமிழீழ மக்களின் பிரச்சினை என்பது, ஒரு தேசிய இனப்பிரச்சனை என்கின்ற அடிப்படை உண்மையை முற்றாக நிராகரித்துவிட்டு, இலங்கையில் வாழுகின்ற ஏதோ ஒரு சிறுபான்மை இனக்குழுவின் பிரச்சினை என்கிற வகையிலேயே இந்த ஒப்பந்தம் ஒரு தீர்வினைத் தேட முனைந்தது. இந்தத் தீர்வு இந்தத் தீவுக்கு பொருத்தமான தீர்வு அல்ல!

ஏனென்றால், இந்த ஒப்பந்தம் மிகத்தவறான, மிகப் பிழையான கோட்பாட்டை முன்வைக்கின்றது. அதன்படி இலங்கை மக்கள் ஒரு பல்லினச் சமுதாயமாக அதாவது PLURAL SOCIETY ஆக வாழுகின்றார்கள். இதற்குள் தமிழர்கள் என்பவர்கள் ஓர் இனக்குழு மட்டுமே! அதாவது, தமிழர்கள் என்பவர்கள் ஒரு ETHNIC GROUP மட்டுமே என்கின்ற வகையில்தான் இந்த இந்திய இலங்கை ஒப்பந்தம் எமது ஈழத்தமிழினத்திற்கு ஒரு 'வரைவிலக்கணத்தைத்" தந்துள்ளது.

இந்த விளக்கமானது தமிழீழ மக்களின் வரலாற்றையும், இருப்பையும் திரிபுபடுத்தி, அவர்களது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, தமிழ் மக்களின் தேசிய இனக்கோட்பாட்டையும், தேசியச் சுயநிர்ணய உரிமையையும் மறுதலித்து நிற்கின்றது.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். இதற்கு முன்னர் இடம்பெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்த தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளுக்கும் இந்த இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலம் ஆப்பு வைக்கப்பட்டது.

தமிழீழ மக்களின் அடிப்படைப் பிரச்சனை மாகாண சபையோ அல்லது மகாகாண சபைத் தேர்தல்களோ அல்ல! சிங்கள அரசு, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை, அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது என்று, இந்தியாவிற்கு நன்கு தெரியும்.

ஆனால், சிங்கள அரசு தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று இந்தியா நடித்தது. இவ்வளவற்றையும் தெரிந்துகொண்டு, தங்களின் பூகோள நலன் சார்ந்த ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு, அதனூடாகத் தமிழ் மக்களைப் பாதுகாக்கின்றோம் என்று சொல்லித் தமிழீழ மண்ணில் வந்து இறங்கிய இந்தியா, பின்பு தமிழ் மக்கள் மீது போர் தொடுத்து, பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று குவித்து, பாரிய அழிவுகளையும் ஏற்படுத்தியது.

ஆனால், கடைசியாக என்ன நடந்தது?

இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை இன்றைய சிறிலங்கா அரசு தூக்கி எறிந்து விட்டது.

தமிழர்கள் நலன் சார்ந்து செய்யப்படாத, ஆனால் தன்னுடைய பூகோள நலன் சார்ந்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை,

இன்று சிறிலங்கா அரசு தூக்கி எறிந்ததைக் கூட,

இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டுதான் உள்ளது.



மேற்கூறிய வரலாற்றுச் சம்பவங்களையும், தர்க்கங்களையும் மனதில் வைத்துக்கொண்டு, நாம் தமிழீழத் தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனத்தைச் சிந்தித்துப் பார்க்க விழைகின்றோம்.

நாம் இதுவரை சுட்டிக்காட்டிய விடயங்களை, 21 ஆண்டுகளுக்கு முன்னரேயே விளக்கியிருந்த எமது தேசியத் தலைவர் பின்னாளில் இவ்வாறுதான் நடக்கும் என்பதையும் தீர்க்கதரிசனமாக அன்றே தெரிவித்து இருந்தார்.

'சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டிராத இந்த இந்திய - இலங்கை ஒப்பந்தம் எமக்கு மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தராது என்று தமிழீழத் தேசியத் தலைவர் அன்று தெரிவித்திருந்தார்.

'இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை" என்று தீர்க்க தரிசனமாக கூறிய எம் தலைவர் மேலுமொரு முக்கிய விடயத்தையும் அன்று - அதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பு - சுதுமலையில் தெரிவித்திருந்தார்.

'இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது" என்றும், 'இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது" என்றும் தனது கருத்துக்களை அன்று தலைவர் கூறியிருந்தார்.

இங்கே சிங்களப் பேரினவாதத்தின் செயற்பாடு குறித்து தலைவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இன்று இது தெட்டத்தெளிவாக, வெட்டவெளிச்சமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இதன் அடிப்படையில்தான் இன்னுமொரு உட்கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க முனைகின்றோம். 'இப்படிப்பட்ட பொருத்தமற்ற, தூக்கியெறியப்படக் கூடிய ஒப்பந்தத்திற்காக நாங்கள் எங்களுடைய போராட்டத்தையோ, இலட்சியத்தையோ கைவிடமுடியாது" என்பதுவே உட்கருத்தாகும்.

இந்த உட்கருத்தின் ஊடாகத்தான் தேசியத்தலைவரின் அடுத்த வசனங்களையும் நாம் அணுகிப் பார்க்கின்றோம். 'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்டத்தின் இலட்சியம் மாறப்போவதில்லை" என்று தலைவர் தெளிவாகச் சொல்வதன் மூலம் தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குரிய ஒரே ஒரு தீர்வு என்பதைத் தேசியத் தலைவர் உறுதிபட வெளிப்படுத்துகின்றார்.

'இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது" என்று தலைவர் அன்று சொல்லியதை இன்று இந்தியாவின் உளவுத்துறையே ஒப்புக்கொண்டு விட்டது.

இந்தியாவின் உளவுத்துறையான ~றோவின் முன்னாள் தலைவரான ஏ.கே.வர்மா என்பவர் இதனைக் கடந்த ஆண்டு (2007 இல்) ஒப்புக்கொண்டு உள்ளார்.

'இந்த ஒப்பந்தத்தால் விளைந்த நன்மைகள் என்னவென்றால், திருகோணமலைத் துறைமுகத்தில் (இந்தியாவிற்கு) விரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கும், வொய்ஸ் ஒப் அமெரிக்கா (VOA) வானொலி (இந்தியாவிற்கு எதிரான) பாரபட்சமான பரப்புரையை மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டதேயாகும்" என்று றோவின் முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா 20 ஆண்டுகளுக்கு பின்னர் (2007 இல்) தெரிவிக்கின்றார்.

இன்னுமொரு விடயத்தையும் வர்மா குறிப்பிடுகின்றார். 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான பிரச்சினை (தேசிய) அடையாளமாகும்.

தமிழ் மக்கள் தமது (தேசிய) அடையாளத்தைத் தக்கவைக்க விரும்புகின்றார்கள். ஆனால் சிங்களவர்களோ தமிழ் மக்களின் (தேசிய) அடையாளத்தை அழிக்க எண்ணுகின்றார்கள். இதன் காரணமாகத்தான் கடந்த அறுபது ஆண்டுக் காலமாக, எந்த விதத் தீர்வும் அங்கே கிட்டவில்லை" என்று வர்மா குறிப்பிடுகின்றார்.

(A talk at the National Defense College, New Delhi on July 16, 2007-Paper No 2312).ஆனால் இந்தியா அன்று இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இங்கே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்ற கருத்து ஒன்று உண்டு. மேற்கூறிய விடயங்கள் யாவும் இந்திய உளவுத்துறையான றோவிற்குத் தெரியாத விடயங்கள் அல்ல!

ஆனால் இந்திய அரசில், குறிப்பிட்ட ஒரு சாதியின் நலத்தை மட்டுமே பேணுகின்ற ~றோ உளவுத்துறையினர், எப்பாடுபட்டும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடவே முனைந்து வருகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று ~றோ மனப்பால் குடிக்கின்றது.

விடுதலைப் புலிகளை அழித்து விடமுடியாது என்பதும் ~றோவிற்கு நன்கு தெரியும். ஆனாலும் அதுதான் அவர்களது விருப்பமாக உள்ளது.

அவர்களுடைய ஆழ் மனது விருப்பம் விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதேயாகும்.

இதனைத்தான் திரு வர்மா இன்னொரு வகையில் கூறுகின்றார். 'தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு வார காலத்துக்குள் மண்டியிட வைத்து விடலாம் என்று இந்திய இராணுவம் எண்ணியிருந்தபடியால்தான் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்தது.

இந்த எண்ணம் பிழைத்துவிட்டது. இதற்குக் காரணம் இந்த நடவடிக்கை விருப்ப எண்ணத்தின் (WISHFUL THINKING) அடிப்படையில்; மேற்கொள்ளப்பட்டதேயாகும்" என்று வர்மா கூறுகின்றார்.

திரு வர்மாவின் இந்தக் கூற்று நாம் மேற்கூறிய தர்க்கங்களை நிரூபிப்பதாகவே அமைகின்றது.

இந்தியா தன்னுடைய பூகோள நலன் சார்ந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தை இன்று சிறிலங்கா அரசு தூக்கி எறிந்ததைக் கூட வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதற்குரிய காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது தற்கால அரசியல் நிலைமையைப் புரிய வைக்க உதவக் கூடும்.

இந்தியா இன்று அமெரிக்காவோடு ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கின்றது. தற்போது அமெரிக்கா இலங்கையில் மெதுவாகக் கால் ஊன்றி வருவதைத் தடுக்க முடியாமல் இந்தியா இருப்பதற்குக் காரணம், இந்தியா அமெரிக்காவோடு கொண்டுள்ள (புதிய) நெருங்கிய உறவேயாகும்.

அமெரிக்கா இலங்கையில் கால் ஊன்றும் விடயத்தில் இந்தியாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும், இதனைத் தடுக்க முடியாத 'இரண்டும் கெட்டான்" அரசியல் நிலையில்தான் இந்தியா இன்றும் உள்ளது.

இந்தியாவின் இந்த இக்கட்டான நிலையை, மகிந்த ராஜபக்சவின் அரசு சாதுர்யமாக, இந்தச் சூழலில் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகின்றது. இதனையும் இந்தியா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது. இவ்வாறு பார்த்துக் கொண்டு, வாய்மூடி மௌனமாக இருப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை என்பதைத்தான் வர்மாவும் ஒருவகையில் இப்போது கூறுகின்றார்.

இந்த விடயத்தில் எமக்கு ஒரு கருத்து உண்டு. தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதன் மூலம்தான் இந்தியாவின் நலன்களும் பேணப்படும்.

சிங்கள மக்களின் சிங்கள அரசுகளின் நலன்களைப் பேணுவதால் இந்தியாவின் நலன் பேணப்பட மாட்டாது என்பதுதான் எமது கருத்தாகும்.

இதனைத்தான் வரலாறும் ஒரு பாடமாகச் சுட்டிக்காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேசாமல், இந்தியா முரண்படுவதுதான் இந்தியாவின் இன்றைய சிக்கலாகும்.

இந்தச் சிக்கலைத்தான் சிறிலங்கா அரசாங்கமும் அமெரிக்காவும் பயன்படுத்தி இந்தியாவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

இதையும் இந்தியா உணர்ந்துதான் உள்ளது. ஆயினும் தெரிந்தே தன் நலனுக்கும் தமிழீழ மக்களின் நலனுக்கும் எதிராகத் தானே (இந்தியாவே) காரணமாக இருக்கின்றது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது மிக ஆழமாகச் சிந்தித்து நிர்மாணிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயமாகும்.

சிலருடைய நலன் சார்ந்து, சில கட்சிகளின் நலன் சார்ந்து இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதனால்தான் இந்தச் சிக்கல்கள் உருவாகின்றன என்பதை நாம் நீண்ட காலமாகச் சொல்லிக்கொண்டே வந்துள்ளோம்.

ஒரு குறிப்பிட்ட சாதியினரின் நலன் சார்ந்துதான் ~றோவின் பிராமணவாதிகள் திட்டங்களை வகுக்கின்றார்கள். இறுதியில் இது இந்தியாவின் நலனுக்கே எதிராக அமைகின்றது.


இனியாவது சிந்தியாதா இந்தியா?



இன்று நாம் இவ்வளவு விடயங்களையும் தர்க்கிக்க முனைகின்றபோது 21 ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத்தலைவர் எவ்வளவு தீர்க்க தரிசனமாக உரையாற்றியிருக்கின்றார் என்பதையும் எண்ணிப்பார்க்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் தன்னுடைய சுதுமலைப் பிரகடனத்தினூடாகச் சுட்டிக்காட்டியுள்ள இன்னுமொரு முக்கியமான விடயம் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையாகும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களின் தேசிய இனக்கோட்பாட்டையும், சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் தேசியத்தலைவரின் சுதுமலைப் பிரகடனம் முக்கியமாகச் சுட்டிக்காட்டுகின்றது.

தமிழீழ மக்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்துத் தேசியத் தலைவர் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றார். சுதுமலைப் பிரகடனத்தின் போதும், சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும், தன்னுடைய மாவீரர் தினப் பேருரைகளின் போதும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்துத் தொடர்ந்தும் தலைவர் வலியுறுத்தியே வந்துள்ளார்.

சிங்களப் பௌத்தப் பேரினவாதம், தமிழ் மக்களுக்கு எந்த விதமான நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான தீர்வையும், சமாதான முறையில் தராது என்பதைத்தான் வரலாறு சுட்டிக்காட்டுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளோடு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளைச் சிங்கள அரசுகள் கிழித்தெறிந்தன.

பிராந்திய வல்லரசான இந்தியாவோடு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு தூக்கியெறிந்தது. பின்னாளில் உலக நாடுகளின் அனுசரணையோடு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு தூக்கியெறிந்தது.

இடையில் எத்தனையோ பேச்சுவார்த்தைகளும், சர்வகட்சிக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்தன. சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சிறிதேனும் அசைந்து கொடுக்கவில்லை.

ஆகவே தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பிரகாரம் பிரிந்து சென்று தழிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

விரைவில் களநிலை மாறுகின்ற போது தமிழீழ மக்களின் வேட்கை நிதர்சனமாகுவதை நாம் காணுவோம்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பாரிய பரப்புரையை மேற்கொண்டு வருவதுதான் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தலையாய கடமையுமாகும்.!


-சபேசன் (அவுஸ்திரேலியா)-

Comments