ஜி-8 உச்சி மாநாடு உணவு விலையேற்றத்தைத் தடுக்குமா?

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் போது பெரும்பாலான நாடுகள் உணவு உற்பத்தி மற்றும் உணவில் சுயதேவைப் பூர்த்தி போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.

குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்நிலைமையை மிகத் தெளிவாக அவதானிக்க முடிந்தது. உலகமயமாக்கல் மற்றும் பிராந்தியமயமாக்கல் என்பவற்றைக்கொண்ட கருதுகோளின் கீழ் சுயதேவைப் பூர்த்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன.

இக்கருதுகோள் தனி ஒரு உலகளாவிய நகரமாக உலகை உருவாக்குகின்றது. எனினும் ஒரு நாட்டுக்குள் உற்பத்தி செய்வது ஒப்பீட்டு ரீதியில் பிரதிகூலமானதாக இருந்து வருவதாகக் கருதப்படும் பண்டங்களை இறக்குமதி செய்வது விவேக பூர்வமானதெனக் கருதப்பட்டது.

இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழ் உலக உணவுப் பாதுகாப்பு என்ற விடயத்தின் இயல்பினையும் ஒரு வளர்முக நாடு என்ற முறையில் இது இலங்கைக்கு எந்த அளவில் பொருந்துகின்றது என்பதனையும் பரிசீலனை செய்வதற்கு இப்பொழுது தருணம் வந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?

எல்லாக் காலங்களிலும் எல்லா மக்களினாலும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை என உணவுப் பாதுகாப்புக்கு வரை விலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.

உலக உணவு உற்பத்தியில் கணிசமான அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டு வந்திருந்த போதிலும் கடந்த தசாப்தத்தின் போது பல வளர்முக நாடுகளில் பட்டினியாலும் போசாக்கின்மையாலும் அல்லல்படும் மக்களின் அளவு அதிகரித்து வந்துள்ளது என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்தில் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் உணவுக்கான உச்சி மாநாடுகளில் ஒன்று 1996 ஆம் ஆண்டிலும் அடுத்த மாநாடு 2002 இலும் நடைபெற்றது.

இவ் இரண்டு மாநாட்டிலும் சர்வதேச சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவின்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் மூன்று ஐக்கிய நாட்டு மாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன் தரவில்லை. இறுதி இரண்டு உச்சி மாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர்.

150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது உலக உச்சி மாநாடு 12.06.2008 அன்று நடைபெற்றது. தற்போது 30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.

60 இற்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி தானியப் பற்றாக்குறை நிலவுகின்றது. இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒருங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி.மூன், ரோமாபுரி உச்சி மாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது 'சுவைபீறியாவில் அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்துள்ளேன் என கூறினார்.

பசி, பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் ஐ.நா ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் 'ஜோரெற்ஷிறான்" நாங்கள் துரிதகதியில் செயற்படாதவிடத்து உலகின் 100 கோடி வறிய மக்கள் இருநூறு கோடிகளாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களுக்குப் பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டிப்பானதால் அரைவாசியாகக் குறைந்துள்ளது எனக்கூறினார்.

உரோமாபுரியைத் தளமாகக்கொண்ட உணவு விவசாய நிறுவனத்தின் அனுசரணையில் மூன்று நாட்களாக நடைபெற்ற உச்சி மாநாடு பிரகடனப்படுத்துவதாவது, உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போசாக்கின் மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனமாகும். ஆனால் இப்பிரகடனம் பலன் தருமா? என்பதே அனைவரினது எதிர்பார்ப்பாகும்.

போதியளவிலான உணவு விநியோகம் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பை வழங்கி வந்தபோதிலும் அது குடும்ப உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதில்லை. கிடைக்கக்கூடியதாக இருக்கும் உணவு அது தேவைப்படும் மக்களை சென்றடைய வேண்டும். இது போதியளவிலான உற்பத்தி மற்றும் நிலையான விநியோகம் என்பவற்றின் மீதே தங்கியுள்ளது.

மறுபுறத்தில் உணவுப் பகிர்வு மக்கள் உணவை பௌதீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெற்றுக்கொள்ளும் நிலையை உறுதிப்படுத்தல் வேண்டும்.

உலகில் தாராளமாக உணவு இருந்து வருகின்றது. 1950 தொடக்கம் உலக உணவு உற்பத்தி குடித்தொகையின் வளர்ச்சியிலும் பார்க்க வேகமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. வறிய மக்கள் போதியளவிலான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்குமேயானால் உலக உணவு உற்பத்தி இதைவிடவும் துரித வேகத்தில் அதிகரித்திருக்க முடியும்.

இத்தகைய சாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட மனித குலத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் பட்டினியால் துன்புற்று வருகின்றனர்.

அனைத்து நாடுகளிலும் குடித்தொகை அதிகரித்து வருவதுடன் இணைந்த விகிதத்தில் உணவுக்கான கேள்வியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

உலகிலே வேகமாக அழிந்துவரும் விடயங்களில் ஒன்று விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை மக்கள் விவசாய நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து விவசாய நடவடிக்கையில் மக்களை ஈடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உலக உணவு நெருக்கடிக்கான காரணம்:-

உலக உணவு நெருக்கடிக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு பெருந்தொகை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் நிலவிய காலநிலை சீர்கேடுகள், உயிரியல் எரிபொருள் தயாரிப்பின் மீதான தீவிர நாட்டம், அமெரிக்காவின் ஸ்திரமற்ற கொள்கைகளால் தோன்றிய பொருளாதாரச் சரிவுஃஉலகில் அதிகளவு சனத்தொகை கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாட்டில் உள்ள மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மக்கள் தமது உணவில் அதிகளவு இறைச்சியைச் சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். 100 கலோரி சக்தியுடைய இறைச்சித்துண்டை உருவாக்குவதற்காக 700 கலோரி விலங்குணவைத் தயாரிக்க வேண்டும்.

விலங்குகளுக்கு உணவாக மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக உற்பத்தி செய்யப்படும் தானியங்களை விடவும் பலமடங்கு தானியத்தை உற்பத்தி செய்வது அவசியம். இது தானியங்களுக்கான கேள்வியை அதிகரித்து உணவு நெருக்கடிக்கு வித்திடுகின்றது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவடைதல் மற்றும் அதிகமாக கோதுமை விளையும், அவுஸ்திரேலியாவில் நிலவிய வரட்சி சோளம் முதலான தானிய வகைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எதனோல் முதலான இரசாயனங்கள் உயிரியல் எரிபொருட்களை உற்பத்தி செய்தல். இதனால் உணவு உற்பத்திக்கான விவசாய நிலங்களின் அளவும் குறைகின்றது. அத்துடன் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் விவசாயச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

இதுவும் உணவு உற்பத்திகளின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். அரிசி, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் போது உலக விநியோகஸ்தர்கள் பதற்றமடைகிறார்கள். அவர்கள் விநியோகிக்கப்படும் அரிசியை ஒட்டுமொத்தமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றார்கள்.

இதனால் விலைத்தளம்பல் ஏற்படுகின்றது. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் ஏற்றுமதியை நிறுத்தி விடுகின்றது. இதன் காரணமாக முற்றாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் தத்தளிக்கின்றன. இந்தியா, பிரேசில் போன்ற அரிசி ஏற்றுமதி நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டதை நாம் அறிவோம்.

ஜி-8 நாடுகளின் உச்சி மாநாடு யப்பானில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் அதிகரித்து வரும் கச்சாய் எண்ணெய் விலையுயர்வு, உணவுப் பொருட்கள் விலையேற்றம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பொருளாராதப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க சனாதிபதி புஷ் வறுமை ஒழிப்பு, உலக பொருளாதாரம், எரிபொருள் விலையு யர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என்பன குறித்து விவாதித்துள்ளார். இப்படி சிந்திக்கும் அமெரிக்காவில் விலைகளை நிலையாக வைத்திருக்கும் நோக்குடன் அமெரிக்கா மிகையுற்பத்தியாக உள்ள கோதுமையை அழித்து விடுகின்றது.

எனவே, இந்நோக்கம் கொண்ட அமெரிக்கா ஜி-8 நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளினூடாக உலக உணவுப் பிரச்சினையைத் தீர்க்குமா?

உலக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை:-

இரண்டாவது உலகப்போரின் பின்னர் குடித்தொகை திடீர் வளர்ச்சிப்போக்கில் சென்றது. விவசாயத்துறை உற்பத்தித்திறனில் வீழ்ச்சிப்போக்கில் சென்றது. உணவு உற்பத்திக்காக உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் பெரும்பகுதி எரிபொருள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. மக்களின் விலங்குணவு நுகர்வு அதிகரித்ததன் காரணமாக உணவுக்காக உற்பத்தி செய்யப்படும் ஒருபகுதித் தானியங்கள் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து சென்றமை போன்ற உலக உணவு பற்றாக்குறைக்கு பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

உலக உச்சி மாநாடுகளின் பிரகடனங்கள் எவையும் உலக உணவு உற்பத்தியை அதிகரிக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாடுகளும் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் பெரும் நிதியை உணவு உற்பத்தி அடிப்படை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கவேண்டும்.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடு நில ஆக்கிரமிப்புக்கும் பொருளாதார சீரழிவுக்கும் வித்திடக்கூடிய வகையில் யுத்தத்திற்கு கூடிய நிதியை ஒதுக்கியதன் விளைவே ஒரு விவசாய நாடான இலங்கையில் ஒரு கிலோக்கிராம் அரிசி நூறு ரூபா மேல் தென்பகுதியில் விற்கப்படுகின்றது.

எனவே, ஒரு நாடு உணவு உற்பத்தியில் மேம்பட வேண்டுமாயின் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

உட்கட்டமைப்புக்களான வீதி அமைத்தல், பாலம் அமைத்தல், நீர் வாய்க்கால்களை அமைத்தல், குளம் புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடுகளை மேற்கொள்ளல்.

விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கல், விவசாய கல்வியைப் புகட்டுதல் முறையான கமத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குதல். அத்துடன் பசளை, எரிபொருள் முதலான விவசாய உள்ளீடுகளுக்குரிய விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

இரசாயன உரவகைகளுக்கு தாக்குப்பிடிக்கக் கூடியதான கூடிய விளைச்சல் தரவல்ல பயிர் இனங்களை அறிமுகம் செய்தல் இவ்விடயங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு அரசும் நிதி ஒதுக்கீடு செய்து மேற்தரப்பட்ட செயற்பாட்டில் முதலீடு செய்தால் நிச்சயம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். 2100 ஆம் ஆண்டு உலக சனத்தொகை தற்போது இருக்கும் சனத்தொகையைவிட இரண்டு மடங்காக உயரும் நிலை இருப்பதால் உலக உணவு உற்பத்தியையும் இரண்டு மடங்காக அதிகரிக்க சகல தரப்பினரும் முன்வரவேண்டும்.


குடித்தொகை வளர்ச்சி (மக்கள் தொகை)

ஆண்டு வளர்ச்சியடைந்த நாடு வளர்முக நாடு உலகம்

1900 56 கோடி 107 கோடி 163 கோடி
1950 84 கோடி 1 68 கோடி 252 கோடி
1990 124 கோடி 408 கோடி 532 கோடி
2025 140 கோடி 710 கோடி 850 கோடி
2100 150 கோடி 1020 கோடி 1170 கோடி

சராசரி குடித்தொகை வளர்ச்சி விகிதம்

காலம் சராசரி குடித்தொகை வளர்ச்சி விகிதம்

1995 – 2000 1.37
2000 – 2005 1.27
2005 – 2010 1.20
2010 – 2015 1.12
2015 – 2020 1.03
2020 – 2025 0.90
2025 – 2030 0.81
2030 – 2035 0.70
2035 – 2040 0.59
2040 – 2045 0.51
2045 – 2050 0.45

(மூலம்-உலக குடித்தொகை போக்குகள்)

-க.பாலகிருஸ்ணன்-

வெள்ளிநாதம் (11.07.08)

Comments