தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்: பா.நடேசன் வேண்டுகோள்

பிற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே?

புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விடயம்.

இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடார்கள் வழங்குவதும், வானோடிகளுக்கு பயிற்சி அளிப்பதுமாகத் தொடர்ந்து உதவி செய்கிறதே?

இலங்கைத் தீவில் சிங்கள இராணுவம் தமிழ் மக்களை தொடர்ச்சியாகக் கொன்றொழித்து வருகிறது. அவ்வாறான ஒரு அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வது எமக்கு வேதனை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் அதிகளவில் தமிழர்களைக் கொல்வதற்கே இத்தகைய நடவடிக்கைகள் உதவும். இதை இந்திய அரசு விளங்கிக் கொண்டு இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு மருந்துப் பொருட்கள், பெற்றோல், வோக்கி டோக்கி கடத்தியதாகத் தமிழகத்தில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் புலிகள் முடக்கப்படுகிறார்களா?

அத்தகைய கடத்தல் விவகாரங்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு விசமப் பிரசாரம். தமிழ் ஈழ ஆதரவாளர்களைப் பயமுறுத்த சொல்லப்படும் பொய்யான பிரசாரங்கள்.

தமிழக மீனவர்களுக்கு சிறிலங்கா இராணுவம் நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டது. சில சமயங்களில் மீனவர்களை விடுதலைப் புலிகள்தான் தாக்குவதாகச் சொல்லப்படுகிறதே?

இது எமது போராட்டத்துக்கு எதிரான சக்திகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகள். தமிழக மீனவர்கள் எமது உடன்பிறப்புக்கள். நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உடன்பிறப்புகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுணர்வு மிக்கவர். ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்ற வகையில் ஈழத் தமிழரின் துன்பநிலை கண்டு கொதித்துப் போயிருக்கிறார். கலைஞரின் சொந்த உணர்வு தி.மு.க. என்ற பேரியக்கத்தின் உணர்வாகி, மற்ற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ஈழத் தமிழரின் எதிரிகள் திகைப்படையும் அளவுக்கு எழுச்சி அடைய வேண்டும் என விரும்புகிறோம்.

மத்திய அரசின் நெருக்கடிக்காக கருணாநிதி புலிகளிடம் கறாராக நடந்து கொள்வதாக நினைக்கிறீர்களா?

மத்திய அரசுக்கு எதிராக, தமிழ் உணர்வுடன் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியவர் கலைஞர். அவர் மத்திய அரசுக்குப் பணிந்து ஆட்சி நடத்துகிறார் என்று சொல்வது தவறு. எனினும், இந்திய- தேசிய அரசியல்- மாநில அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து ஈழத் தமிழரின் விடுதலைக்கு உதவ வேண்டியது அத்தியாவசியம் என்ற உண்மைக்கு கலைஞர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லையே!

இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதில் சந்திரிகா குமாரதுங்கா, ரணில் விக்கிரமசிங்க, மகிந்தா ராஜபக்ச ஆகியோரிடையே என்ன வித்தியாசம்?

எந்த வித்தியாசமும் இல்லை. சந்திரிகாவும், ராஜபக்சவும் வெளிப்படையாக இனவாதம் கக்கும் போர் வெறியர்கள். ரணில் விக்கிரமசிங்கவை மட்டும் உலகம் ஒரு சமாதானப் பிரியராக அடையாளப்படுத்துகிறது. உண்மையில், அவர் ஜெயவர்த்தன போல குள்ளநரித் தந்திரமுள்ளவர். ராஜபக்ச போர் நடத்துவதை அவர் ஆதரிக்கிறார்.

நெருக்கடி மிகுந்த இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் புலிகள் சொல்வது என்ன?

இந்திய - சீனப்போரின் போதும் இந்திய -பாகிஸ்தான் போர்களின் போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே சிங்கள அரசு எடுத்திருந்தது வரலாறு. அப்போதெல்லாம் ஈழத்தமிழர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டனர். ஆனால், இப்போது ஈழத்தமிழர் தமது சொந்த விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடும்போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுவதை நிறுத்தி, எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

பழ. நெடுமாறன் ஈழத் தமிழர் பிரச்சினை மூலமாகத் தனது நலனைப் பெருக்கிக் கொள்வதாகச் சமீபத்தில் கருணாநிதி கூறினாரே?

நீண்டகாலமாக எந்தவிதச் சலிப்பும் இல்லாமல் எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயற்படுபவர் நெடுமாறன் ஐயா. அவரது பணியை ஈழத்தமிழர்கள் என்றும் மனதில் இருத்தி மரியாதை செலுத்துவார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை பிரியங்கா சந்தித்ததை விடுதலைப் புலிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான உணர்வோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்.

Comments