தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் கரும்புலிகள் நாள்

தமிழர் தாயகத்தில் இன்று சனிக்கிழமை (05.07.08) கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்காரயன் கோட்டத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் அக்காராயன் கோட்ட அரசியல்துறையைச் சேர்ந்த திரு தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை அக்கராயன் கோட்ட சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர் அகிலன் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை அக்கராயன் கோட்ட நிர்வாகப் பொறுப்பாளர் குணா ஏற்றினார்.

கரும்புலிகளின் பொதுத் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி அலுவலர் ஜீவராஜ் ஏற்ற, மலர்மாலையினை அக்கராயன் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் சூட்டினார்.

கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை அக்கராயன் அபிவிருத்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயந்தி ஏற்ற, மலர்மாலையினை அக்கராயன் கோட்ட அரசியல்துறையைச் சேர்ந்த சுதா சூட்டினார்.

கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை அக்கராயன் அபிவிருத்தி நிறுவனக் கணக்காளர் விஜி ஏற்ற, மலர்மாலையினை ஒலி, ஒளி அமைப்பாளர் சிவா சூட்டினார்.

நினைவுரையினை அக்கராயன் கோட்ட நிர்வாகப் பொறுப்பாளர் குணா ஆற்றினார்.

அவர் தனதுரையில், "கரும்புலிகள் காலத்தால் அழியாதவர்கள். தமிழ் மக்களின் விடிவுக்காக சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக தம்மையே உயிராயுதமாக்கி இக்கரும்புலிகள் செய்த அர்ப்பணிப்பை ஏற்று நாம் இறுதிவரை உறுதியோடு போராடுவோம்" என்றார் அவர்.

பரந்தன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரில் கரும்புலிகள் நாள் தொடக்க நிகழ்வு பரந்தன் தேசிய பணிக் குழுச்செயலாளர் க.சபேசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் மணியரசன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக்கொடியினை பரந்தன் வட்டப் பொறுப்பாளர் இன்பன் ஏற்றினார்.

கரும்புலி மாவீரர் பொதுத்திருவுருவப்படத்துக்கு பரந்தன் காவல்துறை பொறுப்பதிகாரி ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.

கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு பரந்தன் மகாவித்தியாலய ஆசிரியர் ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார்.

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப்படத்துக்கு கோடன் வாணிபப் பணியாளர் ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார்.

தொடர்ந்து ஏனைய கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றப்பட்டு மாலைகள் சூட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முறிகண்டி கோட்டத்தில் இன்று சனிக்கிழமை கரும்புலிகள் நாள் சிறப்பு கலையரங்கம் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வு முறுகண்டி வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பு தலைமையில் இடம்பெற்றது.

நிழ்வில் பொதுச்சுடரினை அரசியல்துறை ஊர்திப் பொறுப்பாளர் அருள் ஏற்றினார்.

கரும்புலிகளின் பொதுத் திருவுருவப்படத்திற்கு கடற்கரும்புலி அன்புக்கனியின் தாயர் புஸ்பவதி சுடர் ஏற்ற, தந்தை நவசிவாயம் மலர்மாலை சூட்டினார்.

கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் சுடர் ஏற்ற, தூயவன் அரசறிவியல் கல்லூரியின் முதல்வர் அரசண்ணா மலர்மாலை சூட்டினார்.

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவுப்படத்திற்கு லெப். கேணல் நவம் அறிவுக்கூட கல்லூரியின் பொறுப்பாளர் சிவா சுடர் ஏற்ற, முறிகண்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை முதல்வர் சூசைநாதன் மலர்மாலை சூட்டினார்.

அரங்க நிகழ்வில் லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் போராளிகளின் இன்னிசை நிகழ்வும் கலையரசி ஆசிரியரின் நெறியாள்கையில் உருவான சங்கநாதம் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டன.

நிகழ்வில் அரசண்ணணா சிறப்புரை நிகழ்த்தினார்.

Comments