கிழக்கு வெற்றிக்கு மகிந்த அளித்த பரிசு மனித எச்சங்களே

கிழக்கு மாகாணத்தில் கோர இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு சிறிலங்கா அரசின் தலைவர் மஹிந்தா அங்குள்ள அப்பாவி பொதுமக்களுக்கு பரிசாக மனித எழும்புக் கூடுகளை கொடுத்து வருட இறுதியை கொண்டாடியுள்ளது. இதற்கு பிள்ளையான் ஒட்டுக்குழுவினர் வக்காளத்து வாங்குகின்றனர்.

2006ம் ஆண்டு நடுப்பகுதிலிருந்து திருகோணமலை மாவட்டம் மாவிலாறிலிருந்து தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தின் கொடிய இராணுவ நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தின் தமிழ் எல்லைக் கிராமங்கள் வரைக்கும் கோர போரினால் பாரிய உயிர் இழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்திய வண்ணம் நிறைவு பெற்றது.

தமது சொந்த மக்களை கொன்றொழிக்கும் சிங்கள இராணுவத்திற்கு துணை நின்றது மாத்திரமல்லது தமிழர்களின் வளங்களை சிங்களவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் பணியில் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தின் தமிழர்களின் பாரம்பரிய இடமான சம்பூர், மூதூர் கிழக்கு பகுதி வரை சுமார் 27 கிராம மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

அவர்களில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவார்கள் வான், பல்குழல் பீரங்கி, ஆட்லறி போன்றவற்றின் தாக்குதலினால் கொல்லப்பட்டார்கள். அதற்க சமமான தொகையினர் காயமடைந்தனர். இதேபோன்று மட்டக்கள்பபு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் படுவான்கரை வரைக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். சுமார் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் நிர்க்கதியானார்கள். இதனால் இதுவரைக்கும் தமது பழைய வாழ்வாதார நிலைக்கு வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இராணுவ நடவடிக்கையின் மூலம் தமிழர்களின் பல இடங்கள் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஒரு புறம் இடம்பெற்றுவரும் அதேவேளை இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல முடியாதவாறு சிறிலங்கா அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது.

அத்துடன் அதியுயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து அன்னிய நாட்டாருக்கும் தமிழர் வளங்களை விற்றுள்ளது. அது மாத்திரமல்ல அரைகுறையான அடிப்படை வசதிகளுடன் திருகோணமலை மாவட்ட மக்கள் வெறும் தரிசு நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்தின் கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு மீள்குடியேற்ற அமைச்சினால் மோசடி செய்யப்படுகின்றது.

ஒரு வாரகாலத்திற்கான உலர் உணவுப் பொருட்கள் கொடுப்பதாக தெரிவித்து ஒரு கிலோ கோதுமை மா, இரண்டு கிலோ அரிசி, ஐந்து நூறு கிராம் பருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொட்டணி ஒன்றை கொடுத்துவிட்டு இடம்பெயர்ந்தவர்க்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக விளம்பரம் செய்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் பெரும் துன்பங்களை எதிர் நோக்கிவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் 90 விகிதமானவை படுவான்கரையில் அமைந்துள்ளது. இந்த விளைநிலத்தில் வேளாண்மை செய்வதற்கு முடியாதளவுக்கு இராணுவம் பல கெடுபிடிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் குழு, என்றும் ஈ.பி.டி.பி குழுவினர் என்றும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து புதைக்கும் புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்ல பகல் முழுவதும் இராணுவம் கெடுபிடிகள், இரவு வேளையில் ஒட்டுக்குழுக்களின் அட்டகாசங்கள். கடுமையாக வியர்வை சிந்தி உழைக்கும் பணம் நகைகளை ஒட்டுக்குழுவினர் மிகவம் சுலபமாக ஆயுத முனையில் அபகரித்துச் செல்கின்றனர்.

கொள்ளையிட்டுச் சென்றவர்கள் ஒட்டுக் குழுவினர் என காவல்துறையில் முறையிடு செய்தாலும் அவர்கள் எவரையும் கைது செய்வதுமில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறானதொரு மனித புதைகுழியில் 21 பேரின் எச்சங்கள் அண்மையில் கடந்த 16.07.2008 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மறுநான் ஒரு மாதத்திற்கு முன்னர் ஆயுதக்குழுவினால் கடத்திச் செல்லப்பட்ட பொதுமகன் ஒருவர் கொம்மாறை இராணுவ முகாமுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் வளாகத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது.

அவ்வாறு அப்பாவிகளை படுகொலை செய்து அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டிக் கண்டுபிடிப்பது தான் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கை மீட்டு ஒருவருத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் ஆகும்.

இரு மாவட்டத்தில் அரைகுறையான அடிப்படை வசதிகளுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரையில் அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சானாறு, காஞ்சிரங்குடா, ரூபஸ்குளம் ஆகிய பகுதிகளில் இதுவரைக்கும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. காரணம் இப்பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்படவில்லை. என அரசாங்கம் மற்றும் சிறிலங்கா இராணுவம் சாட்டுக் கூறுகின்றது.

ஆனால் இப்பகுதியில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மக்கள் சொத்துக்களை அபகரித்து புதிய, புதிய இராணுவ முகாங்களை அமைத்துவருகின்றது. இப்பகுதி மக்கள் திருக்கோவில் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்நோக்கிய வண்ணம் தமது சீவியத்தை நடாத்திவருகின்றனர்.

இந்த மக்களின் நலன்களை கவனிப்பாறற்று இருக்கம் நிலையில் கிழக்கில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பதாகவும் இடம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாகவும் அரசாங்கம் வெளியுலகுக்கு படம் போட்டு காட்டுகின்றது.

கிழக்கு மக்களுக்கு விடியலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் கருத்தை இதில் இருந்து நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம் மாவட்டத்தின் நகர் பகுதி மற்றும் சுற்றுப் புறங்களில் சுற்றிவளைப்பு தேடுதல்களை தினம் தினம் மேற்கொண்டுவருகின்றனர்.

இது இவ்வாறிருக்க நகர் பகுதிகளில் வெள்ளை வானில் காரர்கள் இடம்பெயர்ந்த மக்களையும் அந்த மாவட்ட இளைஞர்கள், யுவதிகள், குடும்பஸ்த்தர்கள் என தினமும் கடத்திச் செல்கின்றனர்.

அதுமாத்திரமல்ல கொலை, கொள்ளை என அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையும் இராணுவம் மற்றும் ஒட்டுக்குழுவினர்கள் மீறிவருகின்றனர். மாவட்டங்களில் வர்த்தகர், குடும்பஸ்த்தர், உத்தியோகஸ்த்தர் என இனம் தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

திருகோணமலை, பிள்ளையான் குழு என தெரிவித்து பணம் நகைளை கொள்ளையிட்ட கும்பலை கைது செய்துள்ளனர். இது போன்று மட்டக்கள்பு மாவட்டத்தில் பிள்ளையான்குழுவினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அம்பாறை மாவட்டத்திலும் நான்கு பேர் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்கில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

யார் இதனை செய்கின்றார்கள் என கட்டுபிடிக்க முடியாதளவுக்கு செயலிழந்துள்ளது காவல்துறை. மறுபுறத்தில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர், காவல்துறை என கூட்டாகச் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலுக்கு மட்டும் குறைவில்லை.

கிழக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இந்த மாதம் 1ம் திகதி அம்பாறை மாவட்டத்தல் வைத்து இராணுவத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு நல்ல பாடம் புகட்டப்பட்டது யாவரும அறிந்த உண்மை.

விடுவிக்கப்பட்ட பகுதியில் நாட்டின் தலைவருக்கு கூட சுதந்திரமாக செல்ல முடியாத நிலையில் கிழக்கு மாகாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் என்ன அர்த்தம் உள்ளது என்பது தெரியவில்லை.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த மாகாணத்தில் 22 படைத்தரப்பில் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக தெரிவிக்கும் சிறிலங்கா அரசு ஒட்டுக்குழுக்களினால் மக்களின் பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமாக நடமாடி தமது வேலைகளை தூர இடங்களுக்கு சென்று செய்ய முடியாதளவுக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது என்ன சூழ்நிலை நிலவுகின்றது என அப்பகுதி மக்களை கேட்டால் ஐயோ அதைப் பேசாதீர்கள் நாங்கள் படும்பாடு இறைவனுக்குதான் தெரியும் என கூறுமளவுக்கு நிலையுள்ளது.

இவ்வாறான நிலையில் கிழக்கை மீட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதாக அரசாங்கம் பறையடிக்கின்றது.

-மகான்-

Comments