யாழ் குடாவை கைப்பற்றும் நடவடிக்கையும் மேற்குலகின் அழுத்தங்களும்

ஓயாத அலைகள் மூன்றாக பொங்கியெழுந்த விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பையும் ஆனையிறவையும் மீட்டு யாழ்ப்பாணத்தின் வாசல் வரை வந்து நின்றனர். அதற்கு மேல் அவர்கள் நகரவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியா மற்றும் சர்வதேசத்தின் கடும் அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

யாழ்குடாவில் சிக்குப்பட்டிருந்த நாற்பதினாயிரம் படையினரையும் மீட்பதற்கு சந்திரிகாவின் அரசு இந்தியாவின் உதவியை நாடி நின்றது. இந்தியாவும் அதற்கு சம்மதித்து கப்பல்கள் மூலம் படையினரை மீட்பதற்கு தயாரானது. யாழ்குடாவில் நின்ற ஈபிடிபி ஒட்டுக்குழுவினரும் படையினரோடு சேர்ந்து ஓடுவதற்காக மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டிருந்தனர்.

ஆயினும் விடுதலைப் புலிகளின் படையணிகள் யாழ் நகருக்குள் நுழையவில்லை. இந்தியாவின் இராணுவரீதியான தலையீடு எந்த விதத்திலும் இடம்பெறுவதை விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. அத்துடன் மேற்குலக நாடுகளும் விடுதலைப் புலிகள் யாழ்குடாவை கைப்பற்றுவது தொடர்பில் தமது விருப்பமின்மையை தெரிவித்துக் கொண்டிருந்தன.

இவைகளை விட இன்னும் ஒரு காரணமும் இருந்தது. வன்னிப் பெருநிலப்பரப்பையும் ஆனையிறவையும் மீட்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் மொத்தமாக 1336 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். சில ஆயிரம் போரளிகள் காயமடைந்திருந்தனர். மன்னார், வவுனியா, மணலாறு போன்ற இடங்களில் விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை தக்க வைப்பதற்கு போராளிகளை நிறுத்த வேண்டிய தேவையும் இருந்தது.

இந்த நிலையில் யாழ் குடா மீது மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு பாரிய நடவடிக்கைக்கு தேவையான அளவு ஆட்பலம் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இதே வேளை மறுபுறத்தில் நாற்பதினாயிரம் படையினர் யாழ் குடாவில் நிலைகொண்டிருந்தனர்.

ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பொழுது பெரும்பாலான படையினர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களும் கிளாலி முகமாலை தளங்களில் நிலை கொண்டிருந்தனர். ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டிருந்த போதும், யாழ் குடாவில் விடுதலைப் புலிகளை எதிர்கொள்ளக் கூடிய ஆளணி வளம் படையினரிடம் இருந்தது. ஓடுவதற்கு இடம் இல்லாத நிலையில் படையினர் தமது உச்சக் கட்ட எதிர்ப்பை காட்டுவர் என்பது எதிர்பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஒரு புறம் விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆட்பற்றாக் குறை. மறுபுறம் சர்வதேசத்தின் எதிர்ப்பு. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது ஒரு தாக்குதலை தொடங்கி, அதில் ஏதாவது ஒரு சிறு தவறு நேருமாக இருந்தால், நிலைமையே தலைகீழாக மாறி விடும். இவைகளை கருத்தில் கொண்டு யாழ் குடா மீதான தமது நடவடிக்கையை விடுதலைப் புலிகள் ஒத்திப் போட்டனர்.

விடுதலைப் புலிகள் தமது திட்டத்தை ஒத்தித்தான் போட்டார்களே தவிர, அதை கைவிட்டு விடவில்லை. 2006ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலை யாழ் குடாவை நோக்கி மேற்கொண்டிருந்தார்கள். ஆயினும் அந்த நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

தற்பொழுது விடுதலைப் புலிகள் யாழ் குடாவை கைப்பற்றம் பெரும் நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் மீண்டும் வரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த 19ஆம் திகதி விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது தாக்குதலை ஆரம்பிக்கப் போவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக சிறிலங்காப் பாதுகாப்புத் தரப்பு அறிக்கை வெளியிட்டும் இருந்தது. சிறிலங்காப் படையினர் உச்சபட்ச உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். சிறிலங்காவின் படைத் தளபதியும் யாழ் குடாவிற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் அப்படி எந்த ஒரு நடவடிக்கையையும் ஆரம்பிக்கவில்லை. அதே வேளை விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது பாரிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கப் போகின்றார்கள் என்று சிறிலங்கா அரசு உறுதியாக நம்புகின்றது. கடந்த வாரங்களில் விடுதலைப் புலிகள் யாழ் குடாவை நோக்கிய அதிரடித் தாக்கதல்களை நடத்தியிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியும் தரையிறக்க தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

தரையால் முன்னேறும் அதே வேளை கடல் மூலமாகவும் பல இடங்களில் தரையிறங்கி விடுதலைப் புலிகள் பெருந் தாக்குதல்களை நடத்தப் போகின்றார்களோ என்ற சந்தேகம் பல மட்டங்களில் நிலவுகின்றது. ஓமந்தையில் இருந்து கிளிநொச்சிக்கு பாதை அமைக்கும் நோக்கில் ஜெயசிக்குறு நடவடிக்கைய சிறிலங்கா அரசு நடத்திய போது, விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றி ஜெயசிக்குறு நடவடிக்கையை அர்த்தமற்றதாக்கினார்கள். சிறிலங்கா அரசும் ஜெயசிக்குறுவைக் கைவிட்டது. தற்பொழுது மன்னாரில் இருந்து யாழ் குடாவிற்கு பாதை அமைக்கும் நோக்கில் சிறிலங்கா அரசு படை நடவடிக்கையை நடத்துகின்ற போது, விடுதலைப் புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

மேற்குலகமும் இந்தியாவும் தற்பொழுது தீடிரென்று காட்டும் பரபரப்பிற்கும் இந்த யாழ் குடா மீதான விடுதலைப் புலிகளின் நடவடிக்கை பற்றிய எதிர்வுகூறலுக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்குமா என்ற கேள்வி எழுகின்றது.

கனடா “உலகத் தமிழர் இயக்கத்தை” தடை செய்தது. இத்தாலி முப்பதிற்கும் அதிகமான பணியாளர்களை கைது செய்தது. இந்தியாவின் உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்து விட்டு திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.


சிறிலங்கா அரசும், கனடாவில் உள்ள ஒட்டுக் குழுக்களும் உலகத் தமிழர் இயக்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காத கனடா, தற்பொழுது உலகத் தமிழர் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியிலில் இணைத்திருக்கிறது. இத்தாலியும் தன்னுடைய நாட்டில் வாழும் தமிழர்களை கைது செய்து விட்டு, விடுதலைப் புலிகளை கைது செய்திருப்பதாக சொல்லியிருக்கிறது.

சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்திருந்த மேற்குலகம் தமிழர்கள் மீதும் மீண்டும் அழுத்தங்களை பிரயோகிப்பதன் காரணம் என்ன?

தம்மை நடுநிலையானவர்களாக காட்டுவதற்கு மேற்குலகம் முனைகிறதா அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது செய்தியை சொல்ல விரும்புகிறதா?

தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக இந்தியாவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் எம்கே நாராயணன், சிவசங்கர் மேனன் போன்றவர்கள் திடீரென்று சிறிலங்காவிற்கு சென்று சில ஏற்பாடுகளை செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இவர்கள் மகிந்தவிற்கு கடும் ராஜதந்திர அழுத்தங்களை கொடுத்ததாக சில தமிழ் ஊடகங்கள் மகிழ்ந்து போய் செய்திகள் வெளியிட்டிருந்தன.

ஆனால் உண்மையில் இவர்கள் தமிழர் தரப்பிற்கே அழுத்தங்களை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.


சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தர இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் பெருந்தொகை இந்தியப் படையினர் சிறிலங்காவிற்கு வர இருக்கின்றனர். இந்தியக் கடற்படையும் சிறிலங்காவின் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட இருக்கிறது. எறக்குறைய மூவாயிரம் இந்திய இராணுவத்தினர் சிறிலங்காவிற்கு அனுப்பப்படப் போகின்றார்கள் என்ற செய்தி சில வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது. ஆனால் இந்தியத் தூதரகம் இதை மறுக்கின்றது. இந்திய இராணுவத்தினர் வரப் போவது உண்மை என்றும், ஆனால் மூவாயிரம் என்பது தவறான எண்ணிக்கை என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமர் வேறொரு நாட்டிற்கு செல்கின்ற பொழுது அவருடன் சில பாதுகாப்பு அதிகாரிகள் கூடச் செல்வது வழமை. ஆனால் பெருந்தொகையான இராணுவத்தினரும் கூடச் செல்வது என்பது வழமைக்கு மாறானது. இந்தியப் பிரதமருக்கான பாதுகாப்பை சிறிலங்காப் படையினராலேயே வழங்கக் கூடிய நிலையில் இந்திய இராணுவத்தினர் வரவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அதை விட இந்தியப் பிரதமருக்கு சிறிலங்காவில் அச்சுறுத்தல்களும் இல்லை.

ஆனால் இந்தியாவும் தன்னுடைய படைகளை சிறிலங்காவிற்கு அனுப்பி சில செய்திகளை தமிழர் தரப்பிற்கும், சிறிலங்காவிற்கும், சர்வதேசத்திற்கும் சொல்ல முனைகின்றது.

இந்தியாவும், மேற்குலகமும் தற்போதைய நகர்வுகள் மூலம் தமிழர் தரப்பிற்கு சொல்ல விரும்புகின்ற செய்தி என்ன?

விடுதலைப் புலிகள் யாழ் குடாவை கைப்பற்றுவதை தாம் விரும்பவில்லை என்ற செய்தியையா இவர்கள் சொல்ல விரும்புகிறார்கள்?

இந்த மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இப்படி பரபரக்கும் வகையில் விடுதலைப் புலிகளின் ஏற்பாடுகள் இருக்கின்றதா?


இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.

ஆனால் மேற்குலகின் அழுத்தங்களையும், தடைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு வான்புலிகளை களம் இறக்கிய விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது பாய்வதற்கு முடிவெடுத்து விட்டால், எந்தவித அழுத்தங்களுக்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

வி.சபேசன்

Comments