சார்க் மாநாடு சாதிக்கப்போவது என்ன?

"சார்க்' என சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகின்றதாகிய பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் தனது 15 ஆவது உச்சி மாநாட்டினை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது.

உண்மையில் 15 ஆவது உச்சி மாநாடு மாலைதீவில் நடத்தப்படவிருந்ததாயினும் அங்கு மாநாட்டை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலையற்றபடியால் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்கயூம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இம்மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து காணப்படும் நிலையில் மாநாட்டுக்கு வருகை தரவுள்ள தலைவர்களின் பாதுகாப்புக்கருதி அவ்வவ் நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் கொண்டு வரப்படவுள்ளனர்.

அத்தோடு தலைவர்களின் போக்குவரத்துக்கான வாகனங்கள், உலங்கு வானூர்திகள் போன்ற சாதனங்களும் கொண்டு வரப்படவுள்ளன. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளிலிருந்தே பெரிய எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படையினர் வருகை தரவுள்ளனர். "சார்க்' வரலாற்றிலேயே இவ்வாறான விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தெற்காசியா மிக வறிய பிராந்தியம்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 7 நாடுகளையும் உள்ளடக்கி கால் நூற்றாண்டுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பில் சென்ற உச்சி மாநாட்டின்போது ஆப்கானிஸ்தான் எட்டாவது அங்கத்துவ நாடாக இணைக்கப்பட்டது.

6 பில்லியனுக்கும் சற்று அதிகமான உலக சனத்தொகையில் ஏறத்தாழ 2 பில்லியன் மக்கள் சார்க் பிராந்தியத்தில் வாழ்ந்து வருகின்றனர். இப்பிராந்தியத்திலேயே அதிகளவு வறுமையும் நிலவி வருகின்றது. "ஒன்றுபட்டு வளர்வோம்' (Growing Together) என்பதே எதிர்வரும் மாநாட்டின் தொனிப்பொருள் என அறியக்கிடக்கிறது.

சார்க் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே இதுதான் என்ற எண்ணம் மங்கிப்போன நிலையிலேயே இன்று அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.

"சார்க்' கால் நூற்றாண்டுக்கு முன்னதாக அமைக்கப்பட்டதாயினும் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தக வளர்ச்சி 5.1% என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. அதாவது இப்பிராந்தியம் மிகக்குறைந்த அளவில் இணைக்கப்பட்டிருப்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஒப்பீட்டு ரீதியாகப் பார்ப்போமாயின் உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் (EU) எடுத்துக் கொண்டால் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 55% மட்டத்தில் உள்ளது. அதுபோலவே வட அமெரிக்க சுதந்திர வர்த்தக அமைப்பினை (NAFTA) எடுத்துக் கொண்டால் அது 50% ஆகவும் மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தினை (ASEAN) பார்க்குமிடத்து அது 5% ஆகவும் உள்ளதைக் காணமுடிகிறது.

இந்தவகையில் சார்க் பிராந்தியத்தின் உள்வாரி வர்த்தகத்தினை 2010 இல் 10% ஆக உயர்த்துவதற்கு 2008 கொழும்பு மாநாடு உறுதி பூணுமாயின் அது ஓரளவு முன்னேற்றகரமான நகர்வாயிருக்கும் என்பது சில பொருளியல் ஆய்வாளர்களின் அபிப்பிராயமாகும்.

அவ்வாறாயின் தான் ரூ.2.88 பில்லியன் செலவு செய்து இம்மாநாடு நடத்துவதில் சற்று பிரயோசனம் உண்டு எனலாம்.

எனினும் இந்த இலக்கினை எய்வதற்கு அங்கத்துவ நாடுகள் ஒன்றுபட்டு உறுதியாக உழைக்கத் தயாராகியிருக்கின்றனவா என்பது பெரிதும் கேள்விக்குறியாகியிருப்பது தான் மிகவும் கவலைக்குரியதாகும்.

ஏனென்றால், வர்த்தக ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் போன்றவை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகின்றன . உதாரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை (FTA) எடுத்துக் கொண்டால் 15 மில்லியன் கிலோ தேயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடானது வரிதவிர்த்ததும் அரசியல் ரீதியானதுமான வர்த்தக தடைகள் காரணமாக குறிப்பிட்ட தொகையில் 10% மட்டுமே நடைமுறைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே , இலங்கை பாகிஸ்தானுக்கு 15 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்ய முடியுமாயினும் கடந்த 2 வருடகாலமாக இது கிடப்பிலேயே உள்ளது. இதன் காரணமாக முன்னணி வகிக்கும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பிரசாரப்பட்டிருந்த இந்த வர்த்தக முயற்சியில் தாம் நம்பிக்கை இழந்துள்ளதாகத் அறிவித்திருந்ததோடு அண்மையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சியில் பங்குபற்றுவதற்கும் மறுத்து விட்டனர்.

தெற்காசியாவில் வர்த்தக ரீதியான ஒருங்கிணைப்பு மந்த நிலையில் இருந்து வருவதற்கான காரணமானது நீண்டகாலமாகவே பிராந்தியம் முழுவதிலுமுள்ள தலைமைகளின் திறமைக்குறைவு என்பதாகும்.

பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பொருளாதார நிலைப்பாடு அல்லது மாறி மாறிப்பதவிக்கு வரும் அரசாங்கங்களின் கொள்கை மாற்றங்கள் கூட குறித்த மந்த நிலைக்கான காரணமாகக் கொள்ளலாம் என பொருளியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ள அதேநேரத்தில், எதுவாயினும் உலகில் தெற்காசியா ஒருங்கிணைப்பு விடயத்தில் பின் தங்கியிருப்பதை உச்சி மாநாடு வெகு அக்கறையாக ஆராய்ந்து பிரதானமான வேலைத்திட்டத்தினை முடுக்கி விடுவது அவசியமெனவும் அறிவுரை வழங்கியிருப்பதைக் காண முடிகின்றது.

உணவு வங்கி உறக்கத்தில்

சார்க் பிராந்தியத்தில் எழக்கூடிய உணவு நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்காக அன்று 1988 லேயே ஒரு சார்க் உணவுப்பாதுகாப்பு மையம் உருவாக்கப்பட்டது. ஆனால், 14 வருடங்கள் கழிந்த பின்னர் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

பின்னர் 2007 இல் தான் அதற்குப் புத்துயிர் அளித்து? "உணவு வங்கி' என அடையாளப்படுத்தப்பட்டது. அதுகூட இன்று வரை ஏட்டளவிலேயே உள்ளது. எனவே, சார்க் நகர்ந்து கொண்டிருக்கும் நகத்தை வேகத்தையே இது எடுத்துக்காட்டுகின்றது.

இன்று உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி தலை தூக்கியுள்ள நிலையில் தெற்காசியாவிலேயே வறுமையும், பசி பட்டினியும் மிக மோசமான கட்டத்தில் இருப்பதால்

சார்க் தலைவர்கள் போதிய பொறுப்புணர்ச்சியும் கரிசனையும் கொண்டு பிராந்தியத்தின் அதிகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் நலன்கருதி காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்வார்களா?

உணவு வங்கி இயக்குநர் சபையின் அங்கத்துவ நாடுகளின் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளை கடுமையாகக் கண்காணித்து முக்கியமாக அரிசி, கோதுமை போன்ற பிரதான உணவு வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கு உழைப்பார்களா?

இன்று உணவு நெருக்கடியானது ஒரு பிராந்தியத்தினை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் பாதித்துவரும் நிலையில் எதிர்வரும் கொழும்பு உச்சி மாநாடு அதி முக்கியமான இவ்விடயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.

அடுத்து இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய இடர்பாடுகளை விலக்குவதற்கு அல்லது குறைப்பதற்கான செயற்பாடுகள் மீதும் உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசியப் பிராந்தியம் முழுவதிலும் கடல்கோள் அபாயம் வெள்ளப்பெருக்கு , புயல், பூகம்பம் போன்ற அனர்த்தங்கள் இடம்பெற்று வருவதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மீது அதிக கவனம் செலுத்துவதும் உச்சி மாநாட்டின் பொறுப்பாகும்.

அல்லாவிட்டால் பிராந்திய ஒத்துழைப்பு என்பது கேலிக்கூத்தாகிவிடும் எனலாம்.

பயங்கரவாத ஒழிப்பு

இந்தியாவுக்கு தனிப்பட்ட திடீர் விஜயம் ஒன்றினை சனியன்று மேற்கொண்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் சென்று ஆசிபெற்ற பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

சார்க் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கப்போகும் ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழிக்க உபாயம் வகுப்பதற்கே மாநாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என சூளுரைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டாக உழைக்க வேண்டுமென முன்னைய சார்க் மாநாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சார்க் நாடுகள் எத்தனையோ உடன்படிக்கைகளில் முன்னர் கைச்சாத்திட்டிருந்த போதும் அரசியல் கருத்தொருமிப்பும் உறுதிப்பாடும் இல்லாத நிலையில் அவசியமான ஆற்றலைக் கட்டி வளர்க்கத் தவறியுள்ளதால் தெற்காசியாவில் பயங்கரவாத நிலைமை மோசமடைந்து செல்வதாக முன்னாள் இந்திய இராணுவ உயர் அதிகாரியாய் விளங்கியவராகிய ஜெனரல் மல்லிக் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அவ்வவ் நாட்டில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான வரலாற்று ரீதியான அடிப்படைக் காரணிகளைக் கண்டு கொள்ளாமல் மேலெழுந்தவாரியாகவே இப்பிரச்சினை குறிப்பாக தெற்காசிய பிராந்திய ஆட்சித் தலைமையினால் நோக்கப்பட்டு வருகின்றது எனலாம்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருப்பதியில் கூறிய போது இலங்கையின் நிலைமை அவரின் மனதில் மேலோங்கி இருந்திருக்கலாம். அவரும் அடிப்படைக் காரணிகளை கண்டு கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றார் என்பதையே காண முடிகிறது.

இந்திய உபகண்டத்தில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எல்லை கடந்த பயங்கரவாதம் என இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாகப் பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருவதைக் காணலாம்.

காபுல் நகரில் இந்திய தூதரகத்தின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதை யாரும் அறிவர். அதன் சூத்திரதாரி பாகிஸ்தான் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் கொழும்பு உச்சி மாநாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

இவர்கள் பிராந்திய மக்கள் நலன் கருதி இதய சுத்தியாக மனம் விட்டுப் பேசி தமக்கிடையேயுள்ள பகைமை உணர்வுகளைக் களைவதற்குத் தலைப்படுவார்களா?

அல்லது தமது கொதிப்புகளை ஆவேசப்பட்டு வெளிப்படுத்துவார்களா?

என்பதில் தான் "சார்க்' அமைப்பின் எதிர் காலம் தங்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து "சார்க்' தனது வரலாற்றுப் பணியை இது வரை பார்க்கவில்லை எனலாம். உச்சி மாநாடுகளில் கூடிக் கூடிப் பேசி பிரகடனங்களை வெளியிட்ட துடன் மீண்டும் தூசு தட்டுவதற்குத் கூடுவது போன்றதொரு காட்சியை காணமுடிகிறது. இதற்கெல்லாம் எத்தனை ஆரவாரங்கள் எவ்வளவு காலமும் பணமும் விரயமாக்கப்படுகின்றது என்பது பரிசீலனை செய்யப்படுவதில்லை.

"சார்க்' பற்றி முன்னாள் அமைச்சர் ஹமீட் கூறியது

இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பதவி வகித்தவர்களின் ஏ.சீ.எஸ். ஹமீட் மிகப் பிரபல்யம் வாய்ந்தவராய் விளங்கியவர். நீண்ட காலமாக அப்பதவியை வகித்த அவர் பல ஐ.நா. அமர்வுகள் அணிசேரா நாடுகளின் அமர்வுகள் மற்றும் சில "சார்க்' அமர்வுகளிலும் பங்கு பற்றி வந்தவர். ஒரு காலக்கட்டத்தில் "சார்க்' தொடர்பாகக் குறிப்பிடுககையில் "சார்க்' இருட்டில் இருக்கின்றது' (SAARC IS IN THA DARK) என சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டிருந்தவர் அதேநிலையில் தான் "சார்க்' இன்றும் இருந்து வருகின்றது. என்ற அங்கலாய்ப்பைக் காண முடிகிறது.

குறிப்பாக "சார்க்' அமைப்பின் "பெரியண்ணன்' என எண்ணப்படும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அதிகம் வளைந்து கொடுத்து வருவதாகக் காணப்படுகிறது.

பாகிஸ்தான் நிலையும் அதே மாதிரியே உள்ளது. இன்று பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் வலுவிழந்துள்ள நிலையிலும் அமெரிக்கா அவரைப் பாதுகாப்பதில் முனைப்பாயிருக்கிறது.

அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்கும் இத்தகைய தலைவர்கள் தமக்கிடையேயுள்ள பகைமையை நீக்கி சுமுகமான நிலைமைகளை உருவாக்கி அதன் மூலம் "சார்க்' அமைப்பைப் பலப்படுத்த உழைப்பதற்கு ஏன் முன் வரக் கூடாது?

-வ.திருநாவுக்கரசு-

Comments