சிறிலங்கா இராணுவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம்

இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களை சிறிலங்கா படுகொலை செய்வதைக் கண்டித்தும் சிறிலங்காவை இந்திய அரசு தட்டிக்கேட்க வலியுறுத்தியும் சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது:

நான் கிஞ்சிற்றும் எதிர்பாராத அளவிற்கு இந்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

இது கழகத்திற்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையா? தமிழ்ப் பெருமக்களுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையா என்றால் நான் இந்த இரண்டிற்கும் பதிலாகச் சொல்ல விரும்புவது தமிழகத்தையும் சேர்த்து ஆண்டு கொண்டிருக்கின்ற மத்தியப் பேரரசுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலை என்பது தான் மிகப் பொருத்தமென்று நான் கருதுகிறேன்.

ஏனென்றால் இங்கே நம்முடைய தம்பி சுப.வீரபாண்டியன் எடுத்துக் காட்டியதைப் போல், ஏழெட்டு ஆண்டு காலம் அல்ல, பத்தாண்டு காலமல்ல, இருபதாண்டு காலமல்ல, 1956 முதல் நடை பெற்று வருகின்ற ஒரு நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் இன்றைக்கு நாம் ஒரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த அத்தியாயத்தை நாம் எழுதத் தொடங்குகின்ற வரையில் தமிழகம் - சிறிலங்கா அரசால், இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர்களால் எந்தெந்த வகையில் எல்லாம் வேதனைக்கு, சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து அவ்வப்போது நமது எதிர்ப்புணர்வை ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் அறநெறியோடு எடுத்துக்காட்டியும்கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறிலங்கா அரசு நடந்து கொள்வதும், அதைத்தட்டிக்கேட்க வேண்டுமென்று நாம் மத்திய அரசிடத்தில் முறையீடு செய்வதும் வழக்கமான ஒன்றாக நமக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக - கேட்டு கேட்டு மத்திய அரசுக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக ஆகி விட்ட சூழ்நிலையில் தான் இன்று நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.

நமது நிலை என்ன? நாம் எந்த அளவிற்கு இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறோம்? என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக சான்றுகளோடு எடுத்துக் காட்ட வேண்டிய, பட்டியல் போட்டுக்காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீன்ர்கள்.

ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்ற தமிழ்நாட்டு மீனவன் திரும்பி வருவது நிச்சயமா என்ற கேள்விக்குறியோடு செல்ல வேண்டியிருக்கிறது.

இயற்கையின் ஆவேசத்தால் திரும்பி வர முடியாமல் போகலாம்.

புயல் அடித்து, அதன் காரணமாக தான் செல்கின்ற கட்டு மரம் திசை மாறிப் போகலாம்.

அதனால் திரும்பி வராமல் போகலாம். ஆனால் இது அப்படியல்ல.

இன்று இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.

நாம் அதைத் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, இடையிலே இதற்கெல்லாம் காரணம், சில பேரால் கண்டுபிடிக்கப்படுகின்றது.

சில அரசியல்வாதிகள் காரணத்தைக் கண்டு பிடிக்கின்றார்கள்.

நான் அவர்கள் கண்டுபிடித்த காரணம் தவறு என்று சொல்ல முன்வரவில்லை.

ஆனால் அது மாத்திரம் காரணம் அல்ல என்பது எனக்குத் தெரியும், இந்தக் காரணத்தைச் சொல்கின்றவர்களுக்கும் தெரியும்.

கச்சதீவை நாம் விட்டுக்கொடுத்த காரணத்தால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கச்சதீவு என்றால் என்ன? அது எங்கேயிருக்கின்றது? என்பதே புரியாத மக்கள் பல பேர் உண்டு.

ஆனால் கச்சதீவு என்கிற ஒரு மந்திரத்தைச் சொல்லி, கச்சதீவை திராவிட முன்னேற்றக்கழக அரசு விட்டுக் கொடுத்து விட்டது, அதனால் தான் இந்தத் தீமைகளை எல்லாம் நாம் இன்று சந்திக்க நேரிடுகின்றது என்று சொல்கின்றவர்கள் உண்டு.

கச்சதீவை நாம் எப்போது இழந்தோம்? எப்படி கச்சதீவு தமிழக எல்லையிலிருந்து பறிக்கப்பட்டது? என்பதெல்லாம் சாதாரணமான விடயங்கள் அல்ல. சரித்திரச் சான்றுகளோடு நான் உங்களுக்கு விளக்க வேண்டிய செய்திகள் பல இருக்கின்றன.

இந்தக் கச்சதீவை இலங்கைக்கு அதோடு ஏற்பட்ட உடன்பாட்டின்படி விட்டுத்தருவது என்று 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இந்தியப் பிரதமராக இருந்த போது ஒரு முடிவெடுக்கப் பட்டது.

அந்த முடிவை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளாதது மாத்திரமல்ல, சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி கச்சதீவை விட்டுத்தர முடியாது என்று மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்கின்றோம்.

21-08-1974 அன்று கச்சதீவு பற்றி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சராக இருந்த நான் தான் முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானம் வருமாறு:-

"இந்தியாவுக்குச் சொந்தமானதும், (இந்த வார்த்தை களை நீங்கள் கவனிக்க வேண்டும். அது இலங்கைக்கு எந்த வகையிலும் உரிமை உடையதல்ல என்பதை முதல் வரியிலேயே தீர்மானத்திலேயே நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்)

தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சதீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்து கச்சதீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் சிறிலங்கா அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது" என்ற இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியவன் தான் இந்தக் கருணாநிதி என்பதும், அப்போது நான் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து ஆற்றிய உரையிலே மேலும் சில பகுதிகளையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

தீர்மானத்தின் மீது பேசுகையில் குறிப்பிடுகிறேன்-

"கச்சதீவு இலங்கைக்கு அளிக்கப்படக்கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்பவில்லை என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கின்றது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கச்சதீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது" என்ற வார்த்தைகள், அந்தத் தீர்மானம் பேரவையிலே முன்மொழியப்பட்ட நேரத்தில் என்னால் எடுத்துச்சொல்லப்பட்ட செய்திகளாகும். மேலும் பேசியிருக்கிறேன்.

"கச்சதீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதா மல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதில் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்குப் பிரதிநிதி களாக இருக்கின்ற எந்தக் கட்சிக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதற்கு எந்தவகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்."

நான் சொல்வதை நிரூபிக்கின்ற வகையில் - எந்தக்கட்சிக்கும் அதில் மறுப்பில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் தான் 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது ஜெயலலிதா அவர்கள் ஓகஸ்ட் 15 ஆம் நாள் சென்னை கோட்டையில் கொடியேற்றும்போது சொன்னார்கள் - கச்சதீவை மீட்டே தீருவேன் - என்று அன்று சொன்னார்கள் என்றால் ஏதோ ஒரு ஆவேசத்திற்காகச் சொன்னார்கள் என்று அல்ல - எல்லாக் கட்சிக்கும் கச்சதீவு தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு உரிமை உடையது என்கின்ற அந்த அழுத்தந்திருத்தமான எண்ணத்தின் அடிப்படையிலே தான் கச்சதீவை மீட்டே தீருவேன் என்று சொன்னார்கள்.

ஏன் இன்னும் அதை மீட்கவில்லை என்று நாம் கேட்கவில்லை. நானும் அதைப் பற்றி இன்று விமர்சிக்க விரும்பவில்லை.

ஏனென்றால் கச்சதீவு இன்று தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் ஒன்றாக ஆகியிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழக அரசைக் கலந்து கொள்ளாமல், நாம் கலந்து கொள்ள வேண்டிய நேரத்திலும் அந்த வாய்ப்பை நமக்கு அளிக்காமல் எமக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை என்பதை நாம் ஒரு குறையாக எடுத்துச் சொல்லியும் கூட, அதையும் பொருட்படுத்தாமல் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினார்கள்.

கச்சதீவு சிறிலங்காவுக்கு உரிமையுடையதாயிற்று.

அப்போது நாம் எடுத்து வைத்த வாதங்களில் அடிப்படையில் அப்படியே இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டாலும் கூட, கச்சதீவில் மீன் பிடிக்கும் உரிமை, இந்திய மீனவர்களுக்கு இருக்க வேண்டும்.

கச்சதீவில் இருக்கின்ற தேவாலயத்திற்குச் சென்று வருகின்ற - திருவிழாவுக்குச் சென்று வருகின்ற உரிமை இந்தியர்களுக்கு இருக்க வேண்டும் -

அங்கே தமிழக மீனவர்கள் வலை காய போடுவதற்கான உரிமை இருக்க வேண்டும் - அது தடுக்கப்படக்கூடாது

என்று இப்படிப்பட்ட பல உரிமைகள் எல்லாம் அந்த சரத்துக்களில் சேர்க்கப்பட்டன.

ஆனால் 1974 இல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு 1976 ஆம் ஆண்டு வாக்கில், விளைந்த நெருக்கடி நிலை - அவசரகால நிலையின் போது கடிதப் போக்குவரத்து நமது ஆட்சி இங்கே இல்லை, கலைக்கப்பட்டு விட்டது, அதைப் போல சிறிலங்காவில் உள்ள அதிபர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் அவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த இந்திய அதிகாரிகளுக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தில் அவர்களாக எழுதிக்கொண்ட சரத்தின் படி நமது உரிமைகள் எப்படியோ - பெற்ற உரிமைகள் இதாவது கிடைத்ததே என்று பெற்ற உரிமைகளும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

அதைப்பெறுவதற்காக நாம் இப்போதும் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

வாதாடிக் கொண்டிருக்கின்றோம், போராடிக்கொண்டிருக்கின்றோம்.

அதை யாரும் மறந்து விடக் கூடாது. இப்படி நான் சொல்வதற்கு காரணம், நமது உரிமைகளை எப்படியெல்லாம் பிறர் அபகரித்துக் கொள்கின்றார்கள் என்பதற்கும், அதை எந்த அளவிற்கு நாம் விட்டுத் தர வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டுவதற்குமே தவிர வேறல்ல.

நாம் விரும்பி எங்களுக்கு கச்சதீவு வேண்டாம், நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று விட்டு விடவில்லை.

நாம் தடுத்து நிறுத்தியும் கேளாமல்,

நாம் குரல் கொடுத்தும் கேளாமல், நமது குரலுக்கு மதிப்பில்லாமல் போய், கச்சதீவு சிறிலங்காவுக்குச் சென்றது.

சிறிலங்காவுக்குச் செல்லும் போது சில உரிமைகளை நாம் அதில் அடக்கி வைத்திருந்தோம்.

அந்த உரிமைகளும் அவரகால நிலைக் காலத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு அவைகளும் நம்மை விட்டு அகன்றது.

இன்று நாம் அந்த உரிமைகள் திரும்ப வேண்டுமென்பதற்காக வாதாடுகின்றோம்.

அப்படி வாதாடுவதின் எல்லை எதுவென்றால் கச்சதீவே எமக்கு திரும்ப வேண்டும் என்று சொல்கின்ற அளவிற்குப் போய் முடியும் என்பதை நான் எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஏன் இன்றைக்கு நம் முடைய மீனவர்கள் இந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்?

நான் நேற்று நமது மீனவர்களின் பிரதிநிதிகள் பத்து பேரை தலைமைச் செயலகத்தில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் இராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் 15 நாட்களாக தமது தொழிலுக்குப் போகாமல் - மீன்பிடிக்கச் செல்லாமல் பசியோடும், பட்டினியோடும் போராடிக்கொண்டு அறிவிக்கப்படாத உண்ணாநிலையை மேற்கொண்டு அவர்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களை எல்லாம் அழைத்துப் பேசி உங்களின் அமைதிப் போராட்டத்தை, அறவழிப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்பதற்காக அவர்களை அழைத்து நான் பேசினேன்.

அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்தார்கள். வந்தவுடனே அவர்கள் மாறி மாறி பேசிய வார்த்தைகளும், அவர்களின் கண்களில் இருந்து பொழிந்த கண்ணீரும் எந்த அளவிற்கு என்னை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதை என்னை உணர்ந்த நீங்கள் அறிவீர்கள்.

நான் அவர்களிடம் உங்களுக்கு என்ன செய்ய வேண்டு மென்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் என்றார்கள். என்ன ஆபத்து உங்களுக்கு வந்தது என்று கேட்ட போது, வாரம் ஒருவரை நாம் பலியிட வேண்டியிருக்கின்றது, இப்படி கடலுக்குச் சென்றவர்கள் எல்லாம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது, இந்த நிலையை நிரந்தரமாக மாற்றித்தர வேண்டும், அதற்கு நாங்கள் நம்புவது உங்களைத் தான், இந்த அரசைத் தான் நாம் நம்பியிருக்கின்றோம் என்று அந்த மீனவப்பெருமக்கள் எம்மிடம் சொன்ன போது, அவர்கள் சொல்லாமல் இருந்தால்கூட, நான் அதை கொஞ்சம் அலட்சியப்படுத்தியிருக்கலாம்.

"நாம் நம்புவது உங்களைத் தான்'' என்று அவர்கள் சொன்ன பிறகு - நம்பிக்கையை மோசம் செய்வது எனது குணம் அல்ல, நம்முடைய அரசின் கடமையும் அதுவல்ல, ஆகவே தான் இதில் நம்பிக்கை மோசம் செய்வதற்கு - செய்தால் யாரையோ செய்ததாக அர்த்தமல்ல, என்னையே நான் செய்து கொண்டதாகத்தானே அர்த்தம். தமிழனையே தமிழன் காட்டிக் கொடுத்ததாகத் தானே அர்த்தம். அவர்கள் கடற்கரையிலேயிருந்து தொழில் செய்வதால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவா? அவர்கள் உடலில் ஓடுகின்ற இரத்தம் தமிழ் ரத்தம் அல்லவா? அவர்களின் உடல், எலும்பு, தசை இவைகள் எல்லாம் தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்லவா? அவர்கள் விடுகின்ற மூச்சு அந்தப்புயல் காற்றை விட வேகமாக இன்று அடிப்பதற்கு என்ன காரணம்?

அவர்கள் படுகின்ற வேதனை அல்லவா? அந்த வேதனையைப் போக்க நமக்கு கடமை இல்லையா, அந்தக் கடமை தவறி கையிலே செங்கோல் பிடிப்பதற்கு என்ன யோக்கியதை நமக்கு இருக்கிறது என்று எண்ணிய காரணத்தாலே தான், உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள், அதைத்தர இந்த அரசு தயாராக இருக்கிறது என்று சொன்னேன்.

எமக்கு தரப்படுகின்ற நிவாரண நிதி, எமது குடும்பங்கள் அல்லற்படும்போது அவர்களைக்காப்பாற்ற அரசு தருகின்ற நிதி இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தப்பட வேண்டுமென்று கேட்டார்கள்.

நான் நிதி தருவதாக வாக்களித்தேன். என்னென்ன வாக்களிக்கப் பட்டிருக்கின்றது என்பது ஏடுகளிலே வெளிவந்திருக்கின்றது.

அதன்படி அவர்களுக்கு நிதி வழங்கப்படுகின்றது, தொடர்ந்து வழங்கப்படும்.

சுடப்பட்டு,

கொல்லப்பட்டு,

காயம் பட்டால் அதற்கு ஒரு தொகை,

அந்தக்காயம் சிறியது என்றால் அதற்கு நிவாரணத் தொகை,

அது பெரிய அளவிற்கான காயம் என்றால் அதற்கொரு தொகை,

ஒருவேளை உங்களில் ஒருவர் இறந்துபட்டால் அதற்கொரு தொகை -

அப்படி இறந்து போனதின் காரணமாக அந்தக் குடும்பமே வாழ வழியற்றுப் போனால், அந்தக் குடும்பத்தையே பொறுப்பேற்று கொள்கிற அளவிற்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் அதற்குப் பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றுவான் கருணாநிதி என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நாம் திரும்பப்பெறுகின்றோம் என்று சொல்லி இன்று கடலுக்குச் சென்றிருக்கின்றார்கள் தொழில் நடத்துவதற்காக.

நீங்கள் வேறு நான் வேறு அல்ல. நீங்களும் நானும் ஒன்று தான். நீங்களும் இந்த அரசில் வீற்றிருக்கின்ற அமைச்சர்களும் ஒன்று தான். நீங்கள் மீன் பிடிக்கின்றீர்கள். நீங்கள் பிடிக்கின்ற அந்த மீனை இன்னும் செம்மையான முறையில் தொழில் வளமாக ஆக்குகின்ற அளவிற்கு அந்த மீன் வளத்தை ஆக்குவதற்கு என்னென்ன செய்யலாம் என்பதையெல்லாம் பெரிய பெரிய தொழில் நிறுவன அதிபர்களையெல்லாம் அழைத்துப் பேசி அவர்கள் தமது சொந்தச் செலவில், மீனவர்களின் நலன்களுக்காக பல பயிற்சி நிறுவனங்களை நடத்த தயாராக இருக்கின்றோம் என்று சொல்லி, அதன் காரணமாக முட்டுக்காடு பகுதியிலிருந்து மீனவர்களுக்கு , அவர்களின் நல்வாழ்விற்கு, எதிர்கால வளத்திற்கு, பொருளாதார ஏற்றத்திற்கு சில காரியங்களை இந்த அரசு இன்று செய்கின்றது என்றால், மீனவர்களை எமது நண்பன் என்ற முறையில் தான், எமது தோழன் என்கின்ற முறையில் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எமது உடன்பிறப்பு என்கிற முறையிலே தான் அந்த மீனவர்களுக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம், பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே கச்சதீவு பிரச்சினை பற்றியெல்லாம் நான் பிரதமருக்கு தெரிவிக்கவில்லை,

நான் மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றெல்லாம் சொல்கின்றார்கள்.

தமிழ் நாட்டில் இதுபோன்ற ஒருமித்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகளில், தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் அரசியல் காரணங்களுக்காக அவைகளை முன்வைத்து தமது வேறுபடுத்திக் கொள்ளக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏனென்றால் நான் இந்தப் பிரச்சினையை பிரதமருக்கே தெரிவிக்கவில்லை என்கின்றார்கள். பிரதமருக்கு மாத்திரமல்ல, மத்தியில் இருக்கின்ற எல்லா அமைச்சர்களுக்கும் தெரிவித்திருக்கின்றோம். எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்திருக்கின்றோம். எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்திருக்கின்றோம்.

உதாரணத்திற்கு ஒன்றை உங்களுக்குச் சொல்லவேண்டுமேயானால் -

1974 ஆம் ஆண்டே, ஜூன் மாதம் 29 ஆம் நாள் சென்னை கோட்டையில் அனைத்து கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களோடு பேசி, அவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அன்றைய பிரதமருக்கு அன்றைய தலைமை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தைப் படித்துக்காட்ட விரும்புகின்றேன்.

கச்சதீவின் மீது சிறிலங்கா கொண்டாடி வரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இரு நாடுகளுக்குமிடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்று அன்றே, 1974 ஆம் ஆண்டே அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு. பேரவையிலேயே அப்போது நான் பேசியிருக்கின்றேன். அது என்ன தெரியுமா?

1974 - ஜூன் 27 ஆம் நாள் திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கின்றேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அவர்கள் அறிவிக்கவில்லை. 27 ஆம் நாள் பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நான் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாம் செயற்பட்டிருக்கின்றோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சதீவை சிறிலங்காவுக்கு அளிப்பதில் எந்தவிதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு, இன்றல்ல அன்று முதல் ஈடுபட்டு செயல்பட்டிருக்கின்றோம். இப்போதும் அவ்வாறே செயல்படுகின்றோம். இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இதில் அரசியல் வேறுபாடுகளுக்கு இடமில்லை. நாம் அனைவரும் தமிழர். தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்த காரணத்தால் தமிழர்களின் வாழ்வே இன்றைய நாள் கேள்விக்குறிக்கு ஆளாகியிருக்கின்றது.

அதை மாற்றியமைக்க ஒன்றுபட்டு நாம் நமது குரலை எழுப்பவேண்டும். அப்படி எழுப்புகின்ற இந்தக்குரல் பட்டினிக்குரலாக இன்று ஒருநாள் இருக்கட்டும், அந்தக் குரல் பட்டினிக்குரலாக வெளிப்படும்போது, அந்தக் குரலில் வேதனை, கஷ்டம், சங்கடம், சஞ்சலம் எல்லாம் இருந்தாலுங்கூட, இந்தக் குரலுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். ஏனென்றால் இது ஒன்றுபட்ட தமிழனின் குரலாக, அமையும், அமைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

Comments