காங்கிரஸ் அரசுக்கு இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா?

இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார்.

வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம்.

2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடைபெறும் பலப்பரீட்சையில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களது தலைப்பா தப்புமா இல்லையா என்பது தெரிந்துவிடும். போதிய ஆதரவைப் பெற முடியாமல் ஆளும் காங்கிரஸ் கூட்டணி திணறுகிறது.

மத்தியில் முதன்முதலாக அமைந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத அரசு, 28 மாதங்கள் (மார்ச் 1977 முதல் யூலை 1979 வரை) மட்டுமே ஆட்சியில் நீடித்தது நினைவிருக்கலாம்.

அமெரிக்காவுடன் காங்கிரஸ் அரசு 2005 இல் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாடே இப்போது அதற்கு எமனாக மாறியுள்ளது. இந்த உடன்பாடு இந்தியா அணு தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வழிகோலும். ஆனால் இந்தியா அனைத்துலக அணுசக்தி முகவத்தோடும் (International Atomic Energy Agency (IAEA) அணுசக்தி வழங்கல் குழுவோடும் உடன்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்திய அரசு தனது சிவில் அணு வசதிகளை அனைத்துலக பரிசோதனைக்கு திறந்துவி;ட வேண்டும்.

அணுசக்தி உடன்பாடு கைச்சாத்திடதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் கடந்த யூலை 8 ஆம் நாள் விலக்கிக் கொண்டதால் மக்களவையில் தனது பலத்தை வாக்கெடுப்பு மூலம் எண்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அய்க்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப் பட்டுள்ளது. இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இந்தியா மீதான அமெரிக்க செல்வாக்கை, குறிப்பாக வெளியுறவு பற்றிய செல்வாக்கை அதிகரிப்பதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசை இடதுசாரிகளின் ஓயாது மிரட்டி வந்தது தெரிந்ததே.

மக்களவையில் இடதுசாரிகளுக்கு 59 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இடதுசாரிகள் ஆதரவு விலக்கிக் கொண்டாலும் 39 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடி கட்சியின் ஆதரவையும் 6 சுயேட்சைகளின் ஆதரவும் உள்ளதால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று சில் செய்திகள் கூறுகின்றன.

இந்தப் பலப் பரீட்சையில் மத்திய அரசு வெற்றிபெற வேண்டுமானால் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 271 உறுப்பினர்களின் ஆதரவை அரசு பெற்றாக வேண்டும். சமாஜ்வாடி கட்சியின் 39 உறுப்பினர்களின் ஆதரவு உட்பட 261 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இதேபோன்று அரசுக்கு எதிராக வாக்களிக்கும் நா.உறுப்பினர்;களின் எண்ணிக்கை தற்போது 255 மட்டுமே.

இந்த எண் விளையாட்டில் வெற்றி பெற அரசு சார்பில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு காங்கிரஸ் வலை விரித்து வருகிறது. அரசுக்கு ஆதரவளிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக்தள், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் சுயேட்சைகள் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். இடதுசாரி கட்சித் தலைவர்களும் இக்கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிரகாஷ் கரத் சாதிக் கட்சியான பகுஜன் சமபஜ் கட்சியின் தலைவி மாயாவதியின் ஆதரவைக் கேட்டு அவரது வீட்டுக்கே காவடி எடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் ராஷ்ட்ரீய லோக்தள் தலைவர் அஜித்சிங்கை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வரலாற்றின் பிழையான பக்கத்தில் நிற்பதில் கம்யூனிஸ்டுகள் மகா கெட்டிக்காரர்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதனைப் போலிச் சுதந்திரம் என வருணித்தார்கள்.

அரசுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஜேபி மும்முரமாக இறங்கியுள்ளது.

சிரோமணி அகாலிதள், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்து விட்டன.

அஜித்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதள், சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்காதது காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அய்ந்து உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் அமைச்சர் பதவி தந்தால் மட்டுமே ஆதரவு என அறிவித்துள்ளார். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதால்தான் அமைச்சர் பதவியை துறக்க வேண்டி நேரிட்டது.

இந்த கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள போதிலும் அதில் இன்னமும் வெற்றி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆதரவை திரட்டுவது மிகவும் கடினம் என்பதால் அரசு தோல்வியைச் சந்திப்பது தவிர்க்க இயலாதது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இது போன்ற வாக்கெடுப்புகளில் கடைசி நேரத்தில் கூட எதுவும் நிகழலாம் என்பதால் இரண்டும் கெட்டான் எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

ஓடு மீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்குகள் இப்போது தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டன!

வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு நா.உறுப்பினரின் வாக்கு முக்கியம் என்பதால் சந்தையில் தங்கம் போல் அவர்களது விலை கிடு கிடு என ஏறிவிட்டது. நரசிம்ம ராவ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற மக்களவை உறுப்பினர்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு 1993 இல் எழுந்தது. இப்போது ஒரு நா.உறுப்பினரின் விலை 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது!

1999 ஆம் ஆண்டு பிஜேபி அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

பொருளாதார சீர்திருத்தம், தனியார்மயம், உலகமயமாக்கல் என்றெல்லாம் சொல்லும்போதே சனநாயகம் பணநாயகமாக மாறும் அபாயம் இருக்கிறது என்று எழுப்பப்பட்ட எச்சரிக்கைகள் இப்போது உண்மையாகி விட்டன.

காங்கிரஸ் கட்சியிலேயே நான்கு நா.உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக திடீரென போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தற்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள 17 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ்; கட்சி அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சமஜவாவாதக் கட்சியோடு நெருங்கி வந்ததே இந்த அதிரடி அறிவித்தலுக்குக் காரணமாகும்.

ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பஜன்லாலின் மகன் குல்தீப் மிஷ்னோய் அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அசாமில் முதலமைச்சர் தருண் கோகோயின் எதிர்ப்பாளரான குலாம் உஸ்மானியும் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இவர் ஏற்கனவே நடந்த சனாதிபதி தேர்தலில் கட்சி கட்டளையை மீறி வாக்கெடுப்பை புறக்கணித்ததுடன், துணை சனாதிபதி தேர்தலில் கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.எல்.ஜாலப்பாவும் காங்கிரசுக்கு எதிராக ஓட்டளிக்கப் போவதாகக் கூறிக் காங்கிரசின் தலைவலியை அதிகரித்துள்ளார். இவரது மகனுக்கு வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கை ஒதுக்கப் போவதாக பிஜேபி உறுதி அளித்திருப்பதை தொடர்ந்து அவர் அதிருப்தி நா.உறுப்பினராக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி மாண்டியா தொகுதி நா.உறுப்பினரும் முன்னாள் மத்திய இணையமைச் சருமான நடிகர் அம்பரீம் கட்சி தாவப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிஜேபி கர்நாடக மாநிலத்தில் சில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிஜேபியைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு எதிராக நா.உறுப்பினர்களை ஒன்று திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசும், அரசுக்கு எதிரான கட்சிகளும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிறையில் இருக்கும் 4 நா.உறுப்பிர்கள் நீதிமன்ற அனுமதியோடு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்! ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியைச் சேர்ந்த முகமது சகாபுதீன், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் பண் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள பாட்னா உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று உ.பி. நா.உறுப்பினர் அடிக் அகமதுக்கும் அலகாபாத் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி நா.உ. பப்பு யாதவ், சமாஜ்வாடி கட்சி நா.உ. .அப்சல் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி நா.உ. உமாகாந்த் ஆகியோர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தளவில் காங்கிரஸ் (10), திமுக (16) பாமக(6) மதிமுக (2) ஆதரித்து வாக்களிக்கும். எஞ்சிய 2 மதிமுக நா.உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள். திமுக நா.உறுப்பினர் தயாநிதி மாறன் எந்தப் பக்கம் என்று தெரியவில்லை. மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்கும் மதிமுக நா.உறுப்பினர்கள் கட்சி தாவும் சட்டத்தின் கீழ் பதவி இழக்க நேரிடலாம்.

பரபரப்பான தில்லி அரசியல் சூழ்நிலைக்கிடையே ஒவ்வொரு கட்சியும் தங்கள் நா.உறுபினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கத் தொடங்கிவிட்டன. வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று சோனியா காந்தியும், அத்வானியும் தத்தம் அணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போதைய நா. உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு என்ன தெரியுமா? நமது உறுப்பினர்கள் தேர்தலின்போது அளித்த தரவுகளின்படி அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 1.64 கோடி. அதாவது, மாண்புமிகு நா. உறுப்பினர்களில் பெருவாரியானவர்கள் கோடீஸ்வரர்கள். அதுமட்டுமல்ல, அவர்களில் பலர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற அறக்கட்டளைகள் மூலம் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் பெற்றிருக்கும் நன்கொடை மட்டும் ரூ. 104 கோடி. மற்ற கட்சிகளின் பங்கு எவ்வளவு என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நமது சார்பில் சட்டமியற்றும் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சிகளும் நா. உறுப்பினர்களும் சராசரி இந்தியனின் பேராளனாகச் செயல்படவில்லை. கோடீஸ்வரர்களான இவர்கள் கோடீஸ்வரர்களின் குரலைத்தான் ஒலிக்கிறார்கள். அதன் விளைவுதான் இப்போது நடைபெறும் ஊழசிழசயவந றுயச என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொழில் குழுமங்களுக்கிடையே ஆன போட்டி ஆகும்.

தாராளமயம் என்கிற பெயரில் தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்படும்வரை டாடா, பிர்லா, பஜாஜ், கோத்ரெஜ், டி .வி.எஸ், மோடி என்று எத்தனையோ இந்தியத் தொழில் குழுமங்கள் செயல்பட்டன. ஆனால் அவர்கள் யாருமே தங்களது பணபலத்தால் அரசியல் செல்வாக்குப் பெற்று ஆட்சி அதிகாரத்தின் மூலம் தங்களது தொழில் எதிரிகளை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. தங்களது பணபலத்தால் அரசிடமிருந்து ஆதாயங்கள் பெற்றனரே தவிர அரசையே விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

இப்போது, ரிலையன்ஸ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிளவும், அம்பானி உடன்பிறப்புக்கள் மத்தியில் நடைபெறும் போட்டாபோட்டியும் இந்திய அரசின் தலையெழுத்தை யார் தீர்மானிக்கிறது என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

அனில் அம்பானிக்கு நெருக்கமான சமாஜ்வாதி கட்சி, ஆளும் கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளில் சில, அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சாதகமாகவும் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானிக்குச் சாதகமாக நடந்து கொண்டார் என்பதாலேயே பெட்ரோலியத் துறைச் செயலர் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது தம்பியான அனில் அம்பானியின் செயல் அண்ணன் முகேஷ் அம்பானியை பிரதமரிடம் தஞ்சமடையச் செய்து அரசுக்கு எதிராக தான் செயல்பட மாட்டேன் என்கிற உறுதியை அளிக்க வைத்திருக்கிறது. இரு தரப்புமே தங்களது தொழில் யுத்தத்திற்கு அரசியல் குழப்பத்தை சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தொழில் குழுமங்கள் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளத் தொழிலதிபர்களையும் நாடுகின்றன. ஏற்கெனவே, அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் இடையேயான, "மாமன் - மைத்துனர்' உறவு இணைபிரிக்க முடியாத பந்தபாசமாகிவிட்டது

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும். கருத்துக் கணிப்பின்படி அதற்கு 33 விழுக்காடு ஆதரவு மட்டுமே உண்டு. இது அதற்கு 183 - 193 வரையிலான இருக்கைகளை பெற்றுக் கொடுக்கும். தேசிய சனநாயகக் கூட்டணிக்கு 32 விழுக்காடு ஆதரவு உண்டு. இது 179 - 189 இருக்கைகளைக் கைப்பற்ற உதவும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு (மாயாவதி) 56 இருக்கைகள் கிடைக்கும். மூன்றாம் அணிக்கு 52 – 62 இருக்கைகள் கிடைக்கும். இடதுசாரிகளுக்கு 37 – 47 இருக்கைகள் கிடைக்கும்.

பிரதமர் யார் என்பதில் அத்வானிக்கு 17 விழுக்காடு ஆதரவு இருக்கிறது. சோனியா காந்திக்கு 15 விழுக்காடு, ராகுல் காந்திக்கு 12 விழுக்காடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 11 விழுக்காடு ஆதரவு இருக்கிறது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு காரணமாக அரசு கவிழ நேரிட்டாலும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் (11.91 விழுக்காடு) ஊழல் போன்றவையே முக்கியம் என 52 விழுக்காடு வாக்காளர்கள் நினைக்கிறார்கள். இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை 42 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர். எதிர்ப்போரது விழுக்காடு 23 மட்டுமே.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழாது தப்பினால் மன்மோகன் அரசு அனைத்துலக அணுசக்தி முகவத்தோடு (International Atomic Energy Agency (IAEA) உடன்பாடுகள் செய்து கொள்ளும். தனது சிவில் அணு வசதிகளை அனைத்துலக பரிசோதனைக்குத் திறந்துவிடும். வாக்கெடுப்பில் தோற்றால் பத்து மாதங்கள் முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடைபெறும்.

நக்கீரன்
தமிழ் கனேடியன் - ஜூலை 19, 2008

Comments