சிறப்பான களப்படப்பிடிப்பை மேற்கொண்ட போராளிகளுக்கு தேசியத் தலைவர் மதிப்பளிப்பு

மன்னார் களமுனையில் சிறப்பான களப்படப்பிடிப்பை மேற்கொண்டு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பாராட்டைப்பெற்ற போராளிப் படப்பிடிப்பாளர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் போராளிப் படப்பிடிப்பாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

மன்னார் களமுனையில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான போரில் போராளிகளின் களவாழ்க்கையை சிறப்பாக பதிவு செய்த போராளிகள் மூவர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றனர்.



இவர்கள் மூவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனால் பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

அத்துடன் ஒளிக்கலைப்பிரிவால் நடத்தப்பட்ட ஒளிப்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போராளிகள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு ஒளிக்கலைப் பிரிவுப் பொறுப்பாளர் செந்தோழன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஏற்றினார்.

ஒளிக்கலைப்பிரிவின் மாவீரன் வீரவேங்கை அருச்சுனாவின் திருவுருவப்படத்துக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்துக்கு "ஈழநிலா" படைப்பகப் பொறுப்பாளர் நகுலன், கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்துக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் ஈகச்சுடர்களை ஏற்றி, மலர்மாலைகளை சூட்டினர்.


ஒளிக்கலைப்பிரிவின் மாவீரர்களுக்கு ஈகச்சுடர்களை ஏற்றப்பட்டு மாலைகள் சூட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

தொடக்கவுரையை சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

பரிசில்களை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வழங்கி மதிப்பளித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் ஒளிக்கலையின் வரலாறு பற்றி புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.

சிறப்புரையை பா.நடேசன் நிகழ்த்தினார்.

Comments