வெற்றுக்கோசமிடும் படைத்தரப்பின் மத்தியில் புற்றெடுத்து போயுள்ள ஆளணி பிரச்சினை

வட போர் அரங்கில் பெருமெடுப்பிலான போரை நடத்திவரும் இலங்கை அரசுக்கு தனது படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையே புலிகளை விட பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தமது படைகள் வன்னியில் பெரிய பெரிய பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றிவிட்டன எனக் கொழும்பில் அரசு அறிக்கை விட்டு ஆனந்தம் கொள்கின்றபோதும், பிடித்த இடங்களைத் தக்கவைப்பதற்கு ஆட்கள் இன்றி அவதிப்படும் பெரும் சிரமம் களத்தில் நிற்கும் அரச படைகளுக்குத்தான் தெரியும்.

அரச படைகள் எதிர்நோக்கியுள்ள இந்தப் பெரும் பிரச்சினையை உடனடியாகச் சீர்செய்யும் வகையில், தெற்கில் படைகளுக்கு ஆட்சேர்க்கும் தீவிர முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, கைத்தொலைபேசிகள் மூலம் குறுந்தகவல் ஊடாக படைகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான விளம்பரம் மற்றும் தப்பியோடிய படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கி மீண்டும் படையில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் ஆகியவை இராணுவம், வன்னிக்களத்தில் எதிர்நோக்கியிருக்கும் ஆட்பற்றாக்குறையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

2002 இல் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரான காலம் முதல் 2005 வரையான காலப்பகுதிக்குள் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் என்று இராணுவத்தரப்பின் புள்ளிவிபரம் கூறுகின்றது.

அவ்வாறு தப்பியோடியவர்களை மீண்டும் படையில் சேர்த்துக் கொள்வதற்கு அரசுத் தரப்பு மேற்கொண்ட பகீரதப்பிரயத்தனத்தின் பயனாக மிகச் சிறிய எண்ணிக்கையானோரை அது மீளப் பெற்றுக்கொண்டது.

ஆனால், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட யுத்தப் பீதியை தொடர்ந்து 15 ஆயிரம் பேரை படைகளுக்கு இணைத்துக் கொள்ளும் மீள்முயற்சி ஒன்றை தொடங்கிய அரசு, அதில் சிறிதளவு வெற்றியே கண்டிருக்கிறதெனக் கூறப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கித் தள்ளப்பட்டு, பொருட்களின் விலைகள் படுபயங்கரமாக அதிகரித்துவிட்ட பின்புலத்தில், பல்வேறு சலுகைகள் மற்றும் அதிக சம்பளம் போன்ற விளம்பரங்களைக் காண்பித்து படைகளுக்கு ஆட்சேர்க்க அரசு முயற்சி எடுத்ததால் அது இவ்வாறு சிங்கள இளைஞர்களைப் படையில் இணைத்துக்கொள்ள உதவிபுரிந்தது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரப்போகின்ற மழை காலத்துக்கு முன்னர் தற்போது ஆரம்பித்துள்ள படை நடவடிக்கை மூலம் கணிசமான வெற்றியை வன்னித்தளத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது அரசுத் தரப்பின் திட்டம். இதற்காகவே இராணுவம் வடபோர் முனைகளில் படாதபாடு பட்டு வருகிறது.

அவ்வாறு பாரிய வெற்றிகளை பெறவேண்டுமானால் தற்போது இராணுவம் களமுனையில் சந்தித்துவரும் இழப்புக்களை உடனுக்குடன் சரிசெய்யவேண்டும். உயிரிழந்த, காயமடைந்த படையினருக்குப் பதிலாக புதிய படையினரை களமுனைக்கு அனுப்பவேண்டும். அதற்கு போதிய ஆளணி வேண்டும்.

ஆனால், தற்போது படைத்தரப்பில் நிலவும் பாரிய ஆட்பற்றாக்குறைப் பிரச்சினையால், களமுனையில் செய்தே ஆகவேண்டிய இந்தப் படைகளை மீளநிரப்பும் பணி பெரும்சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் ஆழக்கால் பதித்த அரச படைகள் 'ஜெயசிக்குறு" காலப்பகுதியில் வாங்கிய பலத்த பதிலடிக்குத் தற்போது நிலவும் இதே மாதிரியான ஆள்பற்றாக்குறையும் பிரதான காரணம் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.

'வன்னியைப் பிடித்துவிட்டோம், புலிகளை முடித்துவிட்டோம்" - என்று அறிவித்தபடி வவுனியாவிலிருந்து மாங்குளம் வரை போய் நின்ற அரச படைகள், புலிகள் கொடுத்த பதிலடியால், ஓமந்தை தாண்டிய பின்னர்தான் தமது ஓட்டத்தையே நிறுத்தின.

அவ்வளவுக்கு தாம் பிடித்த பிரதேசங்களைத் தக்க வைத்துக்கொள்ள இராணுவத்திடம் அப்போது படைகள் இருக்கவில்லை. ஒரேயடியாக மாங்குளம் வரை முன்னேறிப் போய் நின்றவர்களுக்கு தமக்கு பின்னால் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்பது கூட தெரிந்திருக்கவில்லை.

ஜெயசிக்குறு காலப்பகுதியில் இராணுவம் வன்னியின் கிழக்கு பகுதியில் கொக்குத்தொடுவாய் முதல் மன்னார் வரையான பிரதேசங்களை தனது வல்வளைப்புக்குள் கொண்டுவந்து, வன்னியைக் கிட்டத்தட்ட தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்று கூறலாம்.

ஆனால், அவ்வாறு கைப்பற்றிய பிரதேசங்களைத் தக்கவைப்பதற்கு, அரசு அங்கு நிறுத்தியிருந்த படைகளையும் அவற்றின் இன்றைய நிலைகளையும் நோக்கினால் ஆட்பற்றாக்குறை என்ற விடயம் இலங்கைக்கு எவ்வளவு பெரிய சிக்கலாகவுள்ளது என்பது புரியும்.

கொக்குதொடுவாயிலிருந்து ஒதியமலை வரை தேசியக்காவல் படையின் 223 மற்றும் 224 பட்டாலியன்கள், ஒதியமலை முதல் நெடுங்கேணிவரை தொண்டர் படை, நெடுங்கேணியிலிருந்து ஒட்டுசுட்டான் வரை தேசிய காவல் படையின் 563 பிரிவு, ஒட்டுசுட்டான் முதல் அம்பகாமம் வரை இலங்கை கடற்படை, அம்பகாமம் முதல் மாங்குளம் ஊடாக வன்னிவிளாங்குளம் வரை தேசியக் காவல்படையின் 562 பிரிவு, வன்னிவிளாங்குளத்திலிருந்து மன்னார் முள்ளிக்குளம்வரை இலங்கை விமானப்படை, அங்கிருந்து மன்னார் மத்தி வரை தேசிய காவல் படையின் 21 ஆவது பிரிவு.

இந்த நிலையில்தான் வன்னியின் தென்பகுதியில் இலங்கைப் படைகளால் சுமார் 130 கிலோ மீற்றர் நீளப்பகுதி தக்கவைக்கப்பட்டிருந்தது.

இங்கு குறிப்பிடப்பட்ட தேசிய காவற்படை எனப்படுவது ஆரம்பகாலங்களில் சிறு சிறு பிரிவுகளாக சிறியரக ஆயுதங்களுடன் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு வந்தது. 1992 காலப்பகுதியில் இந்தப் படைகள் இலங்கை இராணுவத்தில் முழுமையாக இணைத்துக்கொள்ளப்பட்டன. சுமார் 16 ஆயிரம் பேரை கொண்ட இந்தப் படைகள் 25 பட்டாலியன்களாக பிரிக்கப்பட்டு அவ்வப்போது களமுனைத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

ஜெயசிக்குறு காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட தேசிய காவற்படையின் 21, 22 மற்றும் 56 பிரிவுகள் தற்போது இலங்கை இராணுவத்திலேயே இல்லை. அவற்றிலிருந்தவர்களில் பெரும்பகுதியானவர்கள் தப்பியோடிவிட்டார்கள்.

இந்தப் படையணிகளில் எஞ்சியிருந்தவர்களையும், இராணுவத்தில் இருந்து தப்பிஓடி மீண்டும் இணைந்து கொண்டவர்களையும் ஒருங்கிணைத்துத்தான் இராணுவம் தற்போது புதிய படையணிகளை உருவாக்கி வருகிறது.

இந்தவகையில் அமைக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள படையணிகள்தான் 58 ஆவது டிவிஷன் எனப்படும் செயலணிப்படை ஒன்றும் செயலணிப் படை இரண்டும் ஆகும். இவற்றில் 58 ஆவது பிரிவு படையணி டிவிஷன் ஒரு படையணியாகக் கருதப்படுகின்றபோதும் உண்மையில் டிவிஷனுக்குரிய அம்சங்கள் அந்தப்படையணியிடம் இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு டிவிஷன் என்றால் அதற்கு இவ்வளவு மோட்டார்கள், இவ்வளவு டாங்கிகள் என்று படையணிக்கோட்பாடு உள்ளது. அவ்வாறான எந்த கோட்பாடுகளையும் நிறைவு செய்யாமல் இராணுவத்தினால் களமுனைக்கு அனுப்புவதற்கென அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட குறைப்பிரசவப் படையணிகள்தான் இவை.

அதனால்தான், இவை வலிந்த தாக்குதல் அணிகளாக அன்றி, கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்கவைப்பதற்காகவும் தற்காப்பு தாக்குதல்களுக்காவும் என பணி ஒதுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இவற்றுக்குப் புகழ்மாலை சூட்டுவதும் இவர்களின் வீரப்பிரதாபங்களை வெகுவிரைவில் களத்தில் காணலாம் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்களும் இராணுவத் தரப்பினரும் தினமும் வெளியிடும் தகவல்களும் களத்தில் நிற்கும் புலிகளைப் பொறுத்த வரை மிகப்பெரிய நகைச்சுவை.

ஏனெனில், இந்தப்படையணிகள் மற்றும் வன்னிப்போர் முனையில் உள்ள இராணுவ இயந்திரத்தின் செயற்பாடு ஆகியவற்றின் பின்னணி தகவல்கள் சுவாரசியமானவை.

'செயலணிப்படை இரண்டு" என்ற பெயரில் தற்போது கண்டி வீதிக்கு மேற்காகப் பாலமோட்டையிலிருந்து கண்டி வீதி வரையான பிரதேசத்தைத் தக்கவைப்பதற்கென நிறுத்தப்பட்டுள்ள படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் றொல்ப் நுகேரா. இவர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விசுவாசி.

இந்த ஆண்டின் முற்பகுதியில் இவரது தலைமையில் இயந்திர இலகுபடை என்ற புதிய படையணியை இலங்கை இராணுவம் ஆரம்பித்தது.

சாதாரணமாக டாங்கிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்து தாக்குதலை நடத்தலாம். ஆனால் மக் இன்பெண்டரி படையணியில் உள்ள இந்தப் புதிய கவசக்கலத்தில் சுமார் 17 பேர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தலாம். இவ்வாறான வசதிகளுடன் கூடிய ஒரு கொமாண்டோப் படையணியே இது.

இந்தக் கவசப்படையணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் றொல்ப் நுகேரா, நடைபெறப்போகும் புலிகளுக்கு எதிரான போரில் பல வெற்றிகளைக் குவிப்பார் என்றும், இவர் இலங்கை படைக்கு கிடைத்த புதிய துட்டகைமுனு என்றும், ஆயிரம் ஆயிரமாய் புலிகளின் தலைகளை கொய்யப்போகும் அபூர்வ அதிரடி நாயகன் என்றும் இராணுவத்தரப்பினால் கொண்டாடப்பட்டார்.

இவ்வாறு படையினர் மத்தியில் புகழாரம் சூடப்பட்ட இந்த மக் இன்பென்ரி படையணியின் தொடக்க நிகழ்வு கொடிகாமத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த இடத்தை நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆட்லறி தாக்குதலில் பிரிகேடியர் றொல்ப் நுகேரா படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இவர் குணமடைந்து மீண்டும் கடமைக்கு திரும்பினார்.

ஆனால், இன்றுவரை இந்த மக் இன்பென்ரி படையணி களத்தில் இறங்கவே இல்லை. முகமாலை ஊடாகப் படையினரால் நான்கு தடவைகள் வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. எந்த ஒரு தாக்குதலிலும் படைத்தரப்பில் இந்த படையணி பயன்படுத்தப்படவில்லை.

இந்தப் படையணி தொடர்பாக கேணல் தீபன் கருத்து தெரிவிக்கையில் -

'இலங்கைப் படையினரின் இந்தப் புதிய படையணியைப் பார்ப்பதற்கு நாம் ஆவலாக உள்ளோம். அதனை ஒரு முறையாவது முகமாலை பக்கம் தலைகாட்டவிட்டால் நன்றாகவிருக்கும்.

'நாங்கள் வேண்டுமானால், கண்ணி வெடிகளையெல்லாம் அகற்றி அந்த படையணி வருவதற்கு வழிசெய்து தருகிறோம். அந்த படையணியை மட்டும் ஒருமுறை எமக்கு காண்பியுங்கள்.

'இப்போது எம்மிடமிருக்கும் இலங்கைப் படைகளின் சாமான்களுடன் வந்து சேர்ந்த இன்னொரு சாமானாக இருந்துவிட்டுப் போகட்டும்" - என்று கிண்டலடித்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வில் கொடுத்த முதலடியில் மாயமாகிய இந்த படையணியின் தலைவரே மன்னாரில் வந்து நின்று கொண்டு வன்னிக்குள் நுழையப் போகின்றார் என அறிக்கை விடுகிறார்.

இவரைப்போல, 58 ஆவது டிவிஷன் எனப்படும் செயலணிப்படை ஒன்றின் கட்டளை தளபதியாக உள்ளவர் பிரிகேடியர் சவீந்திர டி சில்வா. மன்னாரின் தெற்குப்புறமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த அணியில் சுமார் எட்டு பட்டாலியன்கள் உள்ளன. முழுமையான டிவிஷன் தகைமையை எட்டாத படையணியென இதனையும் கூறலாம்.

இந்தப் படையணி அதிகாரியின் பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. ஓயாத அலைகள்-3 காலப்பகுதியில் அப்போது கனகராயன்குளத்தில் இருந்த 55, 56 பிரிகேட் தலைமையகம் மீது புலிகள் கடும் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். தலைமையக வளாகத்தினுள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடித்தன.

புலிகளின் திடீர் தாக்குதலை எதிர்பாராத படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஓடிப்போய் வௌ;வேறு இடங்களில் பதுங்கிக்கொண்ட படையினர், எதிர்த்தாக்குதல் நடத்துவது குறித்த உத்தரவுகளைப்பெற அப்போது அங்கிருந்த 56 ஆவது பிரிகேட் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் காமினி குணசேகர மற்றும் 55 ஆவது பிரிகேட் தலைமை அதிகாரி பிரிகேடியர் சி.எம்.போறன் ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. 24 மணிநேரமாக இரண்டு தலைமை அதிகாரிகளிடமிருந்தும் எந்தச் சத்தமும் இல்லை.

பின்னர் கிடைத்த தகவலின்படி, புலிகளின் திடீர் தாக்குதலால் ஓடிப்போய் பதுங்கு குழிக்குள் ஒளிந்துகொண்ட இந்த இரண்டு அதிகாரிகளும், பல மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து ஒருவாறு தப்பிச்சென்று இன்னொரு முகாமிலிருந்த கவச வாகனத்தை எடுத்துக்கொண்டு வவுனியாவுக்கு சென்றுவிட்டார்கள்.

இந்தச் சம்பவம் அப்போது கொழும்பு பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் இராணுவத் தளபதியால் தெரிவிக்கப்பட்டபோது, அந்த இரண்டு தளபதிகளையும் அழைத்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் இராணுவத்திலிருந்தே அவர்களைத் தள்ளி வைத்துவிட்டார் என்று அப்போது பேச்சடிபட்டது.

மேற்குறிப்பிட்ட கனகராயன்குளத்தாக்குதலில் அகப்பட்ட அந்த முகாமிலிருந்த கப்டன் தர அதிகாரியே தற்போது பிரிகேடியராகவுள்ள சவீந்திர டி சில்வா. அந்த தாக்குதலில் சிதறி ஓடிய இவர், புளியங்குளம் பிரதேசத்தில் ஒளித்திருந்துவிட்டு பின்னர் ஒருவாறு வவுனியாவுக்கு போய்ச் சேர்ந்துவிட்டார்.

இவரும் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசி.

ஓயாத அலைகள்-3 தாக்குதல்களால் படையிலிருந்து தப்பியோடி பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட படையினர் இந்த தளபதிகளின் கீழேயே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புலிகளின் தாக்குதலால் இப்படியான கசப்பான அனுபவங்களை பெற்ற இந்தப் படையினர் தற்போதைய களமுனையில் புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்கும்போது, அதற்கு எவ்வாறு பதிலளிக்கப்போகிறார்கள் என்பது படைத்தலைமைக்குத்தான் வெளிச்சம்.

-ப.தெய்வீகன்-

சுடரொளி (11.07.08)

Comments